ஒரு கொலைக்கு காத்திருக்கிறேன்
வானம் முட்டும் தனிமையை திறந்திருந்தது அவன் மூளை.
கையில்
இருந்த பீர் போத்தலை வாயில் வைத்து மடக் மடக்கென்று நாலைந்து மிடறு
குடித்து விட்டு மூச்சு தினமும் ஆல்கஹாலின் எதிர்க்காற்றை மெல்ல மெல்ல சரி
செய்தான். எதிரே ஆங்காங்கே தனி மனிதர்களின் சங்கமம் குடியும்...
சிந்தனையுமாகவே இருந்தது.
"உன்னிடம் மயங்குகிறேன்... உள்ளத்தால்....." பாடல்.. பொதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது.
"எப்படி
இருக்க.... பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சு.... நல்லா இருக்கியா.... என்ன
பண்ண.... வாழ்க்கை இவ்ளோ கொடுமையை உனக்கு கொடுத்திருக்க கூடாது.... ஆனா
கடவுள் இருக்கான் சேரன்.... உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன் இப்போ படுத்த
படுக்கையா கிடக்கறான்... அவ்ளோ பெரிய ரவுடி.... இப்போ கட்டில்ல பாய்
மாதிரி சுருண்டு கிடக்கறான்.... வேணும்னா ஒரு தடவ போய் பார்த்துட்டு வா..
நான் நல்லா இருக்கேன்டா.... நீ தான் நாசமா போய்ட்டன்னு சொல்லிட்டு வா..."
அறை முழுக்க நிரம்பியிருந்த சிகரெட் புகைக்குள்ளிருந்து வந்த குரல் மெல்ல
மெல்ல வடிவமெடுத்து எதிரே நின்று பேசியது.
சேரன்...
மீண்டும் போத்தலை மட மடவென இன்னும் நான்கைந்து மிடறு குடித்து விட்டு,
"சாரி... நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க...."
என்று சொல்லி "நான் அவனில்லை" என்பது போல சுற்றும் முற்றும் பார்த்து
விட்டு மெல்ல "எஸ்... நான் சொல்றது சரிதான்" என்பது போல ஒரு பார்வையை எதிரே
விட்டான்.
எதிரே நின்றவன் "அய்யயோ....
மாத்தி பேசிட்டோம் போல" என்பது போல ஒரு குழப்ப உடல்மொழியை சிதற விட்டுக்
கொண்டே அந்த இடத்தைக் கடந்தான். சாரி என்று முனங்கியிருக்க வேண்டும். அவன்
வெற்றிடம் சூடு பரப்பியது.
கையில்
மிச்சம் இருந்த மதுவையையும் மட மடவென குடித்தான் சேரன். அவன் கண்கள் சட்டென
கலங்கின. உள்ளுக்குள் சுழலும் ஒன்றில் அவனே காலத்தின் கட்டளை ஆனான்.
"என்ன சத்தம் இந்த நேரம்..." பாடல்... மலை ஏறிக் கொண்டிருந்தது.
*
அந்த
பாடலுக்குள் நுழைந்த சேரனும் வதனாவும் கை கோர்த்தபடி பட்டாம் பூச்சி
ஆனார்கள். நிறங்கள் மாறினார்கள். நிஜங்கள் மாற்றினார்கள். காதலும் கனவும்
கண்களில் கரைய.. அன்பும் முத்தமும் ஆரத் தழுவும்...... அன்றில் பறவைக்கும்
அன்னப் பறவைக்குமான காடு ஒன்றை சமன் படுத்திக்க கொண்டிருந்தார்கள்.
காட்டுத்தீயை விட வேகம் இந்த காதல் தீ. பரவியது காதல். பதறியது நெஞ்சம்.
ஏதோ
சினிமாவை நினைவு படுத்தும் காட்சி என்றாலும்... நிஜத்தின் நெருக்கம்
மின்மினிகளை படர விட்டு இருட்டை நிரம்ப விடும் வெளி என்பது அப்படித்தானே.
பிரபஞ்சம் எதுவெனில் ஜன்னல் திற என்பது மாயத்தின் அரிப்போ மனசுவடுகளின்
விரிப்போ....
விழுந்த ஒவ்வொரு அடியும் காதலையே காவு கேட்டன.
"பெரிய
அம்பிகாபதி அமராவதி.........காதலு கேக்குதோ....! அதுவும் இந்த நாய்
கூட...?" என்று தொண்டை கிழிய கத்திக் கொண்டே ஓடி சென்று கைகளும் காலும்
கட்டப்பட்டு மண்டியிட்டுக் கிடக்கும் சேரனின் கழுத்தில் ஓங்கி ஒரு மிதி
வைத்து விட்டு அதே நேரம் மிக கொடூரமாக ஓடி வந்து இந்த மூலையில் முட்டியில்
அடிபட்டு எழ முடியாமல் கிடக்கும் தன் தங்கை வதனாவின் நெஞ்சில் மறு உதையை
வைத்தான்...வதனாவின் அண்ணன் சாத்தான்.
