Saturday 23 December 2017

ஐயப்பா சரணம்
முக்காலங் கடந்தவனே முக்கண்ணன் தன்மகனே
முதலாகத் தனைநிறுத்தி முடிவுகளை ஆள்பவனே
நிலையில்லா நிலைமாறி நெறிநல்ல வாழ்வுபெற
புலியூர்ந்து புவியாளும் பொன்னாபரணன் அருள்வேண்டி
தவழ்ந்துவருங் குழவிநிகர் தமிழினையே தான்கொண்tடு
கிளர்ந்தெழுந்த ஆசையினால் கூச்சத்தைக் கருதாமல்
சீட்டுஎழுதத் துணிந்துவிட்டேன் சீற்றம் சிறிதுமின்றி
சிறியேனைப் பொருத்தருளி சிறப்பைத் தந்திடனும்
ஐயன் பேர்சொன்னால் ஐயங்கள் அகன்றுவிடும்
சாஸ்தாவின் பேர்சொன்னால் சகலபாபம் சாம்பலாகும்
பதினெட்டுப் படியேறிப் பாதம் பணிந்தபின்னர்
விதிமாறி வழிபிறந்து வெற்றித்திரு வீடுவரும்
குறையொன்றும் எனக்கிருக்க இயலாது என்றாலும்
குழவியழும் குரல்கேட்டு அரவணைப்பாள் அன்னையவள்
அவ்வின்பம் பெற்றிடவே அளவற்ற ஆசையினால்
அடியவனும் முயன்றிட்டேன் ஐயனே இக்கவிதை
காலமும் நிலையில்லை காயமும் நிலையில்லை
வானவில்லாம் வாழ்கை வாடிடும் இமைப்பினிலே
வாழும்நாள்வரை வானவன்புகழ்பாட வலிவான உடல்வேண்டி
வணங்கு மதனை என்சுற்றமும் பெற்றிடணும்
அள்ளக்குறையா செல்வம் உள்ளம் நிறையுறவு
எல்லாம் நிறைந்தவாழ்வு எனக்கருள வேணுமையா
கொற்றவா நீஎனக்கு உற்றவனாக வேண்டும்
மற்றவை இன்னமுண்டு மாறாமல் தந்திடனும்
சீரோடு வாழ்ந்துவரும் செல்வந்தர் உலவிவர
தேரேறி சென்றிருந்த நாள்மாறிப் போனதின்றோ
காரேரி செல்கின்றார் களிப்புடனே என்குடும்பம்
ஊறேது மில்லாமல் காரேரி சென்றிடனும்
விண்ணிலே பறந்தழகாய் வானவர் சென்றிடுவர்
மண்ணிலும் சிலபேர்கள் மாற்றாகச் செய்திடுவார்
கண்கள்போல் ஈர்குழவி விண்ணாளும் காட்சிதனைக்
களிப்புடனே என்குடும்பம் கண்டு ரசித்த்திடனும்
மனிதனாய் பிறந்திட்டல் பணியொன்று செய்திடணும்
மின்னணுவைப் பேணுவதும் உணவகத்தை வளர்ப்பதுவும்
அலங்கார மாளிகைகள் அணியணியாய் துணிமணிகள்
நலங்காக்கும் வணிகமது நானிலத்தில் உயர்ந்தவையே
மாமலையில் ஓர்தோட்டம் மனங்கவரும் எழிற்கூடம்
தேயிலையை புறந்தள்ளி தேக்குமரம் விண்முட்டும்
எங்கள்தொழில் ஏற்றமுடன் கடலெல்லை களைகடந்து
தங்கமென விற்றிடனுமதன் தரமுலகில் உயர்ந்திடணும்
அரைக்காசு பெற்றாலும் அரசவையில் பணிவேண்டி
அறியாதார் கேட்டிடுவார் அதிலேதும் பெருமையில்லை
அரிமாவிண் வாலாகா ஆடிவந்த நாள்போதும்
ஆட்சியின் தலையாக அடியவனும் மாறவேண்டும்
அச்சமுடன் கைகட்டி அடிமையாய் வாழ்கின்ற
அவலநிலை மாற வேண்டும்
எச்சத்தின் மிச்சத்தை நச்சியே குடிக்கின்ற
ஈனம் மறைய வேண்டும்
இச்சையைக் கூறினேன் இச்ஜெகமீதி லுனக்கு
இயலாத செயலு முண்டோ
நஞ்சுபோல் பாவங்கள் வழியதை மறைப்பினும்
உன்விழியதை நொறுக்கி விடும்
உதவிக்கரம் வேண்டி உறத்தக் குரலோடு
ஓங்காரக் கூச்ச லிட்டேன்
கதவுகளை மூடிக் காலத்தைக் கடத்தாமல்
கணப் போதில் வந்திடனும்
இரப்போர்க்கு இல்லையென்று இயம்பாத உன்நெஞ்சில்
ஏனின்னுங் கருணை இல்லை
அறற்றியே கிடக்குமென் அவலநிலை போக்கநின்
அருள் தன்னைத் தாருமையா

No comments:

Post a Comment