Friday 2 June 2017

‘சிலம்பு’ செல்லப்பா என்று முகத்துக்கு முன்னாலும், ‘அலம்பல்’ செல்லப்பா என்று முதுகுக்குப் பின்னாலும் அழைக்கப்படும் செல்லப்பாவை நான் முதன் முதலில் நாலு வருடங்களுக்கு முன்புதான் சந்தித்தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. பல வருடங்களாக வெளிநாடுகளிலேயே உத்தியோகம் பார்த்துவந்த நான், ஒரு ப்ரொஜெக்ட் விஷயமாக ஓர் ஆறுமாத காலம் கொழும்பில் வேலை பார்க்க வேண்டிவந்தது. அந்த சமயத்தில்தான் என் பழைய நண்பர் சண்முகத்தின் தரிசனமும் அவர் மூலம் செல்லப்பாவின் நட்பும் எனக்கு கிட்டின.
ஆறு மாதங்களுக்கு ஒரு தன்வீடு எடுத்து இருப்பது எனக்கு தோதுப்படவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் ஹோட்டல் சாப்பாடும் தாங்காது. காலிரோடும், சென்ற ரோரன்ஸ் வீதியும் சேரும் சந்திப்பில் நின்றபடி ஒரு மாலை நேரம் இதுபற்றி நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என் குருகுலவாச நண்பரான சண்முகம் தென்பட்டார். அந்தக் காலத்திலேயே என்னைத் ‘தம்பி’ என்று பாசத்தோடு அழைத்தவர்; இருபது வருடம் ஆகியும் வெகு சுலபமாக என்னை அடையாளம் கண்டுகொண்டு விட்டார்.
அதன் விளைவுதான் என்னுடைய ‘சமறி’ வாழ்க்கை. விடாப்பிடியாக கையைப் பிடித்து அழைத்து வந்துவிட்டார் சண்முகம். அவருடைய உடம்பைப் போலவே அவருக்கு தாராளமான மனசு. அவர்தான் எனக்கு ‘சிலம்பு’ செல்லப்பாவை அறிமுகம் செய்து வைத்தவர். ‘சிலம்பு’ என்ற அடைமொழி வந்த விருத்தாந்தத்தை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அந்த மகத்தான காரியத்தை நீங்களே ஏற்கனவே செய்து முடித்திருப்பீர்கள். சிலப்பதிகாரத்திற்கு நடமாடும் authority செல்லப்பா தான். இளங்கோ அடிகள் உயிரோடு இருந்திருந்தால் அவரே வந்து இவரிடம் சில ஐயங்களை தீர்த்துக் கொண்டிருப்பார்.
செல்லப்பாவுக்கு வயது 45க்கு மேலே இருக்கும். நித்தமும் ஏகாசி விரதம் அநுட்டிப்பார் போன்ற மெலிந்த தோற்றம். நாலு நாள் தாடி. வெள்ளை மயிரும் கறுப்பு மயிரும் சரிசமமாக பங்குபோட்டு அவர் தாடையிலே படர்ந்திருக்கும். உணர்ச்சிவசப்படும் மெல்லிய நீண்ட மூக்கு; ஆழ்ந்து யோசிக்கும் கண்கள். வெற்றிலைப் பிரியர். நாறப்பாக்கு, பிஞ்சுப்பாக்கு, களிப்பாக்கு என்று அலங்காரமாக அடுக்கி வைத்து, தன் கையால் žவி, வாய்க்கு ஒய்வு கொடுக்காமல் மென்று கொண்டேயிருப்பார். பேசத் தொடங்கினார் என்றால் பாத்திரம் அலம்புவது போல நீட்டுக்கு பேசிக்கொண்டே போவார். அவருக்கு வேண்டாதவர்களை ‘பிரேக் இல்லாத சைக்கிள்’ என்று அவரை வர்ணித்தால் அதை நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது.
