Tuesday 16 January 2018

"அசந்து தூங்கிட்டேண்டா" என்றான் ரகு. "நல்ல வேளை, கூச்சல் போட்டு எழுப்பினே"

"அவன் பேசுறதே கூச்சல் போடுறாப்புல தான்" என்றான் ரமேஷ், அரைகுறையாக விழித்தபடி.. "சுபாவம் அப்படி.. போன வாரம் பம்பாய் பக்கமா திரும்பி நின்னு டிரங்க்கால் போடாமலே அவன் மாமா கிட்டே பேசினான் தெரியுமோ?"

"நீ எழுப்பாட்டா பேய் தூக்கிட்டுப் போயிருக்கும்". ஸ்ரீராமுக்கு பயத்தில் அழுகை வரும் போலிருந்தது. "போலீசைக் கூப்பிடு" என்றான்.

"எப்படிரா கூப்பிடறது? பல்கொட்டி கிட்டே பர்மிஷன் வாங்கி வேணா போய் கூட்டுரவா?"

"அதான் எழுப்பிட்டேல்ல.. மறுபடி எதுக்குடா கூவுறே?" என்றான் ரமேஷ் என்னிடம்.

"இத பாருடா.." என்று என் உள்ளங்கைகளைக் காட்டினேன். அத்தனை பேர் முகத்திலும், பாதி ராத்திரி என்றாலும், ஈயாடவில்லை. என் உள்ளங்கைகளில், விட்டு விட்டு நாற்று நட்டாற்போல், ஆங்காங்கே ஒன்றரை இஞ்ச் நீளத்துக்கு முடி. இழுத்துப் பார்த்தேன். வலித்தது. உடனே மூவரும் தங்களைத் தொட்டும் தடவியும் பார்த்துக் கொண்டனர். ரகுவின் கழுத்திலும், ரமேஷின் பாதங்களிலும் என்னைப் போலவே...

"சத்தியமா இது பேய் முடி தாண்டா" என்றான் ரகு. திடீரென்று "நில்டா" என்றான். "கவனிங்கடா. சத்தம் கேக்குதா?"

பின் கதவு விட்டு விட்டு ஓசையிட்டது. மென்மையான ஓசைதான். எனினும் தெளிவாகக் கேட்டது. யாரோ பந்தை எறிந்து விளையாடுவது போல. கிடுகிடுவென்று சமையலறை ஜன்னலுக்குச் சென்று பார்த்தோம். கிணற்றடி மேட்டிலிருந்து மேலே உருண்டு வந்து கதவில் மோதிக் கொண்டிருந்தது, பந்து சைஸில் நாங்கள் முன்பு பார்த்த தலை. இப்போது தீச்சிவப்பாக இருந்தது. யாரோ தணலை உருட்டி விடுவது போல் வந்து வந்து கதவில் மோதிப் போனது.

நாங்கள் பார்ப்பதை கவனித்து விட்டது போல் கதவருகே வந்ததும் நின்றது. விர்ரென்று எழும்பி எங்கள் முன் ஜன்னல் முழுதும் வியாபித்த அதே மஞ்சள் முகம்! இடுங்கிப் போன கண்கள்.. ஏறக்குறைய முகம் முழுதும் வாய். அத்தனை பெரிய கூரிய பற்களை நாங்கள் பார்த்ததேயில்லை. எல்லையம்மன் கோவில் சாமிக்குக் கூட இத்தனை கோரைப் பற்கள் கொடுத்தார்களா தெரியவில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நேரமில்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தோம். "வா" என்றது ஆழமான குரலில். ஜன்னலுக்குள் முகத்தை நுழைக்கப் பார்த்தது.

ரகு டக்கென்று ஜன்னலை இழுத்து மூடினான். சமையலறை ஜன்னல் ஏற்கனவே சரியாக மூடாது சனியன். இப்பொழுது மூட முடியாமல் கொக்கியருகே தட்டி நிறுத்தியதோ பேயின் இரண்டு பற்கள். ரகு ஜன்னல் கதவை இன்னும் அழுத்த, பல் விலகிக் கொண்டது. கொக்கி போட்டாலும் ஜன்னல் கதவின் பல விரிசல்களில் பேய் தெளிவாகத் தெரிந்தது.

"இதுக்கு ஜன்னலைத் தொறந்தே வச்சுடலாம். அட்லீஸ்ட் பயங்கரம் கம்மியா தெரியும்" என்றான் ரமேஷ்.

"டே.. ஓடுங்கடா. எல்லா ஜன்னலையும் சாத்துங்கடா" என்று ஆர்டர் போட்டான் ரகு.

எங்கள் வீட்டில் ஏழு மர ஜன்னல்கள். ராமர் அம்பு துளைத்த கதையாய் ஏழிலும் ஆங்காங்கே ஓட்டைகள். சிலவற்றை அறைந்து மூட வேண்டும். ரொம்ப அறைந்தாலும் உடைந்துவிடும் சாத்தியம். ஜன்னல் கதவுகளை மூட ஓடினோம். "ஸ்ரீராம்.. நீ என் கூடவே இருடா" என்றான் ரகு ஏறக்குறைய அதட்டலில்.

No comments:

Post a Comment