Saturday 23 December 2017

விடாது கருப்பு - மர்ம தேசம்
ஊன் மெய்க்கு பிரதானம்
மைதூனத்தின் விதானம்
சூதானமாய் யோசித்தால்
விடையோ இரண்டு
நிதானமாய் யோசித்தால்
உண்டு விருந்து
இந்த விடுகதையில் தொடரோட முதல் பகுதி ஆரம்பிக்குது. ஊருக்கே தெரியும் இந்த விடுகதையின் விடையில் தான் ஊரே தேடும் பொன்பானை பொதிந்திருக்கும் ரகசியம் இருக்கிறது.
விடாது கருப்பு, மர்ம தேசம் தொடரின் இரண்டாவது தொடர். இது நான் பனிரெண்டாவது படிக்கும் போது வந்தது. அப்ப ஹாஸ்டல்ல இருந்ததால பார்க்க முடியல. ஆனா க்ளைமாக்ஸ் ஏப்ரல்ல வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் இந்த நாடகத்தோட க்ளைமாக்ஸ் மட்டும் பார்த்தேன். அப்படி ஒரு க்ளைமாக்ஸ் பார்த்ததுக்கு அப்பறம் அந்த நாடகத்தைப் பார்த்தே தீரணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.
ராஜ் டீவில மறுபடியும் போடும் போதும் பார்க்க முடியல. அப்பறம் இங்க வந்ததுக்கப்பறம் மே லாங் வீக் எண்ட்ல வீட்ல தனியா இருந்தேன். செம போர். அப்ப இண்டர்நெட்ல மேயும் போது இந்த தொடர் முழுதும் rajshri.comல இருந்தது. பார்க்க ஆரம்பித்தேன். மூணு நாள் முழுதும் உட்கார்ந்து எண்பத்தி இரண்டு பகுதியும் பார்த்து முடிச்சிட்டேன். இப்படி ஒரு சீரியல் (வேண்டும்னா சினிமாவையும் சேர்த்துக்கலாம்) என்னை கவர்ந்தது இல்லை. அட்டகாசமான டைரக்‌ஷன்.
இந்த அளவுக்கு ஒரு மர்மம் நிறைந்த திரைக்கதை தமிழ்ல வந்திருக்குமானு சந்தேகம் தான். சினிமாவைப் பொருத்தவரை மர்மம் நிறைந்த திரைப்படங்கள்னு பார்த்தா அந்த நாள், அதே கண்கள் வேற எதுவும் இருக்கானு சட்டுனு நினைவுக்கு வரல. அதிலும் அதே கண்களை லிஸ்ட்ல சேர்த்துக்க முடியாது. ஏன்னா என்னைப் பொருத்தவரை அத்தனை கதாபாத்திரங்களும் முதலிலே தெளிவாக காட்டப்பட வேண்டும். சடார்னு எங்கயோ இருந்து வர மாதிரி காட்றதுல புத்திசாலித்தனம் இல்லை. அந்த வகைல அந்த நாள் அட்டகாசமான படம்.
விடாது கருப்பு நாடகத்தை அந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். அதுவும் அன்றும், இன்றும்னு ஒரே பாகத்துல காட்டினது புத்திசாலித்தனம். அதுவும் அன்றும் முழுக்க முழுக்க ராசுவின் பார்வையில் காட்டப்பட்டிருக்கும். அத்தனை சீன்களிலும் அவன் இருந்திருப்பான்.
கதை இது தான். தொட்டக்கார மங்கலம்னு ஒரு கிராமம். அந்த கிராமத்துல நடக்குற தப்புக்கு எல்லாம் கருப்பு சாமி தண்டனை நிச்சயம் உண்டு. அந்த ஊருக்கு தோழியின் காதலை சேர்த்து வைக்க வரும் ஒரு டாக்டர் கம் எழுத்தாளர், அந்த கருப்பு நிச்சயம் கடவுள் அல்ல, மனிதன் தான் என நிருபிக்க முயலுவது தான் கதை. ஆனா கடைசில நாடகம் முடிந்த பிறகும் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியின் இயக்கமா என யோசிக்க வைப்பது கதாசிரியரின் புத்திசாலித்தனம்.
இந்த கதைக்குள்ளே பல கதைகள், ஊரையே ஏமாற்றி நகைகளை புதைத்து வைத்து செத்துப் போகும் பேச்சிக் கிழவி, வாலிப வயதில் பல பாவங்களை செய்து கருப்புவினால் கையை இழுந்து அதற்கு பிறகு எப்பொழுதும் பேசாத கட்டயன், பொன் பானையைத் தேடும் ஆனைமுடியான் (ஆண்மை உடையார்), கருப்பு தான் கண் கண்ட தெய்வம் என நம்பும் ஆனைமுடியான் மனைவி,
சின்ன வயதிலிருந்தே பேச்சிக்கிழவி, கட்டயன் செய்யும் பாவங்களைப் பார்த்து வளரும் ராசு, திருடனாய் இருந்து திருந்தி, தான் திருடிய நகைகளை அதை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க துடிக்கும் பிரம்மன், இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க துடிக்கும் ரீனா, இந்த உலகில் தன்னுடைய பங்கு என்ன என தெரிந்து கொள்ள பித்து பிடித்து அலையும் டாக்டர் நந்தா, ஊரையும், ஆனைமுடியான் குடும்பத்தையும் ஆட்டிப் படைக்கும் பூசாரி. இப்படி அட்டகாசமாக படைக்கப் பட்டிருக்கும் பாத்திரங்கள்.
