Friday 22 June 2018

எல்லாம் நன்மைக்கே!'

லண்டன் மாநகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் கட்டியர் (verger) ஒருவர் இருந்தார். ஆலயத்தில் மணி அடிப்பது, திருமணம், இறுதி யாத்திரை போன்ற சடங்குகளுக்கும், மற்ற பல வேலைகளையும் தேவாலயத்தில் செய்வதே அவர் வேலை. பரம்பரை பரம்பரையாக அந்த தொழிலை அவரது முன்னோர்கள் செய்து வந்தனர். இப்போது நம்ம ஆளு செய்து வருகிறார்.
அவருக்கு எழுத படிக்க தெரியாது. ஆனால் சர்ச்சில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக குறை ஏதுமின்றி செய்து வந்தார்.
ஒரு நாள் அந்த தேவாலயத்தின் அருட்தந்தை (father) மாற்றப்பட்டு புதியதாக ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். முதலில் லண்டன் மக்கள் அனைவருக்கும் எழுத்தறிவை போதிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதன் முதல் கட்டமாக தேவாலயத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கட்டாயம் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
நம் கட்டியர் இந்த செய்தியைக் கேட்டுத் தன் வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்களோ என்று அச்சம் கொண்டார். நேராக அருட்தந்தையைப் பார்த்து கேட்டுவிட தீர்மானித்தார்.
'அய்யா! பரம்பரை பரம்பரையாக எங்கள் வம்சம் தான் இந்த ஆலயத்தில் கட்டியர் பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் எழுத படிக்க எனக்குத் தெரியாது. நான் என்ன செய்வது' என்று கேட்டார் கட்டியர்.
'உன் பரம்பரையே இந்த தேவாலயதிற்கு உழைத்து இருப்பதால் உனக்கு ஒரு சலுகை மட்டும் தருகிறேன். மூன்று மாதம் உனக்கு அவகாசம் தருகிறேன். அதற்குள் எழுத படிக்கக் கற்றுக்கொள். நம் ஆலயத்தில் உள்ளவர்களை உனக்கு உதவி செய்யச் சொல்கிறேன். கவலைப்படாதே!' என்று சொன்னார் அருட்தந்தை.
கட்டியருக்கு இந்த பதில் திருப்தி தரவில்லை.
'அய்யா! படிக்கும் வயதிலே, எனக்கு கல்வி சுத்தமாக வரவில்லை. என் தந்தை எனக்கு எழுத்தறிவு கொடுக்க எவ்வளவோ முயன்றும் எனக்கு கொஞ்சமும் எழுதப்படிக்கக் கற்று கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்க நாற்பது வயது கடந்தபிறகு இப்போது என்னால் எப்படி கற்க முடியும்?' என்று கேட்டார்.
'அப்போது எழுத்தறிவு கொண்ட ஒருவரை தான் நான் நியமிக்க வேண்டும்.. சாரி!' என்று கைவிரித்தார் அருட்தந்தை.
ஒருவித விரக்தியில், 'நான் ராஜினாமா செய்கிறேன்' என்றார் கட்டியர். எத்தனையோ ஆண்டுகளாக தான் வேலை பார்த்த தேவாலயத்தை விட்டு வெளியேறினார் அவர்.
இல்லம் செல்ல மனம் வரவில்லை. மனைவியிடம் சொல்லவேண்டுமே, வேலை போய்விட்டது என்று!
எனவே அவர் வீட்டுக்கு செல்லாமல் ஹைவே வழியே நடந்து செல்கிறார். அவருக்கு நடந்ததை நினைக்க நினைக்க ஸ்ட்ரெஸ் அதிகமானது. ஒரு சிகரெட் பிடித்தால் தேவலை என்று நினைத்தார். சிகரெட் கடையை எதிர்நோக்கி அந்த ஹைவேயில் நடந்து சென்றார்.
