Thursday 22 February 2018

பார்வையே ....

‘பார்க்கும் பார்வை சரியாக இருந்தால்,
காணும் காட்சி நல்லனவாக இருக்கும்…’
என்றனர் மகான்கள்.

மனித மனங்களை ஆசை, கோபம், ஆணவம்
ஆட்டி வைப்பது போல், பிறரிடம் குறை காணும்
மனோபாவமும் சிலரை ஆட்டி வைக்கிறது.
இத்தகைய குறை காணும் மனோபாவம்
நீங்கினால், அவன் எல்லாருடைய அன்புக்கும்,
மரியாதைக்கும் உரிய மனிதன் ஆகி விடுவான்.
இதற்கு ஒரு கதையே இருக்கிறது…

பூலோகத்தில், கிருஷ்ண தேவன் என்று ஒரு
அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்
குணங்களின் பிறப்பிடம்; எத்தகைய கெட்ட
தன்மையிலும் நல்லதையே காணும் சிறப்பு
குணம் கொண்டவன்.

இம்மன்னனின் குணங்களைப் பற்றி ஒருநாள்
தேவர்களிடம் சிலாகித்து பேசினான் தேவேந்திரன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களில்
ஒருவன், ‘இந்த தேவேந்திரன் சொல்லும் அந்த
அரசனை சோதித்து பார்க்க வேண்டும்…’ என்று
நினைத்தான்.

அதன்படி, கிருஷ்ணதேவன் நாட்டிற்கு வந்தவன்,
அரசன் வரும் வழியில், ஒரு நாயைப் போல் தன்
வடிவத்தை மாற்றி, இறந்து கிடப்பது போல்
படுத்திருந்தான்.
கெட்டதிலும் நல்லதையே பார்

செத்துக் கிடந்த நாயின் உடம்பில் இருந்து துர்
நாற்றம் வீசியது. அந்தப் பக்கம் போன அனைவரும்,
நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பொத்திய
படி சென்றனர்.

அதேசமயம் அந்தப்பக்கம் வந்த அரசன், நாயின்
துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், ‘இறந்துபோன
இந்த நாய்க்குத்தான் எத்தனை அழகான பல்வரிசை…’
என்று சொல்லி, ஆச்சரியப்பட்டான்.

அதைக்கேட்டதும், நாயாக இருந்த தேவன், தன்
சுயவடிவோடு, மன்னன் முன் தோன்றி, ‘மன்னா…
பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மையில்
நற்பண்புகள் வாய்ந்தவன்…’ என்று சொல்லி
பாராட்டினான்.

அந்த மன்னன், கிருஷ்ண தேவனைப்போல, இறந்து
கிடக்கும் விலங்குகளிடம் கூட, நல்லதை பார்க்கும்
மன பக்குவம் நமக்கு இல்லாவிட்டாலும்,
பரவாயில்லை. நம்முடன் இருக்கும் சக மனிதர்களின்
குற்றங்குறைகளைப் பார்க்காமல், அவர்களிடம்
இருக்கும் நல்லதையே பார்க்கும் அளவிற்குப்
பக்குவம் பெற முயல்வோம்.

No comments:

Post a Comment