Friday 17 August 2018

பாதாளக்கரண்டி

அம்மைக்கு அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்து போயிருந்தது. நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிச்சுக்கிட்டு இருந்தோம்.பாட்டு வாத்தியார் வீட்டுக்கு அடுத்து உள்ள தோட்டத்து கிணற்றில் வாளி விழுந்து விட்டது. ஆட்டம் போட்டுக்கிட்டு தண்ணிய உருளைல இறைச்சா இப்படித்தான். பெரிய அக்கா தான் கயறை விட்டது.
வாளி வாங்கி முழுசா மூணு மாசம் கூட ஆகவில்லை. இரும்புவாளி. மாணிக்கம் செட்டியார் கடைல வாங்கியது. அப்பா குருவிகுளம் வரை ஒரு துஷ்டிக்காக போயிருந்தார். அவர் வருவதற்குள் பாதாளக்கரண்டி வைத்து எடுத்து விடலாம் என்று அசால்ட்டாக இருந்தது தான் தப்பு.
வாளி கிணற்றுக்குள் விழுந்ததும், அம்மைட்ட சொல்லிட்டு நானும்,பெரிய அக்காவும் திருமேனி செட்டியார் வீட்டுக்குத்தான் முதலில் போனோம். தெருவில் அவர்கள் வீட்டில் தான் பாதாளக்கரண்டி இருக்கிறது. யார் வாளியை கிணற்றுக்குள் போட்டு விட்டாலும், அங்கு போய்த்தான் வாங்குவதுண்டு. தெருவில் முக்காவாசி வீடுகளும் அவருக்குத்தான் சொந்தமாக இருக்கிறது. பஞ்சாயத்து பள்ளியை அடுத்து சீனியம்மாள் வீடு.அதுக்கு அப்புறம் ஒரு பெரிய வைக்கபோரு இருக்கும். அடுத்து செட்டியார் வீடு தான்.
நாங்கள் போயிருந்தபோது வீட்டில் பெரிய பூட்டு தொங்கிக் கொண்டு இருந்தது. இந்த வருஷம் திருக்கார்த்திகைக்கு திருவண்ணாமலை போயிருக்காகலாம் குடும்பத்தோடு. எங்களுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்து விட்டது.எல்லாம் போச்சு.
"அப்பா வந்தாருன்னா வசவு உரிச்சு எடுத்துருவாரே .."
அம்மைக்குத்தான் ஏச்சு விழும் முதலில். "துட்டோட அருமை தெரியுமா உனக்கு ..நீ போயி தண்ணி எடுக்க வேண்டியது தானே..?" என்பார்.
அம்மைக்கு இதை எல்லாம் நினைத்து தான் அழுகை வந்திருக்கும்.
பாட்டு வாத்தியார் பையன் நந்து தான் சொன்னான்." மேலகேட்ல ஆர்.பி.எஸ்.வீட்டுல கூட பாதாளக் கரண்டி இருக்க வாய்ப்பிருக்கு..எதுக்கும் கேட்டுப் பாருங்க.."
அவன் வாய்க்கு சக்கரைதான் போடணும். கிடைத்து விட்டது. ஒரு பெரிய கொத்துசாவியைப் போல...அதைப் பார்த்ததும் தான் உசிர் வந்தது. இருட்டுவதற்குள் எப்படியும் வாளியை எடுத்து விடலாம். அப்பா ஏழு மணி எம்.ஆர்.கோபாலன் வண்டிக்குத்தான் வருவார்.
தெருவே வேடிக்கை பார்க்க, நந்தகோபால் என்ற நந்து அண்ணனே, பாதாளக்கரண்டியை மெதுவாக கயத்துல கட்டி உருளை வழியே உள்ளே இறக்கினான்.
" எண்ணே..பாதாளக்கரண்டி உள்ளே விழுந்துருச்சுன்னா எப்படி எடுக்குறது ?" என்று கவுண்டமணியிடம் செந்தில் கேட்பது போல, நான் கேட்டேன். ஒரு முறைப்பு தான் பதிலாய் வந்தது. அக்கா என் தலையில் ஒரு குட்டு குட்டினாள். ஏம்ல உனக்கு இப்படி புத்தி போகுது ?
அண்ணன் தண்ணிக்குள் நல்ல மூழ்கவிட்டு பின்பு வெளியே இழுத்தான். ஏதோ தொங்கியபடி வந்தது. எல்லோரும் கைதட்டினோம். வந்தது ஒரு பழைய டால்டா டின் வாளி..அதையும் வாளி மாதிரி பயன்படுத்துவதுண்டு. ஆனால் எங்க வீட்டு வாளி வரணுமே..மீண்டும் உள்ளே விட்டு துளாவினான்.மேலே இழுத்தான். இப்போது ஒரு பழைய கயறு பாசி பிடித்தநிலையில் ஒட்டிக்கொண்டு வந்தது. ம்ஹ்ம்..மீண்டும் ஒரு துளாவல்.. இப்போதும் எதோ ஒன்று வந்தது..பொழுது சாய ஆரம்பித்திருந்ததால், இருள் கவ்வத் தொடங்கி இருந்தது. வந்த பொருள் என்னவென்று மேலே வந்த பிறகு பாரத்தால் அது பழைய பித்தளை செம்பு..
மேல் வீட்டு வசந்தா அக்கா கூவினாள்.." அது என்னோடது..ஆறு மாசத்துக்கு முன்னாலே நான் போட்டது.."
அவளிடம் கொடுத்து விட்டு, பாதாளக்கரண்டி மீண்டும் உள்ளே சென்றது. அம்மைக்கு நம்பிக்கை குறைந்து விட்டது.."ஏட்டி..உண்மையிலேயே இங்கனதான் போட்டியா..?"
நந்தகோபால் என்ற நந்து அண்ணன் தனது முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. இந்தமுறை அங்கும் இங்கும் அலசியபடி மூழ்க வைத்தான். மேலே இழுக்கும் போது, எதோ வந்த மாதிரி தெரிந்தது. எல்லோரும் ஆவலுடன் உள்ளே எட்டிப் பார்த்தோம்..
"கெடைச்சுருச்சு..." சாக்கடை முருகன் கூப்பாடு போட்டான்.
 மேலே கரண்டி வர வர அதன் பின் குனிந்த தலை நிமிராத புதுப் பொண்ணு மாதிரி வாளி லேசாய்க்கவிழ்ந்தபடி மேலே வந்தது.

No comments:

Post a Comment