"பத்தாது......
இது பத்தாது.... உன்ன மாதிரி நாயெல்லாம் இனி இந்த மாதிரி பண்ண கூடாது.
அதுக்கு........அதுக்கு உன்ன அணு அணுவா கொல்லனும் .......... பையா...."
என்று சொல்லியபடியே சேரனின் மீசையை விரல் சேர்த்து கவ்வி ஆழம் கொடுத்து
பிடுங்கி எறிந்தான்.
"ஆஹ்ஹ்ஹ்....... ஸ்ஸ்ஸ்........" வார்த்தைகளற்ற வலி முளைத்தது சேரனுக்கு.
வழிந்த ரத்தத்தில் வதனாவின் முத்தமும் இருந்தது. குருதி தோய்ந்த முத்தங்கள் நிலை கொள்ளாமல் அல்லாடிக்கொண்டே இருப்பவை.
"நீங்க
ரெண்டு பேரும் தெய்வீகமான காதலர்கள்னா மேட்டர் பண்ணாம இருந்திருக்கணும்...
அரிப்பு.... இல்ல...." நான்கு அறைகளை சேர்ந்தது போல கொடுத்தான் சாத்தான்.
"வீங்கிய முகத்தோடு..... தெய்வீகமான காதல்ங்கிறதுனாலதான்டா மேட்டர் பண்ணோம்......" வார்த்தைகளில் வலி தெறித்தது வதனாவுக்கு.
ஓடுவதும் அடிப்பதும் மிதிப்பதும்... என நிலைகொள்ளாத மிருகத்தின் வாழ்வுதனை சாத்தான் கவ்வினான்.
"மாப்ள...
வாடா... என் சிங்கக்குட்டி... அந்த ............. காரன் முன்னாலயே இந்த
ஓடுகாலிய...................................அத இவன் பாக்கணுன்டா.... இனி
இவன மாதிரி ஒருத்தன் நம்மல மாதிரி வீட்டு வீடேறி காதலு கல்யாணம்னு பொண்ணு
தேடக் கூடாது. நம்ம பொண்ணுங்க நிழல கூட தொடக் கூடாது.... செய்டா....
பார்த்துக்கலாம்... நான் உள்ள இருக்கேன்....." என்றபடியே.... தங்கையின்
முகத்தில் காறித்துப்பி விட்டு உள்ளே சென்றான் மானுடப் பிழை ஒன்றை நட்டு
வைத்து விட்ட சாத்தான்.
அவள்
கீழிருந்து வெறித்தனமாக மறுத்துக் கொண்டே அசைந்தாள். அவன் மேலிருந்து
வெறித்தனமான மறுதலிப்பை பொருட்படுத்தாமல் வேகத்தில் அசைந்தான். அவள்
இசைந்து கொடுக்கவில்லை. அவள் விரிந்த கால்களும் விரிந்த கைகளும்...
இயலாமைக்குள் கிடந்ததே தவிர அவனை இருத்திக் கொள்ள அனுமதிக்கவில்லை.
'என்னடி
அவசரம்.... இன்னும் ரெண்டு மாசத்துல நமக்கு கல்யாணம்தான. அதுக்குள்ள என்ன
காதலு மயிறு..." மாப்பிள்ளைக்கு மூச்சு வாங்கியது. அவன் உடல் பலம் கொண்டு
அவளை வீழ்த்திக் கொண்டிருந்தது. அவன் மூச்சு வாங்கிக் கொண்டே...." ஏய்
வதனா.....அடியே முண்டை..... நான் அவனை விட நல்லாவே ....................."
காதுக்குள் எச்சிலை துப்பினான். பிளீஸ்.... கட்டிப் பிடி.... கோப்ரெட்
பண்ணு.......ஏய் நாயே....சொன்னா கேளு.... பிளீஸ்.... பிளேஸ்......
பில்லீஸ்......." அவன் வார்த்தைகள் காற்றில் சிதறின. வியர்வையும்
எச்சிலும்... ஆதித் தத்துவத்தை மாற்றிக் கொண்டிருந்தன. உடலின் மென்மையும்
வெம்மையும் ஒரு சேர அழிந்து கொண்டிருந்தன. "நான்தானே கட்டிக்க போறேன்...
எல்லாத்தையும் மறந்து......மறந்துட்டு.........
மறந்து...........ட்டேன்..... பிளீஸ்... செல்லம்...."அவனின் கால்கள் அவளின்
கால்களை பரப்பி வைக்கவே மாறி மாறி நகர்ந்து கொண்டிருந்தன.
