Wednesday 30 May 2018

வெ.இறையன்பு

காற்றில் கரையாத நினைவுகள்....
இரவல் பழக்கம்!
வெ.இறையன்பு.
ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது. பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று. எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி. அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும். அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும். எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.
நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும். பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு. அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு. பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள். இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.
ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது. எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.
’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’
நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர். அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள். நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள். உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள். சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள். தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.
அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள். சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள். ’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.
அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு. இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு. அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.
ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்
மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை. பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும். ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும். வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும். இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும். விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.
பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும். மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.
நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால். தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.
பக்கத்து வீட்டு அட்டிகை
அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு. திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள். சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு. அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன. கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது. பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.
இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது. கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம். எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம். ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.
அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை. வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள். கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை. இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.
வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும். அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும். ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு. வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை. வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.
இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை. அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தகராறு. அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம். அழுகி எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள். பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது. பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை.

Tuesday 29 May 2018

புளியம்பூ கதை

புளியம் பூ வாசம்
************************
தோப்பை விற்பதற்கான எல்லாக் கையெழுத்தும் முடிந்தது. தோப்பை வாங்கும் வட்டிக்கடை பாண்டியன், பணத்தை அப்பாவிடம் நீட்டினார். 'அவங்ககிட்டயே கொடுங்க...' என்று அப்பா, அண்ணனைக் காட்டிவிட்டு வெளியேறினார். அண்ணன் பணத்தை வாங்கிக் கொண்டு, 'நீங்க பஸ்ல வந்திருங்க...' என்று எங்களிடம் சொல்லிவிட்டுப் புதிதாக வாங்கியிருக்கும் கருமையும் நீலமும் கலந்த மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.
நானும், அம்மாவும், அக்காவும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அம்மாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டது. அக்கா, அம்மாவைத் திட்டிக் கொண்டே வந்தாள். 'அழுகையை நிறுத்து! உன் பையனுக்கே, சொத்து வேணாங்கிறப்ப உனக்கென்ன வந்தது... போறப்ப தூக்கிட்டா போகப்போற...' என்றாள் அக்கா. அவளுக்கென்ன தெரியும்! அப்பா எங்கள் எல்லோரையும் விட புளியந்தோப்பை அதிகமாக நேசித்தது...புளியந்தோப்பு, அப்பாவுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு நிறைவேறி விட்டது என்று கண்ணை மூடி முழிக்கும் முன் அது வெறும் கனவு தான் என்றாகி விட்டது. வாழ்க்கையில் அனேக கனவுகள் இருக்கலாம்... முதன்முறையாக அப்பாவுக்கு புளியந்தோப்பு கனவு வாழ்க்கையானது.
அப்பாவுடன் முதன்முதலாக நான் காட்டுக்குச் சென்று, அங்கேயே தங்கிவிட்டது எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அது நிலக்கடலை பிடுங்கும் சீசன். பஸ்ஸில் பயணம் செய்துதான் அந்தக் காட்டுக்குப் போகவேண்டும். அந்த பஸ் பயணத்திற்காகவே எனக்கு அந்தக் காடு ரொம்பப் பிடிக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி மூன்று மைல் நடந்து காட்டுக்குப் போக வேண்டும். அம்மா தலையில் கூடையைத் தூக்கி கொண்டு என்னை இடுப்பில் வைத்துக் கொண்டு, 'ஆமா நீ தான் எல்லாக் கடலைச் செடியையும் புடுங்கி ஆயப் போற... எனக்கு இருக்கிற வேலை பத்தாதுன்னு உன்னை வேற தூக்கிட்டுப் போறேன் பாரு...' என்று திட்டிக் கொண்டே வந்தது.
அந்த அதிகாலை இரவில் எங்களுக்கு முன்பேயே, அப்பா காட்டுக்குக் கொத்தாள்களைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார். அங்கங்கே நிலக்கடலை செடியைப் பிடுங்கி, வீடு போல சுற்றி அடுக்கி வைத்து, ஒவ்வொரு குவியலுக்கும் எதிரெதிராக இருவர் உட்கார்ந்து நடுவில் குழி தோண்டி கம்பு வைத்து கடலைச் செடியை கையில் அடங்கும் மட்டும் எடுத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். சூரியன் உதிக்காத அந்த காலை நேரத்தில் ஆளில்லாத அந்த குவியலுக்கு, அப்பாவை அழைத்துக் கொண்டு போய் கடலைச் செடியை அடித்துக் கொண்டிருந்தேன். வேலை செய்பவர்களைப் போல் முடி தெரியாமல் இருக்க நானும் தலையில் வண்டு கட்டிக் கொண்டேன். அது அப்பா சரி செய்ய... சரி செய்ய... ஒரு பக்கமாக அவிழ்ந்து கொண்டு வந்தது.
கடலை வீடு வந்து சேர ரெண்டு நாளாகும்... நீ பெரியம்மா கூட வீட்டுக்குப் போ... அம்மாவும், நானும், கடலையை காவக் காக்க இங்கேயே இருக்கோம்...' என்று அப்பா சொன்னதைக் கேட்காமல் அடம் பிடித்து நானும் இரவில் அங்கேயே தங்கி விட்டேன். வாய்க்கால் ஓரத்தில் செடியிலிருந்து ஆய்ந்த கடலையைக் குவித்து களம் செதுக்கியிருந்தார்கள். வாய்க்காலின் இருபுறமும் தென்னை மரங்கள்சாய்வாக வளர்ந்திருந்தது. அப்பா, கம்புகள் வைத்து குட்டியாய் ஒரு குடிசை போட்டிருந்தார். குடிசைக்குள் வைக்கோல் சாக்கு விரிக்கப்பட்டிருந்தது. அந்தக் குடிசை, நான் தட்டாங்குச்சியில் செய்யும் பொம்மை வீடு போல இருந்தது. காட்டை இருள் மூடியதும் எனக்கு பயம் வந்தது. வெள்ளாவி மணக்கும் அப்பாவின் போர்வைக்குள் பூனைக்குட்டியாய் ஒளிந்து கொண்டேன். ராத்திரியில் சங்கீதமாய் குரல் எழுப்பிக் கொண்டு அந்தச் சமவெளியெங்கும் காற்று போன திசையெல்லாம் நானும் சேர்ந்து போனேன் காற்றோடு தூக்கக்கனவில். அந்த இருள் இரவில் அப்பாவைப் போல காடு என்னையும் மறக்கடித்தது.
மறுபடியும் அப்பா என்னை அந்தக் காட்டுக்கு கூட்டிக் கொண்டு போகவே இல்லை. பின்பு தான் தெரிந்தது... அது தற்காலிகமான 'ஒத்திக்காடு' என்பது. ஒரு காட்டுக் கனவு சிதைந்து போயிருந்த வேளையில், அப்பா திரும்பவும் குளத்துக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு காட்டை வாங்கினார். 'இந்தக் காடு உனக்குத்
தாண்டா...' என்று அப்பா சொன்னதும், 'பொட்டப்புள்ளைக்கு என்னைக்கின்னாலும் நகை, நட்டு தான் சொந்தம்... காடு, வீடெல்லாம் ஆம்பளப் பிள்ளைக்குத்தானே சேரும்...' என்ற பக்கத்து வீட்டு நல்லம்மா பாட்டியை முறைத்தார் அப்பா.
அப்பா வாங்குகிற காடுகளுக்குப் பக்கத்தில் அருவி, குளம், வாய்க்கால் இப்படி எனக்கு சந்தோசம் தருகின்ற விசயங்களாகவே இருந்தன. புதுக்காடு வாங்கியதிலிருந்து அம்மாவுக்கும், அப்பாவுக்குமிடையே மனவருத்தம். 'மணல் காட்டை வாங்காம... இப்படி இறுகிப்போன செவளைக் காட்டைக் வாங்கினால் வெள்ளாமை விளங்குமா? என்ற அம்மாவின் வருத்தம், அப்பாவுக்கும் இருக்கத்தான் செய்தது.
பருத்தி விதைச்சா பணம் அதிகமா செலவாகும். ஒரு பூச்சி... புழு இல்லாம பாத்துக்கணும். இப்ப பூச்சி மருந்து விக்கிற வெலையில அது நடக்கிற காரியமா? எள்ளு விதைக்கலாம்னா... அது நொச்சுப் புடிச்ச வேலை. அவசரப்பட்டு இந்தக் காட்டை வாங்கிட்டோமோ! என்று அப்பா குழம்பிப் போயிருக்கும் வேளையில் காடு காவல் காக்கும் நொண்டி மாயாண்டித்தாத்தா வீட்டுக்கு வந்தார்.
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அன்றைக்கு அதை அவரிடமே கேட்டேன். ஏன் தாத்தா நீங்க நல்லா நடக்கும் போதே எல்லோரும் உங்களை நொண்டி மாயாண்டின்னு கூப்பிடுறாங்க? இந்த மூளிப்பய புள்ளைக்கு வேற வேலையே இல்ல... என்று செல்லமாகக் கடிந்து கொண்டே சொல்லத் துவங்கினார். எங்க அப்பன் எம்புட்டு அடிச்சு சித்ரவதை பண்ணியும் நான் பள்ளிக்கூடம் பக்கம் போகலே... கால்ல விலங்கு மாட்டி பள்ளிக்கூடத்தில போட்டுட்டு வந்திடுவாரு... நான் கால் விலங்கை இழுத்துட்டு போறதப் பார்த்த பயலுகளெல்லாம், 'நொண்டி மாயாண்டி'ன்னு அன்னைக்கிருந்து கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க... அதுவே எனக்கு பேராப்போச்சு...' என்று நீட்டி முழங்கினார்.
தாத்தாவுக்குக் காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் பள்ளிக்கூடத்தில் அடைந்து கிடப்பது பிடிக்கவில்லை. அவருக்கு விதவிதமான பறவைகளை வேட்டையாடித் திரிவதுதான் ஆனந்தமாய் இருந்திருக்கிறது. அதற்கு மேல் எதுவும் பண்ண முடியாமல், 'உன் பொழப்பு அம்புட்டுத்தாண்டா...' என்று சொல்லி தாத்தாவின் அப்பாவும், அவரை தன்னோடு காவல் காக்க அழைத்துக் கொண்டு போய்விட்டாராம்.
'அப்ப இருந்து சோளக்காட்டுக்குள்ளேயும், கம்பங்காட்டுக்குள்ளேயும் பரண் மேல உக்காந்து இஷ்டத்துக்கு வேட்டையாடிக்கிட்டிருக்கேன்... அதுவும், பறவை பயிர் மேல உக்காந்ததும் அடிக்க மாட்டேன். அது இரை மேல கவனமா இருக்கிற சமயமா பார்த்து குறி தவறாம ஒரே போடா போட்டிடுவேன்...' என்று தன் வேட்டையாடும் சாகசத்தை அளந்து கொண்டிருந்தார். 'மனசுக்குப் புடிச்ச, வேட்டைக்கு வேட்டையுமாச்சு... பொழப்புக்கு, காடு காக்கிற வேலையுமாச்சுன்னுதான் இந்த வேலைய விருப்பமா செய்யுறேன்... எப்படி என் சாமர்த்தியம்...' என்றார்.
என்னிடம் பேசிக் கொண்டிருந்த தாத்தா, 'என்னடா தங்கம், புதுக்காடு வாங்கியிருக்க போல... உன் காட்டை நான் காவக் காக்குறேன்டா...' அப்பா பக்கம் திரும்பிக் கேட்டார். 'அட போப்பா... காட்ல இன்னும் என்ன விதைக்கிறதுன்னே தெரியல... அதுக்குள்ள காவக்காக்குறதப் பத்தி பேசிக்கிட்டு... எள்ளு வெதைச்சா தொல்லைன்னு பேச்சி சொல்றா... பருத்தி நட்டா, அவ்வளவு பணம் செலவு பண்ண முடியாது. இந்தக் காட்டை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியல...' அப்பா அலுத்துக் கொண்டார்.

