Sunday 15 April 2018

போணி

மண்ணெண்ணைய் தீர்ந்து போய் நாலு நாட்களாகி விட்டன. காஸ் ‘இப்பபோ அப்பவோ’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. கெரசினை வாங்காமல் இருந்து, காஸும் தீர்ந்து, விருந்தாளியும் வந்து விட்டால் கேட்க வேண்டாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு.
வழக்கமாய் தோட்டக்காரனை சைக்கிளில் கடைத் தெருவுக்கு அனுப்பி தேவைப்பட்டதை அவள் வாங்கி வரச் சொல்லுவாள். அவன் யாரோ ‘சகலை’க்கு காய்ச்சல் என்று இரண்டு நாள் லீவு வாங்கிக் கொண்டு போனவன். வாரம் ஒன்றாயிற்று, ஆளையே காணோம்.
டிரைவரைக் கார் எடுக்கச் சொல்லி டின் சகிதம் புறப்பட்டாள். அந்தக் கடைத் தெருவுக்குப் போவது என்பது அவளுக்கு அவ்வளவாகப் பிடிக்காத சமாசாரம். அது என்ன ஜனங்கள்! நூற்றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில், கும்பல கும்பலாய், சாரிசாரியாய், ஒவ்வொரு கடை முன்னாலும் பிதுங்கி வழியும் மனிதக் கூட்டம்; பாதிப்போர்கள் வேலையாய், மீதி பாதிப்பேர்கள் வெட்டி முறித்துக் கொண்டு, வம்பளந்து கொண்டு.
கார் அந்தத் தெருவில் போக எப்போதுமே ரொம்ப கஷ்டப்படும். காய்கறி, தேங்காய் இறக்கும் லாரிகள்; கட்டை வண்டிகள். சைக்கிள் ரிக்ஷாக்கள், சைக்கிள்கள், பாதசாரிகள், கூலிக்காரர்கள் – எதிரும் புதிருமாய் வந்து தெருவை இரவு இல்லை, பகல் இல்லை என்று சதா நிரப்பிக் கொண்டிருபபார்கள். இத்தனைக்கும் அது ஒருவழிச் சாலை!
அந்தத் தெருவில் மீன் மார்க்கெட்டும், காய்கறி மார்க்கெட்டும், அடுத்தடுத்து இருந்தன. காய்கறி, பழம் வாங்க வேண்டுமானால் சைவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் மார்க்கெட்டுக்குள் பிரவேசிக்க முடியும்.
பிளாட்பாரம் என்று ஒரு ஒழுங்கு இல்லாத அந்தத் தெருவில், இரண்டு பக்கமும் கடைகள் அடைத்துக் கொண்டு நின்றன. பட்டாணி, கடலைக் கடை, வெற்றிலைக்கடை, அரிசியை அம்பாரமாய் கொட்டிக் கொண்டு விற்கும் கடை, தேங்காய் மண்டி, புகையிலை, களிப்பாக்குக் கடை, வெல்ல மண்டி என்று நானாவிதமான கடைகளுக்கு நடுவில் நாலு கடைகளுக்கு ஒரு காபி கிளப் வேறு.
காய்கறி மார்க்கெட்டைத் தாண்டி கிடைத்த இடத்தில் வண்டியை எப்படியோ நிறுத்தினான் டிரைவர்.
‘டின்னை எடுத்துட்டுப் போயி அந்தக் கடையிலே ஒரு டின் கெரஸின் வாங்கிட்டுவா’ என்று பணித்தாள் அவள்.
அவன் போனான். கெரஸின் கடையில் கூட்டம் நெரிவது அவளுக்கு தெரிந்தது. இன்னும் குறைந்தபட்சம் கால்மணியாவது ஆகும் டிரைவர் திரும்ப.
காலை வெயில் சுள்ளென்று பின்பக்க கண்ணாடி வழியாக முதுகில் உறைத்தது. பலாப்பழ சீசன் ஆரம்பமாகி விட்டதால் ஈக்களின் தொல்லை சகிக்க முடியாமல் இருந்தது.
பின் இருக்கையில் சாய்ந்து கொண்டு கண்களை சுற்றிலும் ஓட்டினாள். அவளுக்கு நேர் எதிரில் வாழைப்பழ மண்டி. பச்சைப் பசேலென்று பூவன் தார்கள் வரிசையாய் கொலுவிருந்தன. பழுத்த பழங்களை ‘குடப்பு’ எடுத்து இன்னொரு பக்கமாய் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ரொம்பப் பழுத்துப் போன சில பழங்களை, அழுகிப் போனவற்றை ஒரு கூடைக்காரி மொத்தமாக விலை பேசிக் கொண்டிருந்தாள். அழுகின பழங்கள் மேல் நூற்றுக்கணக்கில் ஈ கூட்டம். இத்தனை அழுகலை எடுத்துப் போய் என்ன வியாபாரம் செய்ய போகிறாள் இந்தக் கிழவி?