பட்டென்று
கால்களை அவனின் கீழ் முதுகோடு போட்டு இணைத்துப் பிடித்தவள்......" இபோ
ஓகேயா...." என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள் வதனா.
எல்லாம்
சரியாக பொருந்தி இருந்ததை உணர்ந்தவன் வாய் கிழிய சிரித்தான்... உடல்
வளையத் துவங்கும் போது பட்டென்று நிலை மாற்றி பொருள் மாறி தவற விட்டாள்
வதனா.
"அயோ அயோ... ஏன்.. நாயே.. கொஞ்சம்....கொஞ்ச...............ம் அஜஸ்ட் பண்ணுடி... தே........."
"அப்போ
அவனை போக விடு.... அவன் உயிரோட இருக்கணும்... உனக்கு இது வேணுன்னா...
இப்பவே .......... இப்பவே.........அவன் போகணும்..." கத்தினாள் வதனா. ஒரு
ஓநாயின் வெறியைப் போல எழுந்து மறு பேச்சு இல்லாமல் அம்மணமாகவே ஓடி சென்று
சேரனின் கட்டுகளை களைந்து விட்டு வேகமாய் ஓடி வந்து மீண்டும் அவளின் மீது
படுத்துக் கொண்டான்.
"ம்ம்ம்ம்......சரி....
ஓகே தான" என்பது போல அவனின் முனங்கல் மேலும் கீழும் சென்று சென்று
வர....... உடல் முழுக்க ரத்தம் சொட்ட.. செய்வதறியாது சரிந்து கொண்டே
நின்றான் சேரன். கத்தவும் இல்லை. அவனிடம் இனி ரத்தமும் இல்லை.
"சேரா.....
என் காதலா...... என் புருஷா.... என் ஆண்டவா.... போ.... நான் சாக
மாட்டேன்..... நீ வாழனும்.... போடா.......போ..... எங்கையாவது போ.... இனி
இங்க வராத....இவனுங்க மனுஷன திங்கறவனுங்க...காதலும் தெரியாது.... கலவியும்
புரியாது.... நீ போ.... நீ எங்க இருக்கனு கூட எனக்கு தெரியக் கூடாது...
போய்டு. சாதிய ..க்குள்ள பார்க்கறவனுங்க இவுனுங்க.... நீ போ....
அன்பே...சாதியே இல்லாத ஒரு ஊருக்கு
போய்டு......போ..............ஓ.....................வ்..." - அது
உச்சக்கட்டத்தின் கத்தல். வதனாவின் உயிர் வலிக்கும் கத்தல்.
சேரன்.... அந்த இரவின் நாக்கில் வழுக்கிக் கொண்டே தவழ்ந்தான்.
வன்முறையின்
உச்சம் உள்ளும் புறமும் அவனைக் குத்திக் கிழித்தன. காதலின் பிரிவு அவனை
முத்தமிட்டு பலித்தன. வானம் முட்டும் நடையோடு....வாழ்க்கை துப்பிய வலியோடு
அவள் வாழ்ந்த பூமியை இழுத்துக் கொண்டே நடந்தான். ஒவ்வொரு நட்சத்திரங்களும்
அவளின் ஒற்றை மூக்குத்தியென அவன் மீதி உதிர்ந்து கொண்டிருந்தன. இரவின்
பெருமூச்சும் பேரழுகையும் அவனை மூர்ச்சையாக்கி துப்பின. உடல் வேகும்
சூட்டின் முனையில்... அவனுக்கு விந்து கொட்டிக் கொண்டே இருந்தது. நிலவின்
கண்ணீர் பனியாய் சொட்டியது. நீள் வானத்தில் அப்பிய மேகத் திட்டுகளில் ஆடை
வெற்றுடம்பாகி கிடந்தது நிர்வாணம்.
அம்மணமாய் அந்த காட்டு வழியில் அவன் ஒரு வஞ்சிக்கப்பட்ட கடவுளைப் போல நடந்து கொண்டிருந்தான்.
*
இப்போது அடுத்த போத்தல் வேக வேகமாய் கோபத்தின் போதையாய் அவனுள் இறங்கிக் கொண்டிருந்தது.
"அவன் சரியான அடையாளத்தோடுதான் பேசினான். தான்தான் யாரோ என்று பொய் சொல்லி விட்டோம்...."
சேரன்
உள்ளுக்குள் சுழன்ற பழைய நினைவுகளை மீண்டும் ஆழத்துக்குள் புதைக்க
முடியாமல் திணறினான். நீண்ட யோசனை. நீட்டித்த தனிமை. அவன் தோண்டி விட்ட
பூதம்... அவனை அலைக்கலைத்தது.
