Sunday 28 January 2018

இரட்டைப் புலவர்கள்

இணையில்லா இணை - இரட்டைப் புலவர்கள்
தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்கள் பலருள் இரட்டைப் புலவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாவர்.

சோழநாட்டில் வாழ்ந்த ஒரு வேளாளர் தம்பதிக்கு, சிவபெருமானின் திருவருளால், அஸ்வினி தேவர்களின் (அஸ்வினி தேவர்கள் – இரட்டையர்களாக அமைந்த, நட்சத்திரப் பேறு பெற்றவர்கள். சூரியனுக்கும் துவஷ்டிராக்கும் பிறந்த புத்திரர்கள்) அம்சமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.
ஒருவர் பிறவியேலேயே கண் பார்க்க இயலாதவர்.
மற்றொருவர் கால் நடக்க இயலாதவர்.

இதனால் மனமுடைந்த தம்பதியர்க்கு,
‘ஊனம் இருந்தாலும்,
ஞானம் மிகப் பெற்று,
ஞாயிறு போன்று பிரகாசித்து,
ஞாலத்தை வலம் வருவார்கள்’
என்று பெரியோர்கள் வாழ்த்தினார்களாம்.

அதனாலேயே, முன்னவருக்கு (ஞாயிறு – சூரியன்) முதுசூரியர் என்றும், இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர்.

(சோழநாட்டில், செங்குந்தர் மரபில் தோன்றினர் என்றும், இருவரும் உறவினர்கள் - அதாவது அத்தை மகன், மாமன் மகன் என்றும், இருவரும் நெருங்கிய பந்தம் கொண்டவர் ஆகையாலேயே இரட்டையர் எனப் பெயர் பெற்றனர் என்றும் கூறப்படுவது உண்டு.)

சிறு வயதிலேயே இருவரும் தமிழ்ப்பற்று மிகுந்து விளங்கினர். தமிழைக் களங்கமறக் கற்றுச் சிறந்தனர்.

இருவரும் மனமொத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
கால் நடக்க இயலாதவர் முதல் இரண்டு வரிகளைப் பாட, செய்யுளின் தன்மை மாறாமல் அடுத்த இரண்டு வரிகளை கண் பார்க்க இயலாதவர் பாடுவாராம்.
பெரியோர்கள் வாழ்த்தியது போல, ஞாலத்தை (தேசங்களை) வலம் வர இரட்டையர்கள் கிளம்பினர்.
(பல சமஸ்தானங்கள் சென்று, பெரிய அளவு தொகை வாங்காமல் ஒரு பணம் மட்டுமே வாங்கி வாழலாயினர் என்றும் கூறப்படுவதுண்டு).

கண்பார்க்க இயலாதவர் நடக்க இயலும்.
கால் நடக்க இயலாதரால் கண் பார்க்க இயலும்.
ஆகையால் முன்னவர், பின்னவரைத் தன் தோளிலே சுமந்து கொள்ளச் செய்து, அவரின் வழிகாட்டுதலில் நடப்பார்.
இவர்கள் ஒவ்வொரு தேசமாகச் சென்று பாடல் பாடிவருகலாயினர்.

இவர்களுடைய பாடல்களில் சைவப்பற்று ஓங்கியிருந்தது. சிவாலயங்களுக்குச் சென்று அங்கிருக்கும் சிவனைப் பாடி மகிழ்ந்திருந்தனர்.

புராணங்களில் உள்ள மிக நுண்ணியக் கருத்துக்களைத் தம் பாடல்களால் வெளிக்கொணர்வதில் வல்லவர்களாக இருந்தனர்.
“கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்” எனும் தொடர் வாயிலாக கலம்பகம் எனும் தமிழ் வகைப்பாடல்கள் பாடுவதில் மிகவும் தேர்ந்தவர்களாக இருந்தனர்.

கலம்பகம் என்பது தமிழ் இலக்கண வகைப்படி, கதம்ப மலர் மாலையைப் போன்று, பதினெட்டு உறுப்புகள் அமையப் பலவகை பா விகற்பங்களால் பாடப்பெறுவதாகும்.

சிதம்பரம் நடராஜர் மேல் அதீத பற்றுக் கொண்டனர்.
தில்லை நடராஜர் மீது பாடல்கள் பாடியிருக்கின்றனர். அது தில்லைக் கலம்பகம் என்று அழைக்கப்படும்.

