Friday 22 June 2018

வருச நாட்டு ஜமீன் கதை!!!!!!!

புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக் கண்டவுடன் எடுத்து புரட்ட ஆரம்பித்தேன். உள்ளே மேலும் சில பழமையான படங்களோடும் ஓரமாய் இருக்கும் சிறு குறிப்புகளும் கவரும் வண்ணம் இருந்தன. சரி படித்துப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். வடவீர பொன்னையா என்ற எழுத்தாளரின் எழுத்தை முதல் முறை வாசித்தேன்.
இதைக் கதை என்று சொல்வதை விட நீள் சரித்திரக் கட்டுரை என்று தான் சொல்ல வேண்டும். சாபத்தால் சரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் உண்மைக் கதை எனும் கோடிட்ட வார்த்தைகளை முன்னமே தெரிவித்து விடுகிறார்கள். மூன்று தலைமுறையில் ஜமீனில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. கதையை கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் இட்டுச் சென்றிருப்பது ஆசிரியரின் பலம்.
இக்கதை சம்பந்தப்பட்ட மனிதர்களையும், குடும்ப நண்பர்களையும், வாரிசுகளையும் ஆசிரியர் நேரில் கண்டு சம்பவங்களை உறுதி செய்து சம்பவங்களை லாவகமாக கோர்த்து எழுதி இருக்கிறார். ஜமீன் மிரட்டல், ஏழை மக்கள், பளியர்கள், கவுடள் நம்பிக்கை, சாபம் என கதையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஈர்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
ஜமீன்கள் பெண்கள் விசயத்தில் பாரபட்சம் பார்க்காமல் ஏக போகமா வாழ்ந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் விலாவாரியா விவரிச்சு எழுதப்பட்டிருக்கிறது. சுவாரசியத்துக்காக சில புனைவுகள் சேர்க்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. ஜமீன் அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பதை விட ஜமீன் வாரிசுகளின் ஏகாந்த வாழ்க்கை முறையும், கணக்கு வழக்கு இல்லாமல் கடன் வாங்கும் போக்கும் காரணமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர் காலத்தில் ஆராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்ட தொல் பொருள் செய்திகளும் கதை போக்கில் சொல்லப்படுகிறது. கதையை படித்து முடித்த பிறகும் சில கதாப்பத்திரங்களும், சில இடங்களில் சொல்லப்படும் கருத்தும் இன்னமும் அழியாமலே இருக்கிறது.
சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு மனிதன் மனதளவில் சுதந்திரமாக செயல்படவும் வல்லமை பெறவும் துடிக்கிறான், எனவே மனிதர்கள் மனதில் தான் யுத்தங்கள் தொடங்குகின்றன. அவர்களின் மனங்களிலேதான் அமைதியும் உண்டாக வேண்டும் என சில வரிகள் நெஞ்சில் பதிகின்றன.
மூன்றாவது சாம்ராஜியத்தில் இருக்கும் ஜமீன் மைனர் பாண்டியன். இவரின் இறப்போடும் அதன் பின் இன்றளவில் அவர்களின் பரம்பரையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதாக கதை முடிக்கப்படுகிறது. இக்கதை எழுதும் போது மைனர் பாண்டி திருமணம் செய்து கொண்ட பெண் உயிரோடு இருந்திருக்கிறார். 73 வயது அவருக்கு.
அவருடைய புகைப்படத்தோடும் சில பேட்டிகள் போடப்பட்டிருக்கின்றன.மைனர் பாண்டிக்கு 34 வாயதாக இருந்த போது அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு 13 வயது. மாட்டு வண்டியில் போய் கொண்டிருக்கும் போது பார்த்தவுடன் பிடித்துப் போய் தூக்கிக் கொண்டு சென்று திருமணம் செய்துக் கொள்கிறார். கேட்க கேளியாகவும் கொடுமையாகவும் தான் இருக்கும்.
பாலிய விவாகம் என்பது அக்காலகட்டத்தில் பெரிய விசயமாக இருந்ததாக தெரியவில்லை. அவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்து வைத்தே அந்த ஆசாமிகளுக்கு அத்தனை மனைவிகளும் வைப்பாட்டிகளும் என்றால் இன்றய நிலையில் 29 அல்லது 30 வயதில் திருமணம் செய்வார்கள் என்றால் என்னாவது? சற்று சிந்த்திக்க வேண்டிய விசயம் தான். இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வேலை வெட்டி) இருந்திருக்குமோ? :)
அன்றைய நிலையிலேயே பெண்கள் விழிப்படைந்தார்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் வேலுத்தாயம்மா. இவர் கொண்டமனூர் சாமியப்ப நாயக்கரின் முதல் மனைவி. மைனர் பாண்டியனின் அம்மா. சுகபோகியாக இருக்கும் கணவனை விட்டுச் சென்று வாழ்கிறார். மைனர் பாண்டியும் பொறுப்பில்லாமல் இருக்கவும், அவரை விட்டும் தனித்து வாழ்கிறார். மைனர் பாண்டி இறந்தது 1951-ஆம் வருடம். வேலுதாயம்மா இறந்தது 1956-ஆம் வருடம். மைனர் பாண்டியின் இறப்புச் சடங்கிலும் அவர் கலந்துக் கொள்ளவில்லை. அப்படி ஒரு மனோதிடமான பெண். கணக்கு வழக்குகளை சீராக எழுதி கையெப்பம் இட்ட பிரதியையும் ஸ்கேன் செய்து போட்டிருக்கிறார்கள். இன்னும் பல விடயங்கள் பார்க்க படிக்க திகட்டாத தேனாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
உண்ணாம கெட்டுப் போச்சி உறவு,
பார்க்காம கெட்டுப் போச்சி பயிரு,
ஏறாம கெட்டுப் போச்சி குதிரை,
அடிக்காம கெட்டுப் போச்சு பிள்ளை,
முறுக்காம கெட்டுப்போச்சி மீசை.
சாபத்தோட வீரியத்துக்கு
சாம்ராச்யம் உரமாச்சு..
பூமியில பொதஞ்ச கதை
மறுபடியும் கருவாச்சு..
நல்ல சனங்க போற பாதையில
நல்ல விதை முளைக்கும்..
சரித்திரத்த சொல்லுகிற
சாட்சியாக இருக்கும்..
இப்படியாக சில கிராமிய பழமொழிகளும் மிக இலகுவாக கோர்க்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தை இன்னும் சிறப்பாக அச்சிட்டிருக்கலாம். ஆனந்த விகடன் சைசில் சிறுவர் புத்தகத்தை போல் இருக்கிறது. கள்ளிக் காட்டு இதிகாசத்தை போன்ற அளவில் அச்சிடப்பட்டிருந்தால் பக்கங்களும் கூடி இருக்கும். கையடக்கமாக படிப்பதற்கும் வசதியாக இருக்கும். எப்படி இருப்பினும், படித்து முடித்ததும், ஏதோ ஒரு தேடலுக்காக மீண்டும் படிக்கச் சொல்கிறது வருச நாட்டு ஜமீன் கதை.

No comments:

Post a Comment