"ஊரை விட்டு வந்து 20 வருஷம் ஆச்சுல்ல........? சரி ஒரு முறை அந்த ஊருக்கு போனால்தான் என்ன...?"
வதனாவின்
பேச்சை முதல் முறையாக தாண்டுகிற எண்ணம் வந்தாலும்... காலத்தின் நீட்டிப்பு
சில விஷயங்களை மெல்ல கடக்க பார்க்கிறது. வதனா கண்டிப்பாக செத்திருக்க
மாட்டாள். ஆனா படுத்த படுக்கையா கிடக்கற அந்த சாத்தானை ஒரு முறை
பார்த்துட்டு நான் நல்லா இருக்கேன்டா.... என் பொண்ணு பேர் கூட
வதனாதான்டான்னு சொல்லிட்டு வரணும்....வர்றதுக்கு முன்னால அந்த பொணத்த
கொன்னுட்டு வரணும். 20 வருஷம் கழிச்சு அவனைக் கொல்லணும்னு ஒரு வெறி மெல்லமா
முளை விடுகிறது. ஆறப்போட்டு காயப்போட்டு... வாழ்வின் எல்லா இன்ப
துன்பங்களும் அனுபவித்து கடந்த பிறகு.... அவனைக் கொல்ல வேண்டும் என்று
தோன்றிய எண்ணத்தில் உள்ள காரணம் காலம் மட்டுமே அறியும். மனதின் உட்சுவர்
காலம் கடந்து பழி வாங்கும் கண்ணாடியை அத்தனை சுலபத்தில் உடைத்து விடாது.
அது பளபளப்பு நிறைந்த ஆன்ம திருப்தி. எத்தனை கொடூரமான திரியை இத்தனை காலமாக
அணைத்தே வைத்திருக்கிறோம்.... தலையில் அடித்துக் கொண்டான். திரி
பற்றியவனுக்கு நன்றி கூறினான். அவனைக் கொன்று விட்டு எப்போதும் வதனாவுடன்
செல்லும் அந்த ஆற்றுக்கு சென்று தலை முழுக வேண்டும். நினைக்கும் போதே
இனித்தது. ஆறும் ஆறாத சினமும்.
அந்த ஊர் நிறைய மாறியிருந்தது.
"என்ன ஐ டி ப்ரூப் இல்லையா....? அப்புறம் எப்படி சார் ரூம் தர்றது....!" வரவேற்பாளன் வேகமெடுத்த வண்டியை நிறுத்தியது போல கேட்டான்.
"இல்ல
மறந்து வெச்சிட்டு வந்துட்டேன்... ஆனா இன்னைக்கு இங்க ஒரு இன்டெர்வியூ
இருக்கு.... வேற வழி இல்ல... பிளீஸ்.... ரூம் வேணும்...." சேரன் முகத்தை
சரியாக காட்டாமல் அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டே கேட்டான்.
ஹொட்டேல்
வரவேற்பாளன் யோசித்தபடியே என்ன செய்வதென்று தடுமாறிக் கொண்டிருக்கையில்
அவனுக்கு பின்னால் அறை கேட்டு வந்திருந்த ஒரு வயதான பெரியவர்.....அங்கு
நடந்து கொண்டிருக்கும் காட்சியை புரிந்து கொண்டு "தம்பி... இப்படி
எல்லாரையும் சந்தேகப்பட்டுட்டே இருந்தா எப்படி பிசினெஸ் போகும்......
அதுமில்லாம இந்த முகத்தை பார்த்தா தப்பு பண்ற மாதிரியா இருக்கு..? அதான்
சொல்றார்ல......ப்ரூப் கொண்டு வர மறந்துட்டேன்னு....ஏதோ முக்கியமான வேலை
போல....... நம்புங்கப்பா.........அதுதான வாழ்க்கை. அப்படியும் இல்லனா..
இவர் தங்கிட்டு போறது என் பொறுப்பு.. ஏதும் பிரச்சினைனா என்ன கேளுங்க.
சரியா......? நீங்க போங்க தம்பி... வாழ்க்கைங்கறதே கொடுக்கறதுதான..."
என்றவர், ஒரு கடவுளைப் போல நகர்ந்து அவரின் அறை நோக்கி சென்றார் ....
கை கூப்பி நன்றி சொல்லிக் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்றான் சேரன்.
குளித்து முடித்து தயாரானான்.
ஹொட்டேல்
தாண்டி.. அந்த ஊரின் முகப்புக்குள் மெல்ல நடக்கத் துவங்கினான். பின்
மதியம் வெயில்... பொளேரென.. அடித்துக் கொண்டிருந்தது. வீதி விரிந்து
கிடந்தது. விழுந்த வெயிலின் பரப்பு.....நிகர சரிந்து பறந்து கொண்டிருந்தது.
