அப்போது எனக்கு பத்து வயது. அப்பாவின் பெரியப்பா மகள் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாள். பெயர் எலிசபெத். எனக்கு அத்தை. ஊரில் எல்லாரும் பேசிக் கொண்டார்கள்.
மருமொவ வந்துருக்காளாம்லா ? ஆள வெளியவே காணுமே ?
சிலர் இப்படி சொன்னார்கள்.
மத்தவ வந்துருக்காளாந் தெரியுமா ? பெரிய மெலிஸ்லோனா.... வெளிய வந்தா கருத்துருவா ? தேவலோகத்து ரம்பை... ம்க்கும் ... தூ ... செவம் !
அத்தை ஒரு மஞ்சள் நிறத்துப்பேரழகி... நல்ல படித்தவள், கொஞ்சம் திமிர்... சக பெண்களுக்கும் அவள் மீது பொறாமை. அதனால் அவளை இளைஞர்கள் யாரும் சீண்டுவதில்லை. அப்படித்தான் ஒருமுறை மாமன் ஒருவன் ஏதோ சொல்ல தெருவில் கிடந்த சாணியை அள்ளி அவனது வாயில் எறிந்து விட்டாள். எறிந்த பின்புதான் அத்தைக்குத் தெரிந்தது அது மனிதச் சாணி என்று....
ஊரே நாறி விட்டது. அதன்பின்பு ஒருபயலும் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
பாத்ரூமில் பல்லிகள் தொந்தரவு இருந்ததால் ஒருநாள் அவள் குளிக்கப் போகும்போது குளியலறை வரைக்கும் கூடவே துணைக்குப் போனேன். அவள் கையில் ஒரு சோப்பு இருந்தது. அத்த ! அந்த சோப்பக்குடு பாத்துட்டுத் தாரேன் என்றதற்கு சோப்பெல்லாம் தரமாட்டேன். இந்தா !
என்றாவாறே சோப்பின் கவரைத் தந்தாள். அந்த சோப்பின் பெயர் கிளியோபாட்ரா. நல்ல மணமாகயிருந்தது.
நான் பின்வாசலில் உட்கார்ந்து பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென பாத்ரூமுக்குள் இருந்து ஒரு அலறல் சத்தம். யம்மா....யப்பா.....
அந்த அலறல் சத்தத்தைத் தொடர்ந்து வீட்டுக்குள்ளிருந்து தடதடவென உருளும் சத்தமும் பொத்'தென ஏதோவொன்று விழும் சத்தமும் கேட்டது. மாடியில் துணி காயப் போடப் போன ஆச்சி அலறல் சத்தம் கேட்டு மர ஏணியில் இருந்து டைவ் அடித்து கீழே விழுந்து மயக்கமடைந்தாள்.
இது ஏதோ ஒரு பல்லியின் வேலைதான்... எனக்குப் புரிந்து விட்டது. நான் யோசிக்கவில்லை. அருகில் கிடந்த உரலில் ஏறி பாத்ரூமுக்குள் குதித்தேன். அங்கு அத்தை சுவரோடு ஒட்டி நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு எலி இருந்தது. என்னைக் கண்டதும் அதைக் கீழே எறிந்து விட்டாள். அத்தை எலியைப் பிடித்துப் பிதுக்கி மரண தண்டனை கொடுத்திருந்தாள். எலிசபெத்தை எட்டிப் பார்த்த எலி கர்த்தருக்குள் நித்திரை அடைந்திருந்தது.
அவளுக்குக் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. முகத்தில் சோப்பு போட்டுவிட்டு முதுகு தேய்க்கும் லூஃபா என்று நினைத்து எலியைத் தூக்கி முதுகு தேய்த்திருக்கிறாள். எலி தன்னுடைய திருக்கரங்களால் அவளது முதுகில் கோடுகளைப் போட்டு விட்டது.
வெளியில் கதவைத் தட்டும் சத்தம். கதவைத் திறந்தால் வெளியே தாத்தா கையில் துப்பாக்கியோடு நின்றிருந்தார்.
நீ என்னலே உள்ள நிக்க ? சூட் பண்ணிருவேன் ராஸ்கல் !
அந்தத் துப்பாக்கி வெத்து என்பது எனக்குத் தெரியும். நான் எலியைத் தூக்கிக் காண்பித்தேன். நடுவீட்டில் மல்லார்ந்து கிடந்த கிழவியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். தாத்தா முன்னாள் போலீஸ்காரர். வெடிக்காத துப்பாக்கியொன்றை வேடிக்கைக்காய் வைத்திருந்தார்.
கிழவன் பார்த்த பார்வை ஊர்க்காரர்கள் அந்த எலியின் இடத்தில் என்னைப் பொருத்தி பாடு பொருளாக்கினார்கள்.
இந்த வயசுலயே செவம் செய்துருக்க வேலையைப் பாத்தேளா ? இப்பமே இப்பிடின்னா .... வளர்ந்தா அவ்வளவுதான்.... ஊர்ல உள்ள பொம்பளப் புள்ளைகள காப்பாத்து இறைவா ! என்று வேண்டவும் செய்தார்கள்.
எனக்கு எதுவும் புரியவில்லை. கொஞ்சம் மாமன்மார்கள் ( கோழிக்கள்ளன்கள்) என்னைக் கூப்பிட்டு கேட்டார்கள். பாத்ரூம்ல என்னத்த பாத்த மக்கா ?
