Friday 9 March 2018

யானையின் துயரக்கதை

"உங்கள் பாவங்களை மன்னித்ததற்கான தண்டனையா இது?" - தூக்கிலிடப்பட்ட யானையின் துயரக்கதை!
=========================================================
அன்றுதான் தனக்கு கடைசி நாள் (செப்டம்பர் 13, 1916) என்று அந்த மேரிக்குத் தெரியாது. ஆனால், ஏதோ ஓர் உள்ளுணர்வு அவளுக்குள் உன்னைப் பார்த்துக் கைகொட்டி சிரிப்பார்கள் எனச் சொல்லிக்கொண்டிருந்தது. அந்த மேரி ஓர் அழகான பெண் யானை. அதுவும் ஆசிய யானை. அவளுக்கெனத் தனியாக ஒரு ரசிகர் கூட்டமே அக்காலகட்டத்தில் இருந்தது. மேரி மற்ற யானைகளைப்போல சாதாரணமானது அல்ல. அதற்குள் பல திறமைகள் பொதிந்து கிடந்தன. மேரியால் ஹார்ன் இசைக் கருவியைப் பயன்படுத்தி 25-க்கும் மேற்பட்ட மெட்டுகளை வாசிக்க முடியும். இப்படிப்பட்ட யானையின் திறமையைப் பார்க்கக் கூட்டம் கூடத்தானே செய்யும்? மேரியும் ஒவ்வொரு நாளும் ரசித்து ரசித்துத்தான் செய்து வந்தாள். ஆனால், அந்த நாள் மற்ற நாள்களைப் போல இல்லை. அதற்குக் காரணம் அதே வருடம் செப்டம்பர் 12-ம் தேதி அன்று நடந்த அந்தச் சம்பவம்.
அன்று அவளைக் கட்டுப்படுத்தும் பாகனுக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் புதிதாக ஒருவரை நியமித்தனர். அவனது பெயர் வால்டர் எல்ரிட்ச். அவனைச் செல்லமாக ரெட் என்று எல்லோரும் அழைப்பார்கள். ஏனெனில் வளர்ச்சியடையாத அக்காலகட்டத்திலேயே தலைமுடிகளுக்குச் சிவப்பு வண்ண நிறம் பூசி புதிய ஃபேஷனுக்கு வித்திட்டவன். அவனைப் பார்க்கவே மேரிக்குப் பிடிக்கவில்லை. அவனும் அவன் தலை நிறமும் என்று அன்று குனிந்தே தனது பெட்டியில் இருந்து இறங்கினாள். அந்த ரெட்டுக்கு யானையைக் கட்டுப்படுத்தும் திறமை அவ்வளவாகக் கிடையாது. ஒருநாள் சம்பளம் கிடைக்குமே என்று பொய் சொல்லி வேலைக்கு வந்து விட்டார். அவரது கையில் யானையைக் கட்டுப்படுத்த ஒரு கம்பு தரப்பட்டது. கம்பின் நுனியில் ஊசி போன்ற கத்தியும் இருந்தது. யானையால் அசம்பாவிதம் நேர்ந்தால் கத்தியை வைத்துச் சமாளித்துவிடலாம் என்று எண்ணினார் ரெட். சர்க்கஸ் ஆரம்பிக்கும் நேரம் நெருங்கியது. ரெட்டும் மேரி மீது ஏறி அமர்ந்தார். ஆனால், மேரி ஓர் அடிகூட முன்னால் எடுத்து வைக்கவில்லை. யானை நகரவில்லை என்றால் எங்கே தன்னை தொழில் தெரியாதவன் என நினைத்து விடுவார்களோ என்று நினைத்து தன்னிடம் இருந்த குச்சியால் மேரியின் மீது சரமாரியாகக் குத்தினான்.
