Monday 28 May 2018

சிவகணங்கள்

சிவ கணங்களில் புஷ்பதத்தன், மாலியவான் என்று இருவர் இருந்தனர். அவர்களுக்குள் தானே சிவத் தொண்டில் சிறந்தவர் என்ற எண்ணம் இருந்தது. ஒரு நாள் நீண்ட விவாதத்தின் முடிவில் ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்துக் கொண்டனர். புஷ்பதத்தன் மாலியவானை சிலந்தியாகப் பிறக்க சபிக்கிறான். அதேபோல், மாலியவான், புஷ்பதத்தனை யானையாக சபிக்கிறான். காலக் கிரமத்தில் இவ்விருவரும் சோழ வளநாட்டில், காவிரியாற்றின் கரையில் திருவானைக்காவில் என்னும் இடத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கின்றனர். திருவானைக்காவில் காவிரிக்கரையில் ஒர் வெள்ளை நாவல் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.
யானையாகப் பிறந்த புஷ்பதத்தன் தனது முற்பிறவின் பயனாக அந்த சிவலிங்கத்திற்கு தனது துதிக்கையால் நீரும், மலரும் கொணர்ந்து பூஜித்தான். அதே பகுதியில் சிலந்தியாகப் பிறந்த மாலியவான், தனது முற்பிறப்பில் சிவனுக்குத் தொண்டு புரிந்த பூர்வபுண்யத்தால், வெண்மையான நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது சருகுகள் விழாமலும், சூரிய வெப்பம் தாக்காமலும் இருக்க தனது உடலில் உருவாகும் பிசினைக் கொண்டு ஒர் வலையினை ஏற்படுத்தியது.
சிவபெருமானை பூஜிக்க வரும் யானை, ஈசன் மேல் இருக்கும் சிலந்தி வலையினைக் கண்டு வருந்தி, அவற்றை நீக்கியபின் தனது வழிபாட்டினைச் செய்துவிட்டுச் செல்வது தினசரி வழக்கமாகக் கொண்டது. இவ்வாறு சிலந்தி வலை பின்னுவதும், மறுநாள் யானை அதனை அகற்றுவதுமாக இருந்ததை உணர்ந்த சிலந்தி, ஒருநாள் மறைந்திருந்து கவனித்து, தான் பின்னும் வலையைச் சிதைப்பது யானையே என்று உணர்ந்து அதனைக் கொல்ல முடிவு செய்கிறது. மறுநாள் சிவனைப் பூஜிக்க வந்த யானையின் துதிக்கையில் புகுந்து கடிக்கிறது சிலந்தி. வலி தாங்க முடியாத யானை துதிக்கையை தரையில் அடித்து சிலந்தியைக் கொல்கிறது. அப்போது சிலந்தி விஷம் உடம்பில் ஏறியதால் யானையும் உயிர் துறக்கிறது. சிவனுக்கு தொண்டு செய்த யானை சிவலோகம் அடைகிறது. யானைக்குத் துன்பம் ஏற்படுத்திய சிலந்தி மீண்டும் பிறவி எடுக்கிறது. மீண்டும் பிறக்க வேண்டிவந்தாலும், ஈசனுக்கு வலை பின்னிய காரணத்தால் அரச வாழ்வு கிடைக்கிறது.
பல வருடங்கள் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்த சுபதேவர்-கமலவதி என்ற சோழ அரச தம்பதிக்கு மகனாகப் பிறக்கிறார் சிலந்தியாக இருந்த மாலியவான். குழந்தை பிறக்கும் முன்பு ஜோதிஷ விற்பனர்கள் குழந்தை பிறப்பது குறிப்பிட்ட காலமாக இருக்குமாயின் குழந்தை பூவுலகம் முழுவதும் ஆளும் சிறப்பு மட்டுமின்றி, ஈசன் அருள் பெற்றதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். இதனை அறிந்த அரசி, குழந்தைப் பிறப்பை குறிப்பிட்ட நேரத்தில் நடக்க வேண்டித் தன்னைத் தானே தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் செய்கிறார். இவ்வாறு செய்து, குறிப்பிட்ட நேரம் வருகையில் கட்டுக்கள் அவிழ்க்கப் பெற்று வந்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தலைகீழாகத் தொங்கிய காரணத்தால் குழந்தையின் கண்கள் சிவந்து இருந்திருக்கிறது. அதைக் கண்ட தாய், 'என் கோவே! செங்கண்ணா' என்று அழைத்து மகிழ்ந்த சிறிது நேரத்திலேயே தன்னுயிரை இழக்கிறாள் அரசி. அறிதாகப் பெற்ற மகனை நன்கு வளர்த்து, போர்க்கலை மற்றும் வேதாகமங்களிலும் மேம்பட்டவனாக்கி, தக்க பருவத்தில் அவனுக்கு முடிசூட்டுகிறார் சுபதேவர்.
கோச்செங்கட் சோழர் என்ற பெயருடன், இறைவனருளால் தனது முற்பிறப்புக்களை அறிந்த அரசன், ஈசன் மீது பக்தியில் திளைத்து திருவானைக்காவில் வெண்ணாவலுடன் கூடிய ஈசனுக்கு கோவில் எழுப்பினாராம். தனது பூர்வ ஜென்மத்தில், யானையான புஷ்பதந்தனால் தான் ஈசனுக்கு ஏற்படுத்திய வலைக்கு ஏற்பட்ட அழிவாலேயே கோச்செங்கணான் தான் கட்டிய கோவில்களை மாடக் கோவில்களாக, அதாவது யானை நுழையமுடியாதபடி பல படிகளுடனும், குறுகிய வாயிலுடனும் அமைத்ததாகக் கூறுகின்றனர். கோச்செங்கணனார் சுமார் 70 மாடக் கோவில்கள் கட்டியதாகச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். தில்லையம்பலத்தானுக்குப் பல விசேஷ உற்சவங்கள் செய்வித்ததாகவும், கோவிலில் மறையோவோர்க்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. இது பற்றி சேக்கிழார் பின்வருமாறு சிறப்பித்துக் கூறுகிறார்.
மந்திரிகள் தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன்
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
அந்தமில் சீர்ச் சோனாட்டில் அகனாடு தொறும் அணியார்
சந்திர சேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார்
அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி முதலான
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்துத்
திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் முறை நிறுத்தித் தேர் வேந்தர்
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார்
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
பெருமானை அடிவணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
உருகா நின்று உளம் களிப்பத் தொழுது ஏத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்
தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கட் செம்பியர் கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல்
ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ்
திருஞான சம்பந்தர் தமது திருவானைக்கா பதிகங்களிலும் இந்த கோச்செங்கட் சோழரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவை பின்வருமாறு:
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.
மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.

No comments:

Post a Comment