Saturday 10 December 2016

மகுடி இசையும் - பாம்புச் செவியும்
***********************************************
இசைக்கு கட்டுண்டுதான் பாம்பு படம் எடுத்து ஆடுகிறதா? இந்த கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் பதில் ஆம் என்பதில் நம்பிக்கை. எனக்கு சிறுவயது முதல் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல். இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்து விட்டது என்று சொல்லமாட்டேன்.
இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன். சரி, அப்ப விடை என்ன? கட்டுரையினுள் செல்வோம்.
நம்மில் பலருக்கு மகுடி இசையை கேட்டுதான் பாம்பு படம் எடுக்கிறதா என்று சந்தேகம் இருக்கலாம். மகுடி இசை, புன்னாகவராளி என்று இருந்தாலும், இப்படி சந்தேகப்பட்டு வேறு விளக்கம் தேடுவதற்கு மற்றொரு காரணம் பாம்பிற்கு நமக்கு வெளிப்படையாக தெரிகிறாற்போல் காது கிடையாது. பின்னர் எப்படி அதுக்கு மகுடி இசையெல்லாம் கேக்கும்?
அதுதான் காது. நம்ம கண்ணுக்கு தெரியாது. ஆனா அதுக்கு கேட்கும். வேடிக்கை போதும். இதற்கு ஓக்காமின் ஷவரக்கத்தி தத்துவதீர்வின்படி வேறு எளிய விளக்கமும் கொடுக்கமுடியும். ஒருவேளை மகுடியை ஊதுவதால் இல் லாமல், அந்த சாக்கில் பாம்பாட்டி அப்படி இப்படி மகுடியை ஆட்டுவதை கண்ணால் பார்த்து பாம்பு ஆடுகிறதோ. ஒரு தற்காப்பிற்கு எதிரியை (மகுடியை) அப்படியே படம் எடுத்து பயம் காட்டுகிறது என்று வைத்துக்கொள்ளலாமே. அட ஆமா, குடவாசல் பாம்பாட்டி மூடியை ஆட்டியதும் இதுக்குதானா. சரியா வரமாதிரி தான் இருக்கு. சமீபத்திய ஆராய்ச்சி இவ்விஷயத்தில் என்ன சொல்கிறது?
மேலே சொன்ன அனைத்தையும் தூக்கியடிப்பது போல, பாம்பிற்கு செவி உண்டு என்கிறது. அமேரிக்க பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் லியோ வான் ஹெம்மன், பால் ஃப்ரெய்டெல் மற்றும் புரூஸ் யங் தங்கள் ஆராய்ச்சி முடிவில் இரை நகர்வதை பாம்பு தன் காதால் கேட்டுதான் துரத்திப் பிடிக்கிறது என்று ருசுவுடன் நிருபிக்கிறார்கள்.
பாம்பிற்கு வெளியே தெரிகிறாற்போல் காது மடல்தான் இல்லை. ஆனால் நம் உள்நாக்கு போல, அதற்கு உள்காது உண்டாம். இந்த உள்காதுடன் பாம்பின் தாடைக்கு எலும்புத் தொடர்பே இருக்கிறதாம்.
பாம்பின் தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த ஸ்டேப்ஸும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளை கேட்கிறது. ஸ்டேப்ஸ் என்னும் எலும்பு நம் காதிலும் உண்டு (உடம்பிலேயே மிகச்சிறிய எலும்பு). நமக்கு அது காற்றின் அழுத்த மாற்றங்களை, அதிர்வுகளை உணர்கிறது (காது எப்படி இயங்குகிறது என்று வேறு தருணத்தில்).
பாம்பு நிலத்தில் ஊர்கையில் தூரத்தில் எலி ஓடினால் போதுமாம். அந்த நுண்ணிய அதிர்வுகளை கூட தாடை உணர்ந்து, தானும் ஆடி, தன்னுடன் ஸ்டேப்ஸையும் ஆட்டி, எலி யை மாட்டி விடும்.
மண் தரையாக இருந்தால் இன்னுமே உத்தமம். எலிமுதல் எது நகர்ந்தாலும் அது குளத்தில் கல் போட்டால் பரவுவது போல நொடிக்கு 50 மீட்டர் வேகத்தில் அதிர்வுகளை மண்ணில் பரப்பும் (இந்த வேகம் மாறுபடும், ஒப்பிட்டுகொள்ள காற்றில் ஒலி அலைகளின் வேகம் நொடிக்கு 330 மீட்டர்). அந்த அதிர்வுகளின் வீச்சு மிகவும் கம்மி; ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பாகம். ஆனாலும் அது பாம்பிற்கு கேட்குமாம். பாம்புச்செவி என்று சரியாகத்தான் சொன்னார்கள்.
மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவுகளை பார்க்கையில், காது இருந்தாலும், ஊர்கையில் தான் பாம்பின் செவி நில அதிர்வுகளை உணர்கிறது என்று தெரிகிறது. தலையை நிலத்திலிருந்து தூக்கிவிட்டால், பாம்பிற்கு இந்த காது பயனற்று போய்விடுகிறது. அதனால் காற்றில் வரும் மகுடி இசையை அதனால் கேட்கமுடியாது என்று கருதலாம்.
பாம்பாட்டியும் அப்படி உட்கார்ந்து கொண்டு முதலில் காலால் தரையை தட்டி ஊறும் பாம்பின் காதில் விழுவார். சரேல் என்று நிமிர்ந்து பார்க்கையில் மகுடி ஊதி, ஆட்டுவார். பாம்பு படமெடுத்து தொடரும்.
அது படமெடுப்பது, தான் கண்ணால் கண்ட எதிரியை (மகுடியோ, மூடியோ, நாமோ) தற்காப்பிற்காக பயமுறுத்தி தன்னை நெருங்கவிடாமல் செய்வதற்கு. ஆகையால், கட்டுரையின் முதலில் நாம் ஊகித்த காரணம் சரிதான் என்று நினைக்கத்தோன்றுகிறது.

No comments:

Post a Comment