Tuesday 16 January 2018


டெபுடி கலெக்டர் கோபாலய்யங்கார் தமது மனைவி மீனாட்சியை அழைத்துக் கொண்டு தஞ்சைக்கு வந்து ஒரு மாத காலமாகிறது. ஊரில் எல்லாம் பரபரப்பு. ஒரே பேச்சு. கோபாலய்யங்கார் இடைச்சியைக் கல்யாணம் செய்து கொண்டார் என்பது தான். எல்லாம் கிசு கிசு என்ற பேச்சு, நேரில் பேச முடியுமா? அதுவும் அந்தக் காலத்தில்; அதுவும் தஞ்சாவூரில்; சிலர் போயும் போயும் இடைச்சி தானா அகப்பட்டாள் என்று பேசிக் கொண்டார்கள். படியாதவர்கள். யாரோ இடைச்சியை இழுத்து வந்து வைப்பாக வைத்திருக்கிறார் என்று அபிப்பிராயப் பட்டார்கள். ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமான செய்தி என்பதால் வேறு வழியின்றி நம்பிக் கொண்டார்கள். பியூன்களுக்கு அய்யங்கார் என்றால் சிறிது இளக்காரம்; அவர் முதுகுப் புறம் சிரிப்பார்கள்.

இவ்வளவும் கோபாலய்யங்காருக்குத் தெரியாது. அதாவது தெரிய சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளவில்லை. வீட்டிலே மீனாட்சிக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க ஒரு கிருஸ்தவ உபாத்தினி. முன்பிருந்த பிராமணப் பரிசாரகன் சொல்லிக் கொள்ளாமல் ஓடி விட்டான். ஒரு நாள் மீனாட்சி சமைத்தாள். அதாவது, அவள் குலாசாரப்படி சமைத்தாள். லவங்கப்பட்டை பெருஞ்சீரகம் இத்தியாதி பொருள்களுடன் தன் கைப்பாகமாக மிகுந்த ஜாக்கிரதையுடன் வைத்திருந்தாள்.

கோபாலய்யங்கார் குடிகாரர் தான்; ஆனால் மாமிச பட்சணியல்ல. மீனாளின் கண்களைப் பார்த்துக் கொண்டு இரண்டு கவளம் வாயில் போட்டார். அவ்வளவு தான். குடலைப் பிடுங்கியது போல் ஓங்கரித்து வாந்தி எடுத்தார். மாமிச உணவின் பாகம் என்ற நினைப்பில் ஏற்பட்டது. மீனாள் பதறித் தன் கணவன் தலையைத் தாங்கினாள்.

கோபாலய்யங்கார் போஜனப் பிரியர். பசி காதலை வென்றது. அவளை உதறித் தள்ளி விட்டு வெளியே சென்று சேவகனைக் கூப்பிட்டு, பிராமண ஹோட்டலில் இருந்து சாப்பாடு தருவித்தார்.

போஜனமான பிறகுதான் கோபாலய்யங்காருக்குத் தமது காதல் திரும்பியது.

"மீனா" என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே வந்தார்.

"சாமீ" என்று எழுந்தாள், மூலையில் உட்கார்ந்திருந்த காதலி. அவள் கண்களில் இரண்டு துளிகள், அவர்களிருவருக்கும் இடையே இருக்கும் அகழியை எடுத்துக் காண்பித்தது.

மீனாட்சி பணிப்பெண்; அதிலும் பயந்த பெண். மருண்ட பார்வை. கணவன் என்ற ஸ்தானத்தில் அவரை வைக்கவில்லை. தனது தெய்வம் என்ற ஸ்தானத்தில், அதாவது தனக்கு எட்டாத ஒரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள். எட்டாதது என்ற நினைப்பில் பிறந்த பயம் கணவன் இஷ்டப்படி நடக்கத் தூண்டியதேயல்லாது அவரிடத்தில், தன்னை மறந்த பாசம், லயம் பிறந்ததே கிடையாது.