தமிழ் தினசரி ஒன்றில் கடந்த பதினைந்து வருடங்களாக வேலை பார்த்து வந்தார். அவர் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிய ‘சிலம்பின் சிறப்பு’ கட்டுரைகள் புத்தகமாக வந்திருந்தது. இலக்கியத்தில் இடைவிடாத ஆர்வம். தானும் தன் வெற்றிலையுமென்று இருப்பார். சிலப்பதிகாரத்தில் அவருடைய ஈடுபாட்டை கேள்விப்பட்ட உடனேயே பள்ளி நாட்கள் தொட்டு எனக்கு இருந்து வந்த ஒரு சந்தேகத்தை கேட்டுவிடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன். சாப்பிடும்போதுதான் இதற்கு சரியான வசதி. பல விவாதங்களும், போர்களும், சிரிப்புகளும் அதே சாப்பாட்டு மேசையை சுற்றியே அங்கே நடைபெற்றன. நான் உண்மையில் என்னுடைய ஐயத்தை கிளப்பிய தன் காரணம் அவருடைய ஆழ்ந்த புலமையை சோதிப்பதற்காகவும் இருக்கலாம்.
“சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல், ‘திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!’ என்று தொடங்குகிறது. அதற்குப் பிறகுதான் ‘ஞாயிறு போற்றுதும்’ என்று வருகிறது. இது என்ன நியாயம்? உயிர்களுக்கெல்லாம் ஆதாரம் சூரியன் அல்லவா? சூரியன் இல்லாவிடில் சந்திரன் ஏது? சந்திரனை முன் வைத்து, சூரியனை பின் வைத்தது சரியா? என்பதுதான் என் ஐயம்.
செல்லப்பா சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். அவர் என்னுடைய கேள்விக்கு அவகாசம் வேண்டி நேரத்தை கடத்தவில்லை. ‘இவர் என்னைச் சோதிக்கிறாரோ?’ என்பது போலத்தான் அந்த பார்வை இருந்தது. அதை நிச்சயம் செய்துகொண்டு செல்லப்பா கதைக்கத் தொடங்கினார்.
“சிலப்பதிகாரத்தை படிக்கும்போது அவசரம் கூடாது. அதில் சொல்லாத விஷயங்களே இல்லை. இந்தக் கேள்விக்குப் பதில் பின்னால் ‘அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் வருகிறது.
“நீங்கள் ஒரு நண்பர் வீட்டுக்கு போகும்போது அவர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி போகிறீர்கள் அல்லவா? குழந்தைக்கு செய்வது பெற்றோர்க்கு செய்வதுபோல. பெருங்காப்பியங்கள் பாடும்போது விநாயகருக்குத்தானே முதல் வணக்கம்; மற்றக் கடவுளருக்கு பின்னால்தான். பிள்ளையை வணங்கினால் பெற்றோரை வணங்கியதற்கு சமம்.
“சூரியன் கடலிலே மறைந்து விட்டான். பூமாதேவி தன் ஆசைநாயகனை காணாது வருந்துகிறாள். ‘கதிர்கள் எல்லாம் பரப்பி என்னை ஆள்பவனை திடீரென்று காணவில்லையே! நிலவுக்கதிர்களை விரித்து ஒளிசெய்யும் என் செல்வன் சந்திரனையும் காண்கிலேனே!’ என்று நிலமடந்தை புலம்புகிறாள்.
“பூமியை அரசியாகவும், சூரியனை அரசனாகவும், சந்திரனை அவர்கள் செல்வனாகவும் கண்ட புலவருடைய கற்பனை இது.
விரிகதிர் பரப்பி, உலகம் முழுதாண்ட ஒருதனித் திகிரி உரவோன் காணேன்; அங்கண் வானத்து, அணிநிலா விரிக்கும் திங்கள் அம் செல்வன் யாண்டுளன் கொல்?
“இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ‘திங்களைப் போற்றுதல்?’ முதலடியாக வந்தது பெரிய குற்றமாகத் தெரியாது. எமக்கு முன் வந்துபாடி வைத்துப் போன முனிவர்கள். தியானத்தில் இருந்துவிட்டு பாடியவை இவை. ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ்ந்து சிந்தித்த பின்தான் அவர்கள் பாடலை இயற்றினார்கள்” என்றார்.
