Wednesday 18 July 2018

இன்று ....

மனித / மிருக இனத்தில் பாலுணர்வும் அது சார்ந்த விஷயங்களும் வரைமுறைக்கு உட்படுத்த முடியாதவைகள் .
பாண்டம் அதனுள் இருக்கும் பண்டம் (Form-Substance)..வேறுபாடு எத்தனை பேருக்கு புரியும்? மனோதத்துவ நிபுணர்களே திணறும் எவ்வளவோ இதில் உண்டு...
மனோ இயல்புகள் , உடல் இச்சைகள் , ஒவ்வொருவருமே தாங்கள் கண்ட கேட்ட அனுபவித்து உணர்ந்த அனுபவங்கள் , சுயம் சுவீகரித்துக்கொண்ட கருத்தாக்கங்கள் இன்னும் இன்னும் பலப்பல உண்டு...
பெண் குழந்தைகளை மட்டுமே மையமாகக் கொண்டு இங்கு பலரும் அலசுகின்றனர் . ஆனால் சபல வேட்கை கொண்ட சில பெண்களால் சின்னஞ்சிறுவர்கள் கூட அனுபவிக்கும் நூதன துன்பங்கள் எனும் மறுபக்கமும் உண்டே ...அதையும் கணக்கில் கொள்தல் வேண்டும்....
இவைகளை ஒரு ஒட்டு மொத்த பார்வையாக பார்த்தல் தவறான கோணம்....இது ஒரு case by case ஆராய வேண்டிய சங்கதி ...முழுமையான புரிதல் அறிதல் நூறு சதம் சாத்தியமா ?......இல்லவே இல்லை ...யாராலேயும் முடியாதே ....
ஆசை வெட்கம் அறியாது. அந்தரங்கம் பகிரங்கம் ஆனால் அது வெட்கத்துக்குரிய கேவலமான கதையே...எல்லோருமே ஏதோ ஒரு கண சபலத்தில் சிக்கி மீண்டவர்களாய் தான் இருப்பார்கள்...விதிவிலக்கு சாத்தியமே கிடையாது....
இன்று ஊடகங்கள் புண்ணியம் கட்டிக்கொள்கின்ற..... மனிதர்களை பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் ஏராளம் விஷயங்கள் மிக மிக இயல்பாகிப்போனது. ஏற்றுக்கொள்ளவும் சகிக்கவும் முடியாது தான். ஆனால் அவை நேற்று இன்று ஏன் நாளையும் நடைபெறவே போகும் அபத்தங்கள் ...மாற்று கிடையாது ....
இன்று உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளின் பேச்சுக்கள் கேட்கவே நாரசாரம். நான் தினமும் பேருந்து நிலையத்தில் நிறைய பேச்சுக்கள் கேட்கிறேன் ...நடத்தைகளை காண்கிறேன். மாணவ மாணவிகளுக்கு ஏதோ சாகசம் புரியும் உணர்வும் உத்வேகமும் இன்று இருக்கும் நிலையே மிக மோசமான பின் விளைவுகளை ஆரோக்கியமே கொஞ்சமும் இல்லாத உறவுகளை உண்டு பண்ணும் அவலம் வெகு சாதாரணம்....
பாலுணர்வில் அன்றும் என்றுமே பலவித குறைபாடுகள் / கோளாறுகள் / வக்கிரங்கள் எல்லோருக்குமே உண்டும். இன்று தனி நபர் சிந்தனை கொண்டுள்ள பரிணாம வளர்ச்சி ....இதை அக்கக்காய் கூறு போடும் துணிவைத் தந்து பலரும் ஏராளம் பேசுகின்றனர்.
ஆனால் சாசுவத உண்மை என்னவெனில் இது ஒருநாளுமே மாறப்போவதில்லை.
ஏனென்றால் இது புராணக்கதைகளை / பழங்கால நாடோடிக் கதைகள் / ஆயிரத்தொரு இரவுகள் அராபிய கதைகள்
படித்தவர்களுக்கு தெளிவாக/ நன்கு புரியும்.
குருவின் மனைவியே சோரம் போனது , சகோதரன் மனைவியை அபகரித்தது, பிறன் மனை ஆசை , துணிந்த பெண்களின் சிருங்கார சேட்டைகள் , சல்லாபங்கள் ...இன்னும் இன்னும் எக்கச்சக்கம் உள்ளதே ...கதைகள் எனினும் நடைமுறையில் இன்றும் அவைகள் நடப்பது நமக்கே நன்கு தெரியுமே ...
நாளை இதை மறந்து இன்னொரு பரபரப்பில் நாம் திசை மாறிப்போவோம் என்பதும் என்றுமே மாறாத உண்மை ...

No comments:

Post a Comment