பொண்டாட்டியும், புருஷனும் இப்படி ஆளுக்கொரு யோசனையாப் பண்ணினா... எப்படி விவசாயம் பாக்க முடியும்? உன் காட்டுக்கு கீழ்க்காட்டுக்காரனப் பாத்தியா... மாங்கா மரம் நட்டு ரெண்டு வருசந்தான் ஆச்சு.. இப்ப எப்படி வளந்து நிக்குது... உன் காட்டுக்கு பக்கத்திலேயே குளம் இருக்கு... தண்ணிக்கு கவலையில்லை... பேசாம புளியங்கண்டை நட்டுப் போடு... நாலஞ்சு வருசத்திலே, அது உனக்குச் சோறு போடும்...' என்றார் தாத்தா.
'அதெப்படி... புளியங்கன்னு வளர பத்து வருசமாகுங்குறாங்களே...' அப்பா பேசி முடிக்குமுன் மாயாண்டித் தாத்தா கோபமானார். 'எந்த லூசுப்பய சொன்னான்... இப்பதான் ஒட்டு மா, ஒட்டு புளியங்கான்னு நாலஞ்சு வருசத்தில பலன் தர்ற மாதிரி, தேனி கூட்டுறவு சந்தையிலே விக்கிறாங்கல்ல... அதை வாங்கி வந்து நடு...' தாத்தாவின் பேச்சு, அப்பாவுக்குள் புளியந்தோப்புக் கனவை மீண்டும் ஏற்படுத்தி விட்டது.
அப்பா அந்த விதைப்பு காலத்தில் கொஞ்சம் புளியம் விதைகளும், புளியங்கன்னும் கொண்டு வந்தார். அம்மாவுக்கு அதில் சிறிதும் விருப்பமில்லை. அவர்களின் நீண்ட நாளைய உழைப்பில் வாங்கிய இந்தக்காட்டில் புளியங்கன்னு வைத்துவிட்டால் விவசாயம் சரிவர செய்ய முடியாமல் கஷ்டப்படுவோம் என்று அம்மா மறுத்தது. அதுவும் சின்னஞ்சிறு செடிகளும், இன்னும் முளைக்காத புளியவிதைகளும் மரமாகும் என்ற நம்பிக்கையில்லை அம்மாவுக்கு.
அம்மாவின் உதவியை எதிர்பாராமல், அப்பா பிடிவாதமாக அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று காட்டில் நட்டுமுடித்தார். நடுவதற்கு முன் மரம் நட்ட அனுபவமுள்ளவர்களிடம், எவ்வளவு ஆழத்தில் குழி தோண்ட வேண்டும், எப்படி செடிக்கு மண் அணைக்க வேண்டும், எத்தனை நாளைக்கு ஒரு தரம் தண்ணீர் விட வேண்டும் என்பதைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு புளியங்கன்றையும் பச்சக் குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொண்டார். ஒரு கன்னு வாடினாலும் மனசு பொறுக்காது அப்பாவுக்கு. வெயில் ஏறுவதற்கு முன் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அதிகாலை நான்கு மணியிலிருந்து புளியங்கன்னுக்கு குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்ற ஆரம்பித்து விடுவார்.
கோடை காலத்தில் குளத்தில் தண்ணீர் வற்றி பூமி பிளந்து கிடக்கும். அந்த சமயங்களில் கீழே இரண்டு மைல் தூரம் தள்ளியிருக்கும் தோட்டத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டும். 'இப்படி மேல இருக்கிற காட்டுக்காரங்கெல்லாம், எங்க தோட்டத்தில வந்து தண்ணி எடுத்துட்டுப் போனா! யாருய்யா மோட்டாருக்கு கரண்ட் பில் கட்டுறது...' என்று தோட்டத்துக்காரர் கத்தினாலும் என்ன செய்வது... வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். தண்ணீர் இல்லையென்றால் செடி வாடிவிடுமே...
அண்டா போன்ற பானையைத் தலையில் வைத்துக் கொண்டு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்பா தண்ணீர் எடுத்து வருவதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். அப்பாவின் உழைப்பில் புளியங்கன்னுகள் எல்லாம் மரமாகிக் கொண்டிருந்தன. சில நாட்களில் அப்பா திடீரென்று காணாமல் போய்விடுவார். மதியம் இரண்டு மணிக்கு பசி மயக்கத்தில் திரும்பி வருவார். காலையிலிருந்து சாப்பிடாம எங்க போனிங்க? என்று அம்மா கேட்டால் சும்மா டீ சாப்பிடத்தான் கடைப்பக்கம் போனேன்... 'புளியங்கன்னு சும்மா தளதளன்னு வளந்துருக்கு... தண்ணி ஊத்துறத மட்டும் விட்டுராதண்ணேன்னு...' நம்ம சிவனாண்டி சொன்னான்... அதான், 'நேத்து தண்ணி ஊத்தியிருந்தாலும் இன்னைக்கும் தண்ணி ஊத்தணும்ன்னு தோனுச்சு... அப்படியே காட்டுக்கு ஓடிட்டேன்...' என்பார்.
கரு கருவென்று அடர்த்தியாக இருந்த அப்பாவின் தலைமுடி செம்மண் குளத்து நீர் பட்டு செம்பழுப்பு நிறமாகி உதிரத்தொடங்கியது. கன்னு வச்சு அஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு. கன்னிமார் சாமிக்கு நேந்துகிட்ட மாதிரி, சொந்தக்காரங்க நாலு பேரைக் கூட்டிட்டு, சேவல் அடிச்சு பொங்க வச்சிரலாம் என்று அப்பா, அம்மாவிடம் சொன்னதைக் கேட்டவுடனெ நான் குஷியாகிவிட்டேன். ஒரு வெள்ளிக்கிழமை அப்பா எங்களை பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டுவிட்டு வரச்சொன்னார். எனக்கு லீவு லெட்டர் தப்பும் தவறுமாகத்தான் எழுதவரும். ஒரு தப்பு இருந்தாலும் வாத்தியார் முழங்கால் போட வைத்து விடுவார். அக்காவிடம் போய் எழுதச் சொன்னேன். அவள், 'வேலை இருக்கிறது...' என்று விரட்டி விட்டாள். அண்ணனிடம் போனால்... அவன், 'நீ பாட்டியோட சுருக்குப் பையில் சேர்த்து வச்சிருக்கிற காசையெல்லாம்
கொடுத்தாதான் எழுதி தருவேன்...' என்று சொல்லிவிட்டான். அவனுக்கு எப்பொழுதும் காசில் தான் குறி.
மந்தையம்மன் கோயில் திருவிழாவில் கல்வளையல், பாசி, பலூன், ராட்டினம் போன்ற என்னுடைய சின்னச்சின்ன திருவிழாசந்தோசங்களுக்காகச் சேர்த்து வைத்ததை வேறு வழியில்லாமல் அவனிடம் கொடுத்தேன். காடு, தோப்பாகி இருந்தது. அடுத்த வருசம் புளியமரம் பூ எடுத்து காய்த்து விடும் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். புளியமரத்தின் ஊடே பருத்திச் செடி வைத்திருந்தார்கள். இனிப்பாக இருக்கும் பருத்திப் பிஞ்சைப் பிடுங்கப் போய் பருத்திக் கிளையை ஒடித்து விட்டேன். யாருக்கும் தெரியாமல் ஒடிந்த கிளையை பக்கத்து கிளைமேல் படர விட்டுவிட்டேன். கொஞ்சம் புளியங் கொழுந்தை கிள்ளி முகர்ந்து பார்த்தேன். புளிப்பு வாசனை வந்தது.
பொங்கல் வைத்து முடித்த பின், உச்சி மலைமேல் இருக்கும் கன்னிமார் சாமிக்கு படையல் வைக்க அப்பா புறப்பட்டார். அவரோடு சேர்ந்து நானும் புறப்பட்டேன். மலைக்குப் போகும் வழியில், நொண்டி மாயாண்டி தாத்தாவும் எங்களோடு சேர்ந்து கொண்டார். ஒரு பெரிய மலைப்பாறையில் நின்று கொண்டு தூரத்தில் கைகாட்டி, 'என்ன தெரியுது..? என்றார் தாத்தா. நானும், 'காடு தான் தெரியுது...' என்றென். 'நல்லாப்பாரு...' என்று தலையில் ஒரு கொட்டு வைத்தார். வானத்தில் தூரமாய் பறக்கும் பறவைகள் கரும்புள்ளியாய் தெரிவதைப் போல் எங்கள் ஊர் தெரிந்தது. ஆனால், அல்லாக் கோயில் மட்டும் அடையாளம் காணும் அளவில் தெளிவாகத் தெரிந்தது. அல்லாக் கோயிலை எவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்தாலும் கூட தெரியும் போல... என்று நினைத்துக் கொண்டேன். அதைப்போல், அல்லாக் கோயிலில் நின்று கொண்டு மலையில் இருக்கும் கன்னிமார் சாமி கோயிலையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
எனக்கு எப்போதும் கன்னிமார் சாமிமேல் பொறாமையும், விருப்பமும் ஒரு சேர இருந்தது. அது நான் போக நினைக்கின்ற உயரத்தில் எனக்குப் பிடிச்ச மலையருவியோட மடியில் பன்னீர் பூக்களின் வெண்மையை உடுத்திக் கொண்டு அமர்ந்திருந்தது தான் காரணம். மலையருவியின் ஹோ... வென்ற சத்தம் பயத்தை ஏற்படுத்தினாலும் அந்த இடத்தில் கன்னிமார் சாமியின் தனிமையைப் போக்குவதாக இருந்தது. படையல் வைத்து, பத்தி, சூடம் ஏற்றி இந்த வருசம் மாதிரியே எல்லா வருசமும் மழை கொடு தாயி... என்று தாத்தாவும், அப்பாவும் வேண்டிக் கொண்டனர்.
தோப்பில் எல்லோரும் சாமி கும்பிட்டுவிட்டுப் பொங்கல் சாப்பிட்ட பின்பு அக்காவின் திருமணப் பேச்சை எடுத்தார்கள். பாண்டித்துரை பெரியப்பா தான் பேச்சை ஆரம்பித்தார். 'ஏம்ப்பா தங்கம்... பெரிய பொண்ணு பன்னெண்டாவது முடிச்சி ரெண்டு வருசமாச்சுல்ல, கல்யாணம் காச்சி நடத்த வேணாமா..! என்றார். அப்பா பதிலுக்கு, 'இல்லண்ணே... பையனை காலேஜில சேத்தாச்சு. இந்த வருசம் நம்ம ஐஸ்கூல்லேயே டீச்சர் படிப்பு வரப்போகுதாம்... பேசாம அந்தப் பிள்ளைய டீச்சருக்குப் படிக்க வைக்கலாம்ன்னு பார்க்குறேன்...' என்றதும், 'அடப்போப்பா...பொம்பளைப் பிள்ளையைப் படிக்க வச்சு அதுக்கு ஏத்தாப்பில மாப்பிள்ளை பாக்க அலையவா முடியும்... பேசாம, பேச்சியம்மா அண்ண மகனுக்கே உன் பெரிய பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிடு...' என்று நல்லம்மா பாட்டி சொன்னவுடனே அம்மாவுக்கு சந்தோசமாகி விட்டது. சொந்தக்காரர்கள் எல்லாம் கூடிப் பேசி அன்று அக்காவின் திருமணத்தை முடிவெடுத்து விட்டார்கள்.
புளியமரம் இன்னும் நெடு உயரம் வளர்ந்தது. அதோடு சேர்த்து அக்காவின் கல்யாணத்திற்கு வட்டிக்கடை பாண்டியனிடம் வாங்கிய கடனும் வளர்ந்தது. புளியமரம் பூவெடுத்து காய்க்கத் தயரான போது அண்ணன் படிப்பை முடித்து வேலைக்கு காத்திருந்தான். படிச்சு முடிச்சவுடனே அரசாங்க வேலைக்குப் போகலாம் என்று கனவு கண்டவனுக்கு, உடனே வேலை கிடைக்கவில்லை என்றவுடன் அலுப்பு ஏற்பட்டது. அப்பா, அண்ணன் வேலை பார்த்து கடனை அடைப்பான் என்று நம்பிக் கொண்டிருந்தார். அவன் சுகமாக வாழ ஆசைப்பட்டான். 'அரசாங்க வேலை கிடைச்சா போறேன்... அதை விட்டுட்டு, டவுனுக்குப் போய் ஆயிரத்துக்கும், ரெண்டாயிரத்துக்கும் தனியார் கம்பெனியில் அல்லாட முடியாது...' என்றான். மொத்தத்தில் அவனுக்கு வேலை தேட பொறுமையில்லை.
'வேலை ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது... பைனான்ஸ் போடப் போறேன் பணம் குடு...' என்று அப்பாவை தொல்லை படுத்தஆரம்பித்தான் அண்ணன். 'ஆமாண்டா... சொலவம் சொன்ன மாதிரி, தாயி தவிட்டுக்கு குத்தையில... பிள்ள இஞ்சி பணியாரம் கேட்டானாம்... நானே, பாண்டியன்கிட்ட வாங்கின கடனை எப்படி அடைக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன்... நீ வேலை பார்த்து கடனை அடைப்பேன்னு பார்த்தால், கொடுத்து வச்சவன் கணக்கா பணம் கேக்குறியேடா... இந்தக் கொடுமையை எங்கே போய்ச்சொல்ல...' என்று புலம்பினார்.
'எதுக்கு? பணமில்லை... பணமில்லைங்குற... தோப்பை விற்க வேண்டியது தான...' அந்த வார்த்தைய அவன் முடிக்கும் முன்னே, 'அடப்பாவி... கொலைகாரா... நான் உசிரக் கொடுத்து வளத்து வச்சிருக்கிற தோப்பை விக்கச் சொல்லுறியே, உன்னால் ஒரு கையளவு நிலம் வாங்க முடியுமாடா...' அப்பா ஆவேசத்துடன் அவனை அடிக்க ஓடினார்.
அன்றிலிருந்து யாரும் வீட்டில் நிம்மதியாக இல்லை. வீட்டில் ஒரே சண்டையும், சச்சரவுமாக இருந்தது. அப்பா இரவில் தூங்காமல், வாசல்படியிலேயே உடார்ந்திருந்தார். திரும்ப வர முடியாத தூரத்திற்கு அவரின் கனவுகள் தொலைந்து போயின. அண்ணனை அடித்து விடலாம்... கடன் கொடுத்த பாண்டியனை அடிக்க முடியுமா? கடன்காரர்களிடம் தணிந்துதானே போகவேண்டும். பாண்டியன், விடிந்தும் விடியாமல் இருக்கும் போதே கடனைக் கேட்டு திண்ணையில் உட்கார்ந்து விடுவான்.
அப்பாவுக்கும், மகனுக்கும் தோப்பை விற்பதில் தகராறுன்னு தெரிஞ்சவுடனே, பணத்தை கேட்டு பாண்டியன் நெருக்கடி பண்ணினான். தோப்பை வாங்குவதில் அவனுக்கு வெறியே வந்துவிட்டது. தளதளன்னு தேக்கு மரத்தைப் போல இருக்கிற தோப்பைப் பார்த்து தான் கடனே கொடுத்தான். அது கைக்கு எட்டின தூரத்தில் இருக்கு என்றால் சும்மா விடுவானா! நேரங்காலம் தெரியாமல் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். இப்படி எல்லாரும் பணத்தை திருப்பி கொடுக்காமல் வச்சிருந்தால் நான் பிச்சை எடுக்க வேண்டியதுதான் என்றவனின், கையிலும், கழுத்திலும் மஞ்சள் கிழங்கு போன்று தங்கச்சங்கிலி மின்னியது.
'உடனே புளியமரம் எல்லாம் காய்ச்சு பணம் கொட்ட போகுதாக்கும்... அது நல்லா காய்க்க நலைந்து வருசமாகும்... அது வரைக்கும் கடன் சும்மா இருக்குமா... குட்டி போடாது..! அப்புறம் தோப்பை வித்தாலும் கடன்தான் மிச்சமிருக்கும்... இப்ப வித்தால் கடனையும் கட்டிரலாம்... நானும், பாண்டியன் மாதிரி வட்டிக்கு கொடுத்து பணத்தை பெருக்குவேன்... அப்புறம், இது மாதிரி எத்தனை தோப்பு வேணுன்னாலும் வாங்கலாம்...' என்று அண்ணன் வீட்டிலேயே உட்கார்ந்து முணுக்.. முணுக்கென்று பேசிக் கொண்டே இருந்தான்.
மத்தளம் மாதிரி இரண்டு பக்க இடியையும் தாங்க முடியாத அப்பா, தோப்பை பாண்டியனுக்கே விற்க சம்மதித்தார். தோப்பும் விற்று, அண்ணன் கைக்கு பணமும் வந்தாயிற்று. இருண்ட புளியங்காட்டில் மின்மினிகள் அலறியது, கதறியழ முடியாத அப்பாவிற்கு வடிகாலாய் இருந்திருக்க வேண்டும். அப்பாவை வெகுநேரமாக வீட்டில் காணவில்லை. கடைத் தெருவிலும் இல்லை. நிலா வீட்டு வாசலுக்கு வந்த நேரத்தில் அப்பா, அமைதியாக வந்து உட்கார்ந்தார். 'எங்கப்பா போயிருந்த..?' என்ற கேள்விக்கு பதிலில்லை அவரிடம். அப்பாவின் சுவாசம் முழுவதும் புளியம் பூ வாசம்.

