Tuesday 23 January 2018

மலைக்கோட்டை நகர்முழுதும் மல்லி வாசம்
முழுநிலவைக் கண்டலர்ந்த அல்லி வாசம்
கலைக்கோட்டை அரண்களான நால்வருக்கு
கவின்மிக்க விழாக்கண்ட நன்றி வாசம்
தலைக்கோட்டை தமிழுக்கே இவர்தான் என்று
தாரணியே சொன்னாலும் அகந்தையின்றி
நிலைக்கோட்டை போல்நிற்கும் நால்வருக்கும்
நகைச்சுவைமன்றம் தெளித்த பன்னீர் வாசம்

பகைச்சுவையே அறியாத பண்பின் மிக்கார்
பெரும்புலவர் நமசிவாயம் அய்யாவுக்கும்
தொகைச்சுவையே அறியாமல் தொண்டுக்காக
திசையளக்கும் சத்யசீலன் அய்யாவுக்கும்
வகைவகையாய் தமிழ்நூல்கள் வடித்தளிக்கும்
வியனறிவு வித்தகராம் அறிவொளிக்கும்
நகைச்சுவையே வடிவான ஆருர்ச் செல்வர்
சண்முகவடிவேலர்க்கும் விருதுக் கோலம்

திருச்சியிலே வதிகின்ற தமிழர் எல்லாம்
திருவிழாக் கூட்டம்போல் தேடிவந்தார்
திருமுறைக்கு வழிவகுத்த நால்வர்போல
தமிழ்வளர்க்கும் நால்வரையும் வணங்கி நின்றார்
ஒரு-முறைக்கு செய்வதுபோல் இன்றி, உள்ள்ம்
ஒருமித்து விழாக்கண்ட உயர்ந்த பண்பால்
வருகின்ற தலைமுறைக்கும் பெருமை சேர்த்த
விழாக்குழுவை விருப்பமுடன் வாழ்த்தி நின்றார்
 
ஆயிரமாய் தமிழ்மக்கள் திரண்டிருந்தோம்
அவைமகிழ அவர்சிறப்பை நினைந்திருந்தோம்
தூயவர்க்கு விருதளித்து மகிழ்ந்திருந்தோம்
தொண்டுநலன் தனைநினைந்து வணங்கி நின்றோம்
தாயகமே!தென்தமிழே!குறளே!எங்கள்
தீஞ்சுவைசார் இலக்கியமே !திசைகள் எட்டே!
நாயகமாம் இவர்நால்வர் நலன்கள் வாழ்க
நாளெல்லாம் இவர்தொண்டில் தமிழும் வாழ்க!

No comments:

Post a Comment