"என்ன மீனா! உனக்கு எத்தனை தரம் அப்படிக் கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். கண்ணா, இப்படி வா! என்ன இப்படி கறிக்குழம்பு வைத்தாய்?" என்றார்.

"இல்லிங்களே, இப்படித்தான் எங்க வீட்டிலே பருப்புக் கொளம்பு வைப்பாங்க" என்றாள்.

"அதை அப்பொழுதே சொல்லி இருக்கக் கூடாதா? ஹோட்டலில் சாப்பாடு எடுத்துவரச் சொன்னால் போகிறது. அது கிடக்கட்டும், இப்படி வா!"

அவளை ஆரத்தழுவி தமது மடிமீதிருத்தி முத்தங்களைச் சொரிந்தார். மீனாள் செயலற்ற பாவை போல் இடங்கொடுத்தாள். கணவன், கலெக்டர் என்ற பயம். அவர் இஷ்டம் போல் இருக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட பயம்.

"என்ன மீனா! நீ ஒரு முத்தமிடு"

மீனாள் தயங்கினாள். ஒரு பயந்த முத்தம், கோபாலய்யங்காரின் கன்னத்தை ஸ்பரிசித்தது.

"என்ன மீனா, இன்னும் பயமா? உன் பயத்தைப் போக்குகிறேன் பார். உனக்கு இரத்தமே இல்லையே, இந்த மருந்தைக் குடி" என்று ஒரு கிளாசில் ஒயினை ஊற்றிக் கொடுத்தார்.

குடித்தாள். சிறிது இனிப்பும் காரமும் தான் தெரிந்தது. மறு நிமிஷம் உடல் பூராவாகவும் ஏதோ ஒன்று பரவுவது போல் பட்டது.

"என்னமாக இருக்கிறது?"

"கொஞ்சம் இனிச்சுக்கிட்டு காரமா இருந்துச்சு. என்னமோ மாதிரியா இருக்குதே?"

"என்னமாக இருக்கிறது?"

"நல்லாத்தான் இருக்குது" என்றாள்.

அவளும் வாலிபப் பெண்தானே. அதுவும் ஒயின் உதவியும் கூட இருக்கும் பொழுது அன்று சிறிது பயத்தை மறந்தாள். அன்று அவளுக்குக் கோபாலய்யங்காரின் மீது ஏற்பட்ட பாசம், வாலிபத்தின் கூறு. கோபாலய்யங்கார் மீனா தன்னைக் காதலிப்பதாக எண்ணி மகிழ்ந்தார்.

கோபாலய்யங்கார் சிறிது கஷ்டப்பட்டு ஒரு பிராமணப் பரிசாரகனை நியமித்தார். சம்பளம் இருபத்தைந்து ரூபாய் என்ற ஆசையும் கலெக்டர் என்ற பயமும் இருந்தால், ஒரு ஏழை பிராமணன் அகப்படாமலா போகிறான்?

சாப்பாட்டுப் பிரச்னை ஒருவாறு முடிந்ததும், கோபாலய்யங்கார் தமது கலெக்டர் தொழிலையும் காதல் கனவையும் அனுபவிக்க முயன்றார். கலெக்டர் வேலை பரிச்சயமானது தான். ஆனால் காதல்...

மீனாளுக்கு பயமும், கோபாலய்யங்கார் மீது மோகமும் தான் இருந்து வந்தன. அதிலும், அவர் பயிற்சி செய்வித்த மருந்தில் கொஞ்சம் பிரேமையும் விழுந்திருந்தது.

ஒருநாள் சாயங்காலம்.

கோபாலய்யங்கார் ஆபீசிலிருந்து வந்து, தமது ஆங்கில வேஷத்தைக் களைந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது மீனாள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அய்யங்கார் 'டிரஸ்' செய்வதைப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு பிரேமை. ஆச்சரியம்.