செல்லப்பாவின் புலமையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கு நான் எனக்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
‘சமறி’ வாழ்க்கை எனக்கு புதுமையாகவும், வசதியாகவும் இருந்தது. சமைத்துப் போட ஒரு நல்ல சமையல்காரர் இருந்தார்; வீட்டைக் கூட்டி சுத்தமாக வைப்பதற்கு ஒரு மனுசி வந்து போகும்; ஞாயிறு தோறும் சலவைக்காரர் வருவார். எல்லாமாக அந்த சமறியில் எட்டுப் பேர் குடியிருந்தார்கள். மாதமுடிவில் கணக்குப்பண்ணி செலவை எட்டில் ஒரு பங்காக பிரித்துக் கொள்வோம். எல்லோருமே மணமுடித்த பேர்வழிகள். சிலர் மனைவியை இழந்தவர்கள்; சிலர் ஓய்வெடுத்தவர்கள்; சிலர் பிள்ளைகளின் படிப்புக்காக குடும்பத்தை பிரிந்து வந்தவர்கள்.
அங்கே பிரதானமாக மூன்று ‘குரூப்கள்’ இருந்தன. கடுதாசி சிளையாடி. தண்ணி அடிப்பதை தலையாய பொழுதுபோக்காகக் கொண்டது ஒன்று; அடுத்து, அலுவலகத்தில் ஓவர் டைம் செய்து வீட்டிலே வந்து நித்திரை கொண்டு தீர்க்கும் கும்பல். இது தொல்லையில்லாத, சத்தமேயில்லாத குரூப். மூன்றாவது குழுவில்தான் செல்லப்பாவும், சண்முகமும் நானும் அடங்குவோம். படங்கள் பார்ப்பது, சஞ்சிகைகள், புத்தகங்கள் படிப்பது, இலக்கிய சர்ச்சை இப்படியாக எங்கள் பொழுது போகும்.
அடுத்து வந்த ஞாயிறு ஒன்றில் சமையலறை அல்லோல கல்லோலப்பட்டது. சண்முகம் சமையற்காரனை அனுப்பிவிட்டு தானே கருவாட்டுக்கறி சமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இப்படி அடிக்கடி அங்கே சமையலறை ஆட்சி மாறும். சுதுமலையாருடைய முறைப்படி கருவாட்டுக்கறி வைப்பதில் இவர் ஒரு விண்ணர். கருவாட்டை நீளநீளமாக வெட்டி எண்ணெய்ச் சட்டியில் போட்டு ‘தீய்ச்சுக்’ கொண்டிருந்தார்.
கல்லோயா சாராயம் ஒரு ‘பெக்’ அடித்திருந்ததினால் ஒரு சாண் உயரத்தில் மிதந்து கொண்டிருந்தார். எனக்கு கனநாளாக கேட்கவேணும் என்றிருந்த ‘அந்த விஷயத்தை’ கேட்பதற்கு இது நல்ல சந்தர்ப்பம் போல பட்டது.
நாங்கள் படிக்கும்போது நாகலிங்க மாஸ்டர் தான் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தவர். நேற்றுத்தான் சிவதனுசை முறித்தவர் போன்ற தோற்றம். விலத்தி, விலதிதிதான் நடப்பார். எங்கள் கிளாஸ’ல் தங்கரத்தினம் என்று ஒரு பெட்டை. நெருப்பில் சுட்ட ராசவள்ளிக் கிழங்குபோல் சிவப்பாய் இருப்பாள். எந்த நேரமும் பசலை நோய் வாட்டும் கண்கள். சண்முகத்துக்கு அப்ப காதல் செய்யும் வயசு. சும்மா இருப்பாரா? இரவும் பகலும் கண்விழித்து அவளுக்கு ஒரு காதல் வாசகம் எழுதினார். சமயம் வரும்போது கொடுப்பதற்காக ‘Tale of Two Cities` புத்தகத்தின் கடைசி ஒற்றையில் ஒளித்துவைத்திருந்தார். அன்றைக்கென்று பார்த்து இவருடைய புத்தகத்தை வாங்கி பரடம் எடுத்தார் நாகலிங்க மாஸ்டர். இவருடைய காதலின் ஆழத்தையும் ஆங்கில விசாலத்தையும் காட்டுவதற்காக தீட்டப்பட்ட அந்தக் கடிதம் சமய சந்தர்ப்பம் தெரியாமல் மாஸ்டரின் காலடியில் விழுந்தது.
My dear Thangaratinam, When your father and mother went to see saparam (சப்பரம்) tonight I will come to your house.