சரஸ்வதி ஆறு

சரஸ்வதி நதி இருந்ததாகப் பண்டைய புராணங்கள், வேதநூல்கள் அனைத்தும் ஆணித்தரமாகக் கூறுகின்றன. ஆனால் அந்த நதி தற்போது எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அது பூமிக்கடியில் இன்றும் பாய்ந்து கொண்டிருப்பதாக ஒரு கருத்து வலுவாக இருந்தாலும் அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்கத்தான் செய்கிறது.
மிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன்மூலம் நிரூபணமாகிறது.
ரிக்வேதத்தின் நான்காவது பாதம் தவிர பிறவற்றில் சரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரிக் வேதத்திற்குப் பிந்தைய நூல்கள் பல சரஸ்வதி நதியின் மறைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
யஜூர் வேதத்திலும் சரஸ்வதி நதி பற்றிக் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதியை நோக்கி ஐந்து நதிகள் பாய்வதாகவும், பின்னர் நிலத்தில் ஐந்து மடிப்புகளோடு கூடிய சரஸ்வதி நதியாக அவை ஆகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ என்றழைக்கப்படுகிறது. திரிவேணி என்றால் மூன்று என்று பொருள். அப்படியானால் கங்கை மற்றும் யமுனை நதிகளைத் தவிர வேறொரு நதியும் அங்கு சங்கமமாகி இருந்தால் மட்டுமே அது திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்பட்டிருக்கும்.
அப்படியானால் அந்த இன்னொரு நதி எது?
நிச்சயமாக அது தற்போது காணாமல் மறைந்து போயிருக்கும் சரஸ்வதி நதி என்றே நம்பப்படுகிறது.
ஆய்வாளர் உவாதா என்பவர் தனது ஆய்வின் மூலம் சரஸ்வதியின் ஐந்து கிலை நதிகளைக் கண்டறிந்துள்ளார். அவை, பஞ்சாப் மாநிலத்தின் திரிஷத்வதி, சட்லெஜ், சந்த்ரபாகா, விபாஸா மற்றும் ஐராவதி ஆகியவனவாகும்.
இதேபோல ஸ்க்ந்த புராணமும் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பிரம்மாவின் நீர்க் குவளையில் இருந்து இந்நதி உருவாவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இமயத்தின் பிளாக்சா வழியாகப் பாயும் சரஸ்வதி, பின்னர் மேற்கில் கேதாராவில் திரும்பி நிலத்திற்கு அடியில் பாய்வதாகக் குறிப்பிட்டுள்ளது.
வேத காலத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் இந்நதி பொதுவாக கக்கார் நதியுடன் அடையாளம் காணப்பட்டது. இதனை கிறிஸ்டியன் வாசன், மாக்ஸ் ம்யூலர் போன்ற ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி நதியானது சட்லெஜ் மற்றும் யமுனை நதிகளைத் தனது உபநதிகளாகக் கொண்டிருந்தது என்றும், புவியியல் மாற்றங்கள் காரணமாக சட்லெஜ் நதி சிந்து நதியை நோக்கியும், யமுனை கங்கையை நோக்கியும் திசை மாறியதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடலைச் சென்றடைய நதிக்குப் போதுமான அளவு நீர் இல்லாமல் போனதன் காரணமாக தார் பாலைவனத்தில் வறண்டு போனதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சரஸ்வதி நதியானது 1500 மைல் நீளத்திற்குப் பாய்ந்தோடி, கட்ச் பகுதியில் கடலில் கலந்தது என்பது புராணங்கள் அறிவிக்கும் உண்மை. இவ்வாறு சரஸ்வதி ஓடிய பகுதியில்தான் இன்று தார் பாலைவனம் உள்ளது.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதிக்கரையில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்னதாகவே நாகரீகம் தழைத்தோங்கி இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பஞ்சபாண்டவர்கள் நடமாடியதாகக் கருதப்படும் இந்த நதி, கி.மு. 2 ஆயிரம் ஆண்டுவாக்கில் பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவால் அழிந்து பட்டிருக்கக்கூடும் என்று பலரும் கருதுகின்றனர்.
சரஸ்வதி நதிதற்போது செயற்கைக் கோள் வரைப்படம் ஒன்று தனது புகைப்படக் கருவி மூலமாக் சரஸ்வதி நதி இருந்ததைப் படம் பிடித்துள்ளது. சிந்து, கங்கை, யமுனை நதிகளின் படுகைகள், சமவெளிகள் போன்றவற்றை செயற்கைக்கோள்கள் படம் பிடித்ததில், பழங்காலத்தைப் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தன.
அதாவது ராஜஸ்தான், அரியானா ஆகிய பகுதிகளைப் படம் பிடித்ததில் முற்காலத்தில் சட்லெஜ் நதி தெற்காகவும், யமுனை நதி தென்மேற்காகவும் பாய்ந்தது தெரியவந்துள்ளது.
மேலும் வறண்ட ஆற்றுப்படுகைகளும் இந்தப் படங்களில் பதிவாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் தீவிரமாக நடத்திய ஆய்வில் சரஸ்வதி ஆறு இருந்ததற்கான சான்றுகளாக இவற்றை எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்திருப்பது சற்று வியப்பூட்டும் செய்தி.
1977 ஆம் ஆண்டு வடோதராவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று சரஸ்வதி நதி பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டது.
வேதங்கள் என்பது மதம் சார்ந்தது மட்டுமல்ல; அவை வரலாற்றுப் புவியியல் பதிவுகளாகவும் கருத வேண்டியவை என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ கி.மு.6000 முதல் 3000 ஆண்டுகளில் சரஸ்வதி ஆறு பாய்ந்தோடியதை வேதங்கள் வாயிலாக நன்கு அறிய முடிகிறது என்றும், இமயமலையின் கைலாயத்தின் கீழ் மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாய்ந்ததாக அறியமுடிகிறது என்று கூறுகிறது அந்த ஆய்வுக்கட்டுரை.
தொல்பொருள் ஆய்வாளர்கள் சரஸ்வதி நதி பற்றி இருவேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது சிந்து மற்றும் கங்கை நதிகளுக்கு இடையே சரஸ்வதி நதி பாய்ந்திருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து.
இன்னொரு சாராரோ அவ்வாறு சரஸ்வதி நதி பாய்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும், சிந்து நதியையே வேத காலத்தவர்கள் கவிநயத்துடன் சரஸ்வதி என்று அழைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
தார் பாலைவனத்தின் அடியில் சரஸ்வதி நதி மறைந்து போய்விட்டதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.
மிஷல் தனினோஇன்னொரு ஆய்வாளர் மிஷல் தனினோ என்பவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இவர் கோயமுத்தூர்வாசியாக தற்போது இருந்து வருகிறார். இவர் சரஸ்வதி நதி பாய்ந்ததாகக் கூறப்படும் அனைத்துப் பகுதிகளையும் நன்கு ஆய்வு செய்து ஆய்வுக் குறிப்புகளைத் தொகுத்து சுவாரஸ்யமாக ‘த லாஸ்ட் ரிவர்: ஆன் த ட்ரையல் ஆஃப் சரஸ்வதி (The Lost River: On the Trail of the Saraswathi) என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அதில், சரஸ்வதி நதி கற்பனை அல்ல என்றும், இமயமலையின் ஷிவாலிக் என்ற இடத்தில் பிறந்து, அரியானா, ராஜஸ்தான் வழியாகப் பாய்ந்து குஜராத்தில் அரபிக் கடலில் கலந்தது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நதிக் கரையில் வாழ்ந்த மக்கள் இதன் நீரைப் பெருமளவு பயன்படுத்தியதாலும், நிலநடுக்கம் கார்ஸ்ணமாகவும் இதற்கு நீரைத் தரும் ஆறுகள் வேறுவேறு திசைகளில் திரும்பியதாலும் நாளடைவில் நதி வற்றிச் சுருங்கிவிட்டதாக அப்புத்தகம் தெரிவிக்கிறது.
பண்டையகால தட்பவெப்ப நிலையை ஆய்வு செய்ததில், ஹாரப்பா நாகரீகம் உச்ச கட்டத்தில் இருந்தபோது அங்கு வறண்ட ஊழல் நிலை நிலவியது என்று ஏழு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஏழு ஆய்வுகள் வேறு விதமாகத் தெரிவிக்கின்றன. அதாவது, அதே காலகட்டத்தில் அந்தப் பகுதியில் அதிக அளவில் மழை பெய்ததெனக் கூறுகின்றன.
ஆக, அதிக வறட்சியோ அல்லது அதிக மழைப் பொழிவோ அங்கு ஏற்பட்டு சர்வ நாசம் ஏற்பட்டுள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சரஸ்வதி நதி மறைந்து போயிருக்கலாம் என்ற கூற்றில் உண்மை இருப்பதாக மிஷல் தனினோ அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரோ நடத்திய ஆய்வுகளும் சரஸ்வதி நதி இருந்திருப்பதை உறுதிப்படுத்தத்தான் செய்கின்றன. அந்தப் பகுதியில் தொன்மை காலத்திய நதிப்படுகைகள் இருக்கின்றன என்றும், அவை பெரும்பாலும் சரஸ்வதி நதியின் படுகைகளாகவே இருக்க வேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவிக்கிறது இஸ்ரோ.
ஆய்வுகளும் வேதங்களும் சரஸ்வதி நதி பற்றிக் கூறினாலும், அது பூமிக்கடியில் தற்போது பாய்ந்தோடிக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டாலும் இவை எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இருந்து வருகிறது. எனவே சரஸ்வதி நதி குறித்த மர்மம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
LikeShow more reactions

பயனுள்ள வலைத்தளம்

http://www.vishvarupa.com/
அருமையான வலைத்தளம்...மக்கள் சென்று கண்டு பயன் பெற வேண்டுகிறேன் ...பாருங்கள் / பகிருங்கள் ....ஓம் !!!!!

