Friday 22 June 2018

ஸ்பானிய கதை


ஒரு காலத்தில் மனிதர்களைப் போலவே மேகங்களுக்கும் பேசும் சக்தியிருந்தனவாம். இதனால் பூமியில் யார் என்ன தவறு செய்தாலும், அதை மேகங்கள் காட்டிக் கொடுத்துவிடுமாம். ஒருநாள் மழைக் கடவுள் பூமிக்கு வந்தார். அழகான இளம்பெண் ஒருத்தி தனியே வீட்டில் நெசவு நெய்துகொண்டிருந்தாள். அவளை அடைவதற்காக அவர் சேவல் உருவமெடுத்து அவளின் வீட்டின் முன்பாகச் சென்றார். அந்த இளம் அழகான செங்கொண்டை சேவலைக் கண்டு ஆசையாகி அதைத் துரத்திப்பிடித்து அணைத்துக் கொண்டாள்.
மறுநிமிஷம் மழைக் கடவுள் தன்னுடைய உருவத்தை அடைந்து, அவளுடன் வல்லுறவு கொண்டார். ஆசை தீர்ந்தவுடன் மழைக் கடவுள் வானுலகுக்குப் போய்விட்டார். அந்தப் பெண் கர்ப்பிணியானாள்.
அந்தப் பெண்ணுக்குப் பையன் பிறந்தான். தனது மகனுக்கு மழைக் கடவுள்தான் தகப்பன் என அவள் வாதிட்டார். யாரும் நம்பவில்லை. தனக்காக யாராவது சாட்சி சொல்ல மாட்டார்களா என அவள் அழுதாள். மேகங்கள் அவளுக்காகச் சாட்சி சொல்ல முன்வந்தன. மழைக் கடவுளால்தான் அவள் கெடுக்கப்பட்டாள். ஆகவே, அவளது பிள்ளைக்குத் தந்தை மழைக் கடவுளே என மேகங்கள் சாட்சியம் சொன்னது. இதனால், ஆத்திரம் அடைந்த மழைக் கடவுள் என்னைக் காட்டிக் கொடுத்த காரணத்தால் இனி உங்களுக்குப் பேச்சு மறைந்துபோய்விடும் எனச் சாபம் கொடுத்துவிட்டார்.
அன்று முதல் மேகங்கள் மவுனமாக உலவுகின்றன. தான் கண்ட உண்மைகளை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் அவற்றை மழையாகப் பொழிகின்றன என்றொரு ஸ்பானிய நாட்டுப்புறக் கதை சொல்கிறது. உண்மைதான் மழையாகப் பொழிகிறது என்பது எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது பாருங்கள்!

No comments:

Post a Comment