Wednesday 11 January 2017

விவேகானந்தர்-1

ஓம் காளி... ஜெய் காளி... என்ற கோஷம் விண்ணை முட்டுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும் நகரம் அது. அந்த கோஷம் நள்ளிரவு வேளையில் கூட ஆங்காங்கே கேட்கும். அம்பிகையை வீரத்தின் சின்னமாக பாவித்து வணங்குவர் அந்நகரத்து மக்கள். ஆம்... கல்கத்தா...அது காளியின் நகரம். அந்நகரத்தின் வடக்கே இருந்த சிம்லா என்ற பகுதியில் அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் இருந்து மங்கள வாத்தியங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. புதுப்பெண் புவனேஸ்வரி சர்வ அலங்காரங்களுடன் ஒரு சாரட்டில் அழைத்து வரப்பட்டாள். மாப்பிள்ளை விஸ்வநாதன் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தான். இருக்காதா பின்னே...! கல்வியும், பணமும் இல்லாத மனைவியர் மீதே பாசம் செலுத்தும் ஆண்மக்களை கொண்டது இந்த புண்ணிய தேசம். மனைவி பிரிந்து விட்டால் சிவபெருமானே மனம் வெம்பிப் போகிறார் என்று கதை சொல்லும் நாடு இது... நிலைமை இப்படி இருக்கும் போது, படித்த ஒருத்தி, அதிலும் செல்வச்சீமாட்டி தனக்கு மனைவியாக வாய்க்கிறாள் என்றால் மகிழ்ச்சி இரட்டிப்பாகத்தானே இருக்கும்! புவனேஸ்வரி ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எல்லாப் பாடல்களையும் ஒரே மூச்சில் சொல்லி விடுவாள்.செல்வ வளமிக்கவள் என்றாலும், எளிமையையே விரும்பினாள். வளமைக்கு மத்தியிலும், தன்னிடம் ஒரு கைத்தொழில் இருக்க வேண்டுமென அவள் நினைத்தாள். அதன் விளைவு அவள் தையல் கற்றுக் கொண்டாள். சமையலில் அவள் ஒரு பெண் நளன். இறைப்பற்று மிக்க அவள், காளிமாதா! என் குடும்பத்துக்கு பொன்னைக் கொடு, பொருளைக் கொடு. என் வக்கீல் கணவருக்கு அதிக வழக்குகளைக் கொடு. அவற்றில் எல்லாம் அவர் ஜெயக்கொடி நாட்டி, உலகப்புகழ் பெறும் வாய்ப்பைக் கொடு, என்று உலகியல் சார்ந்த விஷயமாக கேட்டதே இல்லை.

தாயே! நீ என்ன தர வேண்டுமென நினைக்கிறாயோ அதைக் கொடு. அது துன்பமாகக் கூட இருக்கட்டுமே! அந்த துன்பத்தை அனுபவிப்பதன் மூலம் தான் நான் உன்னை அடையமுடியும் என்றால், அதை புன்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன். என்னையே உன்னிடம் சமர்ப்பித்த பிறகு, நீ எதைத் தந்தாலும் அது உன்னைச் சார்ந்தது தானே! என்பாள். எவ்வளவு பெரிய உயர்ந்த உள்ளம் பாருங்கள்! ஆம்... உலகத்திற்கே ஒளிதரப்போகும் வீரமகனைப் பெறப் போகும் தாயல்லவா அவள்! தைரியம் அவள் உடலோடு கலந்ததாகத்தானே இருக்கும்! விஸ்வநாதன் மட்டுமென்ன...சாதாரணமான மனிதரா? அவரது கதை மிகப்பெரியது. கல்கத்தாவிலேயே புகழ் பெற்ற தத்தர் குடும்பம் அது. அவரது முப்பாட்டனார் ராமமோகன தத்தரே ஒரு வக்கீல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கல்வி என்றால் கிலோ எவ்வளவு என கேட்கப்பட்ட அந்தக் காலத்தில், வக்கீல் குடும்பம் என்றால் கொஞ்ச நஞ்ச மதிப்பா இருந்திருக்க வேண்டும்! ராம மோகன தத்தருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் காளி பிரசாத். இன்னொருவர் துர்கா சரணர். துர்கா சரணரும் தந்தையைப் போலவே மிகப்பெரிய படிப்பாளி. சமஸ்கிருதம், ஆங்கிலம்...ஏன்...பாரசீக மொழியையும் கற்றுக் கொண்டார். அவற்றில் திறம்பட பேசுவார். படிப்பார். எழுதுவார். இவ்வளவும் இருந்தால், அவருக்கு பெண் கொடுக்க ஒரு கூட்டமே மொய்க்காதா? ஆனால், துர்காசரணருக்கோ இல்லற வாழ்வில் நாட்டமில்லை. உறவினர்களும், தந்தையும் அவரைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினர். அந்த அன்புப்பிடியில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. திருமணமும் முடிந்து விட்டது. அவருக்கு விஸ்வநாதன் என்ற மகன் பிறந்தான்.

