Saturday 8 September 2018

வயசு

'ஏங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே' ...இழுத்தாள் விசாலாட்சி...வயது 70 + ...
கேட்டுக் கொண்டிருந்த ராமசாமி (77) 'என்னடியம்மா ஏதோ பெருசா பீடிகை போடறே ' ...எனக்குப்பிடித்த எவ்வளவோ விஷயங்கள் இந்த தள்ளாத வயதில் வேற வழி இல்லாம ஒண்ணொண்ணா குறைச்சு இப்போ பாலன்ஸ் ''நில்-(Nil)'' லுன்னு என்னைய நிக்க வைச்சு கொஞ்ச நாளாச்சே...தாயே ...
கால் பலம் இல்லாமப் போய் நடக்கவே ரெண்டுபேரும் இந்த கைத்தடியை தானே நம்பி இருக்கோம் ..சாலா (விசாலாட்சி ) ....
ஆனா ஒண்ணு இந்த கைத்தடியை நாம நம்பலாம் ...நமக்கு நடக்க அது உதவறது மட்டுமல்ல ..என்னமோ ஒரு பற்று அதுல இருக்குற மாதிரி உணர்வு ....ம் ஹூம் ...வயசாகி இப்பிடி எல்லாம் கஷ்டத்துல இருக்கறதுக்கு கொஞ்ச காலம் முன்னரே போய் சேர்ந்துருக்கலாம்...
வாயைப் பொத்தி இடைமறித்த விசாலாட்சி ...
என்னங்க ...நீங்க ...ஒங்களுக்கு 'வாழைப்பூ வடை'ன்னா ரொம்ப பிடிக்குமே ..இன்னிக்கு செஞ்சு தாறேன்...வாங்க மார்க்கெட் போய் ரெண்டு வாழைப்பூ வாங்கி வரலாம் ...ன்னு சொல்ல வந்தா என்னமோ தத்துவ ஞானி ரேஞ்சுக்கு எங்கியோ போய்ட்டீங்க ...உங்க வாய் ஜாலத்துக்கு மட்டும் என்னிக்குமே வயசு ஆகாது போல ...
அடடே ...நெசந்தான் எனக்கு சின்னப்புள்ளையா இருந்த காலமே தொட்டு வாழைப்பூவுல எது செஞ்சாலும் ரொம்பவே பிடிக்குமே ...என்னமோ அதுல ஒரு இனந்தெரியாத மோகம் ....
என்னோட ஒடப்பொறப்பு எங்க மூத்த அக்கா ஒரு சமையல் புலி ...வாழைப்பூ கூட்டு , வாழைப்பூ வடை ,வாழைப்பூ 'சூப்' ன்னு சமைப்பா..ஜமாய்த்துபோடுவா ....வாழைப்பூவுல அவ செஞ்சா என்னமா ஒரு பக்குவம் ...ஆஹாஹா...!!!!
போதும் போதும் உங்க அருமை அக்கா புராணம் ...அவுக பத்தி பேசுன்னா ஒங்களுக்கு உலகமே மறந்துருமே ...அக்கா புராணம் சாகற வரை ஓயாது ஒங்களுக்கு .... என்னமோ போங்க ...
அடியே !! கெழமே ....
அவ எனக்கு அக்கா இல்லேடி ...என்ன வளத்த பெறாத தாய் ...என்னிய விட எட்டு வயசு பெரியவ ...எனக்கு விபரம் தெரிஞ்ச நாளா என்னிய அவ பாத்துக் கிட்ட பவுசு ஒனக்கு சொன்னாலும் வெளங்காது ...விடும்மா....நாம இப்போ ஆகறதப்பாப்போம் ......
சொல்லிக்கொண்டே போய் பணத்தை எடுத்துக்கொண்டு இருவருமே கதவை சாத்தி பூட்டி விட்டு தெருவில் இறங்கி நடந்து கொண்டே வாழைப்பூ மகாத்மியங்களை அலசி பழைய சங்கதிகளை மீண்டும் நினைவுத் திரையில் ஓட்டிக்கொண்டே ஒருவருக்கு ஒருவர் ஓரக்கண்ணால் புன்னகைத்து.... கைத்தடியை ஊன்றி நடக்க ..அது ஒரு சொர்க்கம் பக்கம்ன்னு சொல்ற சுந்தர பொன் மாலை நேரம்....ன்னே சொல்லலாம் ....
பக்கத்துத் தெரு மார்க்கெட்டுக்கு போய் வாழைப்பூவை பார்த்து தேர்ந்து எடுத்து நல்லதா நாலை வாங்கி அதை என்னென்ன பண்ணலாம்னு சின்ன வயதின் சுவாரஸ்யத்தோடு கிசுகிசுப்பாய் பேசி ....பேசி ....அடேங்கப்பா !!!! நடக்கற சிரமமே தெரியாம ....
(அதத்தாங்க மத்யமர் நட்புக்கள் படத்துல பாக்கறீங்க ....)
இதுதானுங்களே 'தாம்பத்திய மகிமை' அல்லது மகாத்மியம் ...
கணவனுக்குப் பிடிக்கும்ன்னு வாழைப்பூ ஐட்டம் செய்ய தோணின மனையாளின் யோசனையில் அவர்கள் மீண்டும் அந்த பழைய வாழ்வை நினைவில் மீண்டும் வாழ்ந்து ....அசைபோடும் அந்த சுகம் ...அதுக்கு நிகரேது ?
ஈரேழு பதினாலு லோகமும் மோட்ச அமுதமும் அதன் முன் எம்மாத்திரம் ...
காசு பணம் கொடுத்து வாங்கற சமாச்சாரம் இல்லீங்க அது ... காதலுடன் தாம்பத்தியத்தில் இணைந்து கிடைக்கும் சொர்க்க வரம் ...வரம் கேட்காமலே கிடைத்த பாகம்பிரியாள் ...அந்த வரத்துக்கும் மேலேயே ...!!!!
ராமசாமியும் விசாலாட்சியும் நீடூழி வாழ்க !!!!!
--------------------------------------------------------------------------------
மத்யமர்களே !!! ....நீங்களும் கொஞ்சம் ஒங்க அனுபவக்கதைகள் கேட்டதோ / பார்த்ததோ / படித்ததோ ...இருந்தா அந்தக் கதைய ஒங்களோட நடையில் எழுதுங்க ....மத்யமர்ல பகிருங்க ...மகிழ்ச்சி நமக்கு எகிறுங்கோ...
வாங்கோ !!!!.............

No comments:

Post a Comment