அருகில் இருந்தது பட்டாணிக் கடை. மூக்கில் சளி வழிய, அம்மணமாய் நின்றிருந்த குழந்தைகள் இரண்டு கடலை வாங்கிக் கொறிப்பவர்கள் சொத்தை என்று தரையில் விசிறுவதை பொறுக்கித் தின்றன. மாட்டு வண்டி ஒன்று இழுத்து பிடித்துக் கொண்டு எதிர்பக்கம் வந்தது. வரிசையாய் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த வண்டி போக இடமில்லை. ‘ஹை-ஹ-ஹ-ஹட்ரு-ட்ரு’ என மாடுகளை இழுத்து நிறுத்தின வண்டிக்காரன், ‘சைக்கிளை கொஞ்சம் அப்பால நகத்து சாமி’ என்று வந்து போகும் ஆண் மகன்களையெல்லாம் கெஞ்சிப் பார்த்தான்.
ம்ஹூம். ஒருத்தரும் காதில் வாங்கவேயில்லை. வண்டிக்காரன் கீழே இறங்கி ஒவ்வொரு சைக்கிளாகப் பாதை ஓரமாய் நகர்த்தத் தொடங்கினான். இந்தப் பக்கத்தில் சரக்கை இறக்கி முடித்துவிட்ட லாரிக்காரனுக்கு அதற்குள் அவசரம். ‘பாம்…பாம்’ என விடாமல் ஹாரனை அடித்து ”வண்டியை நகத்துய்யா” எனக் கத்தியது தலைவேதனையாய் இருந்தது.
”யோவ்… வண்டிக்காரரே! இன்னா ஒரு ரோட்டிலே வண்டியை நிறுத்திட்டு? எடுய்யா” ஜன்னல் வழியாகத் தலையைவிட்டு லாரி டிரைவர் மீண்டும் கத்தி ஆர்ப்பரித்தான்.
”ஒனக்குத்தான் அவசரமாய்யா? எனக்குந்தான். பாதை உடாம சைக்கிளை நிறுத்திடறாங்க…” வண்டிக்காரன் அசிங்கமாய் வைது கொண்டே சீர் செய்த பாதை வழியாய் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான். லாரியும் தாண்டியது. சீ, என்ன கூட்டம்! என்ன கலாட்டா… அவளுக்கு வியர்த்து, கசகசத்து எரிச்சல் மூண்டது. என்ன பண்ணுகிறான் இந்த டிரைவர்? திரும்பிப் பார்த்தாள். கடையில் யாருடனோ அவன் சுவாரசியமாய்ப் பேசிக் கொண்டிருப்பது புரிந்தது.
எட்டி கார் ஹாரனைச் சப்தித்தாள். டிரைவர் வந்தான். ”என்னாப்பா இவ்வளவு நாழி?”
”நேத்து வந்த சரக்கு தீர்ந்து போச்சாம். புதுசு வந்திருக்கு. எடுத்து ஊத்தறாங்க. கும்பல் இருக்கு.”
”சரி, சரி. சுருக்க வா. இங்கே அவியுது.”
அவன் மறுபடி போனான்.
அவள் பார்வையைத் தனக்கு இடது பக்கம் ஓட்டினாள். காபி கிளப்; புகையிலை மண்டி; வெல்ல மண்டி; வெல்ல மண்டி வாசலில் அச்சு அச்சாய் கறுப்பு வெல்லக் குவியல். இந்தப் பக்கம் வெள்ளைப் பூண்டைச் கொட்டி வைத்துக் கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்தனர் இருவர். ஆண் வியாபாரத்தை கவனித்தால், பெண் பூண்டைப் புடைத்துச் சுத்தம் செய்து கூறு கட்டினாள். காற்றில் பூண்டு தோலி பறந்து வந்து ஜன்னல் வழியாய் அவள் மடிமேல் விழுந்தது. புகையிலை நெடி வேறு. ஜன்னலை மூடினாள்.
அப்போதுதான் அந்தப் பெண்மணி கூடையுடன் அவள் வண்டிக்கருகில் வந்து உட்கார்ந்தாள். கதவைத் திறந்தால் அவள் மேல் இடிக்கும்; அத்தனை நெருக்கத்தில் அமர்ந்தாள். சாணி பூசின கூடையைச் சாக்குப் போட்டு மூடியிருந்தாள். மொண மொணவென்று எதையோ முணுமுணுத்த வண்ணம் சாக்கை எடுத்து தரையில் பரப்பினாள். கூடையில் இருந்த கொய்யாப் பழங்களை அதில் கொட்டி பெரிசு, சிறிசு எனப் பிரிக்க முற்பட்டாள்.
