Friday 22 June 2018

வெப்பம் Vs உணவு

தயிர் சாப்பிட்டால் சூடு… மோர் உடலுக்குக் குளிர்ச்சி.
மாம்பழமும் பப்பாளியும் சூட்டைக் கிளப்பும். வாழைப்பழம் குளிர்ச்சி தரும்.
இப்படி அன்றாடம் நாம் சாப்பிடுகிற உணவுகளில் சிலவற்றை சூடு என்றும் சிலவற்றைக் குளிர்ச்சி என்றும் சேர்த்துக்கொள்கிறோம் அல்லது ஒதுக்குகிறோம்.
உண்மையில், உணவுப்பொருள்கள் உடலின் வெப்பநிலையை மாற்றுமா? அதனால்
நோய்கள் உண்டாகுமா? சித்த மருத்துவர் சுவாமிநாதன் விரிவாக விளக்குகிறார்.
“நாம் உண்ணும் உணவு சூடாகவோ குளிர்ச்சியாகவோ இருப்பதைப் பொறுத்தே உடலின் வெப்பநிலையில் மாற்றங்கள் உண்டாகும். உதாரணமாகக் குளிர்ந்த சூழலில் ஒரு கப் தேநீர் அருந்தினால் இதமாக இருக்கும். அதேநேரத்தில் வெயில் அதிகமாக இருக்கும்போது குளிர்ச்சியான பழச்சாறு அருந்துவது உடலுக்குப் புத்துணர்ச்சி தரும். ஆனால், இதுபோன்று தட்பவெப்பநிலைக்கு மாறாக நாம் சாப்பிடும் உணவுப்பொருள்கள் உடலுக்குள் சென்று செரிமானமாகிச் சூட்டையோ குளிர்ச்சியையோ அதிகரிக்கச்செய்துவிடும். இவ்வாறு உணவுப்பொருள்களின் சுவையின் அடிப்படையில் நம் உடலின் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
சுவையின் அடிப்படையில் அறுசுவைகளில் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய மூன்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும். புளிப்பு, உப்பு, கார்ப்பு (காரம்) ஆகியவை உடல் சூட்டை அதிகரிக்கும். இவற்றில் ஒவ்வோர் உணவுப்பொருளுக்கும் ஒவ்வொரு விதமான சுவை உண்டு.
இனிப்புச் சுவை நிறைந்த உணவுப்பொருள்கள்
அரிசி, கோதுமை, பார்லி மற்றும் தானியங்கள், வெண்ணெய், நெய், வாழைப்பழம், மாம்பழம், கேரட், பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெல்லம், பதநீர், இளநீர் போன்றவை.
புளிப்புச் சுவை உள்ள உணவுப்பொருள்கள்
எலுமிச்சை, நாரத்தை, புளி, தயிர், ஆரஞ்சு, வினிகர், சோயா சாஸ்.
உப்புச் சுவை கொண்ட உணவுப்பொருள்கள்
நட்ஸ், உப்பு மற்றும் சில கடல் தாவரங்கள்.
கார்ப்புச் சுவை கொண்ட உணவுப்பொருள்கள்
மிளகு, திப்பிலி, சுக்கு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகாய்.
கசப்புச் சுவை நிறைந்த உணவுப்பொருள்கள்
கீரை வகைகள், பாகற்காய், கத்தரிக்காய், மஞ்சள், வெந்தயம், ஆலிவ், டீ, காபி.
துவர்ப்புச் சுவை கொண்ட உணவுப் பொருள்கள்
பீன்ஸ், பருப்பு வகைகள், மாதுளம்பிஞ்சு, புரோக்கோலி, காலிஃப்ளவர், டர்னிப்.
முதலில் சீதோஷ்ண நிலையின் அடிப்படையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று பார்ப்போம். உடல் உஷ்ணம் என்பது நம் உடலில் உள்ள தசைகள் சுருங்கி விரியும்போது நம் உடலுக்குள் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் ஏற்படக்கூடியது. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வதன் வழியே நோய்களிலிருந்து தப்பிக்கலாம். உதாரணமாக, மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். பனிக்காலம் மற்றும் மழைக் காலங்களில் உடலின் வெப்பநிலை குறைந்து காணப்படும். வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் எளிதில் அதிகரிக்கும். இவ்வாறு உடலில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப உணவிலும் நாம் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் நோயில்லாமல் வாழ முடியும்.
பொதுவாக, குளிர்ப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடலாம். நெய், வெண்ணெய் சேர்த்த உணவுகள், தேங்காய் சேர்த்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகளைச் சாப்பிடலாம். மிளகு ரசம், சுக்கு காபி பருகுவது நல்லது.
வெப்பம் அதிகம் உள்ள பிரதேசங்களில் வசிப்பவர்கள், எளிதில் செரிமானமாகும் அரிசி, கோதுமை உணவுகளைச் சாப்பிடலாம். உடல் உஷ்ணத்தைக் குறைக்க இளநீர், பதநீர், மோர், பழச்சாறுகள் குடிக்கலாம். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக உடல் உஷ்ணத்தைக் குறைக்க உளுந்தங்கஞ்சி, வெந்தயக் கூழ், அரிசிக் கஞ்சி, தேன் கலந்த மாதுளை போன்றவற்றைச் சாப்பிடலாம்.
பருவ காலங்களின் அடிப்படையில் என்னென்ன உணவுகளை உண்ணலாம் என்று பார்ப்போம்.
கார் காலம்: ஆவணி, புரட்டாசியில் வெப்பத்துடன் கூடிய மிதமான குளிர் இருக்கும். இந்தக் காலங்களில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்க வெல்லம் போன்ற இனிப்புப் பொருள்களையும், சரும வறட்சியைப் போக்க காரம், நெய் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள மிளகு ரசம், சுக்கு காபி பருகலாம். வெந்நீரில் தேன் கலந்து பருகுவதும் நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்பது நல்லது.
கூதிர் காலம்: ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழையுடன் கூடிய குளிர் இருக்கும். அந்தக் காலங்களில் மாப்பிள்ளைச் சம்பா சாதம், இனிப்புப் பொங்கல், பாசிப்பயறு, தேன், கத்தரிக்காய், பாகற்காய், கீரைகள் போன்றவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ளலாம்.
முன் மற்றும் பின்பனிக்காலம்: மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். குறைந்த நேரப் பகல் பொழுதும் நீண்ட இரவுப்பொழுதும் இருப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கும். அதிகாலையிலேயே பசி உண்டாகும். எனவே, காலையில் இனிப்புப் பொங்கல், கோதுமை உணவுகள், அசைவ உணவுகளைச் சாப்பிடலாம். உடல் சூட்டை மிதமாக்க புளிப்பு மற்றும் உப்புச் சுவையுடைய உணவுகளை அதிகளவு சாப்பிடலாம்.
இளவேனில் மற்றும் முதுவேனிற்காலம்: சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இந்தக் காலங்களில் உடல் சூட்டைக் கிளப்பும் வகையில் கார உணவுகளையும் அசைவ உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. கசப்பான உணவுகள், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவு சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment