Thursday 5 January 2017

நந்தவனங்களைவிட்டு இடம்மாறி
கூடைகளில் பூத்திருந்த பூக்களை 
நீ ஒருமுறை பார்க்கையில்
மூர்ச்சையாகிறது அனைத்தும்...!
உன்னைப்பார்த்த வேளையில்
மயங்கிப்போன அனைத்தையும்
நீர்தெளித்து எழுப்பிவிடுகிறாள்
பூக்களின் வேதனைபார்த்து பூக்காரி...!
ஒவ்வொரு பூவாய்
தொட்டு... தடவி... இதழ்பிரித்து...
வாய்ப்பளிக்கிறாய்
ஏதோஒரு ஒற்றை ரோஜாவுக்கு...!
தெளித்த நீர்த்துளிகளை
கண்ணீர் துளியாய் காட்சிப்படுத்தி
கவலையோடு கலங்கி நிற்கிறது
மற்ற பூக்கள் அனைத்தும்...!
கோதிவிட்ட கூந்தலோடு
சேர்ந்துக்கொண்டு கர்வப்படுகிறது ஒன்று
தவிர்த்துவிட்ட வே‌தனையில்
தவிக்கிறது மற்றவைகள்...!
கூடி குழைந்து வாடி வதங்கி
உதிரும் வேளையில் கூட
சிரித்துக்கொண்டே சிதைந்துப்போகும்
வாய்ப்பு உன்னோடிருக்கும் பூக்களுக்குத்தான்...!
நொந்து வெந்து வலித்து சகித்து
மாலைவேளையில்
மயக்கிக்கொண்டே மரணிக்கும் வாய்ப்பு
உன்னை அடையா பூக்களுக்கு...!
உனக்கு எத்தனை முறை சொல்லுவது
பூக்கடைகளுக்குச் சென்று
பூக்களுக்குள் கலவரம்
ஏற்படுத்தாதே என்று...!
வேண்டுமென்றால்
அனைத்து பூக்களையும் அரவணைத்துக்கொள்
இல்லையென்றால்
பூக்களை சூடுவதை நிறுத்திக்கொள்...!
உன்னைப்பார்த்து
சில பூக்கள் கர்வப்படுவதையும்
சில பூக்கள் காயப்படுவதையும்
பார்த்து சகிக்கும் மனசு
என்னிடத்தில்லை...!

No comments:

Post a Comment