இவர்கள் இரட்டையர்கள் அல்லவா ?
இவர்கள் பாடிய தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்றில், இரண்டு (2) தொடர்ந்து வருவது போல் பாடுகின்றனர்.

காதில் இரண்டு பேர்; கண்டோர் இரண்டு பேர்;
ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்; பேதை முலை
உண்ணார் இரண்டு பேர்; ஓங்கு புலியூரருக்குப்
பெண்ணான பேர்இரண்டு பேர் !

சிவமஹா புராணத்தில் மிகச் சிறிய அளவில் இடம்பெறும் சம்பவம்.
நாக அம்சமாகப் பிறந்த இரண்டு பேர், சரஸ்வதி கடாட்சத்தினால் அருமையான இசைஞானத்தைப் பெற்றார்கள். இவர்கள் இருவரும் தங்களின் இசை வல்லமையை சிவபெருமானிடம் மட்டுமே சமர்ப்பணம் செய்யத் தவமிருந்தார்கள். தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், அவர்களின் வேண்டுதலின் படி, அவர்கள் இருவரையும் தன்னுடைய காதுத் தோடுகளாக அணிந்து கொண்டார். அந்த நாகர்கள் இரண்டு பேர் – கம்பளர் மற்றும் அசுவதரர்.
இந்த இருவரையும் தான், இரட்டைப் புலவர்கள் ‘காதில் இரண்டு பேர்’ என்கின்றனர்.

‘கண்டோர் இரண்டு பேர்’ – தில்லைச் சிதம்பரத்தில் ஆடல்நாயகனின் தாண்டவத்தைக் கண்டு பேறு பெற்றவர்கள் இரண்டு பேர். அவர்கள் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள்.

‘ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்’ – அடிமுடி தெரியாவண்ணம் ஜோதி ஸ்வரூபமாக நின்ற சிவபெருமானை - பிரம்மாவும் விஷ்ணுவும் தலை எங்கு, கால் எங்கு என்று தெரியாமல் - திகைத்தனர். ஆகையாலேயே பிரம்மாவும், விஷ்ணும் ‘காணோர் இரண்டு பேர்’.

‘பேதை முலை உண்ணார் இரண்டு பேர்’ – பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது மரபு. ஆனாலும், குழந்தையாய் இருந்தாலும் தாய்ப்பால் உண்ணாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் பார்வதி தேவிக்கு மகனாய்ப் பிறந்த விநாயகர் (மூத்த பிள்ளையார்).
மற்றொருவர் பார்வதி தேவியால் குழந்தையாக பா(ba)விக்கப்பட்டு ஞானப்பால் அருளப்பெற்றவர் திருஞானசம்பந்தர் (இளைய பிள்ளையார்).

‘ஓங்கு புலியூரருக்கு பெண்ணான பேர் இரண்டு பேர்’ – சிவபெருமான் கங்கை & உமாதேவி இருவரையும் பெண்டாளுவதைக் (மனைவியாக்கிக் கொண்டதை) குறிக்கின்றனர் இரட்டைப் புலவர்கள்.

தில்லை நடராஜ மூர்த்தியின் தூக்கிய திருவடி குஞ்சிதபாதம் என்று அழைக்கப்படும். அந்தக் குஞ்சிதபாத தரிசனமே மோக்ஷத்தைத் தரவல்லது. அந்தப் பாதத்தைப் பாடிப் பரவுகின்றனர் இரட்டைப் புலவர்கள்,

தில்லை மூவாயிரவர் பூசை புரி பாதம்
தேவருடனே இருவர் தேடரிய பாதம்
வல்லமாகாளியுடனே வாதுபுரி பாதம்
மாமுனிவர்காய் யமனை மார்பில் உதைபாதம்
சொல்லவே பரவையிடம் தூது சென்ற பாதம்
தொல்புலி பதஞ்சலியும் தொண்டு செயும் பாதம்
அல்லலாம் ஏழ்பிறவி தீர நடமாடும்
ஆதிபுலி யூரர் திருவம்பலவர் பாதம்

(தில்லை வாழந்தணர்களாகிய தீக்ஷிதர்கள் தினந்தோறும் பூஜைகள் செய்கின்ற பாதம், அடிமுடி காண இயலாத போது தேவர்கள் காண இயலாத பாதம், காளியுடன் போட்டி நடனம் ஆடிய பாதம், மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்த பாதம், சுந்தரருக்காக பரவை நாச்சியாரிடம் தூது சென்ற பாதம், பதஞ்சலி & வியாக்ரபாத ரிஷிகள் கண்டு பேறு பெற்ற பாதம், ஏழு பிறவிகளை நீக்கி மோட்சத்தை அளிக்கும் பாதம் என்று நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடியைப் போற்றிப் பணிகின்றனர் இரட்டையர்கள்).