வேறு ஏதோ ஒரு ஊருக்குள் வந்து விட்டது போன்ற கற்பனை அவனைக் கண்கள் கூச
செய்தன. இதே வீதியில் எத்தனை நாள் நடந்திருப்பான். வதனாவைக்
காண......காதலிக்க.......ஒளிந்து ஒளிந்து தவம் கிடந்திருப்பான். இன்றும்
அப்படி ஒரு தவத்தோடுதான் நடந்தான். யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாது
என்பதில் கவனம் முழுதாக பதிந்து பதிந்து நடந்தது அவன் நாடகம். நடந்தன
அவனற்ற அவன் கால்கள்.
"யார் இது...?
நடையே புதுசா இருக்கே...." என்று வாசற்கதவில் நின்றபடியே எட்டிப் பார்த்த
ஒரு பெரியம்மாவின் கண்களில் முழுதாக சிக்கி விடக் கூடாதென்று அலைபேசியை
எடுத்து காதுக்கு வெறுமனே கொடுத்துக் கொண்டு வேகமாய் முகத்தை அந்தப்பக்கமாக
திருப்பியபடி நடந்து கொண்டே அந்த இடத்தை தாண்டி சமாளிக்க... அதற்குள்
பனியன் போட்ட ஒரு வாலிபன்........"யக்கா ..... கொஞ்சம் குழம்பு குடேன்...
எங்கம்மா ரசம்தான் வெச்சிர்க்கு" என்றபடியே அந்த பெரியம்மாவின் வாசலில்
முதுகு காட்டி மறைக்க பெரியம்மாவின் கவனம் குழம்பு பக்கம் திரும்பியது.
"ஏன் உங்கம்மா குலம்பு வெக்களியோ...." குரல் தூரத்தில் கேட்க... "அப்பாடா" என்று அடுத்த வீதிக்குள் நுழைந்திருந்தான் சேரன்...
"யாரு...
ஊருக்கு புதுசா இருக்கே.. நிழலே வேற மாதிரி இருக்கு" என்று ஒரு
கிழவி...வலக்கண்ணுக்கு மேல் வலக்கையை குடையாக்கி பார்க்க.....அதற்குள்..
ஒரு மீன்கார மகராசன் டிவிஎஸ்-ல் சர்ரேன்று வந்து இடையில் நின்றான்...
"கிழவி.. நெத்திலி கேட்டியே.. இருக்கு....வேணுமா ?" என்றான்..
கிழவியின் கவனம் மீன் கனவென சிதற இன்னொரு "அப்பாடா" என்று வேகமாய் நடந்து வீதியின் திருப்பத்துக்குள் நடந்தான்.
முதல் வீடே அந்த சாத்தானின் வீடு தான். ஆவென திறந்தே கிடந்தது.
வீட்டில்
நிறைய மாற்றம். மாடியில் மீண்டும் கட்டியிருப்பார்கள் போல. "ரவுடிப்பைய
தான.. கொள்ளை அடிச்சே கட்டியிருப்பான்...." மனம் முணங்கியது.
"வேறு
வழியில்லை. இதுவரை வந்தாயிற்று. என்ன நடந்தாலும் கொலை பண்ணிட்டுதான் வெளிய
வரணும்...." வேறு யாரோ போல உள்ளே செல்ல முடிவெடுத்த மறுகணம் உள்ளே மெல்ல
மெல்ல காலை எடுத்து வைத்தான்.
பெருத்த
அமைதி அந்த வீட்டை சுற்றி நகர்ந்து கொண்டிருந்தது. வீதியின் பின்மதிய
வெளிச்சம் சாய்ந்து பளீரென அந்த வீட்டின் வாசலில் விழுந்து கொண்டிருந்தது.
குரலை மெல்ல செருமிக் கொண்டே...... பூனையைப் போல மெல்ல மெல்ல பாதங்களை
அழுத்தி முன்னேறினான். வீட்டுக்குள் ஒரு வகை வெம்மை சூழ்ந்திருந்து. அவனின்
இதய துடிப்பு அவனுக்கே கேட்டது. கெண்டங்கால் மெல்ல நடுங்கின. அடிவயிறு
குபுக்கென்று சூடானது போல இருந்தது. உடலை அழுத்தி உள்ளத்தை அமைதிப்
படுத்தினான்.
"யாருப்பா ....?"
என்றால்... அக்கா.. அண்ணனை பார்க்க வந்தேன்.. பழைய பிரென்ட்..." என
ஆரம்பிக்க வேண்டும் என்று மூளைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
"யாருப்பா...? என்று கேட்க அங்கு யாருமே இதுவரை இல்லை என்பது போல இருந்தது எதிர்முனை அமைதி.
