Thursday 9 August 2018

சாம்பல்

எழுத்தாளரும் வாசகரும் வெவ்வேறு ரயில்களில் பயணிக்கிறார்கள். வெவ்வேறு திசைகளில். அவர்கள் அநேகமாக சந்திப்பதேயில்லை.
அஞ்செலாவின் சாம்பல் (Angela’s Ashes) நாவல் சிலகாலத்துக்கு முன் வெளிவந்து பரவலாகப் பேசப்பட்டது. இதை எழுதியவர் ஃபிராங் மக்கோர்ட் என்ற அமெரிக்கர். 66 வயதில் அவர் எழுதிய முதல் நாவல். இதற்கு புலிட்ஸர் பரிசு கிடைத்து அவர் உலகப் பிரபலமானார். நகைச்சுவையாக எழுதுவார், ஆனால் சிடுசிடுக்காரர். அவரை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு பத்திரிகைக்காரர் மக்கோர்ட்டை பேட்டி கண்டார்.
‘உங்களுடைய Angela’s Ashes புத்தகத்தை உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பாடப்புத்தகமாக வைத்திருக்கிறார்கள். தெரியுமா?”
‘நல்லது. தயவுசெய்து அவர்களிடம் சொல்லுங்கள் அதில் பரீட்சை வைக்கவேண்டாம் என்று. அது ஒரு சித்திரவதை ஆயுதம் அல்ல; மகிழ்ச்சியூட்டும் புத்தகம்.’
‘உங்கள் புத்தகத்தை மேலோட்டமாகப் படிக்கக்கூடாது. நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அடி ஆழத்தில் கண்டுபிடிக்கவேண்டும்.’
‘அப்படியா? அதைக் கண்டுபிடித்ததும் எனக்கும் சொல்லுங்கள.”
எழுத்தாளர் எழுதாத ஒன்றைக் கண்டுபிடிப்பதே வாசகருக்கும், பத்திரிகைக்காரருக்கும் வேலை. இதை மக்கோர்ட் பல தடவைகள் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

No comments:

Post a Comment