விஸ்வநாதன் பிறந்த பிறகு, துர்காசரணருக்கு மீண்டும் துறவற எண்ணம் மேலோங்கியது. ஒருநாள் அவர் வீட்டை விட்டு போய்விட்டார். அப்போது விஸ்வநாதனுக்கு வயது மூன்றுதான். கணவனைக் காணவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், கலங்காத மனதுடன் மகனை தனியே வளர்த்தாள் சரணரின் மனைவி. ஒருநாள், காசிக்குப் புறப்பட்டாள். கங்கையில் நீராடிவிட்டு, விஸ்வநாதர் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். கோயில் படிக்கட்டில் ஏறினாள். திடீரென கண்கள் சுழன்றன. அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்தனர். விழித்தாள். அதிர்ந்து விட்டாள். நீங்களா...? ஆம்...தன் முன்னால், கண்ணுக்கு கண்ணான கணவர் துர்காசரணர் இருப்பதைப் பார்த்தாள். குழந்தை விஸ்வநாதன் அருகில் இருந்து அழுது கொண்டிருந்தான். துர்காசரணர் அவளிடம் எதுவும் பேசவில்லை. அவளாலும் ஏனோ பேச முடியவில்லை. கண்களில் இருந்து நீர் மட்டும் வழிந்தது. கணவரைத் தன்னோடு சேர்த்து வைத்த விஸ்வநாதருக்கு மனதால் நன்றி தெரிவித்தாள். தன்னோடு கல்கத்தாவுக்கு வந்துவிடுவார் என எதிர்பார்த்தாள். துர்காசரணரின் நிலையோ வேறு மாதிரியாக இருந்தது. மனைவியை நீண்ட நாளுக்கு பிறகு சந்தித்தாலும், அவர் மகிழ்ச்சியை வெளிக்காட்டவில்லை. நீ சுகமா, குழந்தை சுகமா? உறவினர்கள் நலமா? எதையுமே அவர் கேட்கவில்லை.

மாயை..இவ்வுலக வாழ்க்கை மாயை என்று மட்டும் அவளிடம் மெதுவான குரலில் சொன்னார். அதாவது, உன்னை என் மனைவியாக நான் பார்க்கவில்லை. நீ யாரோ ஒரு பெண். உனக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தேன். மீண்டும் உன்னுடன் சேர்ந்து வாழ என்னால் இயலாது. இல்லறத்தை என் மனம் நாடவில்லை என்பதே அவர் மாயை என்று சொன்னதன் பொருள். இது அவளுக்கும் புரிந்து விட்டது. இவர் இனி இல்லறத்தை நாடமாட்டார். காசியில் துறவியாக இருக்கவே விரும்புகிறார் என்று. நியாயம் தான்...இத்தனை நாளும் இவர் நம்மைப் பிரிந்து துறவியாக வாழ்ந்து விட்டார். இவரைப் பிரிந்ததால் நானும் துறவி போல வாழ்ந்து விட்டேன். இனி சேர்ந்து வாழ்ந்தாலும், வாழாவிட்டாலும் அதனால் ஆகப்போவதென்ன? அவருடைய மனநிலையையே நானும் வளர்த்துக் கொள்கிறேன் அவள் அவரிடம் ஏதும் பேசவில்லை. எழுந்தாள். அவரைத் திரும்பியே பார்க்கவில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு கோயிலை நோக்கி நடந்தாள்.