இன்னும்
சற்று முன்னேறினான் சேரன். முகப்பு அறை தாண்டி உள்ளறைக்குள் காலடி எடுத்து
வைத்தான். திக்கென்று நிற்க வைத்தது காட்சி. திறந்து கிடந்த
வீட்டில்...பிணம் போல நீண்டு கிடந்தான்... சேரனின் சரித்திரம் மாற்றியவன்.
வதனாவின் அண்ணன். அவனை உற்றுப் பார்த்தான் சேரன். கண்களில் ஒரு வித மிரட்சி
சுழன்றது. ஒரு சாத்தானை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு. சேரனுக்கு
பெருமூச்சு வாங்கியது. உடலில் ஒரு வித நடுக்கம் பரவியது. கண்களை வெளியே
விட்டு அனிச்சை செயல் போல சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கும் ஒருவனும்
இல்லை. மெல்ல எட்டி அடுத்த அறையைப் பார்த்தான். அந்த சாத்தானின் மனைவி
தூங்கிக் கொண்டிருந்தாள். எப்படி எட்டிப் பார்த்தானோ அப்படியே
தலையையிழுத்துக் கொண்டு சாத்தான் படுத்திருக்கும் அறையில் பூனையைப் போல
நின்றான். சாத்தானின் அருகே மெல்ல நடந்து வந்து நின்றான். மூச்சை அடக்கி
அடக்கி சீராக்கிக் கொண்டே அவனைப் பார்த்தான். சாத்தான் மூச்சு விடும் உடல்
மொழி மெல்ல மெல்ல மெதுவாகவே தெரிந்தது. கையில் வைத்திருந்த கத்தியைக்
கொண்டு சதக் சதக் சதக் கரக் கரக் கரக் என்று உடலில் 30 இடத்தில்
குத்தினான். கிழித்தான். ரத்தம் அவன் உடலில் தெரித்து அலறியது. பட்டென்று
முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தான். மனம் எண்ணிய கொலை செயல் முறையை
மூளை ஒப்பவில்லை. இந்த வகை சரி இல்லை. கழுத்தை மட்டும் அறுத்தால் என்ன
என்று நினைத்துப் பார்த்தான். அப்போதும் ரத்தம் பொங்கி காட்டிக் கொடுத்து
விடும்.
"வேறு எப்படி.....?"
சாத்தானை உற்றுப் பார்த்தான்.
"நீ செய்தது சரியா.. சாத்தானே ....?"
சேரனுக்கு
20 வருடங்கள் முன் நிகழ்ந்தவை மனக்கண்ணில் பட் பட்டென்று ஓடியது. இனி
யோசிக்க ஒன்றுமில்லை. எல்லாமே சாதகமாக இருக்கிறது. தலையணையை எடுத்து
சாத்தானின் முகத்தில் வைத்து பலம் கொண்டு அழுத்தினான். சாத்தானின் கால்கள்
மேலும் கீழும் அசைந்தன. மூச்சு திணறியது. இதோ இன்னும் சற்று நேரத்தில் இந்த
பிணத்தில் இருந்து... உயிர் போய் விடும். விடாதே.. பலம் கொண்டு அழுத்து.
காத்திருந்து கொல்லுதல் அற்புதத்தின் வெளிப்பாடு.. ஒளிக்குள் தலை நீட்டி
இருட்டை அழிக்கும் ஆசுவாசம். மனம் முழுக்க கடவுளின் கூட்டம் சாத்தானைக்
கூறு போட்டது. கூறு போடும் சப்தம் தாண்டி உள்ளே ஓர் அறைக்குள் இருந்தது
யாரோ முணங்கும் குரல் பட்டென்று அவனின் கொலை நியாயத்தை சற்று நிறுத்தியது.
காது கொலை தாண்டி அடுத்த அறைக்குள் நீண்டது. விசும்பும் சத்தம் சற்று
அதிகமானது போல இருந்தது. தலையணையை அப்படியே பொத்தினாற் போல வைத்து விட்டு
மெல்ல செய்வதறியாது.. சாம்பல் நிறப் பூனை போல.....சத்தம் வரும் அறை நோக்கி
நகர்ந்தான். நகரும் போது வலது பக்கம் இருந்த அறையை எட்டிப் பார்த்துக்
கொண்டே நடந்தான். சாத்தானின் மனைவி இன்னும் நன்றாக தூங்கிக்
கொண்டிருந்தாள்.
முணங்கல் வந்த
அறைக்குள் மெல்ல தலையை எட்டிப் பார்த்தான் சேரன். எட்டிப் பார்த்த கண்களில்
சற்று நேரத்தில் கசிய போகும் குருதியின் அழுத்தம் கொண்டு மீண்டும் ஆழமாக
பார்த்தான்.
