Saturday 23 December 2017

எழிலென்ப உந்தன் இலக்கை அடைய
பழுதின்றிச் செய்யும் பணி.                                  

பணிவுகொள் வென்றால்! பயமறு தோற்றால்!
துணிவுதான் வாழ்வின் துணை.

துணையென என்றும் தொடர்ந்திடும் கல்வி!
இணையதற் குண்டோ இயம்பு.

இயம்புவது ஒன்றும், இயல்வது வேறும்
கயமைக் குணமாய்க் கருது.

கருதியது கைகூட காலம்  கடந்தால்
உறுதியாய் ஆக்கு உளம்.

உளமார நேசித்து வேலையைச் செய்தல்
வளமாக வாழும் வழி.

வழியொன்று மூடினால் வேறொன்று தேடு!
செழிப்பாகும் என்றெண்ணிச் செல்.

செல்லும் பயணத்தில் சிந்தை முழுதாக்கு.
வெல்ல வழியுண்டோ வேறு.

வே(ற்)று இலக்கிலும் வெற்றிகள் காணலாம்.
தோற்றதாய் எண்ணாதே சோர்ந்து.

சோர்ந்து விடாதே, சுடரட்டும் நெஞ்சுக்குள்
தீர்ந்து அணைந்திடாத் தீ.                      

No comments:

Post a Comment