Wednesday 24 January 2018

ஒரு மனிதனின் கதை

ரயில் பயணங்களில் நீங்கள் சன்னல்வழி பார்க்கையில் பக்கத்துப் பாதையில் நடந்து செல்லும் கேங்மேனைப் பார்த்திருப்பீர்கள்.
ஒருகாலத்தில் அடர்நீலச் சட்டை அணிந்திருந்தவர் இப்போது ஆரஞ்சு கலர் சட்டை அணிந்திருக்கிறார் என்பது தவிர வேறு வித்தியாசங்கள் ஏதும் இருந்திருக்காது.
வெயிலில் கறுத்த அதே முகம். கையில் ஒரு சம்மட்டி, தோளில் பெரியதொரு இரும்பு ஸ்பேனர், அதில் தொங்கும் ஒரு பை. அல்லது கையில் ஸ்பேனர், தோளில் சம்மட்டி.
தண்டவாளத்தின் ஓரத்தில் கற்களின்மீதே நடந்து நடந்து, அவருடைய கால் விரல்களின் நகங்கள் உருமாறியிருக்கின்றன. இப்போது அவை பூட்ஸ்களுக்குள் மறைந்திருக்கின்றன.
போகிற போக்கில் ஒரு நட்டைத் திருகுகிறார், அல்லது ஒரு வளையத்தை சம்மட்டியால் அடிக்கிறார்.
காய்ப்புக்காய்த்த கைகளும்கூட கறுத்திருக்கின்றன. உரமேறி இருக்கின்றன.
அவருடைய தோளில் தொங்கும் பையில் தண்ணீர் இருக்கலாம், சோற்றுப்பொட்டலம் இருக்கலாம். தண்ணீர் தீர்ந்து போனால் உங்களைப்போல பாட்டில் தண்ணீர் வாங்க அவருக்கு வழியில்லை. பசி அதிகரித்தால் பான்ட்ரி காரில் ஏதும் வாங்கிவிட முடியாது.
அவருடைய அன்றாட நடைக்கணக்கு அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அவருடைய வாழ்நாளில் எத்தனை ஆயிரம் மைல்கள் நடந்திருப்பார் என்பது அவருக்கே தெரிந்திருக்காதபோது உங்களுக்கு எப்படித் தெரியும்?
தடித்த பிரேமில் கண்ணாடி அணிந்திருக்கிறார். அந்தக் கண்ணாடியை பத்திரமாக வைப்பதற்கு உறை இருக்கிறது. அது பாக்கெட்டில் பத்திரமாக இருக்கிறது.
நடையின் போக்கில், பணியின் போக்கில் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாய் இருக்கிறது. ஆனால் கறுத்த முகத்திலிருந்து எதையும் அறிய முடிவதில்லை.
பணிமுடித்துத் திரும்பும் சமயங்களில் அவர் உங்கள் பெட்டியிலேயே பயணிக்கக்கூடும். தையல்கள் போடப்பட்ட பையிலிருந்து தன் உணவுப் பொட்டலத்தை எடுத்து உண்ணக்கூடும். ரிசர்வ் பெட்டியில் ஏறிக்கொண்டவர்மீது உங்களுக்கு எரிச்சல் வரக்கூடும். ரயில்வே ஊழியன் என்றால் எந்தப் பெட்டியிலும் ஏறிக்கொள்ளலாமோ என்ற யோசனை உள்ளுக்குள் ஓடியிருக்கக்கூடும். அதைக் கேட்க உங்கள் நாகரிகம் தடுத்திருக்கக்கூடும். இருந்தாலும் உங்கள் முகம் அந்தக் கேள்வியை வெளிப்படுத்தியிருக்கக்கூடும். அவர் போனபிறகு சகாக்களுடன் உங்கள் கேள்வியை நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கக்கூடும். அப்புறம் மறந்து விட்டிருக்கக்கூடும். உங்கள் பார்வைகளைப் பொருட்படுத்தாதிருக்க அவர் பழகிப்போய் பலகாலம் ஆகியிருக்கக்கூடும். அடுத்த பயணத்தில் இவையெல்லாமே மீண்டும் ஒருமுறை நிகழவும் கூடும்.
அல்லது
இதைப்படித்த நீங்கள் அடுத்த பயணத்தில் அவரை நோக்கி ஒரு புன்னகையை பரிசளிக்கவும் கூடும்.

No comments:

Post a Comment