Saturday 11 August 2018

உறவைப் பேணுவோம்

சென்ற நூற்றாண்டு காலத்தில் மனித உறவுகளும், சொந்தபந்தங்களும், வயதில் மூத்தவர்களும் மதிக்கத்தக்கவர்களாய் திகழ்ந்து அவர்களை மதித்து நடத்தல், மரியாதை நிமித்தமான பண்போடு கூடிய பயஉணர்வு, தன் சொந்தபந்தங்களை அரவணைத்த நடவடிக்கை பேச்சுவார்த்தை குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் யாவற்றையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பது என்று அனைத்துப் பண்பாடுகளும் பேணப்பட்டு வந்தது.
ஆனால் இன்றைய புத்தாயிரம் ஆண்டின் நிலையோ பரிதாபத்திற்குரிய நிலையாக இருந்து வருகிறது. சொந்தபந்தங்கள் தூக்கி எறியப்பட்டும், வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் வஞ்சிக்கப்பட்டும் வரும் நிகழ்வுகள் வெகு சாதாரணம் ...
வயதில் மூத்தவர்களோ கேலிக்கு ஆளாக்கவும்படுகின்றனர்.காசுபணம் உள்ளவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.தூக்கிவளர்த்த உறவினர்கள் தூரமாக்கப்படுகிறது. குடும்பப்பிரச்சனைகள் மூன்றாம் நபர்கள் அறியும்படி வீதிக்கு வருகிறது.இப்படிப்பட்ட அவலநிலைகள் இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரிடையே அதிகரித்திருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
உறவுமுறைகளில் ஏற்படும் இத்தகைய விரிசலுக்குக் காரணம் பலவிதமாகச் சொல்லலாம்
அதில் முதலிடம் பெறுவது பணவசதியாகத்தான் இருக்கமுடியும் ஆவதும் பணத்தாலே அழிவதும் பணத்தாலே என்று சொல்வது போல பணவசதிகளைப் பொறுத்து உறவுமுறைகள் மதிக்கப்படுகின்றது.வசதி நிறைந்த உறவினர்களிடம் போலியான பாசம்காட்டி மிக அருகாமையில் அவர்களுடன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு உறவினர் என்றதோற்றத்தை தனது உயரிய நடிப்பின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டு உள்ளொன்றும் புறமொன்றுமாய் இறுமாப்புடன் உள்ள இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அடுத்து காலம் செல்லச் செல்ல அறிவியல் / விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியில் மனிதர்கள் தன் கவனத்தை முழுமையாக வேறுபக்கம் திருப்பி ஆரோக்கியமற்ற மாறுபட்ட வழிகளில் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
அதன்விளைவு குடும்ப உறவினரின் அன்பு பாசமென்பது நம்மையும் அறியாது நாளுக்கு நாள் விலகிச்சென்று கொண்டிருக்கின்றது. இடைப்பட்ட புதுப்புது சொந்தங்கள் மிக அன்னியோனியமாகவும் நெருங்கிய இரத்த சொந்தங்கள் யாரோ எவரோ போல வெகு தூரமாக விலகிப் போயிருப்பதும் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைமையாக இருக்கிறது. புரிந்து கொள்ளாத்தன்மையில் விலகிப் போகும் இத்தகைய உறவினர்களின் தவறான முடிவினால் ஏதும் அறியா குழந்தைகள் கூட உறவுகளின் பாசத்திற்கு ஏங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நாளடைவில் என்ன உறவு முறையென்று கூட தெரியாமல் போய் விடுகிறது.
இன்றிய சூழ்நிலையில் சொல்வதானால் தனது சொந்த சகோதரர், சகோதரியின் பிள்ளைகளுடைய பெயர் கூட சரியாகத் தெரியாமல் இருப்பவர்களும் உண்டு. அதே சமயம் தனது மனைவி வழிச் சொந்தங்களின் பெயர் மற்றும் விபரங்களை மறக்காமல் அறிந்து வைத்து இருப்பார்கள்.காரணம் காலப்போக்கில் அவர்களது அன்பைப்பெற்று அங்கு தனது பெயரை நிலைநாட்டிக் கொள்ள வேண்டி அந்த புதுவழிச் சொந்தங்களிடம் பாசம் காட்டி தன்னாலான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு தேவைகள் பூர்த்தியானதும் வளர்த்தகிடா மார்பில் பாய்வதுபோல் அவர்களின் உண்மைக் குணத்தைக் காண்பித்து உறவினர்களை உதாசினப்படுத்தி உறவை முறித்துக் கொள்கிறார்கள்.. பாதிக்கப்படுபவர் தன்னிலையை நினைத்து வேதனைப் படுவதுதான் மிச்சமாக இருக்கும். இதுவே தற்போது நடை முறையில் நடந்து கொண்டு இருக்கும் வெள்ளிடைமலை உண்மை நிலையாகும்.
தனது சொந்தபந்தம் வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருக்க வேண்டும்.பெரியோர்களை மதித்து நடத்தல் உறவுகளை மதித்து பேசுதல் உள்ளன்புடன் பாசம் வைத்தல் ஆகியவை மனதினில் ஆழப்பத்திந்து இருக்க வேண்டும்.இப்படி இருப்பதன் மூலம் உறவுகளில் பிளவுகள் / முறிவுகள் வர வாய்ப்பில்லாமல் இருக்கும்.
எது எப்படியிருந்தாலும் கடைசியில் நமக்குக் கை கொடுத்துக் கூடி நிற்பதும் எங்கோ ஒரு மூலையில் இருந்து நம் நிலைமையை நினைத்துக் கவலைப்படுவதும் நமது இரத்த உறவாகத்தான் இருக்கும்.
ஆகவே இதைஅனைவரும் உணர்ந்து நமது வாரிசுச் சொந்தங்கள் பாசத்திற்கு ஏங்காமல் ஏழ்மைநிலையில் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு அளித்து தனது உறவுகளை கைவிட்டு விடாமல் கூடி வாழ்வோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்லா வாழ்க்கையில் நம் சன்னதிகள் தொடர உறவுகளைப் பிரியாமல் ஒற்றுமையுடன் தொடர்ந்து மகிழ்ந்திருப்போம்...
ஆகவே கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறலாம் என்ற முதுமொழிக்கு ஏற்ப உறவுகளை உண்மையாகவே மதித்து உள்ளன்புடன் முழுமையாக நேசிப்போம் !!! வாழ்க்கையில் அமைதியும் வளமும் எந்நாளும் காண்போம் ...அதைப் புதையல் எனக் கொள்வோம் !!! கொண்டாடி மகிழ்வோம் !!!

No comments:

Post a Comment