எண்பத்தி ஓராவது பாகம் முடியும் போது இது மனிதனின் செயல் தான் என புரிந்து கொள்ளும் நாம், கடைசிப் பகுதியைப் பார்த்ததும், இது நிஜமாலுமே மனிதனின் செயலா என சிந்திக்க துவங்கிவிடுவோம். அது தான் கதையின் வெற்றி. அதே போல் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியா என ஆராய்ச்சியை செய்யாமலே இருந்திருக்கலாம் என்றும் தோன்ற ஆரம்பித்தது.
என்னைப் பொருத்தவரை நாடகத்தின் பலமே அன்று பகுதியில் வரும் பேச்சிக்கிழவி, ராசு, கட்டயன் தான். அதுவும் பேச்சிக்கிழவியும் ராசுவும் அட்டகாசமான நடிப்பு. பேச்சிக்கிழவியின் திமிர், இதுவரை நான் பார்த்த வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது போல் தோன்றியது. இவ்வளவு சாமார்த்தியமான கிழவியை (பாத்திரத்தை) இதுவரையில் பார்த்தே இல்லைனு கூட சொல்லலாம். பின்னாடி இந்த கிழவியை அசுரினு சொல்லும் போது, அது எந்த விதத்திலும் குறைவு இல்லைனு தான் தோணும். கருப்பு நிச்சயமா மனுஷன் தான் பின்னாடி ரீனா நம்பறதை விட, கிராமத்திலே இருந்து கருப்பு மனுஷன் தானு அந்த பாட்டி அத்தனை வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிப்பதே அதோட திறமைக்கு சான்று. அப்பறம் ஊரையே ஆட்டிப்படைக்கும் திருடன் மொக்க மாயனை கொன்று அவன் திருடின நகைகளையே கொள்ளை அடிப்பது, பிரம்மனை போலிஸ்ல பிடித்து கொடுப்பது, நியாயம் கேட்டு வரும் ஊர் மக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பது என துவம்சம் செய்திருக்கும் அந்த பாட்டி பாத்திரம். அதுவும் நியாயம் கேக்க வர ஊர்மக்களை பிரிச்சி மேயறது அட்டகாசமான சீன். பேச்சிக்கிழவி பேசும் போது அந்த வீடே அதிர்வது போல் எதிரோலிப்பது அருமை.
சின்ன வயது ராசுவாக நடித்திருக்கும் மாஸ்டர் லோகேஷ் பத்தி சொல்லலைனா என்னை விடாது கருப்பு. அவ்வளவு அட்டகாசமான நடிப்பு. மொத்த நாடகத்தோட கனத்தையும் தாங்கறது அந்த பாத்திரம் தான். ஒவ்வொரு பாகத்திலும் புதிது புதிதாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பான். நல்லவர்கள் கெட்டவர்கள்னு எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதைப் பார்க்கும் நமக்கும் அவனை நிச்சயம் பிடிக்கும்.
இந்த தொடரைப் பார்க்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கலாம்.
நாடகம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். Contain spoilers...
நாடகம் பார்த்து முடிக்கும் போது மனம் முழுவதும் சின்ன வயது ராசு தான் நிறைந்து இருந்தான். கண்ணு முன்னாடியே நடக்குற அநியாயத்தைப் பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் துடித்து, மனம் நொந்து அவனுக்குள் கருப்பு ஒரு ஆல்டராக உருவாகுவது அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. ஆனா பின்னாடி அவனே தப்பு செய்யும் போது அவனுக்கு கிடைக்கும் தண்டனை ஏனோ மனதை பாதிக்கவே செய்தது.
ராசுவோட பாத்திரத்தை அப்படியே உளி கொண்டு செதுக்கும் சிற்ப கலைஞரைப் போல செதுக்கியிருக்கிறார் இயக்குனர் (கதாசிரியர்). இவனுக்கு மல்டிப்பில் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வருவதற்கான அத்தனை சாத்தியங்களும் நமக்கு புரிந்திருக்கும். ஆனா கடைசியா அவனுடைய கருப்பு ஆல்டரே அவனுக்கு தண்டனைக் கொடுப்பது பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது.
அவனுக்கு இப்படி ஒரு மனநோய் வருவதற்கு காரணம் பேச்சிக்கிழவி மட்டுமல்ல, அவனுடைய அம்மாவும் தான். கருப்பு மேல் அவள் வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையும் ஒரு வகையில் காரணம் தான். இல்லைனா அவனுக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அவனும் அந்த பாட்டியுடன் சேர்ந்திருப்பான். அதே போல கிழவியின் மரணத்திற்கு பிறகு அவளுடைய நம்பிக்கையால் தான் குடும்பமே அந்த பூசாரியின் பேச்சுக்கு அடிமையாகி இருக்கும். இப்படி பல விஷயங்கள் மனதில் ஓடின.
அதே மாதிரி ரீனா அவளுடைய வாழ்க்கையில் நடந்த துன்பத்தை வைத்து இந்த கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அளந்தது தவறு. அவள் அமைதியாக ஊரை விட்டு போயிருந்தாலும் ராசுவின் மரணம் தவிர்க்க பட்டிருக்கும். எது எப்படியோ, சந்திரமுகி, அந்நியனை விட இது சிறந்த திரைக்கதை அமைப்பு கொண்டது. நாகா, இந்த தொடரை இயக்கியதற்காக பெருமை கொள்ளலாம்.
மின்பிம்பங்கள் இந்த நாடகத்தை ஒரு DVDயில் தர முயற்சி செய்யலாம். மகாபாரதம் சீரியல் இப்படி CDக்களில் பார்த்திருக்கிறேன். பல மொக்கைப் படத்தைப் பார்ப்பதற்கு இப்படி நல்ல சீரியல்களைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment