Wednesday 2 May 2018

மனத் தூய்மை

கிருபாண நரசிம்மன் என்ற மன்னரிடம், சரப மேருண்டன் என்பவன் படைத்தளபதியாக இருந்தான். இவன் மிகவும் கெட்டவன். மன்னரைக் கொன்று விட்டு நாடாள ஆசைப்பட்டான். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறும் முன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். மறுபிறவியில் வெண்ணிற குதிரையாகப் பிறந்தான். வீரன் ஒருவன் அதை வளர்த்து வந்தான். ஒருநாள் அவன் குதிரையுடன் அரண்மனைக்கு வந்தான்.
“அரசே! ராஜலட்சணம் மிக்க இந்தக் குதிரையை தங்களுக்கு விற்க விரும்புகிறேன்” என்றான். மன்னரும் நிறைய பொற்காசு கொடுத்து வாங்கிக் கொண்டார். பரிவாரங்களுடன், புதிய குதிரை மீது மன்னர் வேட்டையாடச் சென்றார். பாய்ந்தோடிய குதிரை காட்டில் திசை மாறிச் சென்றது.
பரிவாரங்களை விட்டுப் பிரிந்தார் மன்னர். களைப்படைந்த அவர் தாகம் தீர்க்க தண்ணீரைத் தேடினார். ஒரு மரத்தில் குதிரையைக் கட்டி வைத்து விட்டு நடந்தார். அங்கு வீசிய காற்றில் இலைச்சருகுகள் பறந்தன. அதில் ஓர் இலையில் ஸ்லோகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதை மன்னர் ஆர்வமுடன் படித்தார். அதைக் கேட்ட குதிரையின் உயிர் பிரிந்தது. புஷ்பக விமானம் ஒன்று பறந்து வர, அதன் மீதேறிய குதிரை விண்ணுலகம் நோக்கிச் சென்றது.
சற்று தொலைவில் ஆஸ்ரமம் ஒன்று தென்பட்டது. அங்கு விஷ்ணுசர்மா என்னும் துறவியை மன்னர் கண்டார். அவரை வணங்கிய மன்னர்,“ஐயா! தாகம் நீங்க காட்டில் தண்ணீர் தேடி அலைந்தேன். வந்த இடத்தில் என் குதிரையின் உயிர் பிரிந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை,” என்றார்.
முக்காலம் உணர்ந்த ஞானியான விஷ்ணுசர்மா ஒரு கணம் கண்மூடித் திறந்து, “கலங்க வேண்டாம் மன்னா! நடந்ததைச் சொல்கிறேன். சரப மேருண்டன் என்பவன் உன்னிடம் தளபதியாக இருந்தான் அல்லவா? அவன் உன்னைக் கொன்று விட்டு, நாடாள ஆசைப்பட்டான். ஆனால் அவனது எண்ணம் பலிக்கவில்லை. அவனே இப்பிறவியில் குதிரையாகப் பிறந்திருந்தான். அதை விலைக்கு வாங்கிய நீங்கள், வந்த இடத்தில் இலைச்சருகில் எழுதப்பட்டிருந்த ஸ்லோகத்தைப் படிக்க நேர்ந்தது. அதனால் அவனது பாவம் அனைத்தும் பறந்தது. வானுலகம் செல்லும் பாக்கியமும் பெற்றான். எல்லாம் அந்த ஸ்லோகத்தின் மகிமை தான்,” என்றார்.
மன்னருக்கு ஆச்சரியம் மேலிட்டது. கண்ணீர் பெருக அந்த ஸ்லோகத்தை தனக்கு உபதேசிக்க வேண்டிக் கொண்டார்.
துறவியும் சம்மதித்தார்.
“இது கீதையின் பதினைந்தாம் அத்தியாய ஸ்லோகம். இதைப் பக்தியுடன் படித்தால் பாவம் தொலையும். மனம் தூய்மை பெறும்” என்று சொல்லி விளக்கம் அளித்தார். அதற்குள் பரிவாரங்கள் ஆஸ்ரமத்தை வந்தடைந்தனர். அரண்மனைக்குத் திரும்பிய மன்னர், தன் மகன் சிம்மபாலனுக்கு
பட்டாபிஷேகம் நடத்தினார். அதன் பின் தினமும் இந்த ஸ்லோகத்தை தவறாமல் ஜபம் செய்து மனத்தூய்மை பெற்றார். வாழ்வின் இறுதியில் வைகுண்ட லோகத்தை அடைந்தார்.
இதோ! அந்த ஸ்லோகம்
“த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஷ்சா க்ஷர ஏவச
க்ஷர: ஸர்வாணி பூதாணி கூடஸ்தோக்ஷர உச்யதே''
பொருள்: உலகில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என இரு பிரிவினர் இருக்கின்றனர். உலக ஆசைகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தாழ்ந்தவர்கள். ஆன்மிகத்தை நாடுபவர்கள் உயர்ந்தவர்கள் ....

No comments:

Post a Comment