Saturday 23 June 2018

நத்தைக்கூடு

ஒரு வாரமாகச் சரியான மழை. காடு மேடு எங்கும் செடிகொடிகள் துளிர்த்து, பச்சைப் பசேல் எனக் காட்சியளித்தன. புழுக்கள், பூச்சிகள், எறும்புகள், ஈசல்கள், நத்தைகள், வண்ணத்துப்பூச்சிகள், ரயில்பூச்சிகள் என ஏராளமான உயிரினங்கள் பிறந்து, அங்குமிங்கும் அலைந்து திரிந்தன.
குருமலைக்காட்டில் இருந்த புளியமரத்தின் வேர்முண்டில் ஏராளமான நத்தை முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. சேகி நத்தை, தன்னுடைய குஞ்சுகள் அங்குமிங்கும் நகர்வதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. தன்னுடைய நீண்ட கண்களால் பார்த்தும், உணர்கொம்புகளால் தடவியும் குஞ்சுகளை உற்சாகப்படுத்தியது.
சேகி நத்தையின் குஞ்சுகளான பிகி, சிகி, டுகி, லிகி, எகி, இகி போன்றவை தங்கள் முதுகில் இருந்த மெல்லிய கூட்டுடன் மிகமிக மெதுவாக ஊர்ந்தன. ஆனால், கிகி மட்டும் அசையாமல் இருந்தது. அப்படியே உட்கார்ந்தபடியே சுற்றிலும் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தது. சேகி நத்தை கிகியின் அருகில் வந்தது.
“ம்ம்ம்.... எழுந்து வா கிகி.”
கிகி அம்மாவைப் பார்த்தது. அசையாமலேயே, ‘‘முடியலைம்மா” என்றது.
“அப்படிச் சொல்லக்கூடாதுடா. முயற்சி செஞ்சு பாரு. டுகி, எகி எல்லோரும் எப்படி ஓடுறாங்க பாரு!”
அம்மா சொன்னதைக் கேட்ட கிகி, மெல்ல எழுந்து ஊர்ந்துசெல்ல முயற்சி செய்தது. முதுகில் பெரிய சுமையை உணர்ந்தது. உடம்பை உதறி, சுமையைக் கீழே தள்ளிவிடப் பார்த்தது. கிகியே புரண்டு விழுந்ததுதான் மிச்சம். ஒருக்களித்துக்கிடந்த உடம்பை நிமிர்த்த முடியாமல் தவிக்க, அம்மாதான் தள்ளி நிமிர்த்தியது.
“அம்மா, என் முதுகில் இருக்கும் கூட்டை எடுத்துரு. எனக்கு அது வேண்டாம்” என்றது கிகி.
“அதையெல்லாம் தனியா எடுக்க முடியாதுடா. அது, நம் பாதுகாப்புக்காக இயற்கையின் ஏற்பாடு” என்றது சேகி.
“ம்ம்ம்ஹூம்... எனக்குக் கூடு வேண்டாம். அது இல்லைன்னா நான் வேகமா போவேன். என்னால இந்தச் சுமையைத் தூக்கிட்டு நடக்க முடியலை” என்றது கிகி.
அப்போது, ஒரு புழு கிகியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. கொஞ்ச தூரம் போன அந்தப் புழு திரும்பிப் பார்த்து, ‘‘நாம ஓட்டப்பந்தயம் வெச்சுக்கலாமா? யார் ஜெயிக்கிறான்னு பார்ப்போம்” என்று சொல்லிச் சிரித்தது.
கிகிக்கு அவமானமாக இருந்தது. புழுவுக்கு முதுகைக்காட்டித் திரும்பிக்கொண்டது. ஒரு நொடியில் கிகியின் முன்னால் வந்த புழு, “நீ ஜெயிச்சேன்னா நான் உன்னை என் முதுகில வெச்சு எல்லா இடத்துக்கும் தூக்கிட்டுப்போறேன். நான் ஜெயிச்சேன்னா, நீ இந்தக் காட்டிலேயே இருக்கக்கூடாது. என்ன சம்மதமா?’’ என்று கேட்டு எகத்தாளமாகச் சிரித்தது.
கிகிக்கு அழுகையே வந்துவிட்டது. அது அம்மாவிடம், “எனக்குக் கூடு வேண்டாம்... எனக்குக் கூடு வேண்டாம்... எனக்குக் கூடு வேண்டாம்...” என்று கத்தியது.
சேகிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “கிகி, முதல்ல அழறதை நிறுத்து. கூடு நமக்குப் பாதுகாப்பு” என்றது.
“ம்ம்ம்ஹூம்… எனக்குக் கூடு வேண்டாம்... எனக்குக் கூடு வேண்டாம்... எனக்குக் கூடு வேண்டாம்...” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னது.
அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தன்னை கேலி செய்துவிட்டுச் சென்ற புழுவைப் பார்த்தது. வேக வேகமாகப் போய்க்கொண்டிருந்தது அந்தப் புழு. அப்போதுதான் அது நடந்தது.
எங்கிருந்தோ ஒரு தவிட்டுக்குருவி பறந்துவந்தது. டக்கென்று சிறகுகளை மடக்கி, புழுவின் அருகில் நின்றது.
‘லபக்..!’
ஒரு நொடிதான். குருவியின் வாய்க்குள் போய்விட்டது புழு. அப்படியே திரும்பிய குருவி, சேகி நத்தையும் அதன் குஞ்சுகளையும் பார்த்தது. தத்தித் தத்தி வர ஆரம்பித்தது.
‘‘குழந்தைகளா உஷார். எல்லோரும் கூட்டுக்குள் போங்க’’ என்றவாறு தலையையும் உடலையும் கூட்டுக்குள் இழுத்துக்கொண்டது. அதன் குஞ்சுகளான எகி, இகி, லிகி, டுகி, கிகி, பிகி, சிகி எல்லாம் கூட்டுக்குள் சுருண்டுகொண்டன.
அருகில் வந்துவிட்ட தவிட்டுக்குருவி, சேகியைப் புரட்டியது. அதற்குள் ஒரு பசையை வாய்ப்பகுதியில் பூசிக்கொண்டது சேகி. அந்தப் பசை துர்நாற்றம் அடித்தது. தவிட்டுக்குருவி இரண்டு முறை சேகியை உருட்டிவிட்டுப் பறந்துவிட்டது.
நடந்ததை எல்லாம் கூட்டுக்குள்ளிருந்து கண்களை மட்டும் நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது கிகி. தவிட்டுக்குருவி பறந்துபோனதும் சேகி வெளியில் வந்தது. அது, கிகியின் அருகில் வந்து எதையோ சொல்ல வாயைத் திறந்தது.
‘‘கூடு வேண்டும்... கூடு வேண்டும்... கூடு வேண்டும்” என்று சொல்லிக் குதித்தது கிகி.
சகோதரனின் குதியாட்டத்தைப் பார்த்து எகி, இகி, சிகி, டுகி, பிகி, லிகி என எல்லாம் சிரித்தன.
தவிட்டுக்குருவிக்கு இரையாகிவிட்ட அந்தப் புழுவுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டு அனைத்தும் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன.

No comments:

Post a Comment