Friday 27 July 2018

பதிவிரதை

ஒரு நாள் சிவன் பெண்டாட்டியிடம் நாரதர் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இதை கடலையாக வறுத்துக் கொடு என்றானாம். இரும்பை எப்படி கடலையாக வறுக்க முடியும் என்று அவள் கூறிவிட்டாளாம். பிறகு விஷ்ணு பெண்டாட்டியிடமும், பின் பிரம்மாவின் பெண்டாட்டியிடமும் அதுபோலவே அந்த இரும்பைக் கொடுத்து வறுத்துத் தரும்படி கூறினான். இரும்பையாவது வறுப்பதாவது, இது எப்படி முடியும் என்று கூறிவிட்டார்கள்.
அதற்கு நாரதர், நான் வறுத்து வருகிறேன்; பார் என்று கூறிவிட்டு பூலோகத்திலுள்ள அனுசுயா என்ற பத்தினியிடம் கொடுத்து வறுத்துக் கொடு என்று கூற, அவள் அது என்னவென்று கூடப் பார்க்காமல் சட்டியில் போட்டு வறுத்தாளாம். அது கடலையாகப் பொரிந்து வந்ததாம். அதை நாரதர் சிவன், விஷ்ணு, பிரம்மா முதலியோருடைய பெண்டாட்டிகளிடம் போய், பார் பார் நான் இரும்பை கடலையாக வறுத்து வந்துவிட்டேன் என்றானாம்.
அதற்கு அவர்கள் ஆச்சரியப்பட்டு அது எப்படி முடிந்தது என்று கேட்க, அதற்கு நாரதர், அந்தம்மாள் பதிவிரதை - அதனால் வறுக்க முடிந்தது என்றானாம். உடனே அவள் பதி விரதையானால் எங்கள் சங்கதி என்ன என்று கோபம் வந்து விட்டதாம் அவர்களுக்கு. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேர்களுடைய பெண்டாட்டிகளும் விசனப்பட்டார்களாம்.
இதற்குப் பரிகாரம் காண வேண்டுமென்று அவர்கள் புருஷன்கள் வந்ததும், ``நீ கடவுள்! கடவுள் பெண்டாட்டி நாங்கள். எவனோ காட்டி இருக்கிற ஒரு ரிஷியின் மனைவி பெரிய பதிவிரதையாம்; இரும்பை வறுத்து விட்டாள். அவள் பதிவிரதையானால் எங்கள் சங்கதி என்ன?'' என்று கேட்டார்களாம்.
சரி இப்போ என்ன பண்ணச் சொல்லுகிறீர்கள் என்று கடவுள்கள் கேட்க, ``நீங்கள் போய் அவளையும் அபசாரியாக ஆக்கிவிட்டு வா'' என்றார்களாம். ``பதிவிரதைத் தன்மையை போக்கிவிட்டு வா'' என்றார்களாம். இந்த மூன்று பேரும் (சிவன், விஷ்ணு, பிரம்மா) சாமியார் வேடம் போட்டுக் கொண்டு அந்த ரிஷிபத்தினியிடம் போய், அம்மா பசிக்குது சோறு போடு என்று கேட்டார்கள். அவளும் இவர்களை உட்கார வைத்து இலை போட்டு உணவு பரிமாறினாள்.
இவர்கள், ``சாப்பிடுகிறோம்; ஆனால், சாப்பிடுவதற்கு முன் ஒரு பூசை செய்வது வழக்கம். அது செய்துவிட்டுத்தான் சாப்பிடுவோம்'' என்று கூறினார்கள். அந்தம்மாள், ``அப்படியா, அதற்கு என்ன வேணும்? தேங்காய், பழம், சூடம் என்ன தேவை கூறுங்கள்'' என்று கேட்டாள். அதற்கு இவர்கள் ``அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; நீ உன் சேலையை அவிழ்த்துவிட்டு நிற்கணும்; நாங்கள் அதைப் பார்த்துவிட்டு சாப்பிடுவோம்'' என்றார்கள்.
இவர்கள் சொன்னதுதான் தாமதம், அவள் சிறிதும் தயங்கவில்லையாம். உடனே சேலையை அவிழ்க்க ஆரம்பித்து விட்டாள். அவள் அவிழ்க்க அவிழ்க்க இந்த கடவுள்கள் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டார்களாம். அவளுடைய பதிவிரதாத்தன்மை அப்படியே அழிவில்லாமல் இருந்துவிட்டதாம்.
உடனே அந்தக் குழந்தைகளை எடுத்துப் பால் கொடுத்து தொட்டிலில் போட்டு ஆட்டினாள். அவளுடைய புருஷன் வந்தான், பார்த்தான் குழந்தையை. ``நான் போகும்போது சும்மாயிருந்தாய்; வருவதற்குள் ஏது குழந்தை? எப்படி பெற்றெடுத்தாய்?'' என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான். அவள், ``மூன்று பேர் வந்து பிச்சை கேட்டார்கள்; போட்டேன். நான் அம்மணமாக நிற்கணும் என்றார்கள். அப்படியே செய்தேன். அவர்கள் குழந்தைகளாக மாறிவிட்டார்கள்'' என்று நடந்ததைக் கூறினாள்.
அவன் ரிஷியாயிற்றே. உடனே ஞானக்கண்ணால் பார்த்து விஷயம் தெரிந்து கொண்டானாம். ``நல்ல வேலை செய்தாய். இவர்கள் யார் தெரியுமா? சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகும். உன்னைக் கெடுக்க வேண்டுமென்று வந்திருக்கிறார்கள்! நீ நல்ல வேலைதான் செய்தாய்'' என்று கூறி அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டான்.
இப்படி உலகத்தில் காத்தல், அழித்தல், பிறத்தல் வேலை பார்க்கிற கடவுள்கள் இவள் வீட்டு தொட்டியில் குவா குவா கொட்டிக் கொண்டிருந்தது. உலகத்தில் வேலைகள் எல்லாம் நின்று போயிற்றாம். மக்கள் தேவர்கள் எல்லாம் திண்டாடுகிறார்கள். ஒன்றும் புரியவில்லை. எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அப்புறம் விஷயம் தெரிந்தது. ரிஷியிடம் ஓடிவந்து ``உலகத்தில் எல்லா வேலையும் நின்று போச்சு, நாங்கள் திண்டாடுகிறோம். மூன்று தேவர்களையும் விட்டு விடுங்கள்'' என்று கேட்டார்கள். ``அதற்கு என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்! அவளைப் போய்க் கேளுங்கள்'' என்று கூறினார்.
அந்த ரிஷி பத்தினியிடம் போய், ``புத்தி வந்தது, தேவர்களைவிடு'' என்று கெஞ்ச அவளும் சரி என்று தேவர்களாக பழைய உருவாக்கி அனுப்பி விட்டாளாம்.

No comments:

Post a Comment