விபூதியின் பெருமை

விபூதி அணிவோம் ! விதியை வெல்வோம் !!
==========================================
சிவபெருமானை வழிபடும் சைவர்களுக்கு சிவச் சின்னமானதாகவும், முக்கியமானதாகவும் அமைவது விபூதி.
பஸ்மம், ரக்ஷை, திருநீறு என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுவது விபூதி.
விபூதி என்பதற்கு மொழியியல்படி, பல்வேறு அர்த்தங்கள் உண்டு.
இறையருள் பெற்றது, உயர்விலும் உயர்வானது, முழுமையானது, எங்கும் நிறைந்திருப்பது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது, வணங்கத்தக்கது, செழுமை நிறைந்தது, வளங்களைத் தரக்கூடியது, சித்திகளைத் தருவது, வேண்டும் வரங்களைத் தருவது, அலங்கரிப்பது.
சிவபெருமானின் திருமேனி முழுவது அலங்கரிக்கக் கூடிய ஒரே பொருள் விபூதி மட்டுமே. பொன்னார் மேனியனின் திருமேனியில் மேவியிருப்பதால், விபூதி பொன்னிறமாக, தங்கத் துகள்களாக மின்னுகின்றதாம் (பஸ்மோத்தூளித விக்ரஹாய நம: - ஸ்ரீ சிவாஷ்டோத்தரம்)
விபூதி காட்டும் தத்துவங்கள் எண்ணற்றவை.
இறந்தபின் அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. ஆகையால், இறைவன் முன் அனைவரும் சமம் தான் என்பதையும் சுட்டுகின்றது.
உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால் ஆன்மாக்கள் தூய்மையடைகின்றது.
வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும், தமிழ்த் திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப் பறைசாற்றுகின்றன.
ஒரு சமயம், வித்துன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூன்று அரக்கர்கள் பறக்கும் தன்மை கொண்ட பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கொண்டு, தேவர்களை வருத்தினர்.
அரக்கர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மா, விஷ்ணுவிடம் முறையிட, இவர்களை அழித்து சாம்பலாக்க, சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று அறிந்து, சிவனை நோக்கி பிரார்த்தனை செய்தனர்.
பிரம்மா தனது மனதிற்குப் பிடித்தமானதும், அவர் தோற்றுவித்தத்தும் ஆகிய மானச சரோவர் என்னுமிடத்திலும்,
மஹா விஷ்ணு தான் பள்ளி கொண்டிருக்கும், பாற்கடலில் சேரும் நதியாகிய விரஜா எனும் நதியின் கரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்தனர்.
யாகத்தின் பஸ்மம் (சாம்பல்) போல அரக்கர்கள் அழிய பிரார்த்தனை செய்தனர்.
மஹாவிஷ்ணு, சிறப்பான மந்திரங்களால் யாகம் செய்தார். அது வேதங்களில், விபூதியைப் போற்றக் கூடிய, மஹாநாராயண உபநிஷத் எனும் மந்திரமாக அமைந்தது.
பொதுவாக சிவாலயங்களில், விபூதியை அபிஷேகம் செய்யும்போது இந்த மந்திரங்களைத் தான் சொல்வது மரபு. (ஆத்மாமே சுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மா பூயாஸம் ஸ்வாஹா)
இந்த மந்திரம் - உடல், மனது, வாக்கு, ஆத்மா, அந்தராத்மா என அனைத்தையும் தியாகம் செய்தால், நமது ஜீவனை சிவபெருமான் தன் உடலில் சாம்பல் போல பூசிக்கொள்வார் என்கின்றது (மஹா நாராயண உபநிஷத்தின் முழுமையான அர்த்தம் - மிகவும் அற்புதமானது.)
பிரம்மா, விஷ்ணு - இருவரின் தவத்திற்கு இணங்கி, சிவபெருமான் மூன்று அரக்கர்களையும், தன் மந்தகாசப் புன்னகையால் மட்டுமே எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் மகிழ்ந்தனர்.
(ஒரு உபரி தகவல் : முப்புரங்களை எரித்தபொழுது, அக்கோட்டைகளின் ஒரு பாகம் மட்டும் முழுதும் எரியாமல் (வேகாமல்) பூமியில் விழுந்தது. அந்த இடம் வேகாக்கொல்லை என்று அழைக்கப்படுகின்றது.
இவ்விடம், தமிழகம், கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகாமையில் உள்ளது. இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் மண் செங்கல் அமைக்க உதவினாலும், இந்த ஊர் மண் மட்டும் செங்கல் சுடுவதற்கு பயன்படாது. வேகாத மண் கொண்ட நிலம் என்பதால் வேகாக் கொல்லை என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அருமையான சிவஸ்தலம் உள்ளது)
சிவபெருமான் உடல் முழுவதும் பரவியிருக்கும் விபூதியை, சிவச் சின்னமாக, புனிதமான பொருளாக சைவர்கள் மதிக்கின்றார்கள்.
விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாக விளக்கியுள்ளன.
காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.
அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்று ஏற்றப்படும், சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும் என்பர்)
அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் - பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் - ஒரு பானையின் வாயில் தூய்மையான துணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க, மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).
அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை. மற்றும் சில முறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம், காமதபஸ்மம், பெளஷ்டிகபஸ்மம்)
பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது.
விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும் பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதை வலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம்)
சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும். (உள்ளங்கை பிரம்ம & விஷ்ணு பாகமாகக் கருதப்படுகின்றது. பிரம்மா, விஷ்ணு தவமிருந்து பெற்றதால் - அவர்களின் பாகமாகிய உள்ளங்கையில்தான் பெற வேண்டும்)
ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்று கிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்து கொள்ளலாம் என்றும்,
பெண்கள் - தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ள வேண்டும் (உத்தூளனமாக) என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
பெண்கள் - ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் விபூதியை எடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். (சிவ தீட்சை பெற்ற பெண்கள் மூன்று கோடுகளாக அணியலாம்)
விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோ அல்லது சிவசிவ என்றோ சொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.
ஆண்கள் - விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக,
நெற்றியிலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலும், முழங்கால்கள் இரண்டிலும், இரு தோள்களிலும், இரு முழங்கைகளிலும், மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப் புறங்களிலும், கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இரு காதுகளிலும், சிலர் மேல் முதுகிலும், பின்கழுத்திலும் தரிப்பார்கள்)
காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்.
பஸ்மாபிஷேகம் - பல்வேறு தீட்டுக்களை அகற்றவல்லது. குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி விட்டு, அந்த விபூதி கலந்த தண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும் அகன்றுவிடும்.
பயம் நீங்கவும், ஜுரம் நீங்கவும், உடல் உபாதைகள் நீங்கவும் விபூதி பயன்பட்டிருக்கின்றது.
விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதி வழிபடும் வழக்கம் உண்டு.
விபூதியின் புனிதத்தையும் அதன் மேன்மையையும் பல்வேறு புராணங்களிலும், திருமுறைகளில் பல்வேறு இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்னிரு திருமுறைகளில் குறிப்பிடப்படும் சில சம்பவங்களை மட்டும் இங்கே காண்போம்.
சூலை (தாங்காத வயிற்று வலி) நோயால் துடிதுடித்த அப்பர் சுவாமிகள், தனது தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன், வலி நீங்கப் பெற்று சைவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்.
சமண சமயத்தைச் சார்ந்திருந்த கூன் பாண்டியன் எனும் மன்னன் மதுரையை அரசாண்டு கொண்டிருந்தான். அவனுக்கு தீராத வெப்ப நோய் இருந்தது. அதை நீக்க அவன் மனைவி மங்கையர்க்கரசியார் சிவபெருமானை வேண்டினாள். அவள் கனவில் சிவன் வந்து திருஞான சம்பந்தரைக் கண்டு வந்தால் நோய் நீங்கும் என்றார். மங்கையர்க்கரசியாரும், அதன்படியே, திருஞான சம்பந்தரை தரிசித்து, தன் குறையைச் சொல்ல, அவர் 'மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு' எனத் தொடங்கும் 'திருநீற்றுப் பதிகம்' பாடி விபூதியை, கூன் பாண்டியனின் உடலில் பூசியவுடன், பாண்டியனின் நோய் நீங்கியது. கூன் பாண்டியன் சைவத் தொண்டு ஆற்றினான்.
சிவச்சிந்தனையில் சிறந்து விளங்கிய சேரமான் பெருமான், அரசு தாங்கி, ஒரு சமயம், பட்டத்து யானை மீது அமர்ந்து நகர்வலம் வருகின்றார்.
அப்பொழுது, துணிகளை வெளுக்கும் தொழிலாளர், உழமண் எனும் வெள்ளை நிற மண்ணைக் கூடையில் சுமந்து வர, நீரில் நனைந்த அந்த மண் அவரின் மேனி முழுவதும் வழிந்து, விபூதி பூசியது போல தோற்றம் தரச் செய்தது.
பட்டத்து யானையிலிருந்து, சலவைத் தொழிலாளியின் உடல் முழுவதும் திருநீறு பூசியிருப்பதைக் கண்ட சேரமான் பெருமான், யானையிலிருந்து உடன் இறங்கி, அவர் பெரும் சிவத்தொண்டர் போலும் என்று எண்ணி, சலவைத் தொழிலாளியை வணங்கினார்.
அரசன் தன்னைக் கண்டு வணங்கியதால், அச்சமுற்ற சலவைத் தொழிலாளி தன் நிலையை உணர்த்த, வெள்ளை உழமண் விபூதியை நினைவு படுத்திய காரணத்தினாலேயே, அவரை வணங்க முற்பட்டதை சேரன் விளக்கி, பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்.
சிவபக்தியில் சிறந்த ஒரு புகழ்ச்சோழ மன்னர், தனக்குக் கப்பம் கட்டாத மன்னன் மீது படையெடுத்து வர ஆணையிட, படைகளும் எதிரி நாட்டை வென்று, தோல்வி கண்ட வீரர்களின் தலைகளைக் கொண்டு வந்து, சோழனிடம் வெற்றிப் பரிசாக அளிக்க, அதைக் கண்டுகொண்டு வந்த மன்னன், அந்த வீரர்களின் தலைகளுள் - ஒரு தலை மட்டும் குடுமி கொண்டு, சிவச்சின்னமாகிய விபூதி அணிந்திருப்பது கண்டு அதிர்ந்து, ஒரு சிவனடியாரைக் கொல்லக் காரணமாகிவிட்டோமே என்று மனம் நொந்து, சோழன் அக்னியை மூட்டி அதனுள் விழுந்தான்.
சிவபெருமானிடம் அதீத பக்தி கொண்ட ஏனாதிநாதனார் என்பவர், படைகளுக்கு வாள் பயிற்சி அளிப்பவர். அவருடன் பல முறை போராடி தோல்வியுற்ற ஒருவன் அவரை வீழ்த்த, ஒரு உபாயம் செய்தான்.
அவன் ஏனாதிநாதரைத் தனிமையில் சமர் செய்ய அழைத்து, அச்சமயம் இவன் சிவச்சின்னமாகிய விபூதியைத் தரித்துக்கொண்டு, அதை கேடயத்தால் மறைத்துக் கொண்டு, போரிட வந்து, ஏனாதிநாதர் அருகில் வந்ததும், கேடயத்தை நீக்க, ஏனாதிநாதர் எதிரியாயிருப்பவன், தன்னைக் கொல்லவந்தவன் திருநீறு அணிந்திருப்பது கண்டு, அவனை சிவ அம்சமாகவேக் கண்டு, சண்டை செய்யாமல் பணிந்து மடிந்து சிவலோகம் அடைந்தார்.
மெய்ப்பொருள் எனும் அரசன் சிவபக்தி நிரம்பி, தனது அரசை நீதிமுறை தவறாது ஆட்சி செய்து வந்தார். சிவ தத்துவங்களில் மெய்யான உண்மைகளை மக்களுக்கு அறிவிப்பதில் தேர்ந்தவராக இருந்ததால் மெய்ப்பொருள் என்று போற்றப்பட்டார்.
இவரின் எதிரி தேசத்து அரசன், தமது வலிமையால் இவரை வெல்லமுடியாது என எண்ணி, சிவச் சின்னமாகிய விபூதி தரித்து, ஓலைச் சுவடிகளுடன், சிவனடியார் வேடத்தில் வந்து, அரசனிடம் ஆகம உட்ப்பொருள் உணர்த்த வந்தேன் எனக் கூறினான்.
மெய்ப்பொருள் அதைக் கேட்க ஆவலாகக் கண் மூடி அமர, அச்சமயம் ஓலைச்சுவடிகளுள் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மெய்ப்பொருளை வெட்டினான்.
சத்தம் கேட்டு வந்த மெய்க்காப்பாளன், எதிரியை வெட்டக் கையை ஓங்க, ரத்தம் சிந்திக் கொண்டு, மரணத்தின் தறுவாயில் இருந்தபோதும், மெய்ப்பொருள், இவர் எதிரியாக இருந்தாலும், சிவனடியார் கோலத்தில் இருப்பதால், இவரும் சிவாம்சமே, ஆகவே, இவருக்கு எவ்வித தொல்லையுல் இல்லாமல் எல்லை வரை பத்திரமாகக் கொண்டு விடக் கட்டளையிட்டான்.
அவ்வண்ணமே மெய்க்காப்பாளன் செய்தைக் கூற, மெய்ப்பொருள் அதன் பிறகு உயிரைவிட்டு சிவபதம் அடைந்தார்.
விபூதி நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் விளங்குகின்றது.
விபூதீரைச்வர்யம் - என்ற சொல் - விபூதி ஐஸ்வர்யங்களைத் தரவல்லது - என்ற அர்த்தம் கொண்டது.
விபூதி அணிவோம் ! விதியை வெல்வோம் !!

கலைவாணி

Image may contain: 1 person 
வெண்டா மரைமணக்க வீற்றிருக்கும் என்தாயே!
வண்டாய்ப் பறந்து வருகின்றேன்! - கண்டாய்க்
கவிபடைக்கச் செய்வாய்! கமழ்குறள் ஏந்திப்
புவிபடைக்கச் செய்வாய் பொலிந்து!

முத்தாரம்மன்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முத்தாரம்மன் கோயில் உள்ளது.
பல்வேறு இன மக்களுக்கு முத்தாரம்மன் குலதெய்வமாக இருக்கிறாள்.
தூத்துக்குடிக்கு அருகில் உள்ள குலசேகரப்பட்டணத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
==============================================
சம்பு என்ற தீவுக்கப்பால் ஏழு கடல் தாண்டி, கமலை என்ற சுனை அருகே மாணிக்கத்தால் ஆன புற்று ஒன்று இருந்தது. அதில் ஐந்து தலை நாகம் ஒன்று பல காலம் வாழ்ந்து வந்தது. அந் நாகம் பல காலம் சேமித்து வைத்த விஷமானது ஒரு அமுதக் கலசமாக மாறியிருந்தது. ஒரு நாள் அந் நாகம் தன் வயிற்றிலிருந்த கலசத்தை ஈன்றெடுத்தது. விஷத்தன்மை கொண்ட அந்த ஐந்து தலை நாகம் ஈன்றெடுத்த கலசத்திலிருந்து ஏழு அரக்கியர்கள் தோன்றினர்.
ஏழு அரக்கியர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது. அரக்கியர் எழுவருக்கும் நீலன், குமுதன், ஆதித்தன் என்ற மூன்று மக்கள் பிறந்தனர். அரக்கியர் பூமியில் தோன்றிய காரணம் முடிந்ததும் தம் மக்கள் மூவரையும் ஒரு வனத்தில் விட்டு விட்டு மறைந்தனர். அந்த வனத்தில் மூன்று குழந்தைகளும் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்தனர்.
அவ் வனத்தில் சக்தி முனி என்பவன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்த யாகத்தில் வெளிப்பட்ட புகை விண்ணுலகத்தையே திக்குமுக்காடச் செய்தது. தேவர்களால் அந்தப் புகையைத் தாங்க முடியவில்லை. அவர்கள் பார்வதியிடம் முறையிட பார்வதியும் வனத்திற்குப் புறப்பட்டு வந்தாள். அந்த யாகத்தையும் அதில் வெளிப்படும் புகையையும் அடக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டாள் பார்வதி. அப்போது பார்வதியின் நெற்றியில் வியர்வை அரும்பியது. அதை வழித்துக் கீழே விட்டாள் பார்வதி. அந்த வியர்வை முத்து பூமியில் விழுந்தது. அதிலிருந்து முத்தாரம்மன் தோன்றினாள். அந்த முத்தாரம்மனை, அநாதையாய்க் காட்டில் திரியும் அரக்கியரின் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும்படி கட்டளையிட்டு அனுப்பினாள் பார்வதி. பார்வதியின் கட்டளையின்படி முத்தாரம்மன் புறப்பட்டாள்.
நீலன், குமுதன், ஆதித்தன் ஆகிய மூன்று குழந்தைகளும் அநாதையாய்த் திரிவதைக் கண்டுபிடித்தாள் முத்தாரம்மன். பிறகு அவர்களை வைத்துக் காக்க வேண்டி, காண்டாபுரம் என்ற வனத்தை அழித்து அதில் முப்புரக் கோட்டை ஒன்றை அமைத்தாள். அதில் தன் குழந்தைகளான மூவரையும் வைத்து வளர்த்தாள் முத்தாரம்மன். அந்த மூவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தாள் முத்தாரம்மன்.
நீலன், குமுதன், ஆதித்தன் என்கிற மூன்று பேருக்கும் சந்தவாழ்குமரன், முத்துத்தம்பி, முத்துக்குமரன் ஆகிய மக்கள் மூவர் பிறந்தனர். முத்தாரம்மனின் மூன்று பேரன்களும் வளர்ந்து பெரியவர்களாயினர். தங்களின் செல்வாக்கு, சக்தி அனைத்தும் அவர்களுக்குப் புரியத் தொடங்கியதும் யாருக்கும் பயப்படாமல் செயல்பட்டனர். 'அரக்கத்'தனமான குணம் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. அதன் விளைவால் தேவர்களை வெறுக்கத் தொடங்கினர். தேவர்களின் யாகம், அவர்களின் போக்கு எல்லாவற்றையும் எதிர்த்தனர். மூன்று பேரின் தகப்பன்களும் தம் மக்களுக்கு உதவினர். தேவர்களால் முத்தாரம்மன் பேரப்பிள்ளைகளின் செயல்களைத் தாங்க முடியவில்லை. திருமாலிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். திருமால் மூவரையும் அழிக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. இறுதியில் திருமால் கையை விரித்துவிட்டார்.
தேவர்கள் ஒன்று கூடி சிவனிடம் சென்று முறையிட்டார்கள். தேவர்களுக்கு அபயம் அளிப்பதாகச் சிவபெருமானும் வாக்களித்தார். தற்காலிகமான மன நிம்மதியோடு தேவர்கள் கலைந்தனர். முத்தாரம்மன் பேரன்கள் சிவபூஜை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து அவர்களை அழிக்கச் சிவன் வந்தார். சிவனை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் முத்தாரம்மனும், அவளது மகன்கள், பேரன்கள் அனைவரும் சிவனின் காலில் விழுந்து வணங்கினர்.
வந்த காரியத்தை மறந்த சிவன் கையிலிருந்த சூலத்தைக் கீழே போட்டுக் கைகொட்டிச் சிரித்தார். உடனே முப்புரமும் எரிந்து சாம்பலானது. அதில் முத்தாரம்மன் தவிர மற்றவர்கள் எரிந்து சாம்பலாயினர். முத்தாரம்மன் கடும் கோபம் கொண்டு தம் மக்களான நீலன், குமுதன், ஆதித்தன் மூவரையும் உயிர்த்தெழச் செய்தாள்.
சிவனிடம் சென்று அவர் செய்த கொலைக்காகத் தனக்கும் தன் மக்களுக்கும் கோடி வரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டாள். சிவனும் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். தம் மகன்கள் தவிர, இப் பூவுலக மக்களையும் காக்கப் பல வரங்கள் பெற்றாள். பிறகு ஒரு வண்டியில் தன் மகன்களுடன் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு நல்ல வரங்கள் அளித்து வந்தாள். பின்னர் தன் சக்தியை அங்கங்கு விட்டு மக்களுக்கு நன்மை செய்து வருகிறாள் முத்தாரம்மன் என்று சொல்லப்படுகிறது.