பார்வையோடு தலையும்
தலையோடு உடலும் உடலோடு உயிரும் மெல்ல நகர்ந்து சென்று அந்த அறையில் ஒரு
மூலையில் கிடந்த ஒரு எலும்பு கூட்டின் முன் நின்றது. எலும்பு கூடு
பட்டென்று எழுந்து "வா வா வா... வந்திட்டியா..எனக்கு தெரியும்... நீ
வருவன்னு.. வா... உன் வதனாவை கட்டிக்கோ.. வா.... வா... என் அன்பே.... என்று
சொல்லி பற்கள் மட்டும் துருத்திக் கிடந்த முகத்தில் அழுகிறாளா
சிரிக்கிறாளா என்று தெரியாத பாவத்தை கொடுத்துக் கொண்டே மொழி மாறும்
பிசகுகளால் பேசியது... பேசினாள்.
"அயோ....
அயோ..."என்று தலையில் அடித்துக் கொண்டு இறுக கட்டிக் கொண்டு அந்த வீடே
இடிந்து விழும் அளவுக்கு கத்தி அழுதான் சேரன். நெஞ்சு அடைத்து விழுந்து
விடுவான் போலொரு தடுமாற்றத்தில் வெறும் எலும்புகளால் கூடியிருந்த
முகத்தில்... மாறி மாறி முத்தமிட்டான். அணைத்துக் கொண்டான். உடல் முழுக்க
குத்திய எலும்புகளை வலியோடு ஏற்றுக் கொண்டே........"என்னாச்சு.... வதனா
.... நீ நல்லா இருப்பான்னுதான நினைச்சேன்....... கடவுளே.... என்
செல்லத்துக்கு என்னாச்சு.. ஏன் இப்டி இருக்கா....." அவன் கதறி அழுதான்....
அவள் அவனை இறுக கட்டிக் கொண்டு ஒரு குழந்தையை போல மிரண்டாள்.
*
'என்ன.......முடிஞ்சுதா....
இவ்ளோதானா... தூ....' என்றபடியே எழுந்தவள் அறைக்கு வெளியே காவலுக்கு நின்ற
ஒருவனை இழுத்து அணைத்தாள். "வா.... வாடா...." அவனும் முடிந்த பின்
இன்னொருவன்.... அவனும் முடிந்த பின் இன்னொருவன்.. அவனும் முடிந்த பின்
இன்னொருவன். அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...அவனும் முடிந்த பின் இன்னொருவன்...அவனும் முடிந்த பின்
இன்னொருவன்...
"இவ்ளோ தானா ..... இவ்ளோ
தானா.... டேய் சாத்தான்களா.... இவ்ளோ தானா..... வா வா..." அவள்
தொடர்ந்தாள். தினமும்... பகலும் இரவும் அந்தி மாலையும் அதிகாலையும்....
எவனோ ஒருவனோடு கிடந்தாள். அவள் கோபம் திசை மாறி விரிந்தது. அவளின் வேகம்
படு மோசமாக இருந்தது. எல்லா விளக்குகளும் அணைந்த பின் அவளே எரியத்
துவங்கினாள்.
ஒரு நாள் உடல் நடுங்க...
கோபம் கொப்பளிக்க கிடந்த போது யாருமே அங்கில்லை. யாருமே அங்கில்லை. அண்ணன்
அறைக்குள் சென்று நிர்வாணமாகி அணைத்த போது தான் நெஞ்சு நெஞ்சாக அடித்துக்
கொண்டு உடல் சரிந்து விழுந்தான் அண்ணன் என்கிற நாசமாய் போன அந்த சாத்தான்.
அதன்
பிறகு அவனும் எழுந்திருக்கவில்லை. அவளுக்கு ஏதோ வியாதி என்று ஊரே பேச.....
வீட்டிற்குள் கட்டி வைக்கப்பட்டாள். உடல் மெலிந்து எலும்பாய்
மாறினாள்....உள்ளம் உடைந்து செத்தே போனவள்.
*
*
கண்களை
துடைத்துக் கொண்டு வதனாவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு அந்த வீட்டை
விட்டு அழுது கொண்டே வெளியேறினான் சேரன். "நீ வா.. என் கூட சாகு.... நீ வா
வதனா..." அவன் முணங்கிக் கொண்டே நடந்தான். அவள் சிரித்துக் கொண்டே தலையை
தூக்கி தூக்கி நிமிர்ந்து கொண்டு போனது போல தான் இருந்தது.
அவர்கள்
செல்லும் காட்சி மறைய மறைய கண் மூடிக் கிடந்த அந்த சாத்தான் பட்டென்று
கண்கள் திறந்தான். அடுத்த அறைக்குள் தூங்குவது போல படுத்திருந்த அந்த
சாத்தானின் மனைவி எழுந்து வந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கிழவியிடம் மீன் விற்ற மீன்காரன் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
பெரியம்மாவை பார்க்க விடாமல் தடுத்த அந்த பனியன்காரன் எட்டிப் பார்த்துக்
கொண்டிருந்தான். ப்ரூப்க்கு ஜாமீன் கொடுத்த பெரியவர் ஒளிந்து பார்த்துக்
கொண்டிருந்தார்.
சாத்தான் கண்கள் மூடி கண்ணீர் விட்டது.
"எப்போ
என்னையே என் தங்கச்சி...... அயோ..... கடவுளே..... நான் என்ன தப்பு
பண்ணின.. எங்க அப்பா சொல்லிக் கொடுத்ததைத்தான பண்ணேன்..என் சொந்த பந்தங்க
செய்யறதை தான பண்ணேன்.....எல்லா சமூகத்துலயும் அவுங்கவுங்க தகுதிக்கு பண்றத
தான பண்ணேன்...நீதி தர்மம்னு பேசற எத்தனை பெரு பிச்சைக்காரனை கூட்டிட்டு
வந்து வீட்டுக்குள் படுக்க வைக்கறாங்க.... அப்டி தான இதுவும்... சாதி
விட்டு சாதி எப்படி கல்யாணம் பண்ண... சாதி சனம் மூஞ்சில எப்படி முழிக்க..
அதுக்கு தான..! கட்டிக்க போறவன் கூட தான விட்டேன்... அதுக்கு இப்டி
ஆகணுமா...." கண்கள் விழிக்கும் போதெல்லாம் புலம்பிய சாத்தான்.. ஒரு நாள்..
மனைவியின் காலைப் பற்றிக் கொண்டு... "எப்படியாவது அவனை கண்டு பிடிங்க..
அவனை வர வைங்க.. அவன் கையால் நான் சாகனும்.. இது ஒன்னுதான் எனக்கு நிம்மதிய
கொடுக்கும்.. நான் ஏற்கனவே பொணம் தான்.... என் நாத்தம் என்னாலயே தாங்க
முடியல...... என்ன அவன் கொல்லணும்......அப்போதான்.. இந்த பிறவியோட பாவம்
என்ன விட்டு போகும்... கெஞ்சிக்கேக்கறேன்...நீலி.... என் ஆன்மாவுக்கு
நிம்மதிய குடு......" என்று கத்தி அழுத அன்று நீலி தீட்டிய திட்டம் தான்
சேரனை மதுக்கூடத்தில் வைத்து ஊர்க்காரன் பார்த்தது..... அதன் பின் உதவிய
பெரியவர்... பனியன்காரன்.. மீன்காரன்.. மற்றும் வீட்டில் தான் உட்பட
ஆங்காங்கே ஒளிந்து கொண்டு பார்த்த அடியாட்கள்....
காதல்
எல்லாவற்றையும் மாற்றவல்லது. எந்த திட்டத்தையும் நூலிழையில் மாற்றி போட்டு
பறந்து விடும் பெரும் பறவையின் தூர பயணம் அது. இதோ அவன் கொல்ல வந்தான்..
காதலை கண்டவுடன்....உலகம் மறந்து அவள் மட்டுமே போதுமென்று கூட்டிக் கொண்டு
சென்று விட்டான். எங்கே கடவுளும் சாதியும்.... எங்கே பழியும் பாவமும்.
எல்லாம் காதலும் கலவியுமே...
நீலிக்கு பைத்தியம் பிடித்து விட்டது அல்லது தெளிந்து விட்டது.
உள்ளே
ஓடிச்சென்று உலக்கையை தூக்கிக் கொண்டு வந்தாள். யாரும்
எதிர்பாக்கவேயில்லை. டம் டம்மென்று சாத்தானின் நெஞ்சில் அடித்தாள். கண்ட
ஆட்கள் தடுக்க முன்வரவேயில்லை. சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஒரு வதம்
அங்கே நிறைவேறியது. இன்னும் பலம் கொண்டு அடித்தாள். ஒரு மரணம்
விடுவிக்குமாயின் ஆன்ம பலம் கொல்லுதலுக்கும் உயரும் என நம்பினோர் அங்கே
கண்ணீர் சிந்தவில்லை. நம்பாத அவள் மட்டும் அழுது கொண்டே அடித்துக்
கொண்டிருந்தாள். அந்த மரணம் அப்போது தேவையாய் இருந்தது.
காதலை விட மரணம் ஒன்றும் பெரியது அல்ல என்பது போல கண்களை நன்றாக திறந்திருந்த சாத்தான் அதன் பிறகு காலத்தை திறக்கவேயில்லை.
No comments:
Post a Comment