அதிர்ஷ்டவசமாகவோ இல்லை துரதிஷ்டவசமாகவோ அவர் கண்ணில் ஒரு சிகரெட் கடை கூட தென்படவே இல்லை.
அவருக்குள் ஒரு ஸ்பார்க் வந்தது.
'நான் என் இங்கு ஒரு சிகரெட் கடை வைக்கக் கூடாது? என்னைப்போன்று இந்த நெடுஞ்சாலையில் மற்றவரும் சிகரெட் பிடிக்க நினைக்கக் கூடும். ஆனால் ஒரு கடை கூட இங்கே இல்லை. நான் என் ஒன்றைத் தொடங்கக் கூடாது?' என்று அவருக்குத் தோன்றியது.
ஒரு புதிய தெம்போடு வீடு சென்றார். மனைவியைப் பார்த்து சொன்னார் 'எனக்கு எழுத படிக்கத் தெரியாததால் சர்ச்சில் வேலை பறிபோனது! கவலைப்படாதே நான் இனிமேல் ஒரு புது தொழில் செய்யப்போகிறேன். நெடுஞ்சாலையில் சிகரெட் கடை ஒன்றை விக்க போகிறேன்.'
மனைவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அந்த கட்டியர் தான் இத்தனை காலம் சேர்த்து வைத்த பணத்தை முதலாகப் போட்டு ஒரு சிகரெட் கடையை ஹைவேயில் தொடங்குகிறார். கொஞ்ச நாளிலே கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார். நல்ல லாபம் வந்தது. இன்னும் சில கடைகளைத் திறந்து வேலைக்கு ஆட்களை நியமித்தார்.
எங்கே எல்லாம் சிகரெட் கடை இல்லை என்று பார்த்து பார்த்து அங்கெல்லாம் கடைகளைத் திறந்தார். லட்சாதிபதி ஆனார் நம் கட்டியர்.. இனிமேல் முதாலாளி என்றே அழைக்கலாம்!
அவரிடம் பணம் கூடுவதை கவனித்த பங்குச்சந்தைக்காரர்கள் அவரை அணுகினர்.
'சார்! நீங்கள் உங்கள் பணத்தை பங்குச் சந்தையில் இன்வெஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இன்னும் லாபம் கிடைக்கும்.' என்றனர்.
நம் முதலாளியோ, 'பங்குச் சந்தை பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாதே' என்றார்.
'கவலைய விடுங்க. நாங்க இருக்கோம்' என்று வாசன் ஐ கேர் போல சொன்னார்கள் பங்குச்சந்தைக்க்காரர்கள்.
'சரி நீங்களே நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். செய்து விடலாம்' என்றார் முதலாளி.
'நாங்கள் டாகுமெண்ட்களை தயாரித்துவிட்டு வருகிறோம்' என்று சொல்லிட்டு சென்றனர் அவர்கள்.
ஒரு வாரத்தில் அனைத்து டாகுமென்ட்களையும் தயாரித்துவிட்டு வந்தனர் பங்குச்சந்தைக்காரர்கள்.
'அய்யா நீங்கள் இந்த டாகுமென்ட்டைஒருமுறை படித்துவிட்டு ஒரு கையெழுத்து இட்டால் போதும். மற்றவையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.'
முதலாளி தயங்கினார்.
'எனக்கு எழுத படிக்கத் தெரியாதே' என்று சொன்னார்.
அதிர்ச்சி அடைந்தனர் பங்குச்சந்தைக்காரர்கள். சில நொடிகளுக்கு யாரும் எதுவும் பேசவில்லை.
பிறகு ஒருவர் கேட்டார்.
'எழுத படிக்கத் தெரியாமலே நீங்கள் இவ்வளவு பெரிய ஆள் ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தால்??????'
முதலாளி சிரித்துக்கொண்டே சொன்னார்!
'கோவிலில் மணி அடித்துக் கொண்டிருதிருப்பேன்! எல்லாம் நன்மைக்கே!'

No comments:

Post a Comment