இவ்வளவுதான் கடிதத்தின் வாசகம். மாஸ்டருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தவிட்டது. நுனியிலே சுட்டு பதப்படுத்தப்பட்ட துவரந்தடியை எடுத்து விளாசத் தொடங்கினார். அவர் அடிக்கும் போது “இங்கலீஸ’ல் எழுதுவியா? இங்கிலீஸ’ல் எழுதுவியா?” என்று சொல்லிச் சொல்லித்தான் அடித்தார். பார்க்க பாவமாயிருந்தது. பெட்டைக்கு முன்னால் அடி வாங்குவது எவ்வளவு அவமானம்! அந்தப் பள்ளிக்கூடத்தில் இந்த Tale of Two Lovers கொஞ்ச காலமாக மூலை முடுக்கெல்லாம் இழுபறிப்பட்டது.
அந்த விவகாரத்தின் முடிவு என்ன? அதைப்பற்றித்தான் கேட்பதற்கு நான் ‘சுழன்று, சுழன்று’ வந்து கொண்டிருந்தேன். நான் துணிவை வரவழைத்து அவரைக் கேட்டபோது, “தம்பி, சிவப்பு பெட்டையளை நம்பக்கூடாது; அவள் சும்மா எனக்கு போக்கு காட்டினவள். பிறகு ஒரு சப்இன்ஸ்பெக்டரை முடிச்சுக்கொண்டு ஓடிப் போட்டாள்” என்று கதைக்கு முத்தாய்ப்பு வைத்தார்.
யாழ்ப்பாணத்தில் சமையலறையை ஆண் பிள்ளைகள் அண்ட முடியாது. சண்முகம் என்னவென்றால் கை தேர்ந்த பரிசாரகனைப்போல சமைத்து வைத்திருந்தார். அந்த மணத்துடன் அரைப்பானை சோறு சாப்பிடலாம். கருவாட்டை பல்லிலே கடித்து இழுத்து ரசித்தபோது நாலாவது பரிமாணத்துக்கு ஆளைத் தூக்கிப் போனது. ‘எங்கே இப்படி வைக்கக்கற்றுக் கொண்டார்?’ என்று கேட்கத் தோன்றியது. சித்திரகூட மலையில் இலக்குமணன் தன்னந்தனியாக கட்டிய பர்ணசாலையை பார்த்த ராமன் ‘என்று கற்றனை நீ இதுபோல்? என்று கட்டி அணைத்து அழுதார் அல்லவா? அதுபோல் சண்முகத்தை கட்டி அணைக்கத்தான் தோன்றியது. அவர் பலூன்போல மிதந்து கொண்டிருந்த படியால் அந்த எண்ணத்தை நான் கைவிட வேண்டி வந்தது.
சாப்பிடும்போது வழக்கம்போல செல்லப்பா வந்து கலந்து கொண்டார். சாப்பாடோ நல்ல உறைப்பு. சண்முகம் சிறிது தலையை ஆட்டியபடி, கண்களிலே நீர் ஓட, சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தங்கரத்தினத்தன் ஞாபகம் வந்ததோ? என்னவோ? அப்படிச் சாப்பிட்டவர் சடுதியாக செல்லப்பாவின் பக்கம் திரும்பினார்.
சண்முகத்துக்கு சிலப்பதிகாரப் புத்தகத்தின் அட்டைகூட எப்படி இருக்கும் என்று தெரியாது; ஆனால் எங்கள் வாக்குவாதங்களில் உற்சாகமாக ஆலவட்டம் பிடித்து, ‘சிரித்துக் கொடுத்து’ கதைக்கு சுவை சேர்ப்பதுதான் அவருடைய பங்கு. சண்முகம் வாய் திறந்தால் அநேகமாக அது செல்லப்பாவை žண்டுவதற்காகத்தான் இருக்கும். கருவாட்டைக் கடிச்சு இழுத்துக்கொண்டு செல்லப்பாவை நோக்கி ஒரு கேள்விக் கணை தொடுத்தார். சண்முகம், நான் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“ஏன் ஐஸே! சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியெல்லாம் கருவாடு சாப்பிட்டிருப்பினமோ?” என்று துருவினார்.