குலசேகரன் பட்டினம்

குலசேகரன்பட்டினம்
என்னும் கடற்கரை நகரம் பாண்டிய மன்னர்களால் ஆட்சிச் செய்யப்பட்ட ஓர் அற்புத ஊர். இயற்கைத் துறைமுகமாக சிறப்புற்றிருந்த
காலத்தில் இலங்கை சிங்கங்கபூர் பர்மா போன்ற அயல் நாடுகளோடும் மும்பை கொல்கொத்தா கள்ளிக்கோட்டை
போன்ற பெருநகரங்களோடும் வாணிபத் தொடர்பில் கொண்டிருந்தது. நவதானியங்கள்,
தேங்காய், எண்ணெய், மரம்
போன்றவை இறக்குமதி செய்யப்பட்டும் உப்பு, கருப்புக்கட்டி போன்ற
பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் அரபுநாடுகளிலிருந்து குதிரைகளை இத்துறைமுகம் வழியாக இறக்குமதி
செய்தனர்.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில்சிறப்புற்று
விளங்கியது. தங்கநாணயங்கள் அச்சிடும் அக்க சாலைகள் இருந்ததற்குச்
சான்றாக அக்கசாலை விநாயகர் திருக்கோயில்அமைந்துள்ளது எண்ணத்தக்கது.
இத்தகை சிறப்பு
வாய்ந்த நகரில், குலசேகர பாண்டியன் என்னும் மன்னன் சிரூம் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான்.
குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம்
போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை பாண்டிய நாடு முழுவதும் பரப்பினார்.
இதன் விளைவாக கேரளா நாட்டை கைபற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் போர்
தொடுத்தான். அந்த போரில், பாண்டிய மன்னவன்
தோல்வியுற்றான். மனம் சோர்வுற்ற மன்னன் தன் குலதேவதையான பராசக்தியை
தியானித்தப்படி தன் இருப்பிடம் நோக்கி புறப்பட்டான். வரும் வழியில்
இரவு வெகு நேரமானதால் அப்படியே தூங்கிவிட்டான். பாண்டிய மன்னன்
கனவில் அறம் வளர்த்த நாயகி தோன்றி, "பாண்டிய மன்னா தூங்கிவிடாதே,
தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன?
மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள்.
மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அறம் வளர்த்த நாயகிக்கு கோயில் கட்டி, கோவில்
அருகே ஊர் அமைத்தான். மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர்
பெற்றது அவ்வூர்.
அம்பிகை
அரசை அளிப்பவள்; தன்னை அண்டியவர்களை அரசபீடத்தில் அமர்த்துபவள் என்பதை லலிதா சகஸ்ரநாமம், ராஜ்யதாயிநீ, ராஜபீடநிவேசித-நிஜாச்ரிதா என்னும் நாமங்களால் அழைக்கிறது. அம்பிகையை வழிப்பட்டால், நம்மை அரச பீடத்தில் அமர்த்துவாள்.
இங்கே அரச பீடம் என்பது பலதுறைகளின் தலைமைப் பதவியும், ஞான பீடங்களும் ஆகும். நாம் இருக்கும் இடத்தில் நம்மை
தலைமை இடத்தில் வைப்பாள் என்பதே இந்த நாமங்களின் உட்கருத்து. அந்த
நாமங்களை நினைவுப்படுத்துவதாகவே அமைகிறது இந்த வரலாறு.

துதி

வரசித்தி விநாயகர் துதி
--------------------------------------
திருவும் கல்வியும்
சீரும்சிறப்பும் உன்
திருவடிப் புகழ் பாடும் திறமும் நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா
உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர் தம்
குறை தவிர்க்கும் கு ணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே!!

உடல் நலம் பேணுதல்

*ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்குத்தான் ஓராயிரம் நோய்கள்.*
*ஆறு வழிகளை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது.*
*இதோ !*
----------------
*1 - பசி*
*2 - தாகம்*
*3 - உடல் உழைப்பு*
*4 - தூக்கம்*
*5 - ஓய்வு*
*6 - மன அமைதி*
*பசி !*
-----------
*உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்.*
*யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.*
*இதைத்தான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்*
*"மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது*
*அற்றது போற்றி உணின்."*
*விளக்கம் - நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.*
*"தீயள வன்றத் தெரியான் பெரிதுண்ணின்*
*நோயள வின்றிப் படும்."*
*விளக்கம் - பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும் என்கிறார்.*
*பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !*
*உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும்.*
*இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.*
*தாகம் !*
----------------
*அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.*
*வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.*
*சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.*
*தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.*
*Ro, Mineral, Filter, boiled water பேராபத்து*
*இதை நீங்கள் குடித்தால் சிறுநீரகம் சிதைந்து, இது தொடர்பான் ஆயிரம் நோய்கள் வரும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பிறக்காது.*
*தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.*
*"தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே"*
*என்பார்கள்*
*நீரின் முக்கியத்துவத்தை இந்த பழமொழி நமக்கு உணர்த்தும்.*
*தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் இரண்டாவது படியை அடைந்தீர்கள்.*
*உடல் உழைப்பு !*
-------------------------------
*ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.*
*இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.*
*உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.*
*தூக்கம் !*
------------------
*யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.*
*ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.*
*ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.*
*இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.*
*பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.*
*நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.*
*இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.*
*நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.*
*ஓய்வு !*
---------------
*சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.*
*சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.*
*உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.*
*மன நிம்மதி !*
--------------------------
*ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.*
*மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.*
*மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கிய அன்னையை அடைந்துவிட்டீர்கள்.*
*ஆறு படியை கடந்தோம்*
*ஆரோக்கியத்தை அடைந்தோம்.*★

