Friday 9 March 2018

பாலை

பாலைவன வாழ்க்கை துயரமானது. தற்சமயம் அங்கு தாராளமாக பெட்ரோலியம் கிடைப்பதால், பொருளாதார நிலையில் கடல்நீரையும் குடிநீராக மாற்றிக்கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகக் கடுமையான வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் துயரமான சூழலிலும் வித்தியாசமான சிந்தனைகள் அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தின.
பார்வையற்ற யாசகன் ஒருவன் பிச்சை கேட்டவாறு தெருவில் சென்றுகொண்டிருந்தான். அப்போது, அவன் தட்டில் முழு ரொட்டி ஒன்று விழுந்தது. ‘கடவுள் உங்களுக்கு நன்மைகள் செய்வாராக. உங்களுக்கு அவருடைய ஆசிகள் கிடைப்பதாக. நீங்கள் உங்கள் நாட்டுக் குப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் திரும்பிச்செல்ல அல்லா உதவுவாராக!’ என்றான் அந்த யாசகன்.
‘நான் இந்தப் பகுதிக்கு அந்நியன் என்பதை எப்படி நீங்கள் அறிந்தீர்கள்?’ என்று வியப்புடன் கேட்டார், ரொட்டி தர்மம் செய்தவர்.
‘நான் இந்த நகரத்தில் இருபது வருடங்களாக யாசகம் கேட்டு வருகிறேன். ஒருமுறைகூட யாரும் முழு ரொட்டியைத் தந்ததில்லை’ என்றான் யாசகன்.
முழு ரொட்டியைப் போடுகிறவன் கட்டாயம் வேறு தேசத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று, எவ்வளவு அகப் பார்வையோடு அவன் சிந்தித்திருக்கிறான், பாருங்கள்!
மாற்றி யோசித்தால், தந்திரமாகச் சிந்திப்பவர்களையும் தோற்கடித்து விடலாம் என்பதற்கு, அரேபியக்கதை ஒன்று உண்டு.
அரேபியர்கள் எப்போதும் இசையையும் கவிதைகளையும் நேசிப்பவர்கள். மன்னர்களைப் புகழ்ந்து பாடல்களை இயற்றினால், பரிசுகள் பெறலாம் என்பது தெரிந்ததுதான். ஓர் அரசன் மிகச் சிறந்த ஞாபகசக்தி உடையவன்; அதோடு கூர்மையான அறிவும் நிரம்பப் பெற்றவன். ஒரு கவிதையை ஒருமுறை கேட்டால் போதும்; அதை வரி மாறாமல், வார்த்தை மாறாமல் அப்படியே திருப்பிச்சொல்ல அவனால் முடியும். அவன் சபையில் விதூஷகன் ஒருவன் இருந்தான். அவனும் நினைவாற்றலில் சிறந்தவன்தான். எதையும் இரண்டு முறை கேட்டால், அப்படியே திருப்பிச் சொல்லும் சக்தி உடையவன் அவன். அந்த அவையில் அடிமைப்பெண் ஒருத்தி இருந்தாள். மூன்று முறை கேட்டால், அதை அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வாள் அவள்.
அந்த அரசன் ஓர் அற்பன். எந்தப் புலவன் வந்து மன்னனைப் புகழ்ந்து பாடினாலும், ‘நீ பாடவிருக்கும் பாடல் இதுவரை நான் கேள்விப்படாத, உன்னுடைய சொந்தப் பாடலாக இருந்தால், அதன் எடைக்குச் சமமாக தங்கக் காசுகள் தருவேன்’ என்பான்.
வந்த புலவனும், தன் கவிதையைப் படிப்பான். ஒருமுறை கேட்டதுமே மன்னனுக்குத்தான் அது மனப்பாடம் ஆகிவிடுமே! எனவே, ஏதோ ஒரு பெயரைக் குறிப்பிட்டு, ‘அந்தக் கவிதை அவர் எழுதியது; நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்’ என்று சொல்லி, அதை அப்படியே மளமளவென்று ஒப்பிப்பான். புலவன், ”இல்லை. இந்தக் கவிதை என் சொந்தக் கவிதை” என்று சாதித்தால், ‘கிடையவே கிடையாது! இந்தக் கவிதை என் விதூஷகனுக்குக்கூடத் தெரியும்’ என்று