இதுநாள் வரை பழைய பாகனிடம் ஒரு நாள்கூட குச்சியில் அடி வாங்கியதில்லை, மேரி. தன் உடலில் ரத்தம் வழியக் கண்ணீருடன் நகரத் தொடங்கினாள். ஆனால், வழக்கம்போல நடக்காமல் அன்னநடை போட்டு மெதுவாக நகர்ந்தாள். இதனால் ஆத்திரமடைந்த ரெட் இடைவிடாமல் அரை மணி நேரம் மேரியைக் குச்சியால் குத்திக்கொண்டே இருந்தான். மேரியால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. தன்மீது அமர்ந்திருந்த ரெட்-ஐ தனது தும்பிக்கையால் தூக்கி வீசினாள். தனது தலையால் அவனை முட்டிச் சாய்த்தாள். இதனால் ரெட் தலை சிதறி பலியானார். சர்க்கஸைக் காணக் கூடியிருந்த மக்கள் தெறித்து ஓடினர். கூட்டத்தில் இருந்த ஒரு காவலர் தனது துப்பாக்கியால் ஐந்து முறை மேரியை சுட்டார். மேரியின் தோல் கடினமாக இருந்ததால், துப்பாக்கி தோட்டாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறிது நேரம் கழித்து மக்கள் ஒன்றாகக் கூடி சர்க்கஸ் முதலாளியிடம் "இந்த யானைக்கு மதம் பிடித்துவிட்டது. மேரி இங்கிருந்தால் எங்கள் உயிருக்குத்தான் ஆபத்து. அதனால் இதைக் கொன்று விடுங்கள். அப்படி இல்லையென்றால் ஊரைக் காலி செய்து கொள்ளுங்கள்" என்று கூச்சலிட்டனர்.
இங்கிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டுபோய் பக்கத்து ஊரில் சர்க்கஸ் போட முதலாளி கையில் காசு இல்லை. கையில் இருந்த பணம் முழுவதையும் இங்கேயே செலவு செய்திருந்தார். அதில் பாகன் ரெட்டுக்கான சம்பளமும் அடங்கும். அதனால் ஒரே முடிவாக மேரியைக் கொன்றுவிட முடிவு செய்தார். துப்பாக்கியால் சுட்டே ஒன்றும் செய்ய முடியாத மேரியை எப்படிக் கொல்வது என்பதுதான் அவரின் யோசனையாக இருந்தது. "முதலில் விஷம் வைத்துக் கொன்றுவிடுங்கள்" என்று ஒருவர் யோசனை சொன்னார். "யானைகளுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுவை உணரும் திறன்கள் தும்பிக்கையில் இருப்பதால் அது முடியாது, எளிதில் கண்டுபிடித்துவிடும்" என்று பதிலளித்தார், சர்க்கஸ் முதலாளி. "மின்சாரம் வைத்துக் கொன்றுவிடலாம்" என்று இன்னொருவன் சொல்ல, "யானையைக் கொல்ல அதிக மின்சாரம் தேவைப்படும் அதுவும் வேலைக்கு ஆகாது" என்று முதலாளி சொன்னார். இறுதியாக ஒரு பெண் யோசனையை முன்வைத்தார். ''பேசாமல் முன் தலையை ஒரு கிரேனிலும், பின்னங்கால்களை ஒரு கிரேனிலும் கட்டி முன்னும், பின்னுமாக இழுக்கலாம்" என்பதுதான் அந்த யோசனை. "இது வலி மிகுந்ததாக இருக்கும்" என்று முதலாளி சொன்னார். அந்நகர மக்கள் அனைவரும் கூடி இந்தக் கொடிய முறையை நிறைவேற்றுவது என முடிவு செய்தனர்.
அடுத்த நாளும் (செப்டம்பர் 13, 1916) விடிந்தது. அன்று காலை முதலே சூரிய வெப்பம் இதமாக இருந்ததால் சூரியனையே பார்த்துக் கொண்டு, தனது வாயை அசைத்துக்கொண்டிருந்தாள் மேரி. மற்ற யானைகள் மேரியின் பின்னால் அமர்ந்திருந்தன. அன்று எப்போதும் போல சர்க்கஸ் ஆரம்பிப்பதற்கு முன்னால் யானைகள் அணியும் உடையை ஒருவன் எடுத்து வந்தான். மற்ற யானைகளுக்குக் கொடுக்கப்படும் உடைகள் வழக்கமாக அணிவிக்கப்பட்டன. மேரிக்கு மட்டும் மஞ்சள் நிற ஆடை கொடுக்கப்பட்டது. மேரியும் உடையை மறுக்காமல் அணிந்து கொண்டாள். யானைகளை அழைத்துச் செல்ல மற்றொரு பாகன் வந்தான். மேரி முன்னால் செல்ல மற்ற யானைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பின் தொடர்ந்தன. சிறிது தூரம் சென்ற பின்னர்தான் தெரிந்தது இது நாம் சர்க்கஸுக்கு செல்லும் பாதை இல்லை என்று. ஆனால், தூரத்தில் இருந்து வந்த மக்களின் குரலால் மேரி இன்று புதிய இடத்தில் சர்க்கஸ்போல என நினைத்துக்கொண்டது.
கூட்டம் நிறைந்த இடத்தை அடைந்தாள் மேரி. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். அதிகமான கூட்டத்தைக் கண்ட மேரி மகிழ்ச்சியை அவர்களுக்கு வெளிப்படுத்தினாள். அதன் பின்னர் மேடையைத் தேடினாள். அங்கு மேடைக்குப் பதிலாக ஒரு மிகப்பெரிய கிரேன் நின்று கொண்டிருந்தது. கூட்டமாக நின்றிருந்த யானைகளில் மேரியைத் தவிர மற்ற யானைகளைப் பாகன் ஒருவன் தனியாக அழைத்துச் சென்றான். இதனைக் கவனித்த மேரி, மக்களின் குரல்களையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள். மேரி கேட்ட குரல்கள் எப்போதும் கேட்கும் பாராட்டுக் குரல் அல்ல. அவளைக் கொலை செய்ய எழும் குரல் என்பதை உணர்ந்தாள். கிரேனில் மாட்டப்பட்டிருந்த சங்கிலியால் மேரியின் கழுத்து இறுக்கப்பட்டது. மேரி தப்பிக்காமல் இருக்க அவளது காலிலும் சங்கிலிகள் கட்டப்பட்டன. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மேரி அங்கிருந்து ஓடச் சிறு முயற்சிகூட எடுக்கவில்லை. மேரியும் உணர்ந்திருப்பாள் போலும், 'நேற்று நாம் செய்த தவறுக்குத்தான் தண்டனை கொடுக்கப் போகிறார்கள்' என்று.
முதலாளி கண் அசைக்கக் கண்ணாடி அறைக்குள் இருந்தவன் கிரேனை இயக்கினான். மேரியின் கழுத்து இறுகத் தொடங்கியது. மேரி தன்னால் முடிந்தவரைப் பிளிறினாள். தூரத்தில் நின்றிருந்த யானைகள் சட்டென்று மேரியை திரும்பிப் பார்த்தன. அவற்றின் கண்களுக்குத் தெரியும்படி மேரி கிரேன் சங்கிலியால் கட்டித் தூக்கப்பட்டாள். ஐந்தடி தூர உயரத்தில் மேரியை தூக்கும்போது கிரேன் பழுதாகிச் சங்கிலி பிய்த்துக்கொண்டு கீழே விழுந்தாள் மேரி. இதில் அவள் முதுகெழும்பு உடைந்தது. இதனால் வாய் திறக்க முடியாமல் தன் கண்ணீரால் பூமியை முத்தமிட்டுக்கொண்டிருந்தாள் மேரி. மீண்டும் கிரேன் சரி செய்யப்பட்டு இப்போது பத்தடி உயரத்தில் தூக்கிலிடப்பட்டாள் மேரி. கால்கள் தளர்ந்தன. கடைசி மூச்சும் நின்றது. இதனைக் கண்ட அவளது நண்பர்களால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது. இரக்கத்தனம் இல்லாமல் வரலாற்றில் நிகழ்ந்த இந்த நிகழ்வு கறுப்புச் சரித்திரமாகவே இருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்த இடம் அமெரிக்காவின் Erwin, Tennessee. அவ்வளவு அழகும், திறமையும் வாய்ந்த மேரி அதன் பின்னர் எந்த சர்க்கஸிலும் இல்லை என்பதுதான் உண்மை.
-------------------------------------------------------------------------------------------------------------------
"உங்களின் பொழுதுபோக்கிற்காக என்னைப் போன்ற யானைகள் மற்றும் விலங்குகளுக்குக் கொடுமை செய்தீர்கள். அதை நான் பொறுத்துக் கொண்டேன். உங்கள் பாவங்களையும் மன்னித்தேன். என்னையே அறியாமல், என்னைக் காத்துகொள்ள நான் செய்த செயலை நீங்கள் ஏன் மன்னிக்கவில்லை?" சர்க்கஸ் யானைகளை இன்று பார்த்தாலும் மேரி கேட்காமல் விட்டுச் சென்ற இந்தக் கேள்வி நெஞ்சில் தைக்கிறது!

No comments:

Post a Comment