Sunday 25 February 2018

கொக்கு Vs பசு

பசுமையான புல்வெளி அது. அங்கு பசுக்கள் பல மேய்ந்து கொண்டிருந்தன. கொக்குகள் அவற்றின் அருகே நின்று பறக்கும் பூச்சிகளை பிடித்துத் தின்றன.
கொக்குகள் அவ்வப்போது மாடுகளின் முதுகில் ஏறும், வாய் அருகில் செல்லும். இது மாடுகளுக்குத் தொல்லையாக இருந்தது.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பசுவிற்குக் கொக்குகளின் இந்தச் செயல் பிடிக்கவில்லை.
ஒருநாள் அந்தப் பசு கொக்குகளைக் கண்டித்தது. “நான் புற்களைக் கடிக்கும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டு என்னைத் தொல்லை செய்யக்கூடாது” என்று எச்சரித்தது.
‘இல்லை நண்பா!, எங்களை விரட்டாதீர்கள். புற்களின் அடியில் பூச்சிகள் மறைந்து கொள்ளும் எங்களால் அவைகளை எளிதாகப் பிடிக்க முடியாது. ஆனால் நீங்கள் புற்களை மேயும்போது உங்கள் மூச்சுக்காற்று பட்டுப் புற்கள் அசையும். அப்பொழுது மறைந்திருக்கும் பூச்சிகள் அங்குமிங்கும் ஓடும். அதை நாங்கள் எளிதாகப் பிடித்து உண்டு எங்கள் பசியாற்றிக் கொள்வோம். உங்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டோம்’ என்று கொக்கு பணிவுடன் சொன்னது.
“அப்படியானால் நீங்கள் பூச்சி பிடித்துச் சாப்பிட நாங்கள் உதவணுமா? முடியவே முடியாது. எனக்கு இடையூறாக இருக்கும் எதையும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். கடைசியாக நான் கொக்கு கூட்டத்தையே எச்சரிக்கிறேன். என் பக்கம் யாருமே வரக்கூடாது. மீறி வந்தீர்களென்றால் என் கால்களால் உங்களை மிதித்து நாசம் செய்துவிடுவேன். ஜாக்கிரதை” என்று கடும் கோபத்தோடு அந்தப் பசு கொக்குகளை விரட்டியடிக்கப் கொக்குகள் பயந்தோடின.
அன்றிலிருந்து அந்தப் பசு புல்மேயும் இடத்திற்கு எந்த கொக்கும் செல்லவில்லை. அந்தப் பசு ஒரு முறை தன்னுடன் மேய்ந்து கொண்டிருந்த இன்னொரு பசுவிடம், “பார்த்தாயா நண்பா, என்பக்கம் எந்தக் கொக்கும் வருவதில்லை. எந்தத் தொல்லையும் எனக்கு இல்லை. நான் இப்போது மகிழ்ச்சியாகப் புல் மேய்கிறேன். உனக்கு அந்தக் கொக்குகளை விரட்ட தைரியமில்லை. அதனால்தான் உன்னிடம் அவைகள் வாலாட்டுகின்றன” என்றது.
“நீ சொல்லுவதுபோல் கொக்குகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை” என்றது மற்றொரு பசு.
“சரி உன் விருப்பம்” என்று சொல்லிவிட்டு அந்தப் பசு மேயத் தொடங்கியது.
சில நாட்கள் கழித்து, கொக்கு நெருங்காத பசு மிகுந்த பசியுடன் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அதன் மூக்கினுள் ஒரு விட்டில் பூச்சி நுழைந்து விட்டது. உடனே பசு மூச்சுவிட முடியாமல், பங்கர வலியால் அலறித் துடித்தது.
அருகில் அமர்ந்து இரை தேடிக் கொண்டிருந்த கொக்கு ஒன்று பறந்து வந்து, ‘பசு நண்பா, எதற்காக இப்படிக் கத்துகிறாய்’ என்றது.
‘என் மூக்கினுள் ஏதோ ஒரு பூச்சி நுழைந்துவிட்டது. என்னால் வலி தாங்க முடியவில்லை’ என்றது.
“கவலைப்படாதே நண்பா, நீ கிழே படுத்துக்கொள். நான் என்னவென்று பார்க்கிறேன்’ என்றது கொக்கு.
பசு சாய்ந்து படுத்ததும், பசுவின் மூக்கைப் பார்த்த கொக்கு, “ஒன்றுமில்லை நண்பா, பூச்சி உள்ளே தள்ளி செல்லாமல் ஓரமாகத்தான் இருக்கிறது. இதோ நான் அதை எடுத்துவிடுகிறேன்” என்ற கொக்கு தனது நீண்ட அலகால், மூக்கினுள் நுழைந்த பூச்சியை எடுத்து வெளியேப் போட்டது.
பசு வேதனை குறைந்து நிம்மதி அடைந்தது. “நண்பா உன் உதவிக்கு நன்றி. உங்களை என்னருகே சேர்க்காத போதும், ஆபத்து என்று வந்த போது எனக்கு உதவி செய்து விட்டீர்கள். பூச்சிகள் எங்கள் மூக்கினுள் புகுந்து விடக்கூடாது என்ற இயற்கை ஏற்பட்டால்தான் நீங்கள் எங்களுடன் அமர்ந்து இரை தேட அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்கள் இனத்தினர் என்னுடன் அமர்ந்து இரை தேட வேண்டும்” என்றது பசு.

No comments:

Post a Comment