Sunday 25 December 2016

"அந்தி மழை பொழிகிறது"
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...."
சுகமான, மனதுக்கு இதமாக இருந்த பாடல் வரிகளைத்
திரும்பத் திரும்ப வின்சியின் உதடுகள் உச்சரித்துக்
கொண்டிருந்தது.
girl.jpg
தெருமுனை டீக்கடையில் எப்போதோ கேட்ட
அந்தப் பாடலில் அவளுக்கு மிகப் பிடித்த வரிகளாகிப்
போனது இந்த வரிகள் மட்டுமே. பாடலின் மற்ற
வரிகளில் வின்சிக்கு ஈர்ப்பு இல்லை.
இன்றைக்கு ஒரு கவிதை எழுத வேண்டும் என்று
மனதுக்குள் அசை போட்டுக்கொண்டாள்.
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது... என்ற
வரிகளோடு அவளுக்குள் கிளர்ந்தெழும் அந்த
உருவத்தோடு ஐக்கியப்பட்டுப் போவாள்.
அந்த உருவத்தோடு அப்படி என்ன ரகசியம் பேசுவாளோ
தெரியாது. அவள் சுய உணர்வுக்குத் திரும்பும் போது
இழந்த உற்சாகத்தை மீட்டெடுத்தது போன்ற வெளிச்சம்
முகமெங்கும் நம்பிக்கைக் கீற்றுகள்
முற்றுகையிட்டிருக்கும்.
அன்றும் அப்படித்தான் தெருமுனை டீக்கடையில்
அந்தப் பாடலைக் கேட்டதும் அவளின் ஐம்புலன்களில்
ஒன்றைத் தவிர மற்ற எல்லாம் இயங்குவதை நிறுத்திக்
கொண்டன.
அந்தப் பாடல் அவளுக்குள் ஏற்படுத்திய உற்சாகப் பீறிடல்
மழையில் நனைந்து தன்னை மறந்திருந்தபோதுதான் திடீரென
மயங்கிச் சரிந்தாள்.
அடாடா... யாரது? என்ற குரல்களைத் தொடர்ந்து விழுந்து
கிடந்த வின்சியைச் சுற்றி ஒரு கூட்டம் கூடி விட்டது.
"அடடே, நம்ம அமலோட மக, தள்ளுங்க, தள்ளுங்க..."
"அமல் வீட்டுக்கு யாராவது போய் தகவல் சொல்லுங்கப்பா..."
"ஏங்காணும், அமல் வீட்டுக்கு ஆள் அனுப்பி அவரு வந்து... நானே தூக்கிக் கொண்டு போறேங்கே..." என்று விசுவாசம் சொல்ல அந்த நேரம் அங்கே ஒரு ஜீப் வந்து நின்றது.
அந்த ஜீப் அந்தக் கிராமத்தில் இயங்கிவரும் "ரியல்" என்ற
சமூக சேவை நிறுவனத்துக்குச் சொந்தமானது. அந்தச் சமூக
சேவை நிறுவனம் சுத்துப் பட்டிக் கிராமங்களில் ஏழை எளியவர்களுக்காக நடத்தும் சுகாதார மையங்களைப்
பார்வையிட கனடா நாட்டிலிருந்து வந்திருந்த வெள்ளைக்கார
டாக்டர் ஜோவும் "ரியல்" நிர்வாக இயக்குனர் பீட்டரும் தான் ஜீப்பிலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி வந்தனர்.
அந்தக் கூட்டத்திலிருந்த ஊர் நாட்டாமை சுந்தரம் தான்
சொன்னார். "பீட்டர் ஸார், நல்ல நேரத்துல வந்தீங்க,
நம்ம அமலு மக கடைக்கு வந்தது திடீர்னு மயங்கி
விழுந்துருச்சு. ஒங்க கூட வந்துருக்குற வெள்ளைக்கார
டாக்டரைக் கொஞ்சம் பாக்கச் சொல்லுங்கன்னார்,
சற்றே பதற்றத்துடன்"
பீட்டர், டாக்டரிடம் விபரத்தைச் சொல்ல, அவரும்
நிலைமையைப் புரிந்துகொண்டு, ஜீப்பிலிருந்த தன்
"கிட்டை" எடுத்து வந்து வின்சியை அங்கேயே பரிசோதிக்க ஆரம்பித்தார்.