Monday 28 May 2018

புல்லின் / நெல்லின் தலையில் நீர்க்குமிழி

பொன் நிலா

Image may contain: sky, cloud, ocean, outdoor, water and nature

கனவு

யாராலும் திருடி படிக்க முடியாத ரகசிய புத்தகம் - கனவு

புத்திரப் பேறு

‘பிள்ளைப்பேறு உண்டாவதென்பது எளிதில் முடியக்கூடிய காரியமன்று. தாங்கள் இப்பிறவியில் பாவம் எதுவும் செய்யவில்லை என்றபோதிலும், முற்பிறப்பில் செய்த பாவத்தின் காரணமாகவே தங்கட்குப் பிள்ளைபேறு இல்லாது போயிற்று. இதற்குப் பரிகாரமாகத் தாங்கள் தீர்த்த யாத்திரை செய்தால் புதல்வன் பிறப்பான்’ என்று புரோகிதன் கூறினான். தள்ளாத வயதில் யாத்திரை செய்வது முடியாதென்றும், வேறு ஏதாவது மார்க்கம் இருந்தால் கூறும்படியும் அரசன் புரோகிதரைக் கேட்டான். உலகத்திலுள்ள தீர்த்தங்கள் எல்லாம் சமுத்திரத்தில் அடக்கம். சமுத்திரமோ பிராமணர் பாதத்தில் அடக்கம். ஆகையால் பிராமணர்களுக்கு ஏராளமான திரவியங்களைக் கொடுத்து அவர்கள் காலைக் கழுவி நீரைப் பருகுவீரானால் உமக்குப் புதல்வன் பிறப்பான் என்று புரோகிதன் கூறியதைக் கேட்ட அரசன் அங்ஙனமே செய்தான். செய்தும் பிள்ளைப்பேறு உண்டாகவில்லை. இதனால் மனமுடைந்த மன்னன், மடாதிபதியிடம் தன் குறையை விண்ணப்பிக்க, எல்லாம் விதியின்படிதான் நடக்கும் என்று மடாதிபதியும் கூறிடவே, இனி பிள்ளைப் பேற்றிற்காக முயற்சி செய்வதில் பயன் இல்லை என்ற முடிவோடு தனது புதல்வியையே தனக்குப்பின் அரசியாக்க வேண்டுமென்று நினைத்து அவளுக்கு வேண்டிய கல்வி கற்பிப்பதற்குத் தமயந்தி என்னும் பெண்ணை ஆசிரியையாக அமர்த்தினார். தமயந்தி சீர்திருத்த நோக்கம் கொண்டவளாதலால் தன்னிடம் கல்வி கற்கும் இளவரசிக்கும் சிறிது சிறிதாகச் சீர்திருத்தக் கருத்துகளைப் போதித்து வந்தாள்.
முன்னர், மந்திரி வேலையினின்றும் நீக்கிய திருநாவுக்கரசு என்பவர், சமூக நலப்பணியில் ஈடுபட்டு மக்களிடம் பதிந்திருக்கும் மூடப்பழக்க வழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றித் தன்னுடைய கருத்துகளைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும்படிச் செய்து வந்தார்.
மடத்திற்குப் பணி செய்யும் மனோன்மணியின் மகள் தமயந்தி. தற்கால நிலைக்கேற்ப தாசித் தொழிலுக்கு விடுவதை விரும்பாது எத்தகைய எதிர்ப்புகளுக்கும், கேளாது கல்வி பயில வைத்தாள் அவள் அன்னை. தமயந்தியும் ஆர்வமாகக் கல்வி பயின்றாள். காலத்தின் சுழற்சியில் தமயந்தி கண்ணைக் கவரும் கட்டழகியாகிவிட்டதைக் கண்ட அவள் தாய் அவளைத் தன் குலத்தொழிலுக்கு விடுக்க முயன்றாள். அறிவும் ஆற்றலும் படைத்த தமயந்தி அன்னை மொழியை அலட்சியப்படுத்தி ஆகாதெனக் கூறினாள். மதனசுந்தரியும் தமயந்தியிடம் வந்து மடாதிபதி அவள் மேல் அவாவுறுவதாகவும் அவர் இஷ்டப்படி நடந்துகொண்டால் ஏராளமாகப் பொருள் தருவாரென்றும் சொன்னாள். அதற்குத் தமயந்தி, என்ன? முற்றும் துறந்த முனிவராயிற்றே அவருக்கு என் பேரில் மோகமா! இதை யாரும் நம்பமாட்டார்கள் என்றாள். அதைக் கேட்ட மதனசுந்தரி, உனக்கு ஒன்றும் தெரியாது. அது சாத்திரம் என்றாள்.
பேஷ்! நல்ல சாத்திரம்! இத்தகைய சாத்திரங்களைச் சுட்டுப் பொசுக்க வேண்டும். கடவுளின் பேரால் ஒரு வகுப்பாரை விபசாரிகளாக்கிய விபரீதச் செயலை விலக்கத்தான் வேண்டும். உலகத்தை உண்டாக்கிய கடவுள், ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் முத்தொழில் புரியும் கடவுள், அன்புக் கடவுள், தனக்கு மனைவியாகச் சிலரை ஏற்றுப் பலரறியச் செய்வதா? அவருக்கு வெட்கம் மானமில்லையா? அது மாத்திரமா?
நமது நாட்டில் எத்தனை மதங்கள்? எவ்வளவு சாதிகள்? பார்ப்பனர் தவிர மற்ற யாவரும் சூத்திரர், தீண்டாதாராகவே கருதப்படுகிறார்கள். உத்தமர்கள் உதித்த நம்நாடு ஏன் இன்று ஊதாரிகள் நிறைந்த நாடாயிற்று? வீரர்கள் தோன்றிய நாடு ஏன் இன்று வீணர்கள் மலிந்த நாடாயிற்று? நமது நாட்டுப் பெண்மணிகள், உத்தமிகளாய், வீரர்களாய், வலிமை பொருந்தியவர்களாய் விளங்கவே நான் பாடுபடப்போகிறேன். என் எண்ணம் நிறைவேற அரசாங்க உதவியையும் பெற்றுள்ளேன். என்னைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் என்று கடுமையாகக் கண்டிப்பாகக் கூறவே மதனசுந்தரி தன் வீடு சென்றாள்.
ஒருநாள் இளவரசி, தமயந்தியிடம் ”மக்களிடத்தில் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கும் திருநாவுக்கரசு என்பவரின் நோக்க மென்ன?” என்று கேட்டாள். அதற்குத் தமயந்தி ”அம்மையே! இந்த இராச்சியத்தில் உழைப்புக்குத் தகுந்த ஊதியமில்லை. பலபேர் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டும் பசியாற உணவின்றிக்கிடக்க ஒரு சிலர் அவ்வுழைப்பின் பலனை உண்டு உல்லாசமாகயிருக்கிறார்கள். எனவே பசியால், பட்டினியால் வாடி வதங்கும் மக்கள் மன்னனைப் பகைக்கின்றனர். அதற்காகப் போராடுகின்றனர். ஏழ்மை என்பதில்லையானால் எத்தகைய கிளர்ச்சிகளுக்கும், கலவரங்களுக்கும் இடம் ஏற்படாது என்று சொன்னார்’’ என்று தெரிவித்தாள்.
இதைக்கேட்ட இளவரசி, அரசாங்கம் தன்னிடத்தில் வந்தால் அவற்றுக்குத்தக்கபடி நடந்து கொள்வதாக வாக்களித்தாள்.
தமிழகத்திற்கே தாயகமாய் விளங்கிய தருமபுரியை ஆண்டுவந்தார் துரைராஜர். நல்ல சீர்திருத்த நோக்கமுடையவர். மூடப்பழக்க வழக்கங்களை முறியடித்து நாட்டுமக்களுக்கு நல்ல சாதனங்களை ஏற்படுத்தி (தன்னுயிரைப்போல் மன்னுயிரும் என்பதை எண்ணி) பலரும் புகழ்ப் பரிபாலித்து வந்தார். அவருக்கு வீரகுணசீலன் என்ற ஒரே புதல்வன் இருந்தான். நல்லறிவு பெற்றவன், உயர்தரக் கல்வி கற்றவன், பலமொழிகள் பயின்றவன். விஞ்ஞானத்தில் தேர்ச்சிபெற்று விளங்கியவன். தன் மைந்தன் கல்வி, கேள்விகளில் சிறந்தவன் என்ற களி ஒருபுறமிருந்தாலும் அவன் குணத்திற்குத் தக்க குணவதி வேண்டுமே என்ற கவலையே அரசரைப் பெரிதும் பாதித்தது. எனவே தன் குறையைத் தன் நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் புவனகிரியை ஆளும் குணசேகர் ஜமீன்தார் புதல்வி, தமிழரசி கல்வியறிவிற் சிறந்தவளென்றும் அவளே வீரகுணசீலனுக்கு ஏற்ற மனைவி என்றும் சொல்லி மன்னன் மனதைத் தேற்றினார்.
நண்பர் சென்றதும் துரைராஜர் தனக்குள் யோசித்தார். புவனகிரி ஜமீன்தார் தனவந்தர், நாம் ஏழை. நம் மகனுக்கு அவர் மகளைத் தருவாரா? சரி! புரோகிதன் மூலமாவது அதை முடித்தேயாக வேண்டும் என்று புரோகிதன் ஜெயராமய்யரை அழைத்துத் தன் எண்ணத்தைத் தெரிவித்தார். அதற்குப் புரோகிதன் ரூ.500 தந்தால் அந்தக் காரியத்தை எவ்விதமேனும் முடித்து விடுவதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு புவனகிரிக்குச் சென்று தன் மைத்துனர் சுப்பராயரிடம் நடந்த விவரத்தைச் சொன்னான்.
அச்சமயம் தமிழரசி மங்கைப்பருவமெய்தினாள். அரசன் சுப்பய்யரை வரவழைத்துச் சோதிடம் பார்க்கச் சொல்ல அவன் ஏதோ சக்கரம்போட்டு என்னவோ லக்கினம் பார்த்து விவாகம் சீக்கிரமே பூர்த்தியாகுமென்றும், மணமகன் தெற்குத் திக்கிலிருக்க வேண்டுமென்றும், பெயரின் முதலெழுத்து ‘வீ’ என்றிருக்கு மென்றும், கல்வியறிவிற் சிறந்தவனென்றும் அவனே அவசியம் தமிழரசிக்கு வரப்போகும் வரனென்றும் தெரிவித்தான். அரசன் சற்று யோசித்துத் தெற்குத் திக்கில் துரைராஜர் மகன் வீரகுணசீலன்தானிருக்கிறான் வேறு யாருமில்லையே, அவனோ ஏழை நமக்கு எப்படிப் பொருந்தும், என்றான்.
அதற்குச் சோதிடன் வீரகுணசீலனா? ஆம்! அவனேதான். பெயரின் முதல் எழுத்தும் ‘வீ’ என்று முன்னமே சொன்னேன். சந்தேகமில்லை. எல்லாம் விதியின்படித்தான் நடக்கும். சாதகப் பொருத்தம் சரியாக இருக்கிறது. நித்திய சுமங்கலியாயிருப்பாள், புத்திர சந்தானம் உண்டாகும். வீண்யோசனை வேண்டாம். வேறு விவாகம் செய்து வைத்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஏழையென்று பார்க்கக் கூடாது. எல்லாம் அவன் செயல். சுபஸ்ய சீக்கிரம் என்பதுபோல் விரைவில் விவாகத்தை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னான்.
அரசரும் எல்லாம் விதியின் விளையாட்டு என எண்ணி முதன் மந்திரியை தருமபுரிக்கு அனுப்பி விவாகத்தை முடித்துக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். மந்திரியும் தருமபுரிக்குச் சென்று அரசன் துரைராஜனைக் கண்டு பற்பல விதமாகப் பேசி விவாகத்தை நிச்சயிக்க ஏற்பாடு செய்துகொண்டு மீண்டும் புவனகிரி அரசரிடம் வந்து மணமகன் வீரகுணசீலன் கல்வியில் கை தேர்ந்தவரென்றும், கட்டழகு வாய்ந்தவரென்றும், கருணைக் கடலென்றும் புகழ்ந்து தமிழரசிக்குத்தக்க புருடர் அவரே என்றும் எடுத்துச் சொன்னான்.
நிற்க, வீரகுணசீலன் தன் விவாக விஷயத்தைத் தகப்பனார் மூலம் தெரிந்து தமயந்திக்கு, ”உண்மையில் அரசகுமாரி தன்னை விரும்புகிறாளா அல்லது புரோகிதனின் சூழ்ச்சியா? அவள் சம்மதிக்கவில்லையானால் நான் உன்னையே மணம் முடிப்பேன்; எல்லாவற்றிற்கும் விவரமாய் பதில் வேண்டுகிறேன்” என ஒரு கடிதம் எழுதிப் போட்டான். தமயந்தி கடிதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு அதை அரசகுமாரிக்குக் காண்பித்தாள். அவள் கடிதத்தைக் கண்டதும் ”நீயே அவரை விவாகஞ் செய்து கொள்” என்றாள். அதற்குத் தமயந்தி, ”அவசரப்படாதீர்கள். இருவருடைய பெயரை ஒரே கடிதத்தில் கண்டு எழுதியதற்குக் காரணமிருக்கிறது. அதாவது நான் சுயநலவம்சத்தில் பிறந்தவளாதலால் என்னுடைய கருத்தையறிவதற்கும் அதே சமயத்தில் தங்களின் அன்பைப் பரீட்சிக்கவுமே எழுதப்பட்டதாகும். எனவே தவறாக நினையாது தக்க விடையளிப்பீர்” என்றபின் அரசகுமாரியும் முழு சம்மதமே என்பதில் எழுத உத்தரவிட்டாள். அதற்குள் அரசனும் வந்து குமாரியின் விவாக விஷயத்தைப் பற்றிப் புரோகிதன் சொன்னபடி முடிந்துவிட்டிருப்பதையும் தெரிவித்தான்.
இரு பெண்களும் பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் சந்தோஷமடைந்தனர்.
உடனே தமயந்தி அரசகுமாரியின் முழு சம்மதத்தைப்பற்றி வீரகுணசீலனுக்கு பதில் கடிதம் எழுதினாள். கடிதத்தைக் கண்ட அரசகுமாரன் கொண்ட ஆனந்தம் கொஞ்சமல்ல.
இடையே துரைராஜர் புவனகிரிக்குச் சென்று அரசனைக் கண்டு புரோகிதரை வரவழைத்து நாளைக் குறிப்பிடச் செய்து அதே முகூர்த்தத்தில் வீரகுணசீலனுக்கும் தமிழரசிக்கும் விவாகம் வெகு விமரிசையாக வைதீக முறைப்படி நடைபெற்றது.
வீரகுணசீலனும் தமிழரசியும் இன்ப வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.
வீரகுணசீலன் தன் நாட்டிலே தங்கம் விளையும் இடத்தைக் கண்டுபிடித்து மாமனார் உத்திரவு பெற்று அவறைத் தோண்டி எடுத்தார். அதைக்கண்ட மாமனார் மருமகனின் அறிவையும் ஆராய்ச்சியையும் புகழ்ந்து முன் தனக்கிருந்த செல்வத்திலும் அதிகமாகப் பெருகியதைக் கண்டு அகமகிழ்ந்தான். பூமியில் கிடைத்த பொருளில் மூன்றில் ஒரு பாகம் பிராமணாளுக்குச் சொந்தம் என்ற மனுமுறைப்படி அவர்களுக்கு ஏராளமான பொன்னைத் தந்தார். ஆனால் வீரகுணசீலனுக்கும் தமிழரசிக்கும் சற்றும் பிடிக்கவில்லை. என்ன செய்வது?
இது செய்தி அறிந்த திருநாவுக்கரசு ஏழைகளிடம் சென்று ”தோழர்களே தங்கச்சுரங்கத்தைக் கண்டவர் ஒருவர், வெட்டி எடுத்தவர்கள் நீங்கள். அதிக பலனையனுபவிப்பவர்கள் ஆரியர். இதென்ன அநீதி? உழைப்புக்குத்தக்க ஊதியம் உங்களுக்கு இல்லை; நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டவர்களுக்குக் கூலி சுவல்பம். இந்த முறை ஒழிய வேண்டாமா? உங்களுக்கு உணர்ச்சியில்லையா? ஊக்கமில்லையா?” என உருக்கமுடன் எடுத்துக்காட்ட மக்கள் பலர் அவர் முன்னேற்றச் சங்கத்தில் சேர்ந்தார்கள்.
இதைக்கேட்டச் சனாதனிகள் சிலர் மக்களிடம் சென்று சனாதன தர்மத்தின் மேன்மையையும் அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் பற்றி உபன்யாசம் செய்தனர். ஆனால் மக்கள் அவர்கள் மொழிகளில் செவி சாய்க்கவில்லை. ஏன் கூட்டத்தையே நடத்தவொட்டாமல் செய்துவிட்டார்கள். ஆம்! உண்மைக்கே வெற்றி!
ஒரு நாள் வீரகுணசீலன் தன் காரில் காட்டு மார்க்கமாகப் போகும் போது திடீரென கார் நிறுத்தப்பட்டது. டிரைவர் தலையில் குல்லாய் விழுந்தது. ஒரு வெடிச் சத்தம் கேட்டது. ஒருவன் இறந்து கிடந்தான். வீரகுணசீலனைக் காணவில்லை. நகர் முழுதும் அழுகுரல். அல்லோல கல்லோலம். தந்தித் தபால்கள் பறந்தன. போலீசார் தீவிரமாகப் புலன் விசாரித்தனர். வீரகுணசீலனைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் இனாம் என்ற விளம்பரம். ஆனால் ஒன்றும் பயன்படவில்லை. சந்தேகத்தின் பேரில் டிரைவரைக் கைது செய்தார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து வேடுவன் ஒருவன் அரண்மனைக்கு ஓடிவந்து வீரகுணசீலன் காட்டில் இறந்து கிடப்பதாகச் சொல்ல அரசரும், அமைச்சரும் மற்றும் பலரும் அவ்விடம் சென்று பார்க்க வீரகுணசீலனின் உடல் காணப்படவில்லை. ஆனால் இரத்தக் கரைபட்ட அவருடைய ஆடை ஆபரணங்கள் மட்டுமேயிருந்தன. எல்லோரும் அவர் இறந்துவிட்டார் என்ற இறுதி முடிவுக்கே வந்து விட்டார்கள்.
கணவன் இறந்த கஷ்டத்தால் தவியாய் தவித்துக் கொண்டிருந்தத் தமிழரசிக்குத் தந்தையின் கட்டளைப்படி தாலியறுக்கும் சடங்குகளெல்லாம் சரிவர நடந்து, வெள்ளைப் புடவையும் கொடுத்து விட்டார்கள். இந்த நிலையில் அவளுடைய மனம் என்ன பாடுபட்டிருக்கும்? தமயந்தியின் ஆறுதல் தேறுதல் இல்லையென்றால் தமிழரசி தற்கொலையே செய்து கொண்டிருப்பாள்.
ஒருநாள் திருநாவுக்கரசு மாறுவேடமணிந்து தமயந்தியின் வீட்டிற்குச் சென்று ஜெயிலில் இருக்கும் டிரைவரை எவ்விதமேனும் வெளிப்படுத்த வேண்டும். இவ்வுதவி புரிந்தால் இந்த நன்றியை என்றும் மறவேன் என்று வேண்ட, அவளும் அதற்கிசைந்து உண்மையான ஒருவனை – கோமாளிபோல் நடிக்கக் கூடிய ஒருவனைத் துணையாகத் தந்தால் அக்காரியத்தை முடித்துத் தருவதாக வாக்களித்தாள்.
ஜெயில் சூப்பிரண்டு தன் மனைவியைக் காட்டிலும் தாசி மனோரஞ்சனியை அதிகமாக நேசிப்பவர். அவளை இணை பிரியாதிருப்பவர். சதா அவள் வீடே கதியெனக் கிடப்பவர். தமயந்தி தருணம் பார்த்துச் சூப்பிரண்டின் மனைவியைக் கண்டு நாளடைவில் நீங்கா நட்புக்கொண்டாள். வழக்கம்போல் ஒருநாள் அவர் வீடு சென்று யாருக்கும் தெரியாமல் அன்றிரவு சூப்பிரண்ட் உடைகளைத் தான் அணிந்து கொண்டு கோமாளியைப் பியூனாக அழைத்துக் கொண்டு நேரே சிறைக்குச் சென்று முதலில் நோயாளிகள் அறையைப் பார்வையிட்டுப் பிறகு டிரைவர் இருக்கும் அறை சென்று தன்னுடன் வந்த கோமாளியை உள்ளேயிருக்கும்படி செய்து பியூன் உடைகளை டிரைவரை மாட்டிக் கொள்ளச் செய்து இருவருமாக வெளியேறினர்.
மறுநாள் சிறைக்குள் ஒரே கலவரம், போலீசார் ஜெயில் வார்டரை விசாரித்தனர். நடந்ததை அவன் கூறினான். சிறையறைலிருந்த கோமாளி விசாரிக்கப்பட்டான். ஆனால் அவனிடம் சரிவரப் பதில் கிடைக்கவில்லை. அரசாங்கம் அநேக வழிகளில் துப்பு விசாரித்தும் ஒன்றும் துலங்கவில்லை. எனவே அரசன் ஒன்றும் தோன்றாதவனாய் வீரகுணசீலன் காணாமற்போனதற்கும், சிறையினின்றும் டிரைவர் தப்பியோடிப்போனதற்கும் காரணம் கண்டுபிடித்தான். ஆள் தூக்கித் தேவதையின் அக்கிரமச் செயல்களே இவை என்ற முடிவுக்கு வந்தான். எனவே அத்தேவதையை நாட்டினின்றும் விரட்டுவதற்கு உள்ளூர் வெளியூர்களிலிருந்தும் மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். நகர் முழுவதும் ஒரே அமளி, ஆர்ப்பாட்டம். இதனால் பார்ப்பனர்கள் உட்படப் பலபேர் நல்ல பலனடைந்தனர். பல ஆயிரக்கணக்கான பொருள் வீணுக்குச் செலவாயின.
அரசன் மனம் பின்னும் நிம்மதியடையவில்லை. தன் மகள் விதவை. அவள் பட்டத்திற்குத் தகுதியுடையவள் அல்ல என்று எண்ணி அரசாங்கத்தை அமைச்சன் கையில் ஒப்படைத்தான். அரசன் ஆளுகையையே எதிர்த்து வந்த ஏழை மக்கள் அமைச்சன் அதிகாரத்திற்கு அடங்கி நடப்பார்களா? நாட்டில் எங்கும் கலவரம், கலகம், குழப்பம், கூட்டம்.
இடையே தமயந்திக்கும் தமிழரசிக்கும் பல சம்பாஷணைகள் நடந்தன. இறுதியில் தமயந்தி தமிழரசியை இந்து மதத்தின் கொடுமை, ஆண் பெண் என்ற பேதம், ஆண்டான் அடிமையென்ற வித்தியாசம் இவற்றைப் போக்க நல்ல முறையில் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
நிற்க, தமயந்தி மடத்தின் ஊழல்களைத் தெரிந்து கொள்ளவும் மடாதிபதியின் அக்கிரமச் செயல்களை அறவே ஒழிக்கவும் எண்ணி மடத்திற்குச் செல்ல விரும்பித் தன் தாயிடம் வந்து, தான் முன்பு தாயின் வார்த்தையைத் தட்டிப் பேசியதற்கு வருந்துவதாகவும், தவறைப் பொறுத்துக் கொள்ளும்படியும் இனித் தாயின் இஷ்டப்படியே நடந்துகொள்வதாயும் சொல்ல, தாய் சந்தோஷப்பட்டு மடாதிபதியிடம் அவளின் சம்மதத்தைக் கூறித் தமயந்தியை மடாதிபதியிடம் விட்டு வந்தாள். அவ்வமயம் மடாதிபதி சிஷ்யகோடிகளுக்கு மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை எனும் மூவாசைகளையும் மறக்க வேண்டு மென்றும், காயம் பொய்யென்றும் சொல்லி உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
தமயந்தி உட்புகுந்ததும் பக்தகோடிகள் யாவரும் பறந்து போயினர். அவர்கள் சென்றதும் தம்பிரான் தமயந்தியிடம் காதற் சம்பாஷணைகள் நடத்தத் தொடங்கினார். இடையே தமயந்தி பல கேள்விகள் கேட்டாள். ஆனால் அதற்குத்தக்க பதிலை அவனால் அளிக்கமுடியவில்லை. அதற்குள் ஒரு சிஷ்யன் மறைவாயிருந்து கனைத்தான். உடனே மடாதிபதி அவன் பின்னோடு சென்றான். தமயந்தியும் அவன் அறியாதபடி பின் தொடர்ந்தாள். மடாதிபதி அங்கு தன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த மங்கையை முத்தமிட்டுக் கட்டித்தழுவினான். தமயந்தி உடனே கேமராவை எடுத்து அப்படியே படம் பிடித்துக் கொண்டு முன் தான் இருந்த இடத்திற்கு வந்து வந்து சேர்ந்தாள். பிறகு மடாதிபதி இவளிடம் வந்து தனகோடி செட்டியார் என்பவரின் மகள் சிறுவயதிலேயே விதவையாகி விட்டாளென்றும் அவளுக்கிருந்த ஏராளமான பொருளை மடத்திற்கே எழுதி வைத்துவிட்டாளென்றும் சொன்னான். தமயந்தி அவனைப் பல கேள்விகள் கேட்டதற்கு இயற்கையுணர்ச்சியை அடக்க எவராலும் முடியாது, நீ என்ன சொன்னாலும் உன்னை நான் மறவேன், இது சத்தியம் என்றான். தமயந்தி நேரமாய்விட்டதென்றும் நாளை வருவதாகவும் சொல்லி விடைபெற்றுக்கொண்டு நேரே அரசகுமாரியிடம் சென்று மடத்தில் நடந்த மோச காரியங்களை எடுத்துச் சொல்லிப் போட்டோவையும் காண்பித்தாள். அரசகுமாரி திடுக்கிட்டு மடாதிபதியின் போக்கைக் கண்டு மகாகோபமடைந்தாள். தமயந்தி சரி, அவசரப்படாதீர், கோபம் வேண்டாம், விஷயம் இரகசியமாகவே இருக்கட்டும். சமயம் வரும்போது எல்லாம் சந்திக்கு வரும் என்று சொல்லித் தன் வீடு சென்றாள். இதற்கிடையில் அரசர் நோய் வாய்ப்ட்டு உயிர் நீத்தார். வெங்கடேசய்யர் மடவடையாளின் வீட்டிற்கு வந்து தமயந்தியைத் தான் பார்த்துச் சிறிது நேரம் பேச வேண்டும் என்றான். உடனே தமயந்தி அழைக்கப்பட்டாள். அவளைத் தனியே விட்டு விட்டு அவள் தாயார் சென்று விட்டாள். மந்திரி, தமயந்தியிடம் அரசகுமாரிக்குக் குழந்தைகள் இல்லாததால் அரசாள உரிமையில்லையென்றும், விதவையாகி விட்டாளே என்று வீண் வருத்தப்பட வேண்டியதில்லை என்றும், விதவையாயினும் பிராமணனை இச்சித்துச் சந்ததி பெறலாமென்றும், பஞ்சபாண்டவர்களும், சங்கராச்சாரியாரும் விதவையின் புத்திரர்களேயென்றும் சொல்லி அரசகுமாரியை எவ்விதமேனும் தன் இஷ்டத்திற்கு இணங்கச் செய்து வைத்தால் ஏராளமான பொருள் தருவதாகவும் சொன்னார். தமயந்தியும் தக்க சமயம் வாய்த்ததெனச் சந்தோஷப்பட்டு, ‘சரி சம்மதிக்கச் செய்கிறேன்’ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு அரசகுமாரியிடம் சென்று நடந்ததைப்பற்றி தெரிவித்தாள். அரச குமாரி மிக வெகுண்டு அமைச்சனை வரவழைத்து அப்படியொரு விதி இருக்கிறதா என்று கேட்டாள். அவன் ஆம் என்றான். அரசகுமாரி கடுங்கோபங்கொள்ள மந்திரி பேசாமல் நழுவி விட்டான்.
பிறகு அரசகுமாரி தமயந்தியிடம் இனி இக்கொடுமைகளைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டு மக்களிடம் சென்று இனி நானே இந்நாட்டையாளப் போகிறேன் என்றும் அதற்கு அவர்களுடைய ஆதரவு அவசியம் தேவை என்றும் சொல்லச் செய்தாள். தமயந்தியும் திருநாவுக்கரசரிடம் சென்று நடந்த கொடுமைகளைச் சொல்லி இனி நம் ஆதரவால்தான் அரசகுமாரி ஆளவேண்டுமெனச் சொல்லத் திருநாவுக்கரசரும் அடுத்த நாள் ஓர் பிரமாண்டமான கூட்டங்கூட்டுவித்து, அதற்குத் தமயந்தியையே தலைமை வகிக்கச் செய்து, நாட்டு மக்களிடம் அரசகுமாரியின் அருங்குணங்களைப் பாராட்டியும், மந்திரியின் மதிமோசத்தை விளக்கியும், இனி நாட்டைத் தமிழரசியே ஆளவேண்டுமென்பதை வற்புறுத்தியும் தெளிவாய்ப் பேசினார். தமயந்தியும் அவருக்குப் பிறகு அருஞ்சொற்பொழிவாற்றினாள். சீர்திருத்தத் தோழியர் இராசாயி அம்மாள் அவர்களும் அழகாகச் சொல்மாரி பொழிந்தார்கள். மக்கள் யாவரும் தமிழரசியே நாட்டையாள வேண்டுமெனத் தீர்மானித்துத் தக்க துணைபுரிய துணிந்துமிருந்தனர்.
விழாவில் கலந்துகொள்ளப் பல பெரியோர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. அதன்படி விழாவிற்குப் பல பகுத்தறிவாளர்களும், பெரியோர்களும், பிரமுகர்களும் விஜயஞ் செய்தனர். திடீரென வீரகுணசீலரும் திருநாவுக்கரசரும் அங்கு தோன்றினர். மக்கள் அவர்களைக் கண்டதும் ஆனந்தம் கொண்டனர். வீரகுணசீலர் வாழ்க, திருநாவுக்கரசர் வாழ்க என ஆரவாரஞ் செய்தனர். பல பெரியோர்களின் விருப்பப்படியும், மக்களின் வேண்டுகோளிற் கிணங்கியும் அதே நேரத்தில் வீரகுணசீலருக்கும் தமிழரசிக்கும் மறுமணமும், தமயந்திக்கும் திருநாவுக்கரசருக்கும் கலப்பு மணமும் இனிது நடந்தது. ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு ஆடை, அன்னம் அளிக்கப்பட்டது. பல இடங்களிலிருந்து வந்து குவிந்த வாழ்த்துத் தாள்கள் வாசிக்கப்பட்டன. மக்களடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
அது சமயம் நடந்த கூட்டத்தில் தமிழரசியும் தமயந்தியும் நல்ல சீர்திருத்தக் கருத்துகளைப் பற்றிப் பேசினர். பிறகு திருநாவுக்கரசர் தான் செய்த புரட்சி வேலைகளையும், வீரகுணசீலனைத் தூக்கிச் சென்றதையும், அன்று முதல் அவர் தம்மோடு உழைத்து வந்ததையும் பாராட்டிப் பேசினார். வீரகுணசீலர் திருநாவுக்கரசரின் அருந்தொண்டினைப் போற்றினார்.
வீரகுணசீலரும் தமிழரசியும் தம் நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களையும், கைம்பெண்களின் கஷ்டநிலைமையையும் பார்ப்பனப் புரட்டுகளையும், மடாதிபதிகளின் அக்ரமச் செயல்களையும் பணக்காரர்களின் கொடுமைகளையும் புதிய சட்டங்கள் மூலம் போக்கித் தன்னுயிரைப்போல் மன்னுயிரையும் பாவித்து எல்லோரையும் சரிநிகர் சமத்துவமாகக் கருதித் திருநாவுக்கரசர் தமயந்தி இவர்களின் துணை கொண்டு பலரும் போற்றிப் புகழப் பரிபாலித்து வந்தனர்.
அவர்கள் புதிய திட்டத்தின்படி மடாதிபதி மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கேட்டு மறுபடியும் நல்லமுறையில் மக்களுக்கு தமிழ்க்கல்வியைக் கற்பித்து வந்தார். மாஜி மந்திரி வேங்கடேசய்யரின் கொடுமைக் குற்றங்களுக்காக அவர் நாடு கடத்தப்பட்டார்.
நாட்டில் எங்கும், இன்பமும் அன்பும் நிலவி அறிவும் ஆராய்ச்சியும் பெருகிப் பிரகாசித்தது.

