Monday 5 February 2018

செம்பொன் சீராளன்

அரசன் செம்பொன் சீராளன் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நெல் வயலில் மாடுகள் புகுந்து விளைந்த கதிர்களைத் தின்று நாசமாகிக்கியதை அறிந்து கடும் கோபம் அடைந்தான். மாட்டுக்குச் சொந்தக்காரனை அரண்மனைக்கு பிடித்து இழுத்து வர உத்தரவிட்டான். அவனுக்கு மரண தண்டனை விதித்தான்.

 மாட்டுக்குச் சொந்தக்காரனோ, ""அரசே... எனக்கு ஓர் ஆண்டு காலம் அவகாசம் கொடுங்கள். நான் உங்கள் அரண்மனைக் குதிரையைப் பறக்க வைத்துக் காட்டுகிறேன். அதன் பின் எனக்கு மரண தண்டனை கொடுங்கள்'' என்றான்.

 அரசனுக்கு அவன் சொல்லியதில் நம்பிக்கை ஏற்படவில்லை. என்றாலும் குதிரையை ஒருவேளை இவன் பறக்க வைத்துவிட்டால்.... எங்கு போனாலும் பறந்து செல்லலாமே? என்ற ஆசையில் அதற்கு ஒத்துக் கொண்டான். ""குதிரை பறக்காவிட்டால் உன் தலையை யானையை மிதிக்கச் செய்து உன்னைச் சாகடிப்பேன்'' என்றும் பயமுறுத்தினான்.

 வீட்டுக்கு வந்தான் மாட்டுக்குச் சொந்தக்காரன். நடந்ததை மனைவியிடம் சொன்னான். ""உங்களால் ஒரு வருடத்தில் குதிரையைப் பறக்க வைக்க முடியுமா?'' என்று கேட்டாள் மனைவி.

 ""அட நீ வேற... இன்னும் முழுதாய் ஓர் ஆண்டு இருக்கிறது. அதற்குள் அரசன் இறந்துவிடலாம். அல்லது குதிரை இறந்துவிடலாம். அதிசயம் நிகழ்ந்ததைப் போல் குதிரை திடீரெனப் பறந்தாலும் பறக்கலாம்'' என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

No comments:

Post a Comment