விஸ்வநாதரை தரிசித்து விட்டு ஊர் திரும்பி விட்டாள். மனைவியை யாரோ ஒருத்தியாக நினைத்து, கண்டுகொள்ளாமல் போன துர்காசரணரும் எங்கெங்கோ அலைந்து, விதிவசமாக கல்கத்தாவுக்கே வந்து சேர்ந்தார். ஆனால், வீட்டுக்குப் போகவில்லை. தன் நண்பரின் வீட்டுக்குப் போய் சேர்ந்தார். பழைய நண்பர் தன் வீட்டுக்கு வந்த செய்தியை, துர்காசரணரின் வீட்டுக்கு சொல்லி அனுப்பிவிட்டார் அந்த நண்பர். அவ்வளவுதான். உறவுக்காரர்கள் குவிந்து விட்டனர்.துர்கா! நீர் இப்படி செய்தது முறைதானா? உம் மனைவியை பிரிய எப்படி மனம் வந்தது? மனைவி கிடக்கட்டும். கைக்குழந்தையான விஸ்வநாதனுமா உம் மனதை விட்டு அகன்று விட்டான்? என்று அர்ச்சனை செய்தனர்.துர்காசரணர் எதற்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். உறவினர்கள் அவரைக்குண்டுக்கட்டாகத் தூக்கி ஒரு வண்டியில் வீட்டுக்குக் கூட்டிச் சென்று விட்டனர். சரணரின் மனைவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால், துர்காசரணரோ மவுனமாகவே இருந்தார்.

குழந்தையைக் கையால் கூடத் தொடவில்லை. மனைவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உறவினர்கள் ஆலோசித்தனர். இப்படி செய்தால் இவர் சரிப்பட்டு வரமாட்டார். இவரை ஒரு அறையில் அடைத்து விடுவோம். இல்லாவிட்டால், இவர் திரும்பவும் காசி, ராமேஸ்வரம் என ஓடிவிடுவார் என்று முடிவெடுத்து, அறையிலும் அடைத்து விட்டனர். உள்ளே சென்ற துர்காசரணர் உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டார். மூன்றுநாட்களாக பச்சைத்தண்ணீர் கூட பல்லில் படவில்லை. சரணரின் மனைவிக்கு பயமாகி விட்டது. என் மீது அன்பு கொண்டு நீங்கள் செய்த காரியத்திற்கு நன்றி. ஆனால், இப்படியே போனால் என் மாங்கல்யத்தையே இழந்து விடுவேன் போலிருக்கிறதே! அவர் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். அவர் உயிருடன் இருந்தால் அதுவே போதும். அவரை விட்டு விடுங்கள், என்றாள்.

உறவினர்களுக்கும் அது சரியென்று படவே, அறைக்கதவை திறந்து விட்டனர். அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. கூண்டில் இருந்து விடுபட்ட பறவை போல சென்றவர் தான். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்பதை அவரது மனைவியோ, உறவினர்களோ தங்கள் இறுதிக்காலம் வரை தெரிந்து கொள்ளவே முடியவில்லை. இப்படி விஸ்வநாதன், தந்தை முகம் பார்த்தறியாமலே வளர்ந்து விட்டார். அவருக்கும் புவனேஸ்வரிக்கும் திருமணமும் நடந்து முடிந்து விட்டது. விஸ்வநாதன்- புவனேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். புவனேஸ்வரி அம்மையாருக்கு ஒரே ஒரு மனக்குறை. இந்த உலகில் சாதாரணமாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் குறை தான் அது. காசி விஸ்வநாதா! இரண்டு பெண்களைக் கொடுத்தாய். ஏன் ஒரு ஆண்குழந்தையைத் தர மறுக்கிறாய்? அவள் காசிநாதனை வேண்டிக்கொண்டே இருந்தாள். காசிக்கு போய், விஸ்வநாதர் சன்னதியில் நின்று நேரடியாக வேண்டிக்கொள்ள அவளுக்கு ஆசை தான். ஆனால், கணவர், குழந்தைகளை விட்டுச்சென்றால் கவனித்துக் கொள்ள சரியான ஆள் வேண்டும். மேலும், பெண் குழந்தைகள் போதாதா? என அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வது? எனினும், அக்காலத்தில் காசிக்குச் செல்ல முடியாதவர்கள், அங்கேயே குடியிருப்பவர்களைக் கொண்டு, சில நேர்ச்சைகளைச் செய்வது வழக்கம். புவனேஸ்வரியின் அத்தை வீடு காசியில் இருந்தது. அந்த அத்தைக்கு தகவல் சொல்லி, அவர் மூலமாக விஸ்வநாதருக்கு நேர்ச்சைகளைச் செய்தாள். ஒருநாள், புவனேஸ்வரியின் கனவில் அதிபிரகாசமான ஒளிவெள்ளம் தோன்றியது. பரமேஸ்வரன் தியானநிலையில் தோன்றினார். அதே நிலையில், ஒரு குழந்தையாக உருமாறினார். புவனேஸ்வரியின் உடலில் அந்த ஒளி பாய்வது போல் இருந்தது. அவள் திடுக்கிட்டு விழித்தாள். இந்த கனவு கண்டபிறகு சில நாட்களிலேயே கர்ப்பவதியாகி விட்டாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவள் இருந்தாள். நிச்சயமாக, அந்த பரமசிவனே தன் வயிற்றில் பிறப்பான் என நம்பினாள். விஸ்வநாதா! பரமேஸ்வரனே! இம்முறை உன்னிடம் நான் விண்ணப்பித்திருப்பது ஆண் குழந்தைக்காக! அதை மறந்து விடாதே, என தினமும் தியானம் செய்தாள்.அவளது கோரிக்கை நிறைவேறியது.

