Friday 20 July 2018

மலேசியா வாசுதேவன்

நாம் மலேசியா வாசுதேவனை மறந்தேவிட்டோம். அவர் பாடல்கள் அவ்வப்போது நமக்கு அவரை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மொத்தமாக சுமார் 12000 பாடல்களை பாடியுள்ள மலேசியாவை அதிலும் 8000 தமிழ்ப் பாடல்களை, அதில் பல சிறந்த, காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவனை இன்று எனக்கு நானே நினைவுகூர்வது ஒன்றும் ஆச்சர்யமல்ல. மறந்துவிட்டிருக்கிறேன் என்பதே உண்மை. அவர் மற்றவர்களைப் (பாடகர்களை) போல பேசப்படவில்லை.ஏனென்று தெரியவில்லை.
அவரின் சில பாடல்களை கேட்ட்கும்போது கண்களில் நீர் ததும்பிவிடுகிறது. உதாரணத்திற்குச் சொன்னால் “பூங்காற்று திரும்புமா”, பொன்மானத்தேடி நானும் ஊர்கோலம் வந்தேன்”, “பட்டுவண்ண ரோசாவாம்” போன்ற பாடல்களில் அவர் குரலின் மூலம் ஏற்படுத்தும் அந்தத் தாக்கம், சோகம், வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
ஒரு பக்கம் இந்த்ப் பாடல்கள் என்றால், அவரின் காலத்தால் அழிக்கமுடியாத “கோடை காலக் காற்றே”, “பூவே இளைய பூவே”, “அள்ளித்தந்த வானம் அன்னை அல்லவா”, “வான் மேகங்களே வாழ்த்துங்கள்”, “ஆகாய கங்கை பொன் தேன்”, “ஓடுகிற தண்ணியில” போன்ற பாடல்கள் அவரை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா, டி,ஆர் போன்றோர்ர் அவரின் திறமையை கண்டுவியந்து பல நல்ல பாடல்களை பாடும் வாய்ப்பை அவருக்குக் கொடுத்தது இசைக்கு அவர்கள் செலுத்திய மரியாதை என்றே கருதுகிறேன். இது மகிழ்ச்சி அளித்தாலும், ஏ.ஆர், யுவன் போன்றோர் புதுமையை புகுத்துகிறேன் என்று வட இந்தியாவிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்தது மலேசியா போன்ற நல்ல பாடகர்களை அழிக்க்க செய்த வேலையாகவே நான் கருதுகிறேன். அவர்களுக்கு அந்த எண்ணம் இருந்தது என்று சொல்லவில்லை, அப்படியாக ஆகிவிட்டது. என்னைப் பொறுத்துவரையில், பல பாடல்களை மலேசியாவே பாடியிருக்கலாம்.
“தென்கிழக்குச் சீமையிலே”, “மோனலிசா மோனலிசா” போன்ற பாடல்களை ஏ.ஆர் மலேசியாவிற்கு கொடுத்திருக்கிறார். இன்னும் கொடுத்திருக்கலாம். சில பாடல்களைக் கேட்கும்போது, அதே ரக பாடலை மலேசியா பாடியிருந்ததால், இந்தப்பாடலையும் அவர் பாடியிருக்கலாம் என்று தோன்றும்.
மலேசியா சோகம், மெலடியை மட்டும் தொடவில்லை. இன்றும் நம் மனதை விட்டு விலகாத “கூடையில கருவாடு”, “வெத்தல வெத்தல வெத்தலையோ”, “ஆட்டு குட்டி முட்டையிட்டு”, “சுறாங்கனி சுறாங்கனி”, “பொதுவாக எம்மனசு தங்கம்” பாடல்களின் மூலம் கிராமிய ரகத்தையும் மலேசியா விட்டுவைக்கவில்லை. இன்னும் கூட பல கேளிக்கை இடங்களில் டப்பாங்குத்து பாடல்கள், கிராமிய பாடல்கள் என்றால் நம் எண்ணத்தில் முன் வந்து நிற்பது மலேசியாவின் இந்த வகை பாடல்கள்தான்.
மேற்சொன்ன மூன்று ரகத்திலும் அந்தந்த பாடல்களுக்கேற்ப தன் குரலின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியவர் மலேசியா ஒருவர்தான். பல பாடகர்களையும் அவர்களின் பாடல்களையும் மேற்கோள் காட்டலாம். என்னைப் பொறுத்தவரை அவரை இந்த தமிழுலகம் எங்கேயோ மேலே கொண்டுபோய் வைத்திருக்க வேண்டும். த்குந்த மரியாதை செய்யத் தவறிவிட்டது. இளையராஜா கூட நௌஷத், ரஃபி என்று பேசுகிறார். அவர்களை எல்லாம் சேர்த்து வைத்து ஒரு பாடகர் மலேசியா என்பது என் எண்ணம்.
நான் இங்கே இன்னும் பல நல்ல அருமையான மலேசியாவின் பாடல்களை குறிப்பிடவில்லை அதற்கு அவசியமும் இருப்பதாகத் தோன்றவில்லை.நம் மனதோடு என்றும் நிற்பது அவரின் பாடல்கள்.
இப்பதிவு அவருக்கு இந்த சாதாரணனுடைய நினைவஞ்சலி.

No comments:

Post a Comment