நாட்டுக் கொய்யாப் பழங்கள். சற்றே நீளமாய், பச்சையாய், கிளிப் பச்சையாய் இருந்தன. இன்னும் நன்றாகப் பழுக்கவில்லை.
Image
அந்தப் பெண்மணிக்கு என்ன வயசு இருக்கும? அவளுக்குக் கணிக்கத் தெரியவில்லை. அழுக்கான மெலிந்த உடம்பு, சாயம் போன புடவை, ஜாக்கெட் இல்லாத வெற்று மேனி. அள்ளிச் செருகின செம்பட்டை முடி. மூக்கில் ஒரு சிவப்புக் கல் பித்தளை மூக்குத்தி, கழுத்தில் கறுத்துப் போன மஞ்சள் கயிறு, வாயில் வெற்றிலை.
‘‘காலையிலே கழுத்தை அறுக்கணும்னு இந்தச் சனியன் இருக்குது. எழுந்து பொழுதுதோட வேலைக்குக் கௌம்பினா தாவலை. தானும் கௌம்பாது; என்னையும் உடாது. பளத்தைப் பொளுதோட வாங்கிக் கடை போட்டா விக்கும். வெயிலு கொளுத்தத் தொடங்கிடுச்சு, இன்னா வியாபாரம் ஆவப் போவுதோ..?” இப்போது கொய்யாப் பழக்காரி பேசினது அவளுக்குத் தெளிவாய்க் கேட்டது.
‘‘இன்னா ஆண்டாளு… இன்னிக்குப் கொய்யாப் பளம் பிடிச்சிருக்கியா?.. இளநீ புடிக்கப் போறேன்னே… இன்னா விஸயம்?’’ புகையிலை மண்டிப் பையன் ஒருத்தன் அவளிடம் நெருங்கி வந்து பேச்சுக் கொடுத்தான்.
‘‘ஆங்… இளநீ யாபாரம் பண்ணி நா கீய்ச்சேன்… போவியா… நேத்து அது இருக்கிற பணத்தையெல்லாம் கொண்டு போய்க் குடிச்சிட்டு வந்திடுச்சி. காலையிலே எளுந்து ஒரே சண்டை, என்னாத்தை நான் இளநீ புடிக்கறது. துட்டு வாணாம்?”
”அப்ப இன்னிக்கி எங்காசை திருப்ப மாட்டேன்னு சொல்லு?”
கொய்யாப்பழக்காரி பதில் ஏதும் பேசவில்லை.
இவனிடம் கடன் வாங்கியிருக்கிறாளா?
”சரி… சரி… ரெண்டு பளம் கொடு… நா போகணும்…”
”இன்னும் போணி ஆவலையே. நீ ஒங்கடைக்குப் போ… நான் அப்பால கொணாந்து தாரேன்.”
”அட! இன்னாம்மே… டபாய்க்கிறே… எங்காசு குடு… நா போறேன்…”
தான் வகையாக மாட்டிக் கொண்டிருப்பது பழக்காரிக்குப் புரிய, இரண்டு பழங்களை எடுத்து அவன் கையில் போட்டாள்.
பழத்தை நகத்தால் விண்டு சுவைத்தான் அவன். உள்ளே பழம் சிவப்பாய் இருந்தது. ‘இந்தா பொயிலை’ அவன் எழுந்து போகு முன் ஒரு சின்ன காம்பு புகையிலையை அவள் மடியில் போட்டு விட்டுப் போனான்.
அவன் தலை மறைந்த பிறகு இவள் மொணமொணத்தாள்,  ‘‘பெர்…ய பொவயிலை கொடுத்துட்டாரு… பைசா பெறாத பொவயிலை கொடுத்துட்டு இருவது பைசா பலம் தின்னுட்டுப் போறதைப் பாரு. தூ! இன்னும் போணியே ஆவலை. அதுக்குள்ளவா இவனுக்கு ஆயிப்போச்சி… அவன் பேதிலே போக…” அவள் காரித் துப்பினாள்.
டிரைவர் வந்து விட்டான். டிக்கியில் டின்னை வைத்து விட்டு முன்னால் ஏற வந்தான்.
அவளுக்குத் திடீரென்று இந்த கொய்யாப் பழக்காரி யாரிடம் போணி செய்கிறாள் என்று பார்க்க ஆவலுண்டானது. ”வீட்டிலே முட்டை இல்லே போலிருக்குது. போய் ஆறு வாங்கிட்டு வாயேன்.” பணத்தைக் கொடுத்து டிரைவரை மீண்டும் அனுப்பினாள்.
கொய்யாப் பழக்காரி இப்போது கடையை நன்றாய் பரத்தி விட்டாள்.