செல்லப்பா சிரித்துவிட்டு பேசாமல் இருந்துவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் வாயிலிருந்து கடைசி கருவாட்டுத்துண்டை சப்பி விழுங்கிவிட்டு, தாடையைத் தடவி, புருவத்தை நெரித்து, சண்முகம் கேட்ட கேள்விக்கு žரியஸாக பதில் சொல்லத் தொடங்கினார். கதை கேட்பதற்கு அவருக்கு முன்னால் ஆட்கள் இருந்தால் அவர் அவ்வளவு சுலபத்தில் அந்த சான்ஸை இழக்க சம்மதிப்பாரா?
“அரச வம்சத்தினர் முறையாக வேட்டையாடியதை உண்பது தர்மம் என்று வாழ்மீகியே கூறியிருக்கிறார். சிலப்பதிகாரம், வணிக குலத்தின் சிறப்பை சிதிதரிக்க எழுந்த முதல் நூல். இதிலே கானல் வரியிலே கடற்கரையில் காயப்போட்ட கருவாட்டை பறவைகள் கொத்தாமல் அழகிய பெண்கள் காத்துக்கொண்டு நின்றார்கள் என்று வருகிறது. கருவாட்டை விருப்பமுடன் தின்பவர்கள் அப்போது நிறைய இருந்திருக்கிறார்கள். ஆனால் கோவலன் உண்டானா என்பது தெரியவில்லை? அவன் மதுரைக்கு போய் கொலை படுமுன் கண்ணகி கையால் உண்ட கடைசி உணவைப் பற்றி சிலப்பதிகாரம் அழகுடன் வர்ணிக்கிறது.
“‘குமரி வாழையின் குருத்தகம் விரித்து’ கண்ணகியானவள் கோவலனுக்கு உணவு பரிமாறுகிறாள். என்ன சாப்பாடு?
கோளிப் பாகல், கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய், மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு, வாழைத் தீங்கனி
இவற்றுடன் சோறும் சமைத்து, பால் நெய் மோருடன் கோவலனுக்கு கடைசி முறையாக உணவு பரிமாறுகிறாள், கண்ணகி. அந்த சாப்பாடு செரிக்குமுன்பே அவன் இறக்கப்போவது அவளுக்கு அப்போது தெரியாது.”
உருக்கமாக செல்லப்பா வர்ணித்ததைக் கேட்டபோது அவர் புலமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. அத்துடன் நின்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஆனால் அதற்கு அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் தெரியாமல் போய் ஒரு கேள்வியை கேட்டு நான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன்.
சண்முகம் என்னோடு ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரு வருடம் படித்தவர். ‘கற்க கசடறக் கற்க’ என்பதற்கிணங்க ஆறஅமரப் படிக்கவேண்டும் என்ற அசைக்க முடியாத ஆசையுள்ளவர். அந்த லட்சியத்தை சாதிப்பதற்காக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடம் தங்கி தன் அறிவை விருத்தி செய்தவர். அவர் எட்டாம் வகுப்பில் ‘வாங்கு தேய்ச்சுக்’ கொண்டிருந்தபோது நான் அவரை எட்டிப் பிடித்துவிட்டேன். அப்பவோ அவர் இளந்தாரி; என்னைத் ‘தம்பி’ என்றுதான் அழைப்பார். வஞ்சகமில்லாத அவருடைய உடம்பு வத்தகப்பழம் போல ‘பொதுக், பொதுக்’ என்று இருக்கும். எந்தக் கிளாஸ”க்கு போனாலும் கடைசி வாங்கு ஆட்சியுரிமை அவருக்குத்தான்.
அவருடைய முகம் ‘பக்கீஸ்’ பெட்டி வடிவத்தில் சதுரமாக இருந்தால் ‘சப்பட்டை’ சண்முகம் என்று ஆசையாக அழைக்கப்பட்டார். இலவசமாகக் கிடைக்கும் கோயில் தளிசைக்கு உயிரையும் கொடுப்பார். சின்னப்பெடியன் கூட சேட்டைவிடும் அளவுக்கு நல்ல மனிதர்.
அவருடைய உயரத்தையும், அகலத்தையும் பார்த்து உதைபந்தாட்ட அணியில் அவரை சேர்த்துக் கொண்டார்கள். எங்களுக்கு பெருமை. எட்டாம் வகுப்பில் இருந்து எடுபட்டவர் இவர் ஒருவரே. Right full back ஆக பதவியேற்றார். பந்து வரும் போதெல்லாம் ஓங்கி, ஓங்கி அடிப்பார். காலில் பந்து பட்டுதோ எட்டுமூலைக் கொடிபோல விண் கூவிக் கொண்டு பறந்து அடுத்த கோல் போஸ்டுக்கு கிட்டப் போய் விழும். ஆனால் பத்துக்கு ஒன்பது தடவை மிஸ் பண்ணிவிடுவார்.
அந்தக் காலத்தில் இப்படி தவறி விடுவதை ‘ஓலம் விடுதல்’ என்று சொல்லுவார்கள். அது ‘தமிழ் வார்த்தையா, ஆங்கில வார்த்தையா’ என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஒருநாள் முற்றவெளியில் நடந்த ஒரு முக்கிய மாட்ச்சில் இப்படி இவர் ‘காலைத் தூக்கி ஆடி’ அளவுக்கு அதிகமாக ‘ஓலம் விட்டு’ எங்களுக்கு தோல்வியைத் தேடித் தந்தார்.
அடுத்த நாள் காலை எங்கள் தமிழ் மாஸ்டர் வகுப்புக்குள் நுழைந்தார். அவருடைய சொண்டுகள் சிறியவை; அவருடைய எடுப்பான பற்களை மூட தைரியமில்லாதவை. அறமிஞ்சி கோபம் வந்தாலொழிய அடிக்க மாட்டார். அவர் வந்ததுமே என்றுமில்லாத வழக்கமாக பின்வரும் கந்தப்புராணப் பாடலை கரும்பலகையில் எழுதினார்:
நண்ணுதற் கினியாய் ஓலம்
ஞான நாயகனே ஓலம்
பண்ணவற் கிறையே ஓலம்
பரஞ்சுடர் முதலே ஓலம்
இதை எழுதிவிட்டு ‘என்ன, சண்முகம் சரிதானே?’ என்று கேட்டார். கிளாஸ் முழுக்க ‘கொல்’ என்று சிரித்தது. கொஞ்ச நாளாக அவர் ‘ஓலம் சண்முகம்’ என்று அழைக்கப்படாத ஞாபகம். காலப்போக்கில் இந்த சங்கதி மறந்து அவர் பழையபடி ‘சப்பட்டை’ சண்முகமானார்.
இது தவிர, மறக்கமுடியாத உற்ற நண்பராக நான் அவரை கருதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர்தான் முதன்முதலாக எனக்கு ‘எப்படி சோதனைக்கு படிப்பது?’ என்ற தேவரகஸ்யத்தை உபதேசித்தவர். ஒரு பெரிய அண்டாவில் சுடுநீர் நிரப்பி அதற்குள்ளே காலை வைத்து இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று படிப்பாராம். இந்த சூட்சுமத்தை எனக்கு மட்டுமே கூறியிருந்தார். ஆனால் இந்த வழியைப் பின்பற்றி அவர் அடைந்த வெற்றி வாகைகளை கணக்கெடுத்த நான் அதிக நாள் தொடர்ந்து இந்த முறையை அநுசரிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
இப்படியாக பல விதங்களில் குருவாகவும், நண்பனாகவும் இரு நத சண்முகம் எனக்கு சமறி வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை நுணுக்கமாக கற்றுத் தந்தார். சமறி வாழ்க்கையின் அநுகூலங்கள் தெரியாமல் ‘இவ்வளவு நாளும் என் வாழ்க்கையை வீணாக்கிவிட்டேன்’ என்று வருத்தப்பட்டேன். அது சொர்க்கத்துக்கு அடுத்தபடி தின்னவேலி சூத்திரக்கிணறு சுத்துவதுபோல எல்லாம் ஒரு கிரமத்துடன்தான் அங்கே நடக்கும். பிச்சுப்பிடுங்கல் இல்லை; அதிகாலைகளில் மனைவியின் சுப்ரபாதம் போன்ற நச்சரிப்பு கிடையாது. ‘தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னம் சிறுக்தைகள் பேசி’ சோம்பலை வளர்ப்பதற்கு இதைவிட சொர்க்கம் பூலோகத்திலே இல்லையென்று அடித்துச் சொல்லலாம்.
இந்த மாதிரி அமைதியாகப் போகும் வாழ்க்கை, சனிக்கிழமை காலை வேளைகளில் திறை மாறிவிடும். ‘சனி நீராடு’ என்று ஓளவையார் எழுதிவைத்தது யாழ்ப்பாணத்து கோழிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். சைக்கிள் கரியரில் உமலைக் கட்டியபடி பெரியகடைக்கு கணவாய் வாங்கப் போகும் ஜனக்கூடங்களும் இந்த நாட்களில்தான். சமறி குடும்பத்தினர் எல்லாம் வழிய, வழிய எண்ணெய் வைத்து முழுகி தங்கள் பாரம்பரிய தர்மத்தை நிலைநாட்டுவதும் இந்தச் சனிக்கிழமைகளில்தான்.
எல்லோரும் இப்படி எண்ணெய் தேய்த்து, சுவறவிட்டு ‘தப்பு தப்பு’ என்று தப்பி நிற்கும்போது பார்த்தால் ஏதோ மல்யுத்த விளையாட்டுக்கு தயார் செய்வதுபோலத் தோன்றும். அதிலும் சண்முகம் சப்பாத்திக்கு தட்டுவதுபோல ‘தப்தப்’ என்று தப்பாமல் தட்டியவாறே இருப்பார். செல்லப்பா தப்பல் பிரியல் அல்ல; அவருடைய சித்தாந்தம் சூடுபறக்கத் தேய்ப்பது. ஆகவே அவர் இந்த நாட்களில் தேய்த்து தேய்த்து கால் இஞ்சி கட்டையாகிவிடுவார்.
சண்முகம், அச்சரக்கூட்டை அரக்கிவிட்டு, வயிற்றிலுள்ள சுருக்கங்களை இழுத்து நெளிவெடுத்து எண்ணெய் தேய்ப்பது பார்க்க அம்சமாக இருக்கும். முன்னொரு காலத்தில் ஒரு பிரம்மாண்டமான யாவாரி நல்லூரில் இருந்தாராம். அவருடைய வயிற்று மடிப்புகளை கலைத்து எண்ணெய் பூச இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தாராம். ஒருமுறை அவருடைய வயிற்று மடிப்பை குலைத்த போது தேரை ஒன்று துள்ளிப் பாய்ந்ததாம், அப்படித்தான், சண்முகம் மடிப்புகளை விரித்து விடும்போது நான் கண்களை ஆவலோடு மேயவிட்டு காத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த அற்புதமான மத்தியான ஆர்ப்பாட்டங்கள் என்னுடைய ஒரு மடைத்தனமான கேள்வியால் ஒருநாள் சரிந்து வீழ்ந்தன.
சாலிவாகனன் என்று ஒரு பிராம்மணச் சிறுவன். சிக்கலான வழக்குகளுக்கு தீர்ப்புக் கூறுவதில் வெகு சமர்த்தன். அரசன் கைவிட்ட ஒரு கேஸை எடுத்து அதிசாமர்த்தியமாக தீர்ப்பு வழங்கி அரசனுடைய கோபத்துக்கு ஆளாகியவன்.
சாகக் கிடந்த ஒரு வைசியன் தன் நாலு பிள்ளைகளையும் அழைத்து தான் இறந்த பிறகு தன் திரவியம் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டில் காலின் கீழ்வைத்திருக்கும் குறிப்பின்படி பகிர்ந்து கொள்ளும்படி கூறி இறந்துவிட்டான். ஒரு கட்டில் காலின் கீழ் உமியும், ஒரு காலின் கீழ் மண்ணும், மற்றதின் கீழ் சாணமும், கடைசிக் காலின் கீழ் ஒரு பொற்காசும் இருந்ததை கண்டார்கள். இந்த குறிப்பின்படி மன்னன்வடத் தீர்ப்பு கூறு முடியவில்லை. ஆனால் சாலிவாகனன் அந்தக் குறிப்புகளை சரியாக உணர்ந்து முதல் பிள்ளைக்கு நெல்தானியமும், மற்றவனுக்கு நிலமும், அடுத்தவனுக்கு மாடுகளும், கடைசிப் பிள்ளைக்கு தங்க நகைகளுமாகப் பிரித்து கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கினானாம். இப்படி நீதி வழுவாத மூதாதையரைக் கொண்ட நாட்டின் வழிவந்த பாண்டியன் நெடுஞ்செழியன் செய்த காரியம் அட்டூழியமாகப் பட்டது. இதைச் சொல்லப் போய் தான் எனக்கு ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது.