சொல்லி, விதூஷகனைப் பாடச்சொல்வான் மன்னன். புலவன் பாடி ஒருமுறை, மன்னர் திரும்பச் சொல்லி ஒருமுறை என விதூஷகன் அந்தக் கவிதையை இரண்டு முறை உன்னிப்பாகக் கவனித்திருப்பதால், அவனும் அதை வரி மாறாமல் சொல்லுவான். அப்போதும், ”இருக்க முடியாது! இந்தக் கவிதையை நான் நேற்றுத்தான் புனைந்தேன்!” என்று புலவன் அழாக்குறையாகச் சொன்னால், ‘இல்லை. நீ பொய் சொல்கிறாய். என்னுடைய அடிமைப்பெண்கூட இந்தக் கவிதையைச் சொல்வாள்’ என்று சொல்லி, அவளைச் சொல்லச் சொல்லுவான் அரசன். மூன்று முறை கேட்டதால், அவளும் வார்த்தை பிசகாமல் அந்தக் கவிதையைத் திரும்பச் சொல்ல, புலவன் குழம்பிப்போய் சித்தம் கலங்கி, புத்திசுவாதீனத்தை இழக்கும் அளவுக்கு வந்துவிடுவான்.
‘அல் அஸ்மாய்’ என்கிற கவிஞனுக்கு மட்டும் இந்த உண்மை தெரியும். அரசனுடைய நினைவாற்றல் குறித்தும் தெரியும். எனவே, இதுவரை யாரும் உபயோகிக்காத வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்தி, அவர் ஒரு கவிதையைத் தயார் செய்தார். அதை அரசனோ, விதூஷகனோ, அடிமைப்பெண்ணோ மனப்பாடம் செய்து திரும்பச்சொல்லவே முடியாது என்கிற அளவில் மிகக் கடினமான ஒரு கவிதையை உருவாக்கினார் அவர். பின்பு, ஒரு வழிப்போக்கரைப்போல மாறுவேடம் பூண்டு, அரசவைக்குச் சென்றார்.
‘மன்னரே, நான் உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை தயாரித்திருக்கிறேன். உங்களுக்கு படித்துக்காட்ட விரும்புகிறேன்’
‘புலவரே! என் நிபந்தனை உங்களுக்குத் தெரியும் அல்லவா?’
‘நன்றாகத் தெரியும். அந்த நிபந்தனைக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்’ என்றவர், அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தார். கடினமான பதங்களுடன்கூடிய, கரடுமுரடான வரிகள் கொண்ட அந்தப் பாடலைக் கேட்ட மன்னனால், திருப்பிச் சொல்ல முடியவில்லை. மன்னரே தடுமாறியதால், விதூஷகனும் மலங்க மலங்க விழித்தான். அடிமைப்பெண்ணாலும் எதுவும் செய்ய முடியவில்லை. மன்னன் தோல்வியை ஒப்புக்கொண்டான்.
‘புலவரே, இது உங்கள் சொந்தப்பாடல் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. நான் சொன்னதுபோல் உங்களுக்குத் தங்கக் காசுகள் பரிசு தருகிறேன். நீங்கள் பாடல் எழுதிய அந்த ஏட்டைத் தாருங்கள். எங்கள் பொருளாளர் அதன் எடைக்குத் தகுந்தவாறு உங்களுக்குத் தங்கக் காசுகள் தருவார்’ என்றான் மன்னன்.
‘மன்னரே, இதை நான் காகிதத்தில் எழுத வில்லை. என் வீட்டில் உள்ள பளிங்குத் தூணில்தான் இந்தக் கவிதையைச் செதுக்கி வைத்தேன். அதை இங்கே கொண்டு வந்துள்ளேன்” என்று சொல்லி, அரண்மனை வாயிலுக்குச் சென்று குரல் கொடுக்க, மிகப் பெரிய பளிங்குத் தூண் ஒன்றை நான்கு பேர் தூக்கி வந்து, அரசவையில் மன்னன் முன் நிறுத்தினர்.
வேறு வழியின்றி, அந்தப் பளிங்குத் தூண் எடை போடப்பட்டு, மன்னனின் கஜானாவிலிருந்து அத்தனை தங்கமும் காலியாகியும், இன்னும் போதாத நிலைமை ஏற்பட்டது. மன்னன் தன் அற்பத்தனத்துக்குத் தலைகுனிந்து வருந்த, அல் அஸ்மாய் பெரிய மனத்துடன் சிறிதளவே தங்கத்தை எடுத்துக்கொண்டு, மன்னனிடமிருந்து விடைபெற்றார்.

No comments:

Post a Comment