Friday 6 July 2018

மூன்றுக்குப் பிறகு / கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் :--

கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் :--
========================
‘இரண்டுக்குப் பிறகு இப்போது வேண்டாம், மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்’
1970 இல குடும்பக் கட்டுப்பாட்டுக்காக வந்த இந்த வாசகம் இப்போது சனிக்கிழமை மாலைகளில் பாரில் மட்டுமே பயன் படுகிறது.
ஏனென்றால் அது நாமிருவர் நமக்கிருவராக மாறி, இப்போது நாமிருவர் நமக்கொருவராக பின்பற்றப்பட்டு வருகிறது. விரைவில் ‘நாமே இருவர், நமக்கெதற்கு ஒருவர்?’ என்று மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
நாகப்பட்டினத்தில் என் பள்ளி நாட்களின் போது ஒரு ஞாயிற்றுக் கிழமை பக்கத்து ஊரிலிருந்த நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன்.
“என்னடா வீட்டிலே ஏதாவது விசேஷமா?” என்று கேட்ட என்னை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.
“ஏன் கேக்கறே?”
“ஆடிப்பூரத் திருவிழா மாதிரி ஜே ஜே ன்னு கூட்டமா இருக்குதே வீடு அதனாலே கேட்டேன்”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“பின்னே, எதுக்காக எல்லாரும் ஊர்லேயிருந்து வந்திருக்காங்க?”
“ஊர்லேர்ந்தேல்லாம் யாரும் வரல்லை, எல்லாரும் வீட்டிலே எப்பயுமே உள்ளவங்கதான்”
“ஓஹோ, உங்க அப்பாவோட பிரதேர்ஸ் சிஸ்டர்ஸ் அவங்க பாமிலி எல்லாம் கூட்டுக் குடித்தனமா இருக்கீங்களா?”
“இல்லப்பா, எல்லாரும் என்னோட பிரதர்ஸ், சிஸ்டேர்ஸ் அவங்க பாமிலி மட்டும்தான்”
“என்னடா சொல்றே, நூறு பேர் இருப்பாங்க போலிருக்கேடா?”
“இருக்கும்”
“உனக்கு எத்தனை பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்?”
“ஒன்பது பிரதர்ஸ், ஆறு சிஸ்டர்ஸ் ன்னு நினைக்கறேன்”
“நினைக்கிறியா…”
“ஆமாண்டா யாருக்குமே உறுதியாத் தெரியாது. நாலஞ்சு வருஷம் முந்தி காலரா வந்ததே அதுல கொஞ்சம் பேர் செத்துட்டாங்க”
“கொஞ்சம்ன்னா?”
“ஒரு இருபது இருபத்தஞ்சு பேர்”
“அது போகவே இவ்வளவு கூட்டமா?”
“நான் இன்னம் முழுக்க சொல்லல்லே. அப்போ செத்தவங்க யார் யாருன்னு கண்டு பிடிக்கவே அஞ்சாறு நாள் ஆயிடிச்சு”
“இவ்வளவு பெரிய குடும்பத்தை மேனேஜ் பண்றதே கஷ்டமாச்செடா?”
“ஏன் கேக்கறே. காலைலே எழுந்தா காபி குடிக்க ரெண்டு மணி நேரம் ஆயிடும். ஒண்ணா ரெண்டா முப்பத்தேழு லிட்டர் வெச்சி காச்சனும்”
“காபிக்கு முப்பத்தேழு லிட்டர் பாலா! மாசம் எவ்வளவு செலவாகுது?”
“போன மாசம் முப்பத்தி ஏழாயிரம் ரூபா ஆச்சு. மே மாசமாச்சே, நிறையப்பேர் ஊருக்குப் போயிருக்காங்க”
“அவ்வளவுதான் ஆகுதா மாசத்துக்கு… ரொம்பக் கம்மியா இருக்கு?”
“நான் சொன்னது பாலுக்கு மட்டும். மொத்த செலவு ரெண்டு லட்சத்தி பதினேழா….”
“சரி, சரி நான் என்ன ஆடிட்டுக்கா வந்திருக்கேன். இத்தனை பேர் இருந்தா பாத ரூம் போறது கூட கஷ்டமாச்செடா”
“அதுல பிரச்சினை இல்லை. வீட்டோட பின் பாதியை இடிச்சிட்டு பதினஞ்சு இருபது கக்கூஸ் கட்டி விட்டுட்டோம். முனிசிபாலிட்டிலேர்ந்து எங்க வீட்டுக்குன்னு தனியா ஆள் போட்டிருக்காங்க. அவங்க மூணு ஷிப்டும் ஒர்க் பண்றாங்க”
“ஏண்டா, மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்ன்னு சுவத்துக்கு சுவர் எழுதி இருக்கே, நீங்க யாரும் அதைப் பாக்கறதே இல்லையா?”
“ஏன் பாக்காம? அதனால்தான் எங்க பாமிலிலே யாருமே மூணு பொண்டாட்டிக்கு மேலே கட்டல்லை”

No comments:

Post a Comment