Sunday 17 June 2018

கண்ணைப் பார் !!!!! சிரி !!!!

கண்ணைப் பார், சிரி

கரைபுரண்ட காவிரி, 
  இன்று
வறண்டுபோன ஓடை.

ஒளிதந்த விளக்கு, 
  இன்று
சுடரிழந்த திரி.

மலர் தந்த வனம், 
  இன்று
கருகான பூங்கா.

வழி காட்டிய மண், 
  இன்று
புதரான பாதை.

பாடல் சொன்ன குயில், 
  இன்று
பேச்சில்லாத சிலை.

ஆட்டுவித்த சிம்மம், 
  இன்று
அசையாத பொம்மை.

உடல் தந்து உயிர் தந்து
    உணவோடு உணர்வீந்து
      கடல் வற்றும் கனிவோடு
        எனை வளர்த்த அம்மா,
        இன்று நீ
      காய்ந்து போன கனி.
    ஆனால் என்றும்
தேய்ந்து போகாத நிலவு.

கடவுளுக்குப் பொருள் சொன்ன
    என்னருமை அப்பா,
      இன்று நீ
      ஆட்சி இல்லா அரசன்.
    ஆனால் என்றும்
மாட்சி குறையா மகான்.

வந்த வழி மறந்துவிட்டு
  போகும் வழி தெரியாமல்
    பரிதவிக்கும் பயணிகள்.
    ஆனாலும் நீங்கள்
  போகும் இடம் 
எனக்குத் தெரியும்.

புறப்படும் நேரம்
  புலப்படும் வரை
துணை இருப்பேன்.

வாழ்க்கைப்
  பயண வலி 
    வாட்டும் போது,
  மெள்ளக் கால் பிடிப்பேன் அம்மா, 
நல்லக் கவி படிப்பேன் அப்பா.

முதுமைத் துயரம் 
  மறந்து போக
    உன் இளமைப் பிம்பம்
    என்னைப் பார்.
  வருத்தம் தீர,
என் கண்ணைப் பார், சிரி.

No comments:

Post a Comment