சாண்டில்யன்
எழுதிய "ஜலதீபம் " 1970-களின் தொடக்கத்தில் குமுதத்தில் நான் தொடராக
வாசித்த முதல் சரித்திர நவீனம். கனோஜி ஆங்கரே எனும் மராட்டிய
கடற்கொள்ளையர் , தஞ்சை வீரர் இதய சந்திரன்
, சாத் சித்திகள் எனும் மராட்டிய பிரிவினர், போர்ச்சுக்கீசியர்கள் ,
ஆங்கிலேயர்கள் என பலரையும் கலந்து கட்டி பானுரேகா , மஞ்சு, காதரைன்
என்னும் வெள்ளைக்காரி என மூன்று பெண்களையும் சரியாகப் பொருத்தி ...பலப்பல
சம்பவங்களை மிக சுவாரசியமாக அமைத்து ...என் மனதை ரொம்பவே கவர்ந்து
விட்டார். எனது அம்மாவை நச்சரித்து சாண்டில்யன் எழுதிய பழைய நாவல்கள்
பலரிடம் இருந்தும் கொண்டு தந்தார்கள். ராஜ முத்திரை , யவனராணி, கடல்புறா -
இவை எல்லாம் குமுதம் பத்திரிகையில் வெளியாகி பைண்ட் செய்த புத்தகங்களாய்
கிடைத்த போது ஏதோ பொக்கிஷமே கிடைத்தது போல அகமகிழ்ந்து போனேன். ஜீவபூமி ,
உதயபானு, மஞ்சள் ஆறு , மூங்கில்கோட்டை -இவை ராணிமுத்து இதழ்களாய் படித்தவை
...வரலாற்று புதினங்கள் ஒரு தீர்க்க முடியா போதை ஆகியது. பின்னர்
கோ.வி.மணிசேகரன் குடவாயில் கோட்டம் ...அப்பா என்ன ஒரு நாவல்!!!!!!!!!!!!!
...அகிலனின் வேங்கையின் மைந்தன்!!!!!!!!!!!!! ...நா.பார்த்தசாரதியின்
நித்திலவல்லி , வஞ்சிமாநகரம் ....ஜெகசிற்பியன் நாவல்கள் மகர யாழ் மங்கை ,
திருச்சிற்றம்பலம் ....இதன் பிறகே சுமார் பதினைந்து வயதில் சுமதி என்று ஒரு
அக்கா கல்கியின் தீவிர இரசிகை .....எனக்கு கல்கியை அறிமுகம் செய்து
வைத்தார்கள். ....ஏற்கனவே கல்கியில் சில நாவல்கள் படித்து இருந்தாலும்
...... கல்கியின் எழுத்துக்கள் சாண்டில்யன் அல்லது கோ.வி , நா.பா. அளவுக்கு
கவரவில்லை . ஆனால் சுமதி அக்காவின் அறிமுகம் மிக அழகாக கல்கியை எனக்கு
பிடிக்க வைத்தது. ஆனாலும் என் முதல் காதல் சாண்டில்யன் இன்று வரை
மாறவில்லை. சாண்டில்யனிலும் எனக்கு பிடிக்காத கடல் ராணி , மலை அரசி , மன
மோகம் போன்றவையும் உண்டு....ஆனால் ராஜ முத்திரையும் யவனராணியும் ஜலதீபமும்
கடல்புறாவும் ராஜ திலகமும் இன்றும் என் மனதை கொள்ளை அடிப்பவை .இவை
எல்லாவற்றையும் சுமார் இருபது தடைவைகளுக்கும் மேலாக வாசித்திருப்பேன்.
அடுத்து கௌசிகனின் பாமினிப்பாவை , கலைஞரின் ரோமாபுரிப்பாண்டியன் -இதை
குமுதத்தில் தொடராகப் படிக்கும் பாக்கியமும் அன்றே கிடைத்தது. இவைகளுக்கு
பின் தான் பொன்னியின் செல்வன் ....இன்று வரை கல்கி எனது தர
வரிசைப்பட்டியலில் ஆறுக்குபிறகுதான்.....1.சாண்டில்யன் 2.அகிலன் 3.கோ.வி
.மணிசேகரன் 4.நா.பார்த்தசாரதி 5.கௌசிகன் 6.கலைஞர் 7.கல்கி 8.ஜெகசிற்பியன்
......அடுத்து அகிலன் நூல்கள் ஒரு அலசல் சிறிய இடைவேளைக்குப்பிறகு .....
No comments:
Post a Comment