சூரியபகவான் மகரராசியில் என்று நுழைகிறாரோ, அன்று அவரது பிரகாசம் அதி பயங்கரமாக இருக்கும். அந்த நாளை வடநாட்டவர் மகர சங்கராந்தி என்றும், தென்நாட்டவர் பொங்கல் என்றும் கொண்டாடுவர். மகர ராசியில் பிறந்தவர்கள் எந்த விலை கொடுத்தேனும், என்ன செய்தேனும் நினைத்ததை சாதித்துக் காட்டுவார்கள் என்றும் சொல்வதுண்டு. இப்படி மகரத்திற்கு முக்கியத்துவம் தரும் அந்த இனியநாளில், புவனேஸ்வரிக்கு பிரசவவலி ஏற்பட்டது. சிவசிவா! உன் அடியாளான என் பிரார்த்தனையை ஏற்று, தயவு செய்து எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடு, என்று பிரார்த்தித்தபடியே வலியையும் தாங்கிக் கொண்டாள் அந்தத்தாய்.அன்று 1863, ஜனவரி12 திங்கள்கிழமை. சிவனுக்குரிய கிழமை திங்கள். புவனேஸ்வரியின் பிரார்த்தனை பலித்தது. கூனிக்கிடந்த உலகத்தின் முதுகெலும்பை நிமிர வைக்க அவதரித்தார் அந்த மகான். ஆம்...விவேகானந்தர் பிறந்து விட்டார்.குழந்தையைப் பார்க்க உறவினர்கள் புவனேஸ்வரியின் வீட்டில் குவிந்து விட்டார்கள்.இவன் அவனுடைய தாத்தா துர்காசரணரைப் போலவே இருக்கிறான், என்று தான் பெரும்பாலோனோர் சொன்னார்கள். இல்லறத்திற்கு பிறகும் துறவறம் பூண்ட அந்த தாத்தாவையும் தாண்டி, இல்லறத்துக்குள்ளேயே நுழையாமல், உலகின் ஆன்மிகப்புரட்சியை ஏற்படுத்தப் போகும் வீரத்துறவியல்லவா அவர்! குழந்தைக்கு பெயர் சூட்ட ஏற்பாடுகள் நடந்தன.குடும்பத்தார் அவனுக்கு தங்கள் குலப்பெயரான தத்தாவையும் சேர்த்து, நரேந்திரநாத் தத்தா என பெயர் வைக்க வேண்டும் என்றனர். புவனேஸ்வரிக்கு அந்தப்பெயரில் விருப்பமில்லை.இவன் காசி விஸ்வநாதரின் அருளால் பிறந்தவன். அதனால் விஸ்வநாதன் என்ற பெயர் தான் பொருத்தம். ஆனாலும், என் கணவரின் பெயரும் அதுவாகவே இருப்பதால், அதே பெயரில் அவனை அழைப்பது மரியாதையாக இருக்காது. அதனால், அவனுக்கு நான் வேறு பெயர் வைக்கப் போகிறேன், என்று சொல்லி, அதே பெயரால் குழந்தையை அழைக்கவும் ஆரம்பித்து விட்டாள். ஆனால், குடும்பத்தார் அதை ஏற்கவில்லை.

No comments:

Post a Comment