Friday 9 March 2018

சுல்தான்

துருக்கிய ஆட்சி உச்சத்திலிருந்த காலம். துருக்கியின் சுல்தான், ஐரோப்பாவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவர விரும்பினார். அதுகுறித்து வசீரிடம் (முக்கிய அமைச்சர்) தெரிவித்தார். வசீருக்கோ கவலை வந்துவிட்டது.
‘மேன்மையானவரே! தங்கள் பயணம் நிச்சயம் சர்வதேச பிரச்னையில் கொண்டுபோய் விட்டு விடும்’ என்று எச்சரித்தார் வசீர்.
‘ஏன்?’
‘நம் நாட்டில் பாரம்பரியமான விதி ஒன்று உண்டு. துருக்கிய சுல்தான் எந்த மண்ணை மிதிக்கிறாரோ, அது துருக்கியின் ஆளுகைக்குள் வந்துவிடும். எனவே, இந்த விதியை நடைமுறைப்படுத்தினால் எல்லைப்பிரச்னையோ, போரோ ஏற்பட வாய்ப்பு உண்டு’ என்று தயங்கியவாறே தெரிவித்தார் வசீர்.
ஆனால், சுல்தான் விடுவதாக இல்லை. ‘நான் இந்தப் பயணத்தை மேற்கொள்வது என்று முடிவுசெய்துவிட்டேன். எக்காரணம் கொண்டும் என் திட்டத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, எந்த சர்வதேசப் பிரச்னையும் இதனால் ஏற்படாத வண்ணம் நான் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்க!’ என்று ஆணையிட்டார் சுல்தான்.
வசீர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார். தலைமை நீதிபதி ஷேக்அல் இஸ்லாம் அவர்களிடம் இதுகுறித்து கலந்தாலோசிக்க முடிவு செய்தார்.
தலைமை நீதிபதி நிறையப் படித்தவர். அதிக ஞானம் உள்ளவர். எந்தப் பிரச்னைக்கும் சாதுரியமாகத் தீர்வு காண்பதில் வல்லவர்.
‘பழங்கால விதியை மீறுவதோ, மாற்றுவதோ நடக்காத காரியம். நம் சுல்தான் எந்த மண்ணை மிதிக்கிறாரோ, அது துருக்கிய எல்லைக்குட் பட்டதாகிவிடும் என்பது சட்டபூர்வமான ஒன்று. ஆனால், இந்த விதியை உடைக்காமல் தவிர்க்க ஒரு வழி உண்டு. இந்தப் பயணத்தின்போது சுல்தான் அணிவதற்காக விசேஷமான காலணிகளைச் செய்ய வேண்டும். அந்தக் காலணிக்கு இரண்டு அடிப்பகுதிகள் இருக்க வேண்டும். அந்த இரண்டு அடிப்பகுதிகளுக்கு நடுவில் உள்ள காலி இடத்தில் துருக்கிய நாட்டு மண்ணை நிரப்ப வேண்டும். அப்படிச் செய்தால், நம் சுல்தான் எந்த வெளிநாட்டில் பயணம் செய்தாலும் அவர் உண்மையில் துருக்கிய மண்ணையே மிதித்தவர் ஆவார். எனவே, வேறொரு நாட்டின் எல்லையை நம்முடையதாக்கிக்கொள்கிற சட்டபூர்வமான பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை’ என்று ஆலோசனை சொன்னார் அவர்.

No comments:

Post a Comment