ஐ சிம்ப்ளி டோல்டு தெம், எலி மாமா !
வீட்டில் பஞ்சாயத்து வேறு மாதிரி இருந்தது. எம்புள்ளை ஒரு நாலணா சோப்புக்கு வெல பெற மாட்டானா ? சோப்போட கவரக் கையில குடுத்து மணத்திப் பாக்க குடுத்துருக்கா அந்த சூப்பன ( சூர்ப்பனகை ) அந்தக் கெழவன் என்னன்னா துப்பாக்கிய எடுத்து சின்னப் புள்ளைய சுட வந்துருக்கான். அவன மாறின்னு நெனச்சானோ தொட்டிப்பயல்.
அப்பாவிடம் திரும்பி , ஒங்க பெரியப்பங்கிட்ட சொல்லிருங்க... மரியாத கெட்டுரும்...
( இனி கெடுவதற்கு என்ன இருக்கு ? )
இறுதியில் என்னை வெளுத்தார்கள். இனிமேல் அந்த வீட்டுப் பக்கம் போவியா ? அத்தையையும் , தாத்தாவையும் குறித்து ஆளாளுக்கு ஒரு பழமொழி சொன்னார்கள்.
அம்மா அத்தையைக் குறித்து, காணாதவ கஞ்சியக் கண்டா ஓயாம ஊத்திக் குடிப்பாளாம்.
அம்மாவின் அம்மா ( பாட்டி ) அத்தையைக் குறித்து, ஓரழுக்கு ஒத்தைக் குளியில போகும், குளிச்ச தண்ணி செத்தக் குழியில போகும்.
போலீஸ் தாத்தாவின் கொளுந்தியாள் ( அப்பாவின் சித்தி ) வெடிக்காத துப்பாக்கி சீலையில கெடந்தா என்ன ? சீமையில கெடந்தா என்ன ?
சோப்புக் கவர் விவகாரம் என்னுள் பற்றி எரிந்தது. அந்த சோப்பின் கவரை ஒரு புத்தகத்தில் வைத்து மூடி பத்திரப்படுத்தினேன். அத்தைக்கும் கல்யாணம் முடிந்து பையன் ஒருவனும், இரண்டு பிள்ளைகளும் ஆனார்கள். அக்காவுக்கு வெளிநாட்டில் அரசு வேலை கிடைத்தது. விடுமுறையில் அவள் வரும்போது எனக்கு போன் செய்து கேட்டாள்.
உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
நான் சொன்னேன். ஒரு பத்து கிளியோபாட்ரா சோப்பு வாங்கிட்டு வா !
அவள், அட கிறுக்கா ! வேற ஏதாவது கேளு... அது இங்க உள்ள லோக்கல் சோப்பு ! உனக்கு நல்ல யார்ட்லி சோப்பு வாங்கிட்டு வாரேன்! என்றாள்.
நான் கிளியோபாட்ரா சோப்புதான் வேணும் என்று அடம்பிடித்ததில் , போனாப்போகுது நாயே'ன்னு வாங்கி வந்தாள்.
நான் பத்து கிளியோபாட்ரா சோப்பையும், கொஞ்சம் சாக்லேட்டுகளையும், ஸ்பிரே பாட்டில்களையும் ( அத்தையின் மகள்களுக்கு) எடுத்துக் கொண்டு அத்தையின் வீட்டிற்கு கிளம்பினேன். கூடவே அந்த பழைய சோப்பின் கவரையும் ....
அத்தை வாசலில் வரவேற்றாள். மருமகனுக்கு இப்பத்தான் இங்கன ஒரு வீடு இருக்குன்னு தெரிஞ்சிதா ? என்றாள். ஏறிட்டுப்பார்த்தேன். துப்பாக்கிக் கிழவன் சுவற்றில் புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் அதே வெடிக்காத துப்பாக்கி.
அத்தையிடம் சோப்புகளைக் கொடுத்து விட்டு, கொளுந்தியார்மார்களிடம் இன்னபிறவற்றைக் கொடுத்து விட்டுக் கேட்டேன். எத்தே ! இந்த கவரு உனக்கு ஞாவகம் இருக்கா ?
அத்தை திருதிருவென விழித்தாள். பதிமூணு வருசத்துக்கு முன்னால நீ மோந்து பாக்கக் குடுத்தது...
அத்தை வியந்தாள். எம்மேல அவ்வளவு பாசமா மக்ளே ? இன்னும் பத்திரமா வச்சிருக்க ?
அடப்பாவிச் சண்டாளி ! பழிவாங்க வந்தவன்கிட்ட பாசமலர் டயலாக்கு பேசிட்டாளே ? பத்து சோப்பு வேஸ்டா போச்சே ?
நான் கொளுந்தியார்களை திரும்பிப் பார்த்தேன். அத்தையின் அழகு அப்படியே இருந்தது.
அத்தை கேட்டாள். இவளுக ரெண்டு பேர்ல ஒருத்திய நீ கெட்டிகிட்டா நாளைக்கி பின்னால நா வேற எங்கயும் போய் நிக்க வேண்டாம்.
நான் அத்தையிடம் மறுத்தேன். அவள் என்னிடம் கேட்டாள்.
ஏன் மக்ளே ?
நான் அவளிடம், ஏன் ? எலியக் கொல்லுறதுக்கா ? என்று கேட்டு விட்டு வந்தேன். அத்தை வேறு யாரும் அல்ல... கக்கூஸ் கனகமணியின் தாய்....