Thursday 1 February 2018

Media Angel or Devil?



சமூக வலைத்தளம்  மனித குலத்தின் கொலைக்களம்
முன்னுரை:  
தற்கொலைகள் மற்றும் கொலைகளுக்கு வலைத்தளம் காரணி  ஆக  இருக்கும் சான்றுகள் இன்று  மலிந்து  போயின. நாளேடுகள் செய்திப் பத்திரிகைகளில் தினமும் இடம் பெரும் சாதாரண நிகழ்வுகள் இவையே.
சமூக வலைத்தளங்கள் இன்று  அனைத்து தரப்பு மக்கள் வாழ்வுடன்  ஒன்றறக் கலந்து  அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் இன்றியமையாத ஒரு சாதனமாக  விளங்குகிறது என்பது  நூறு சதம் உண்மை. வயது பேதமின்றி இதனை எல்லோருமே பயன்படுத்தி மகிழ்கிறார்கள். மகிழ்வு திசைமாறி பிறழ்ந்து போகிறது. பல்வேறு ஊகிக்க இயலாத தீமை நிறைந்த விளைவுகளுக்கு அடிகோலுகிறது.
சமூக வலைத்தளங்கள் கொலைத்தளம் ஆவது என்பது ஊனுடலை வருத்தி கொல்வது மட்டுமன்றி அதில்  உறையும் நல்ல மனத்தையும்  அழிக்கும் சக்தி கொண்டதாகும். உறவினை கெடுத்து சீரழித்து ஆசாபாசங்களை சீரற்ற தன்மை உள்ளதாக்கி அதன்  இறுதி விளைவாக மோசடிகள், பொய்கள், கொலைகள் வரை கொண்டு செல்லும் கொடுமையை விளக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியாது.
சமூக வலைத்தளம் நம்மை சுற்றி வளைப்பது எங்கனம்:
            பொழுது  போக்காக நாம் நம்மை  அறியாமல் ஈடுபடும் வலைத்தளம் நாளடைவில் நம்மை நீர்ச் சுழல் என உள்ளிழுத்து அபாய நிலைக்கு கொண்டு செல்வது நாம் விளங்கி அறியாத உண்மை. படிப்படியாக நம்மை நமது புலனறிவை  மழுங்கச் செய்து செயலற்ற தன்மைக்கு தள்ளி நம்மை மிக எளிதில் அடிமைப்படுத்தி விடும் ஆற்றல் அதற்கு உண்டு. எடுத்துக்காட்டாக சிறுவர் சிறுமியர் கைபேசி போன்ற மின்னணுவியல் சாதனங்களை விளையாடப் பயன்படுத்தி அதிலேயே மூழ்கிப் போகின்றனர். இளைஞர்கள் இருபாலாரும் குடும்ப உறுப்பினர்கள் தோழமைகளுடன் பழகி  இவற்றைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக மனப் பிறழ்வுகளுக்கு ஆளாகி மீண்டு வர இயலாதபடி அதில் மூழ்கி விடும் அபாய நிலைக்கு செல்கின்றனர்.
சமூக வலைத்தளமும் அதன் விளைவான தீமைகளும் :
சமூக வலைத்தளத்தில் கணக்கு  இல்லாதவர்களே இல்லை என்று கூறும் வகையில் சிறுவயதினர் முதல் வயதானவர்கள் வரை ஃபேஸ்புக்’ – ‘முக நூல், ட்விட்டர்’- ‘குருவி குரல் என பல சமூக வலைத்தளங்களில் வைத்திருக்கின்றனர். ஒரு நாளுக்கு பல முறையாவது பார்க்கவும் செய்கின்றனர்.தூக்கம் கெடுதல் , பார்வை பழுது , உடல் நலம் கெடுதல் இறுதியாக மன நல பாதிப்புக்கள். நட்பில் தொடங்கி பல சிக்கல்களில் நம்மை மாட்டி விடும் இவைகளால் துன்பம் ஏராளம். சமூக வலைத்தளங்கள் உறவு சிக்கல்களுக்கு வழி காட்டி வன்முறைகளுக்கு அடிப்படையாகும் என்பது வெள்ளிடைமலை உண்மை . இன்று பத்திரிகைகள் , நாளேடுகளில் தினமும் இது  சார்ந்த செய்திகளை வாசிக்கிறோம்.

முடிவுரை :
            ஒரு கருவி அல்லது ஆயுதம்  பயன்படுத்தி ஆக்கவோ  அழிக்கவோ  இயலும். ஆக்கம் மக்கள் இனத்துக்கு நன்மை தரும்.வலைத்தளம் அத்தகைய இயல்பு கொண்டதே ஆகும். பயன்படுத்தும் மனிதர் அதனை பக்குவமாகக் கையாண்டால் நன்மை விளையும். தவறாக பயன்படுத்தினால்  தீமை விளையும். அழிவு உண்டாகும். இதனை ஆராய்ந்து அறிந்து தக்க படி பயன் படுத்துவோம்.



No comments:

Post a Comment