ஒரு கிழவன் வருகிறான். கூடவே பேரனா? ‘‘தாத்தா கொய்யா பளம்’’ என்று பையன் சிணுங்க, கிழவன் குந்தி உட்கார்ந்து பழக்காரியிடம் பேரம் பேசினான்.
”ஓலை கட்டின பளம். ரூபாய்க்கு ஆறு. ஒரே விலை’’ அவள் கராறாய்ப் பேசினாள்.
”அங்கங்கே பத்து கொடுக்கறாங்க… இன்ன நீ..?”
”அப்ப அங்கியே போய் வாங்கிக்க… இங்கே ஒரே விலை. ஏளு வரும்…”
கிழவன் ஒன்பது பழம் பொறுக்கி பையில் போட்டு ஒரு ரூபாயை நீட்டினான்.
கொய்யாப் பழக்காரிக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘ஏழு பளம்தான்னு நான் சொல்றேன். ஒன்பது எடுத்தா எப்படி? போடுய்யா கீளே’’ கையை நீட்டி பழங்கள் கொண்ட பையைப் பிடித்தாள்.
”அட போம்மே. ஒன் பளம் இல்லாட்டா வேற கெடைக்காதா என்ன? வாடா தம்பி.” ரோஷம் வந்து பழங்களைக் கொட்டி விட்டு கிழவன் கிளம்பி விட்டான்.
போணி ஆவதற்கு முன் அபசகுனம் மாதிரி ஆகிறதே என்று கடைக்காரிக்கு கோபமான கோபம்.
முட்டைகளுடன் டிரைவர் வந்துவிட்டான்.
”போணி பண்ண துப்பில்லாததுகள்ளாம் கடைக்கு வந்திடுங்க… மானங்கெட்டதுக…’’ அவள் ஆக்ரோஷமாக வசைபாடுகையில் ஒரு இளைஞன் அவளிடம் வந்து நின்றான்.
போணி ஆகப்போகிறதா? என்ன சொல்லி டிரைவரை நிறுத்தி வைக்கலாம்?
”பச்சை மொளகாய், இஞ்சி இல்லேன்னாங்க. போய் இருபது காசுக்கு வாங்கி வா.” டிரைவருக்கு நினைத்து நினைத்து அவள் வேலை சொல்லுவது கோபத்தை எழுப்பியது. திறந்த கதவைப் படீரென ஒங்கிச் சாத்திவிட்டுப் போனான்.
”என்னம்மா பழம் எப்படி?”
கூடைக்காரி இன்னும் கோபம் தணியாத நிலையிலேயே இருந்தாள்.
”ரூபாய்க்கு ஆறு. வேணும்னா கை வை.”
”எட்டு வருமாம்மா?” என்று கேட்டுக் கொண்டே அந்த இளைஞன் பழங்களில் கையை வைக்கவும் அவள் சீறினாள்.
”தொடாதைய்யா, வெலையை கேக்க வேண்டியது. பளங்களை புரட்ட வேண்டியது. அப்புறம் வேணாங்கிறது. காசை வெச்சுட்டு தொடு. இன்னும் போணி ஆவலை. அதுக்குள்ளாற தொடாதேன்னா புரியாது?”
கொஞ்சம் ‘டீக்’ காக உடுத்தி, படித்தவன் மாதிரி தோற்றமளித்த இளைஞனுக்கு முகத்தில் அறைந்தாற் போல ஆகிவிட்டது.
”வார்த்தையை அளந்து பேசும்மா. விலை கொடுக்காமலா உன் பழத்தை எடுக்கப் போறேன்? மரியாதை இல்லாத பேச்சு என்கிட்டே வாணாம். ஆமாம்” கையை உதறிக் கொண்டு எழுந்து நடந்து போனான்.
அந்த வாடிக்கையும் போய் விட்டது. இவள் எப்போது போணி பண்ணி, எப்போது வியாபாரத்தை முடிக்கப் போகிறாள்? அவளுக்குப் பாவமாக இருந்தது.
பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த டிரைவர் அவளிடம் பேசாமலேயே இருக்கையில் அமர்ந்து ‘வீட்டுக்குத்தானே!’ என்றும் கேட்டுவிட்டு வண்டியைக் கிளப்பி விட்டான்.
கூடைக்காரி உரத்த குரலில் யாரையோ ‘‘பேமாணிப் பசங்க… ராஸ்கோல்’’ திட்டுவது அவளுக்குக் கேட்டது.
யாரைத் திட்டுகிறாள்? அவள் குடிகாரக் கணவனையா? கடன் கொடுத்த புகையிலைப் பையனையா? போணி செய்யாமல் போன நபர்களையா?
கூடைக்காரிக்கு எப்போது போணி ஆகும் என்ற கவலை அவள் நெஞ்சை அடைத்துக் கொண்டது.

No comments:

Post a Comment