அம்மானை எனும் பாடல் வகை தமிழர்க்குச் சிறப்பு பெற்ற ஒன்று.
மூன்று பெண்கள் கூடி நின்று விளையாடுவது அம்மானை எனும் விளையாட்டு. அம்மானைக் காய்களை (சிறிய பந்து போன்றது) கைமாற்றி விளையாடிக்கொண்டே, ஒரு பெண் தெய்வத்தைப் புகழ்ந்து கூற, அடுத்த பெண் ஒரு கேள்வி கேட்க, மூன்றாவது பெண் பதில் சொல்ல வேண்டும். பந்தும் கீழே விழக்கூடாது. செய்யுள் நடையும் மாறக் கூடாது. தகுந்த பதிலும் அமையவேண்டும். கவனம் எனும் வகைப்படி, மூன்று வகைச் செயலையும் ஒரே நேரத்தில் செய்யவேண்டும். மிகக் கடினமான ஆனால் புத்திக் கூர்மை மிகுந்த விளையாட்டு.

மூன்று பெண்கள் அம்மானை விளையாடுவது போல் செய்யுள் ஒன்றை (சிலேடை நயத்துடன் – இருபொருள் தர) அமைக்கின்றனர் இரட்டையர்கள்.

தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுங்காண் அம்மானை !
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுமேயாம் ஆகில்
அம்பலத்தை விட்டே அகலாதோ அம்மானை ?
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை ?!

மேலோட்டமாகப் பார்த்தால் :
முதல் பெண் : தென்புலியூர் எனும் சிதம்பரத்தில் புலி ஒன்று காக்கின்றது.
2வது பெண் : அது எப்போது விலகும் ?
3வது பெண் : (தனது இரையான-உணவான) ஆடு இருக்கும் போது புலி எப்படி அகலும் ?!

உள்ளார்ந்து பார்த்தால் :
தென்புலியூர் எனும் சிதம்பரத்தில் புலிக்கால் கொண்ட முனிவர் வியாக்ரபாதர் அமைகின்றார். அவர் எப்படி விலகுவார்? ஆட்டத்தில் நாட்டம் கொண்டல்லவா நடனம் ஆடும் நடராஜரின் தாண்டவத்தைக் கண்டு கொண்டிருக்கின்றார். புலிக்கால் கொண்ட முனிவர் எந்நாளும் நடராஜரை விட்டு விலகமாட்டார்.
என்னே நயம் ?!

ஒரு சமயம், மதுரைக்குச் சென்று சொக்கநாதரை வழிபாடு செய்துகொண்டிருந்தனர்.
அப்பொழுது ஒரு நாள் பொற்றாமரைக்குளத்தில், கண் பார்க்க இயலாதவர் படியில் அமர்ந்து, துணி துவைத்துக் கொண்டு இருக்கையில், அவர் கை நழுவி, அந்தத் துணி சென்றுவிட்டது. அதைப் பார்க்க இயலாமல் தண்ணீரில் கைகளால் துணியைத் தேடித் துழாவிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த கால் முடியாதவர்,

'அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ'
என்றார். (அப்பு – தண்ணீர். தண்ணீரில் தினம் தினம் நாம் துணியினை தப்பினால் – தோய்த்தால், நம்மிடமிருந்து அந்தத் துணி தப்பியோட நினைக்காதோ என்கின்றார்).

அதற்கு கண் பார்க்க இயலாதவர், தம்மிடமிருந்து துணி போய்விட்டது என்றுணர்ந்து, அதைப் பெரிதாக எண்ணாமல், பதிலுரைக்கின்றார்.

‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ' (அந்தத் துணி கந்தலாகிவிட்டது. கிழிந்து விட்டது. கிழிந்த துணியிலும் ஆயிரம் ஓட்டைகள். துணி போனால் துயர் போனது என்று எடுத்துக்கொள்வோம்).

ஆனாலும் இந்தப் பதிலில் திருப்தி அடைவில்லை முதுசூரியர். மறு கேள்வி கேட்கின்றார்.
'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?' (கந்தலாகிய துணி என்றாலும் குளிர் தாங்குமாறு உபயோகப்படுத்தலாமே?)

பதில் சொல்கின்றார் இளஞ்சூரியர்,
'எண்ணாதீர்,
இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!'
(கலிங்கம் – துணி. இந்தத் துணி போனால் என்ன, லிங்க ஸ்வரூபமாக விளங்கும் மதுரையில் உறையும் சொக்கநாதரே துணை) என்று பக்தியுடன் பாடுகின்றார்.
அப்பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. மதுரைச் சொக்க நாதரின் அருளால், குளத்தின் நடுவே போன துணி புலவரின் கைகளிலே தானாகவே வந்து சேர்ந்தது.

ஒரு சமயம் திருவாமாத்தூர் சென்று சேவித்திருந்தனர். அந்த சமஸ்தானத்து அரசர் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, கலம்பகம் பாடுவதில் சிறப்புற்றவர்கள் என்று அறிந்து, ‘ஆமாத்தூர் கலம்பகம்’ பாட இரட்டையரைக் கேட்டார்.

முதல் பாடலில் “ஆற்குழையோ.. .. .. மேற்கரை கோயில் கொண்டார் புரஞ்சீறிய வெங்கணைக்கே”.
கண்பார்க்க இயலாதவர், ஆமாத்தூர் வழியாக ஓடும் பம்பையாற்றுக்கு மேற்கே கோயில் அமைந்துள்ளது எனப் பாடிவிடுகின்றார்.

இதைக் கேட்ட அனைவரும் இரட்டையரை ஏளனம் செய்கின்றனர்.

ஏன் என்றால், பம்பையாற்றுக்குக் கிழக்கில் தான் கோயில் அமைந்திருந்தது.

ஆமாத்தூர் இறைவனை வேண்டிக்கொண்டு இல்லம் சேர்கின்றனர்.

அன்றிரவு பெருமழை கொட்டியது. பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பம்பையாற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, தடம் மாறியது.

விடிந்து மறுநாள் காலையில் பார்த்த அனைவருக்கும் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. இரட்டையர்கள் பாடியது போல, பெரும் வெள்ளத்தினால் பாதைய மாறிய ஆற்றிற்கு, மேற்கே கோயில் அமையப்பெற்றிருந்தது.
இன்றளவும் ஆற்றின் பழைய படுகையைக் காணமுடிகின்றது.
பக்தனின் பாடலுக்காக, பரமேஸ்வரன் ஆற்றின் பக்கம் மாறினார்.

ஒரு சமயம் காஞ்சிபுரம் வந்தனர்.
காஞ்சி சமஸ்தானத்து பல்லவராயன், காஞ்சிநாதரைப் புகழ்ந்து, ஏகாம்பரர் உலா பாடச் சொன்னான்.
முதல் பாடலிலேயே, விகடச்சக்கர விநாயகர், ஆயிரங்கால் மண்டம் என்றெல்லாம் பாடிவிடுகின்றனர்.
மன்னன் பாடலைக் கேட்டு, கோயிலில் இல்லாதனவற்றைப் பாடுகின்றீர்களே என்று சொல்ல, இரட்டையர்கள் அம்பிகையின் அருளாலே அப்பாடல் அமைந்தது அன்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிவித்தனர்.
சில நாட்கள் கழித்து, மன்னவன் கோபுரம் கட்டுவதற்காக, அங்கிருந்த மண் மேட்டை நீக்கியபோது, அதன் கீழ் விகடச்சக்கர விநாயகரையும், ஆயிரங்கால் மண்டபத்தினையும் கண்டு, இரட்டையரை மனமாரப் புகழ்ந்து, ஏகாம்பரர் உலாவிற்கு – தெய்வீக உலா எனப் பெயரிட்டு பெருமை சேர்த்தான்.

காளமேகமும் இரட்டைப் புலவர்களும் சமகாலத்தவர்கள். இரட்டைப் புலவர்கள் காளமேகத்தைக் காண ஆவலாயிருந்தனர்.
ஒரு சமயம் திருவாரூரில் இருக்கும்போது "நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்" என்பதோடு இரட்டையர்கள் நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேல ஏனோ அவர்களால் எழுத இயலவில்லை. அதை அப்படியே கோயில் சுவரில் எழுதிச் சென்றார்கள்.

பிறகு பல ஊர்களுக்குச் சென்று திரும்பியபோது பாடல் "மண்தின்ற பாணமே - தாணுவே சீரார் மேவும் சிவனே நீர் எப்படியோ நேரார் புரம் எரித்த தேர்" என்று சந்தம் மாறாமல் யாராலோ எழுதப்பட்டு அழகுற முடிக்கப்பட்டிருந்தது.

[பாடலின் அர்த்தம் : சிவபெருமான் முப்புரம் எரிக்க பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை சக்கரமாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகி எனும் பாம்பை வில்லின் நாண் ஆகவும், விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு சென்றார் என்று சிவபுராணங்கள் பகரும்.
இதை எப்படி சிலேடையாக அமைக்கின்றார்.
நாண் - முப்புரம் எரிக்க எடுத்துச் சென்ற நாண் நஞ்சிருக்கின்றது. நைந்து இருக்கின்றது. மக்கியிருக்கின்றது. வில்லோ கல் போல (கற்சாபம்) கனமாக இருக்கின்றது. கல் வில்லை எப்படி வளைத்து அம்பெய்ய முடியும்? அம்போ மண் தின்ற பாணம். மண்ணால் அரிக்கப்பட்ட அம்பு. சிவபெருமானே, இவையெல்லாம் கொண்டு எப்படித்தான் முப்புரம் எரித்தீர்களோ என்று கேட்பது போல மேலோட்டமான அர்த்தம்.
உள்ளார்ந்து பார்த்தால், நஞ்சு எனும் விஷம் இருக்கும் வாசுகி எனும் பாம்பை நாணாகக் கொண்டும், நற்சாபம் கற்சாபம் - மேரு மலையே வில்லாகவும், மண் தின்ற பாணம் - கண்ணன் சிறு வயதில் மண் தின்றார். அந்த கண்ணணாகிய விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு முப்புரம் எரித்தார் என்று அர்த்தம் கிடைக்கின்றது. எப்படி அற்புதமாக எழுதியிருக்கின்றார்கள்.]

அதை எழுதியது காளமேகம் தான் என்று அறிந்து, அவரைப் போற்றிப் புகழ்கின்றனர். (கவி காளமேகத்தைப் பற்றி மேலும் விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.)
'விண் தின்ற கீர்த்தி விளை காளமேகமே
மண்தின்ற பாணமென்று வாயினிக்கக் - கண்டொன்று
பாகொடு தேன் சீனியிடும் பாக்கியம் பெற்றோமிலையே
ஆகெடுவோ முக்கியங்கென்னாம்?'

அவரைக் காண அவரின் இருப்பிடத்துக்கு விரைகின்றார்கள்.
அச்சமயம், அங்கிருந்தவர்கள் ‘இப்பொழுது தான் அவர் உயிர் பிரிந்தது. அவர் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்’ என்கின்றார்கள்.
பெரும் அதிர்ச்சி கொண்ட இருவரும் இடுகாட்டிற்கு விரைகின்றார்கள்.
அங்கே, அவரின் உடலைத் தகனம் செய்யப்படுவதைக் காண்கின்றனர்.

பொங்கும் சோகத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், நெஞ்சம் விம்ம முதுசூரியர்,
ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே
- என கதறியழ, இளஞ்சூரியர் உள்ளம் குமுறி,
பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
- எனப்பாடி அழுதார்.

இவர்களின் வாழ்வில் நடந்த மேலும் பல சுவைமிக்க சம்பவங்களை தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. (அபி.சிந்.)

இவர்கள் இயற்றிய நூல்கள் : தில்லைக் கலம்பகம், கச்சியுலா, கச்சிக்கலம்பகம், திரு ஆமாத்தூர்க் கலம்பகம்.
இவர்கள் வாழ்ந்த காலம் கி.பி. பதினான்கு அல்லது பதினைந்தாம் நூற்றாண்டு என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இவர்கள் பன்னெடுங்காலம் பா(pa)ரில் (உலகத்தில்) வாழ்ந்து, பாத்திறமையால் பரமேசனைப் பாடிப் பரவியிருந்தனர்.

இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் இறையடி சேர்ந்தார்கள் என்றும் ஆன்றோர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.

இரட்டைப்புலவர்களின் புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை ஈடு இணையற்று இருக்கும்.

No comments:

Post a Comment