கோபாலய்யங்கார் ஒரு முத்தத்தை எதிர்பார்த்தார். ஆசை இருந்தாலல்லவோ? பாசம் இருந்தால் அல்லவோ?

கோபாலய்யங்காருக்கு சிறிது எமாற்றமாகவிருந்தது.

"மீனா! என் பேரில் உனக்குக் காதல் இருக்கிறதா?" என்றார்.

மீனாவுக்கு அர்த்தமாகவில்லை. சிறிது தயங்கினாள்.

"அப்படின்னா?"

கோபாலய்யங்காருடைய ஏமாற்றம், சிறிது கோபமாக மாறியது.

"என் பேரில் பிரியமில்லை போலிருக்கிறது!" என்றார்.

"என்ன சா.. என்னாங்க அப்புடிச் சொல்லுறிய? உங்கமேல பிரியமில்லாமலா?" என்று சிரித்தாள் மீனாள்.

"வந்து இவ்வளவு நேரமாக, ஒரு முத்தமாவது நீயாகத் தரவில்லையே!"

"எங்க ஜாதியிலே அது ஒண்ணும் கிடையாது இப்போ?" என்றாள்.

கோபாலய்யங்காருக்கு சுருக்கென்று தைத்தது.

நாட்களும் வெகுவாக ஓடின. கோபாலய்யங்கார் ஒரு பொம்மைக்கு காதலுயிர் எழுப்பப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்.

மீனாளுக்கு இந்தச் சாப்பாட்டுத் திட்டம் பிடிக்கவில்லை. தான் பணிப்பெண்ணாக இருந்த பொழுது கிடைத்த இதே பிராமண உணவு, இப்போது வெறுப்பைத் தந்தது அவளுக்கு வியப்பாக இருந்தது. தகப்பனார் வீட்டில் நடக்கும் சமையலைப பற்றி ஏங்க ஆரம்பித்தாள். தனக்குத் தானே சமைத்துக் கொள்ள அனுமதி கேட்க பயம்.

ஆபீஸ் பியூன் கோபாலக் கோனார் கிழவன், சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து வீட்டு திண்ணையில் சாப்பிடும் போது அவளுக்கு நாவில் ஜாலம் ஊறும். வீட்டினுள் இருந்து கண்ணீர் விடுவாள்.

இதை எப்படியோ குறிப்பால் உணர்ந்து கொண்ட அனுபவம் உள்ள கோபாலக் கோனார் கிழவன், ஒரு நாள் ரகசியமாக மாமிச உணவு தயாரித்து வந்து, அவளுக்குக் கொடுத்தான். ரகசியம் கேட்டை விளைக்கும் என்று உணர்ந்து மீனாளுக்கு ஒரு தந்திரம் கற்பித்தான். அய்யங்கார் போதையிலிருக்கும் போது மாமிச உணவைப் பழக்கப் படுத்த வழி சொல்லிக் கொடுத்தான்.

மீனாள் பிராமணப் பெண் ஆவது போய், கோபாலய்யங்கார் இடையனானார்.

கோபாலய்யங்கார் மாமிசப் பட்சணியான பிறகு, மீனாள் உண்மையில் கிரகலட்சுமி ஆனாள். காலம் அவர்களுக்குச் சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக்கருவியாக கோபாலய்யங்காரின் மேல்நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன.

தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரீரி ஆனாள். கோபாலய்யங்கார் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார்.

இதை மறப்பதற்குக் குடி.

இப்பொழுது அவர்கள் தென்னாற்காடு ஜில்லாவிலே இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியே.

இரவு பத்து மணிக்கு அப்பக்கம் யாராவது போனால், கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.

"ஏ! பாப்பான்!" என்று மீனாள் கொஞ்சுவாள்.

"என்னடி எடச்சிறுக்கி!" என்று கோபாலய்யங்கார் காதலுரை பகருவார்.

இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள்.

No comments:

Post a Comment