Thursday 21 June 2018

இலங்கை வானொலி

உலகின் எந்த மூலையிலும் உள்ள தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் அவர் ஒரு இடைக்கால பாடல்களின் ரசிகராக இருந்தால் நிச்சயம் இலங்கை வானொலியையும் ஞாபகத்தில் வைத்திருப்பார். பெரும்பாலும் இடைக்காலப் பாடல்கள் வெளி வந்த காலத்தில் இலங்கை வானொலியின் தமிழ் சேவை உலகளவில் பிரபலமாய் இருந்தது.
புது வெள்ளம், இசைச் செல்வம், சித்திர கானங்கள், விடுமுறை விருப்பம், நீங்கள் கேட்டவை, இசைக் களஞ்சியம், வானவில்,ஒன்றோடு ஒன்று எனும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நாம் இன்று கொண்டாடுகின்ற இடைக்காலப் பாடல்கள் நிரம்பி வழிந்தன எனலாம். அக்காலத்தில் ஞாயிறு தினங்களில் ஒலிபரப்பாகிய இசையணித் தேர்வு எனும் நிகழ்ச்சி மிகப் பிரபலமானதாக இருந்தது. எழுபதுகளின் பிந்திய பகுதியில் வெளியான புதிய பாடல்கள் இசையணித் தேர்வு நிகழ்ச்சியை அலங்கரித்தன. வாசமில்லா மலரிது, இது ஒரு பொன் மாலைப் பொழுது, மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் போன்ற பல நூறு பாடல்களை அந்நிகழ்ச்சி சூடிக் கொண்டது.
அக்காலத்தில் அநேகமாக பாடல்கள் பழைய பெரிய இசைத் தட்டுகளிலேயே வெளிவரும். இலங்கை வானொலி அந்த வகை இசைத் தட்டுகளையே ஒலிபரப்புச் செய்து வந்தது. அதற்கு விசேடமான ஒலிப்பேழை இயந்திரம் காணப்பட்டது. அதுவொரு ஆடம்பர கருவியாகவே இருந்தது. எல்லா மக்களிடமும் அது இருந்திருக்கவில்லை. வசதியானவர்களே அதனைப் பாவித்து வந்தனர்.
இன்று பழைய இசைத்தட்டுப் பாவனை அருகி விட்டது. இன்றைய தலைமுறைக்கு அப்படியொரு கருவி இருந்ததென்பதே தெரியாத அளவிற்கு டிஜிட்டல் யுகம் உருவாகி இருக்கிறது.

No comments:

Post a Comment