சிற்றின்பமும் பேரின்பமும்!


*சித்தர் வாக்கு.....*
*இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!*
*படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.*
*படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.*
*படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.*
*படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.*
*படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.*
*படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.*
*என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.*
*இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.*
*நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.*
*நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.*
*அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.*
*அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.*
*செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.*
*செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.*
*செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.*
*செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.*
*புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.*
*அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.*
*இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.*
*வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.*
*நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.*
*நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.*
*உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.*
*உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.*
*இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.*
*துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.*
*எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.*
*எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.*
*பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.*
*மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.*
*பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.*
*பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.*
*சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.*
*எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.*
*பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.*
*தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.*
*அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.*
*அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.*
*அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.*
*அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.*
*அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.*
*அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.*
*பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.*
*பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.*
*முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.*
*முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.*
*இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.*
*கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.*
*உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.*
*உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.*
*புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.*
*புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.*
*மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.*
*மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.*
*மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.*
*மரணத்தையும் வெல்வது பேரின்பம்.*
*மனமாய் இருந்தால் சிற்றின்பம்.*
*மனதைக் கடந்தால் பேரின்பம்.*
*வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.*
*எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.*
*பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.*
*மொத்தமாய் கண்டால் பேரின்பம்.*
*அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.*
*அகங்காரம் துறந்தால் பேரின்பம்.*
*தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.*
*அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.*
*ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.*
*ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.*
*துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.*
*துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.*
*ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.*
*இறைவனால் தரப்படுவது பேரின்பம்.*
*உலகைப் பற்றினால் சிற்றின்பம்.*
*இறைவனைப் பற்றினால் பேரின்பம்.*
*பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.*
*தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.*
*இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.*
*இன்பமான இன்பமே பேரின்பம்.*
*அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.*
*ஞானம் விரும்புவது பேரின்பம்*
*பெற்று மகிழ்வது சிற்றின்பம்.*
*கொடுத்து மகிழ்வது பேரின்பம்.*
*சக்தியை இழப்பது சிற்றின்பம்.*
*சக்தியாய் மாறுவது பேரின்பம்.*
*பற்றுக் கொள்வது சிற்றின்பம்.*
*பற்றற்று இருப்பது பேரின்பம்.*
*மாறுவது, தாவுவது சிற்றின்பம்.*
*மாறாதது நிலைத்தது பேரின்பம்.*
*நிலையற்றது சிற்றின்பம்.*
*நிரந்தரமானது பேரின்பம்.*

108 சித்தர்கள்

108 சித்தர்களின் பெயர்கள்
1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள் (பெண் சித்தர்)
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா (பெண் சித்தர்)
108. பரமாச்சாரியார்.

விசித்திர பிராணி

மாவீரனான அர்ஜுனனுக்கு முன் அந்த விசித்திர பிராணி தோன்றியது – சேவல் தலை, மயில் கழுத்து, எருதின் திமிலுடன் கூடிய உடல், சிங்கத்தின் கம்பீரமான இடை, பாம்பு வால். யானைக் கால், மான் கால், புலிக் கால் என்று மூன்று கால்களுடனும், ஒரு மனிதக் கையுடனும் அது நின்றுகொண்டிருந்தது. இது ஒரு அரக்கன் தான் என்று முடிவுகட்டி விட்ட அர்ஜுனன், தாக்குதலுக்காகத் தன் வில்லை எடுக்கையில் இன்னொரு விஷயத்தைக் கவனித்தான். அந்தப் பிராணி தன் கையில் தாமரை மலரை ஏந்தி இருந்தது.
உடனே அர்ஜுனன் என்ன பிராணி இது என்று யோசிக்கத் தொடங்கினான். ஒரு குறிப்பிட்ட ஜந்து என்று சொல்ல முடியாமல் இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று சேர்ந்து இருந்தது அது. இயற்கையின் சிருஷ்டியில் இப்படி ஒரு பிராணியும் இருக்குமா என்ன? இது போன்ற ஒரு மிருகத்தை இது காறும் அவன் கண்டதில்லை. ஆனால் அப்படிக் காணாததாலேயே அது இல்லை என்று ஆகிவிடாது என்று அவன் மனம் சொன்னது. , “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் நன்றாகப் பேசுகிறாய் நண்பா!” என்று ஆரம்பிக்கும் தனது உயிர் நண்பனான கிருஷ்ணனின் உபதேசத்தை எண்ணிப் பார்த்தான். “மனித மனம் ஒரு எல்லைக்குள் அடங்குவது, ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது” என்பதை நினைவுகூர்ந்தான். தன் வில்லைக் கீழே வைத்து விட்டு, விழுந்து வணங்கினான்.
மனித பிரக்ஞையில் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சாத்தியங்கள் தெய்வீகப் பிரக்ஞையில் உண்மையாகவே இருக்கக் கூடும். ஒன்பது உயிர்வகைகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய அந்தப் பிராணியின் பெயர் நவகுஞ்சரம் (Navagunjara). இந்த ஞானத்தை அர்ஜுனனுக்கு வழங்குவதற்காகவே எழுந்தருளிய தெய்வ வடிவம் அது!
ஒரிய மொழியில் சரளா தாஸர் எழுதிய மகாபாரதத்தில் மேற்சொன்ன கதை வருகிறது.

