Thursday 25 January 2018

தமிழில் அருமையான 20,000 பழமொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆழமான பொருள் உடையவை. ‘இளமையில் கல்’ என்பது ஒரு பொன்மொழி. எதையும் இளமையில் செய்தால் மிகவும் எளிதாகவும் வாழ்க்கை முழுதும் பயன் தருவதாகவும் அமையும். இன்னொரு பழமொழி ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதாகும். இதை விளக்க குமரகுருபரர் எழுதிய ‘நீதிநெறி விளக்கத்தில்’ ஒரு அருமையான பாடல் உள்ளது.
பல்லக்கு மூங்கில்
“ வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்”
பொருள்: இளமையில் பல்லக்குத் தண்டு போல வளைத்துவிடப்பட்ட மூங்கில் பின்னர் மன்னர்களைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயரும். அப்படி வளையாத மூங்கிலின் கதியோ பரிதாபமானது. கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத் திரியும். இதேபோல இளமையில் கஷ்டப்பட்டு கல்வி கற்பவர்கள் மேல்நிலையையும் கல்லாதவர்கள் தாழ்வான நிலையையும் அடைகின்றனர்.
குமர குருபரர், ஒரு மூங்கில் கழியை வைத்து அழகான கருத்தை விளக்குகிறார். கோவிலில் இருந்து உலா வரும் சுவாமியை பல்லக்கில் தூக்கி வருவதை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கான வளைந்த மூங்கில் எங்கே விளைகிறது? எங்கேயும் விளையாது. மூங்கில் வளரும் காலத்திலேயே அதைப் பல்லக்குக்குத் தேவைப்படும் மாதிரியில் வளைத்து வளரவிடுவார்கள். அது முற்றிய பின்னர் அதைப் பல்லக்குக்குப் பயன்படுத்துவர். இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுகிறோம்.

No comments:

Post a Comment