மயக்கம் தெளிய ஊசியும் போட்டார். சிறிது நேரத்தில் வின்சி
எழுந்து உட்கார்ந்து மலங்க மலங்க விழிக்கவும், வின்சியின்
அப்பாவும் அம்மாவும் கண்ணீரும் கம்பலையுமாக அங்கே
வந்து சேரச் சரியாக இருந்தது.
ரியல் சுகாதார மையத்துக்கு வின்சியைக் கொண்டு
சென்று மேலும் சில பரிசோதனைகளைச் செய்த டாக்டர்
ஜோ சொன்ன தகவல் வின்சியின் பெற்றோரை மிகுந்த
அதிர்ச்சிக்குள்ளாகியது. பெயர் தெரியாத ஒரு வியாதியைச்
சொல்லி உடனே டவுன்ல உள்ள ஆஸ்பத்திரியில கொண்டு போய்ச் சேர்க்கணும்ன்னு சொல்லீட்டார்.
வின்சியின் அப்பா, சாதாரண பஞ்சாயத்து குமாஸ்தா. அவரால்
டாக்டர் சொல்ற மாதிரி டவுன்ல உள்ளபெரிய மருத்துவமனையில் சேர்த்து கவனிக்க முடியாது.
வின்சியின் குடும்பச் சூழ்நிலையைக் கேள்விப்பட்ட அந்த வெள்ளைக்கார டாக்டரே மருத்துவச் செலவு முழுக்க நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று வின்சியை சென்னையிலுள்ள ஏழடுக்கு மாடி மருத்துவமனை ஒன்றில் சேர்த்துவிட்டார்.
வின்சி படுத்துக்கொண்டே அந்த அறையை நோட்டம் விடுகிறாள்.
நேர் எதிரேயுள்ள சுவற்றில் ஒரு சிலுவை. பக்கம் பக்கமாக இந்து, முஸ்லிம் மதச் சின்னங்கள். திறந்திருந்த ஜன்னலின் பாதி வரை மறைத்துப் போடப்பட்டிருந்த திரைச் சீலை.
திரைச் சீலையைத் தாண்டித் தெரியும் நீல வானம்; இதை வைத்து
ஒரு கவிதை புனைந்திட வேண்டுமே...என்று எண்ணியவளின்
பார்வை, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா லூசி தென்பட அவளின் கவிதா
ஆராய்ச்சியும் அறுந்து போகிறது.
" என்னம்மா, ஏதும் வேணுமா? என்ற அம்மாவின் கரிசனத்திற்கு
பதிலாக தலை அசைத்து ஒன்றும் வேண்டாம்மா, நாம எப்ப
வீட்டுக்குப் போவோம்? நான் நல்லாத் தான இருக்கேன்," என்று
வின்சி கேட்டபோது, " நல்லாத்தாம்மா இருக்க, டாக்டர்
போலாம்ன்னு சொன்னா அடுத்த நிமிசமே வீட்டுக்குப்
போயிறலாம்," என்று மகளுக்கு ஆறுதலாச் சொல்லி
வின்சியின் முன் நெற்றியில் படர்ந்திருந்த முடிக்கற்றைகளை
பக்குவமாக லூசி ஒதுக்கினாள்.
" அப்பா இன்னிக்கு வர்றதா சொன்னாங்கள்ல, வந்ததும் டாக்டர்கிட்ட கேக்கச் சொல்லுங்கம்மா. கிறிஸ்மஸ் வரப் போகுது, நாம ஆஸ்பத்திரியே கதின்னு இருந்தா எப்டிம்மா? என்று மீண்டும் வின்சி விடாப்பிடியாக் கேக்கவே, " சரி கேக்கச் சொல்றேம்மா " என்று லூசி சொன்னதில் திருப்திப் படாமல் வின்சி கண்களை மூடிக் கொண்டாள்.
தலைப் பக்கம் இருந்த மேஜையில் வைத்திருந்த பூங்கொத்திலிருந்த வாசம் வின்சியின் நாசியைத் தொட்டது. அந்த மகரந்த மலர்களின் நறுமணம், மருத்துவமனைக்கே உள்ள மருந்து நெடிக்குக் கூட கவசமிட்டிருக்க வேண்டும்.
நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது; நாளும் ஒரு பரிசோதனை, நாளும் தினுசுதினுசான சிறிதும் பெரிதுமான மாத்திரைகள், வண்ணங்களில் திரவ மருந்துகள், மாற்றி மாற்றி உடம்பைத் துளையிடும் ஊசிகள் என்று பொழுது மறைந்து பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. வின்சியின் அப்பாவும் வந்தார்.
வந்த அன்றே ஊருக்குப் போக வேண்டும் என்று வந்தவர் நாலைந்து நாளாக அவரும் ஊருக்குப் போகாமல் இங்கேயே இருக்கிறார். அம்மாவும் அப்பாவும் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். அப்படி என்ன பேசுகிறார்கள்? வின்சிக்கு விடை தெரியவில்லை. அப்படியே எண்ணிக் கொண்டு தூங்கியும் போனாள்.
திடீரென்று மருத்துவமனை பரபரப்பானது. மருத்துவர்களும் செவிலியர்களும் குறுக்கும்நெடுக்குமாக ஓடினர். என்ன ஏது என்று விசாரித்துவிட்டு வந்த அமல், லூசியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
"எதோ, ஆக்சிடெண்ட்டாம். சின்னப்பையன் தலையில் பலத்த அடியாம். கொண்டாந்துருக்காங்க."
"அடப் பாவமே! ரெம்பச் சின்னப்பையனா?"
"நம்ம வின்சி வயசிருக்கும். ஒரே பையனாம்; அப்பா வேற
இல்லையாம். அந்தம்மா அழுதழுது மயங்கி விழுந்துட்டாங்க.
அது சரி..வின்சி தூங்கி ரெம்ப நேரமாச்சா?"
"ம்... அது அப்பாவை எங்க காணோம்? வீட்டுக்குப் போகணுமேன்னு படுத்தி எடுத்துட்டு இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சது."
"இனிமே நான் எங்கயும் போகல. தகவல் சொல்ல வேண்டிய
வங்களுக்கு எல்லாம் சொல்லீட்டேன். ஒலகத்துல யாருக்கும்
இந்த மாதிரி ஒரு சோதனை வரப்படாது.
" அமலின் கண்கள் கண்ணீரைச் சிந்த கைக்குட்டையை வாயில் வைத்து மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.
லூசியும் அமலோடு சேர்ந்து அழத்துவங்க.... தற்செயலாய் உள்ளே
வந்த நர்ஸ்...."என்ன நீங்க அந்தப்பெண்ணை கொஞ்சம் நிம்மதியா தூங்க விடமாட்டீங்க போலிருக்கே" என்று சொல்ல
"சிஸ்ட்டர்... எப்படிங்க சிஸ்ட்டர்....?" என்று விம்மத் துவங்கியவரை நர்ஸ், தணிந்த குரலில் சமாதானப்படுத்தி அறைக்கு வெளியே இருந்த பெஞ்சில் கொண்டு வந்து உட்கார வைத்தார்.
மறுநாள் மாலை மருத்துவர் குழு ஒன்று வின்சியை சோதித்துப் பார்த்தது. பின்னர் வின்சியின் அப்பாவை தனியே அழைத்துப்
போய்," நீங்க வின்சியை வீட்டுக்கு கூட்டீட்டுப் போயிறலாம்.
ஸாரி....எங்களால முடிஞ்சதை எல்லாம் செஞ்சுட்டோம். இன்னும் எட்டுல இருந்து 12மணி நேரம் வரைதான் உயிர் தங்கும்..."
"டாக்டர்.... என்று அமல் பெருங்குரலெடுத்து அழ டாக்டர்,
" மனசைத் தைரியப்படுத்திக்கங்க...இப்பவே வீட்டுக்கு கொண்டு போனீங்கன்னா உங்க நெருங்கிய சொந்தபந்தம் பாக்கக் கொள்ள வசதியா இருக்கும். அதான் சொன்னேன். எல்லாம் முடியிற
வரை இங்க வச்சிருந்து என்ன பண்ணப் போறீங்க?" என்றார்.
"வெள்ளைக்கார டாக்டர் காப்பாத்தீரலாம்ன்னு தைரியம் சொன்னாருங்களே? இப்ப நீங்க ஒரேயடியா இப்டிச் சொல்றீங்க. கடைசிவரை இங்கயே வச்சுப்பார்க்கலாம் டாக்டர். வின்சிக்கு நாம சாகப்போறோம்கிற விசயம் கடைசிவரை தெரிய வேண்டாம்ன்னு நெனைக்கிறேன்.
ஊருக்கு கொண்டு போனா எப்படியாச்சும் நாலு பேர் வந்து பேச அழன்னு அவளுக்குத் தெரிஞ்சு போயிரும். அந்தப் பிஞ்சுக்கு கடைசிவரை தெரியக்கூடாதுன்னுதான்.....இங்கயே இருக்கட்டும்ன்னு சொல்றோம்....நாளை விடிஞ்சா கிறிஸ்மஸ்...நல்லதோ கெட்டதோ...அது இங்கயே நடக்கட்டும்...டாக்டர்...." கண்ணீர் வழிய அமல் கெஞ்சும் குரலில் சொன்னார்.
"எங்க கையை மீறுன விசயமாயிருச்சுங்களே! பில்லு செட்டில்மெண்ட் பத்திக் கவலைப்படாதீங்க. அந்த டாக்டர் பிளாங்க் செக் குடுத்திருக்கார். நீங்க உங்க சம்சாரத்துக்கிட்ட பேசீட்டு என்ன ஏதுன்னு சொல்லுங்க...சரியா..என்று சொல்லிவிட்டு டாக்டர் அங்கிருந்து நகர்ந்தார்.
வின்சிக்கு இரவுச் சாப்பாட்டைக் கொடுத்துக்கொண்டே
"நீங்க மத்தியானமே சாப்பிடல...எதாச்சும் சாப்பிட்டுட்டு வாங்களேன்..." லூசி அமலிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது உள்ளே நுழைந்த நர்ஸ்...சாப்பாடு ஆகுதா....ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு இந்த மாத்திரையை வின்சிக்கு குடுத்துருங்க என்றார்.
"நான் நல்லாத்தானே இருக்கேன். எனக்கு மாத்திரையெல்லாம் வேண்டாம் சிஸ்ட்டர்"
"அப்டி எல்லாம் சொல்லக்கூடாது. இந்த மாத்திரையை சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்."
"நான் குடுத்துர்றேன் சிஸ்டர்....அந்த ஆக்சிடெண்ட் பையன் எப்படி இருக்கான் சிஸ்டர்?"
"பாவம் கண் பார்வை போயிருச்சு.... யாராவது கண்தானம் செஞ்சாத்தான் அந்தப் பையனுக்கு இனி பார்வை....!?"
"அடப்பாவமே...!"
"வயாசாகி இப்டி ஏதாச்சும் ஆயிருந்தாப் பரவாயில்ல...அந்த எளம் குருத்துக்கு இப்டி ஒரு சோதனை! ம்ம்ம்...எல்லாம் விதிம்மா...விதி..." என்று நர்ஸ் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.
"அப்பா....எனக்கு அந்தப் பையனைப் பாக்கணும் போல இருக்கு. கூட்டீட்டுப் போறீங்களா?"
"டாக்டர்கிட்ட கேட்டுகிட்டுத்தான் கூட்டீட்டுப் போகணும்."
அதற்குள் அந்த வழியாக வந்த டாக்டர் ஒருவரை
டாக்டர் ஸார்....என்று வின்சி கூப்பிட அவரும்
"என்ன வின்சி என்றவாறே வந்தார். வின்சியின் அப்பா
விசயத்தைச் சொல்ல....."ஓ!...தாராளமா பாக்கலாம் வா... நானே அழைச்சுட்டுப்போறேன்" என்று கூட்டிப் போனார்.
தலையிலும் கண்களிலும் கட்டோடு படுத்திருந்த அந்தச் சிறுவனைப் பார்த்தாள் சிறிது நேரம் இமைக்காமல். சிறுவனின் தாயார் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்தார்.
"அழாதீங்க...ஒங்க மகனுக்கு ஒன்னும் ஆகாது..." என்றாள்
வின்சி பெரிய மனுசி போல.
"எம்புள்ள இனிமே என்னைப் பாக்க முடியாதாமே? பச்சைப்புள்ள கண்ணை ஆண்டவன் அநியாயமா பறிச்சுக்கிட்டானேம்மா. அழாம என்ன செய்யிறதும்மா?"
"கவலைப்படாதீங்க எந்த ஆண்டவர் அநியாயமா கண்ணை எடுத்தாரோ அந்த ஆண்டவரே ஒங்க மகனுக்கு கண்ணைக் குடுப்பார்"
"எந்தங்கம்...என் இராசாத்தி...ஒன்னோட வாய் வார்த்தை அப்படியே பலிக்கட்டும்."
"ஒங்க மகன் பேர் என்ன?"
"எம்மவன் பேரு ஆறுமுவம்ம்மா..!"
"டாக்டர் அங்கிள்.....நீங்களே சொல்லுங்க ஆறுமுகத்துக்கு என்னோட கண் ரெண்டையும் நான் குடுக்கலாமில்ல...?"
"அது வந்து....நீ...." டாக்டர் குழப்பமாக வின்சியின் அப்பாவைப் பார்க்க... அதிர்ச்சியில் அவரோ திகைத்து நிற்க....
"சொல்லுங்க டாக்டர்....என்னோட கண்ணை நா குடுக்கலாமா? கூடாதா?
இல்லம்மா...உயிரோட இருக்கிறவங்க கண்ணை எடுத்து வைக்க முடியாது. இறந்தவங்ககிட்ட இருந்து கண்ண எடுக்க அனுமதி வாங்கி ஆறுமுகத்துக்கு பொருத்த முடியும்....அத..."
"அய்யோ...டாக்டர் அங்கிள் எறந்தவங்ககிட்ட போய் ஒங்க கண்னைக் குடுங்கன்னு கேப்பீங்களா? நானே, இன்னைக்கோ, நாளைக்கோ சாகப்போறேன். எங் கண்ணை ஆறுமுகத்துக்கு எடுத்து வச்சிருங்க. என்னோட "கிறிஸ்மஸ் பரிசா" ஆறுமுகத்துக்கு குடுத்ததாச் சொல்லுங்க..."
"வின்சி.... என்று அமல் கதறியதில் அந்த மருத்துவமனையே செவிடாகி இருக்க வேண்டும்.
"ஏம்ப்பா அழறீங்க? நாஞ் சாகப்போறதை எங்கிட்டச் சொன்னா நான் அழுவேன்னுதான நீங்க எங்கிட்ட சொல்லாம, நாந் தூங்கினப்புறமா அம்மாவும் நீங்களுமா அழுதீங்க இல்லையா? ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும் நான் ஒங்ககிட்ட பரிசு கேப்பேன்?
இந்தக் கிறிஸ்மசுக்கு நானே பரிசு கொடுக்கப்போறேன்.
நா, செத்தாலும் என்னோட கிறிஸ்மஸ் பரிசு உயிரோட இருந்து உங்களைப் பாக்குமே! என்னைப் பாக்கத் தோணும்போது நீங்க ஆறுமுகத்தைப் போய் பாத்துக்கங்க...சரியா? என்னம்மா..சரின்னு சொல்லுங்க.....பேசிக்கொண்டே இருந்தவள் மயங்கிச் சரிந்தாள்.
வின்சி கண்களைத் திறக்கவே இல்லை.
ஆறுமுகம் கண்களைத் திறக்கிறான் வின்சியின் கிறிஸ்மஸ்பரிசு ஒளி வீசுகிறது!

No comments:

Post a Comment