மஞ்சள் குருவி

Image may contain: bird

செம்போத்து பறவைக்கு ....

ஈரமண்ணை வாங்கிவாங்கிக்
கொத்தும் மண்வெட்டியென
மாறி மாறிக் காற்றைக் கொத்தும்
செம்போத்தொலி
எதிரெதிர்க் கரை நடுவே
துணியடிப்பின் ஒலி நடுவே
ஆற்றில் அடித்துச் செல்லப்படுபவனாய்
உழன்று மிதக்கிறேன்
செம்போத்தின் தொடரொலியில்
இடைவிடா வீழ்தலின்
தாம்பளத்தன்ன
செம்போத்தின்
அதிர்வொலியில்
உயிர்ப்புக்கும்
மரிப்புக்குமிடையே விரிவுகொள்கிறேன்
வீடுகளின்
பேருந்துகளின்
ரயில்களின் ஜன்னல் வழியே
கண்டதுவும்
இப்போது ஒலிப்பதும்
அதே செம்போத்தென்ற உணர்வே
ஒலிவந்து சேர்க்கும்
ஒற்றைச் செம்போத்துடையான்
என் உயிர்ப்பும் மரிப்பும்
இவ்வகை விரிவு கொள்ளுமெனில்
அத்தனை செம்போத்தும் உடைத்தவர்
உயிர்ப்பும் மரிப்பும்
எவ்வகை விரிவு கொண்டிருக்கும்
அலகிலாச் செம்போத்துடையார்
தலைவர் அன்னவர்க்குச்
சரண் நானே

சர்க்கஸ் ஜெயம்

நம் நாட்டில் சினிமாதான் 1960 - 70ம் ஆண்டுகளில் முக்கிய பொழுதுபோக்காகத் திகழ்ந்தது. சாதாரணமாகச் சிறுவர் சிறுமியரைச் சினிமாக்களுக்கு அழைத்துப் போகும் வழக்கம் கிடையாது. கிரேட் ஈஸ்டர்ன் சர்க்கஸ், கமலா த்ரீ ரிங் சர்க்கஸ் போன்ற கம்பெனிகள் ஊர் ஊராக வருவார்கள். மூன்று நான்கு வாரங்கள் காட்சிகள் நடத்துவார்கள். சிறுவர் சிறுமியர் இதற்காகவே காத்திருப்பார்கள். கூட்டம் அலைமோதும்.
யானைகள் கால்பந்து விளையாடும்; ரிங் மாஸ்டர் சவுக்கைச் சொடுக்குவார். சிங்கங்கள் சாதுவாகச் சொன்னதைக் கேட்கும்: குரங்குகள் சைக்கிளில் வித்தைகள் காட்டும்: விளக்கை அணைப்பார்கள். சர்க்கஸ் அரங்கம் முழுக்கக் கும்மிருட்டு. ஒரு பெரிய உருண்டைக்குள் மட்டும் கலர் கலராய் விளக்குகள் கண் சிமிட்டும். ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த உருண்டைக்குள் நுழைவார். அதற்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவார். நம் நெஞ்சு படபடக்கும். ட்ரப்பீஸ் விளையாட்டும் இப்படித்தான். அந்தரத்தில் ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் தாவிப் பிடிப்பார்கள். மாஜிக் காட்டுபவர் வருவார். காலி தொப்பியைக் காட்டுவார். “சூ மந்திரக் காளி” என்று என்று சொல்லுவார். காலி தொப்பிக்குள்ளிருந்து முயல் குட்டி குதித்துவரும். இவை அனைத்துக்கும் மேலாகச் சர்க்கஸ் கோமாளிகள். உருவத்தில் குள்ளமாக இருக்கும் இவர்கள் சகலகலா வல்லவர்கள். இவர் களைப் பார்த்தாலே அரங்கம் அதிரும்.
டி.வி.-யின் வரவு
1980 - களில் சமுதாய வாழ்க் கையில் முக்கிய மாற்றங்கள் வந்தன. தொலைக்காட்சியும், கம்ப் யூட்டரும், பொழுதுபோக்கைத் தேடி நாம் போகவேண்டிய தேவை இல்லாமல், அவற்றை நம் வீடுகளுக்குக் கொண்டுவந்தன. அம்மா, அப்பாக்கள் வீடுகளில் தொலைக்காட்சிகளில் சினிமாக்கள், சீரியல்கள் பார்க்கத் தொடங்கினார்கள். சிறுவர் சிறுமியருக்குக் கார்ட்டூன்கள், கிரிக்கெட் மாட்ச்கள்.
கம்ப்யூட்டர்,செல்போன்கள் ஆகிய கருவிகளில் பெரியவர்கள் ஈ மெயில், மெஸேஜிங், வெப் ஸர்ஃபிங் என்று நேரம் செலவிடுகிறார்கள். சிறுவர் சிறுமியரை வீடியோ கேம்ஸ் கட்டிப்போட்டு வைக்கின்றன. ஆகவே, குழந்தைகளுக்கு சர்க்கஸ் பார்க்கும் ஈடுபாடு குறைந்துவிட்டது.
மிருகங்களை பயன்படுத்த எதிர்ப்பு
சர்க்க்கஸில் மிருகங்களைக் கொடு மைப்படுத்துவதாகச் சமூகநல ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால், மிருகங்களை வைத்துச் செய்யும் விளையாட்டுகளின்மீது அரசாங்க, நீதிமன்றக் கட்டுப்பாடுகள் வந்தன. இந்த வரைமுறைகளால், மிருகங்கள் பங்கெடுக்கும் விளை யாட்டுக்கள் சுவாரஸ்யம் இழந்தன. மக்கள் சர்க்கஸுக்கு வர இந்த விளையாட்டுக்கள் முக்கிய காரணம். வீட்டுக்கே வந்த பொழுதுபோக்குகள், ஷோக்களின் சுவாரஸ்யக் குறைவு ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால், சர்க்கஸுக்கு வருபவர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்தது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க சர்க்கஸ் கம்பெனிகளின் கதை இதுதான். நம் நாட்டைப்போலவே, கனடா நாட்டிலும் சர்க்கஸ் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. பல பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் இருந்தன. பிரம்மாண்ட டென்ட்கள், நூற்றுக்கணக்கான கலைஞர்கள், மிருகக் காட்சிசாலை போல் வகை வகையான மிருகங்கள், பறவைகள் என ஏகப்பட்ட வசதிகளோடு இந்தக் கம்பெனிகள் இயங்கின. இந்தக் கம்பெனிகள் தவிர, ஏகப்பட்ட கழைக் கூத்தாடிக் குழுவினர் இருந்தார்கள். இவர்கள் இருபது, முப்பது கலைஞர்கள், ஓரிரு மிருகங்கள் ஆகியவற்றோடு செயல்பட்டார்கள். சர்க்கஸ் கம்பெனிகள் டென்ட் போட்டு ஷோக்கள் நடத்துவார்கள்: கழைக் கூத்தாடிகள் தெருவுக்குத் தெரு சர்க்கஸ் வித்தைகள் காட்டுவார்கள். ஏராளமான மக்கள் கூடிப் பார்த்து ரசிப்பார்கள். டாலர்களை அள்ளி வீசுவார்கள். இதனால், சர்க்கஸ்காரர்களுக்கும், கழைக்கூத்தாடிகளுக்கும் நல்ல வருமானமும், மக்களிடையே மதிப்பும் இருந்தது.
சூப்பர் ஸ்டார்கை லாலிபெர்ட்டே (Guy Laliberte) என்னும் சிறுவனுக்கு சர்க்கஸில் பயங்கர ஈடுபாடு. தன் பள்ளி நாட்களிலேயே ஒரு கழைக் கூத்தாடிகள் கம்பெனியில் சேர்ந்தான். சகலகலா வல்லவன் ஆனான். அக்கார்டியன் (Accordion) என்னும் இசைக்கருவியைப் பிரமாதமாக வாசிப்பான். இரண்டு கால்களிலும் நீளமான மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு நடப்பான், வாயில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து, அந்த நெருப்பை ஸ்டைலாக ஊதுவான். விரைவில், கனடா நாட்டு சர்க்கஸ் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனான்.
1980 - களில், நம் ஊரைப்போலவே, கனடாவிலும் மக்களின் ரசனை மாறத் தொடங்கியது. கழைக்கூத்தாடிகளின் ஷோ, சர்க்கஸ் ஆகியவற்றைப் பார்த்த ஆண், பெண். குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்ஸ் ஆகிய மாற்றுப் பொழுது போக்குகளுக்கு மாறிவிட்டார்கள்.
சர்க்கஸ் கம்பெனிகள் மூடல்
சர்க்கஸ் கம்பெனிகளில் ஏராள மானோரால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை. பிஸினஸை மூடினார்கள். இருந்தவர்களுக்குள், போட்டி கடுமையானது. எதிராளியை ஜெயிக்கப் பல யுக்திகளைக் கையாண்டார்கள். சர்க்கஸ் நடத்தும் டென்ட்களை அதிகச் செலவில் ஜோடித்தார்கள். மக்களை ஈர்க்கும் அம்சமான ஜோக்கர்களின் காமெடியை அதிகமாக்கினார்கள். டிக்கெட் விலையைக் குறைத்தார்கள். ஏற்கெனவே சரிந்துகொண்டிருந்த வருமானம் இன்னும் குறைந்தது. பெரிய நிறுவனங்களே தள்ளாடும் போது, கழைக் கூத்தாடிகள் வறுமையின் எல்லைக்கோட்டுக்குத் தள்ளப்பட்டனர்.
லாலிபெர்ட்டேக்கு வேலை போனது. வேறு குழுக்களில் வேலை தேடினார். தொழிலே நொடிக்கும்போது யார் வேலை தருவார்கள்? எல்லாக் கதவுகளும் மூடிவிட்டன. லாலிபெர்ட்டேக்குத் தெரிந்த ஒரே வேலை சர்க்கஸ்தான். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
காரணம் என்ன?
சர்க்கஸ் தொழிலின் சரிவுக்கு என்ன காரணங்கள் என்று ஆராய்ச்சியே செய்தார். சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம் மிருக விளையாட்டுக்கள், வீர தீர ஆட்டங்கள், கோமாளிகளின் காமெடி. 1980 வரை சர்க்கஸ் கம்பெனிகளும், கழைக் கூத்தாடிகளும் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தார்கள். ஆகவே, பிசினஸ் லாபகரமாக நடந்தது.
1980-களில், தொலைக்காட்சியும், கம்ப்யூட்டரும் இந்தப் பின்புலத்தை முழுமையாக மாற்றிவிட்டன. அன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் சோப் ஆப்பராக்கள் (Soap Operas) என்று அழைக்கப்பட்டன. இவற்றை மக்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தார்கள். அதாவது, மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பு கதைகளை மையமாகக்கொண்ட பொழுதுபோக்கு.
மாற்று யோசனை
குழந்தைகள் மட்டுமல்லாமல், முழுக் குடும்பமும் பார்ப்பதாகத் தன் ஷோ அமையவேண்டும். என்ன செய்யலாம்? லாலிபெர்ட்டே மூளையில் இப்போது வெட்டியது ஒரு மின்னல். சாதாரணமாக சர்க்க்கஸில், டரப்பீஸ், மிருக விளையாட்டுக்கள், ஜோக்கர்கள் காமெடி, மாஜிக் காட்சிகள் போன்ற பல ஐட்டங்கள் இருக்கும். ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் சம்பந்தம் இருக்காது.
சர்க்கஸ் காட்சிகளோடு, ஜனரஞ் சகமான தொலைக்காட்சி சீரியல்களைக் கலந்தால்....விளையாட்டு வீரர்கள், கோமாளிகள் பங்கெடுக்கும் சீரியலின் கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு என்று சர்க்கஸ் பற்றிய புதிய பொசிஷனிங்கை மக்கள் மனங்களில் உருவாக்கினால்.....
1985-ம் ஆண்டில் லாலிபெர்ட்டே தன் கனவை நனவாக்கினார். Cirque du Soleil (பிரெஞ்ச் வார்த்தை. சூரிய சர்க்கஸ் என்று அர்த்தம்.) என்னும் சர்க்கஸ் கம்பெனி தொடங்கினார். தன் சர்க்கஸ் காட்சிகளை வலுவான கதையமைப்புக்கொண்ட நாடகங்களாக உருவாக்கினார். சர்க்கஸ் விளையாட்டுக்கள் இந்த நாடகங்களில் நடக்கும் சம்பவங்களாக வரும். கோமாளிகளின் ஜோக்குகளும் கதையோடு ஒன்றியவையாக இருக்கும்.
9 கோடி ரசிகர்கள்
லாலிபெர்ட்டேயின் சர்க்கஸ் கம்பெனி தொடங்கி 30 வருடங்களாகிவிட்டன. இன்று 40 நாடுகளைச் சேர்ந்த 5020 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
கடந்த முப்பது வருடங்களில், அன்டார்ட்டிக்கா தவிர்த்த அத்தனை கண்டங்களிலும், 271 நகரங்களில் இதுவரை நடந்த ஷோக்களை ரசித்திருப்பவர்கள் 9 கோடி பேருக்கும் மேல். வருட வருமானம் 850 மில்லியன் டாலர்கள். லாலிபெர்ட்டேயின் தனிப்பட்ட சொத்து 1800 மில்லியன் டாலர்கள்.
வெற்றி இலக்கணம்
உலகத்தில் இருக்கும் எல்லா சர்க்கஸ் கம்பெனிகளும் நஷ்டத்தில் தள்ளாடும்போது, லாலிபெர்ட்டே மட்டும் ஜெயித்தது எப்படி? சர்க்கஸ் என்றால், கலைஞர்கள், மிருகங்கள் விளையாட்டுக்கள், ஜோக்கர்கள் ஆகியவைதாம் என்று நம் எல்லோர் மனங்களிலும் ஒரு பிம்பம் படிந்தி ருக்கிறது. சர்க்கஸ் கம்பெனிகளும், இந்த பிம்பத்தை உடைக்கத் துணிச்சல் இல்லாமல், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுகிறார்கள். லாலிபெர்ட்டே, சர்க்கஸ் என்னும், பிஸினஸின் இலக் கணத்தையே உடைத்தார். புதிய பொசிஷனிங் கண்டார். தேடி வந்தது வரலாறு காணாத வெற்றி!