“பாண்டியன் மன்னன் ஊடலில் இருக்கும் தேவியைத் தணிப்பதற்காக அவளுடைய அந்தப்புரம் நோக்கி வேகமாகப் போகிறான். அந்த நேரம் பார்த்து பொற்கொல்லன் வந்து சிலம்பு திருடிய கள்வனைப் பற்றிய விபரம் சொல்கிறான். அதற்கு அரசன், தன் அவசரத்தில் நிதானம் இழந்து ‘கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு’ என்று கூறி விடுகிறான். ஓர் அரசனுடைய தலையாய கடமை நீதிவழுவாது ஆட்சி புரிவது. இங்கே அந்த நீதித்துறை அமைச்சையே வெறும் ஊர்க்காவலரிடம் கொடுத்து விடுகிறான்.
“இரண்டாவதாக, கோவலனிடமிருந்து ஊர்க்காவலர் பிடுங்கி வந்த சிலம்பை அரசியாருடைய சிலம்புடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம்; அரசன் செய்யவில்லை. ஓசையை ஒத்துப் பார்த்திருக்கலாம், அதுவுமில்லை. சிலம்பின் மூட்டுவாயை திறந்து உள்ளிருக்கும் பரல்கள் முத்தா? மாணிக்கமா? என்றாவது ஆராய்ந்திருக்கலாம்; அதையும் செய்யவில்லை.
“சரி கடைசியில் நடந்ததைப் பார்ப்போம். விரித்த குழலும் கையில் தனிச்சிலம்புமாக பாண்டியன் சபையில் நுழைகிறான், கண்ணகி. அந்தச் சமயத்திலாவது அரசன் நிதானமாக கோபலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பை தன் அதிகாரிகளிடம் கொடுத்து விசாரித்திருக்கலாம், இல்லையா? மாறாக இந்த ஒரே evidence ஐயும் கண்ணகியிடம் கொடுக்க அவள் சபை நடுவே அதை உடைத்து வீசுகிறாள். இதுதான் நீதி வழுவா நெறிமுறையா?” என்று நான் மூச்சு விடாமல் ஆவேசத்துடன் சொல்லி நிறுத்தினேன்.
செல்லப்பாவுக்கு கோபம் வந்து நான் இதற்கு முன்பு கண்டதில்லை. சண்முகம் எவ்வளவு žண்டினாலும் சிரித்துவிட்டு போகும் அவர் என்மீது எரிகொள்ளிபோல் பாய்ந்தார். “என்ன, நான் கடந்த இருபது வருடங்களாக இதைத்தான் படிக்கிறேன்; எழுதுகிறேன்; சிந்திக்கிறேன். நேற்று வந்த உமக்கு அவ்வளவு தெரியுமா? அரையும், குறையுமாய் படித்துவிட்டு ஆகாயத்தில் குதிக்கிறீரே? சிலப்பதிகாரத்தின் சாரம் ஒருவர் தன் ஆயுளில் படித்து அறியக் கூடியதோ?
“வழக்குரை காதையில் சொல்லியுள்ள கடைசி செய்யுளை படித்துப் பாரும். தீர விசாரிக்காம அவசரத்தில் செய்த காரியம் பாண்டியன் மனதை நெருடிக் கொண்டே இருந்தது. தான் செய்தது பெருங்குற்றம் என்பதை அவன் ஏற்கனவே உள்ளூர உணர்ந்திருந்தான். காதல் மயக்கத்தில் ஒரு கணம் அறிவிழந்து விட்டான். அது எவ்வளவு பாரதூரமான நிகழ்ச்சியாக உருவெடுத்துவிட்டது. ‘ஒரு பெண் விரித்த கூந்தலும், நீர்வழிந்த கண்களுமாக, கையில் தனிச் சிலம்புடன் வந்திருக்கிறாள்’ என்றதுமே பாண்டியனுக்கு தான் நீதி தவறியதும், தன் முடிவுகாலம் நெருங்கியதும் தெரிந்து விடுகிறது. அவன் பிராயச்சித்தமாக தன் உயிரைக் கொடுத்தான்; கோப்பெருந்தேவியை பலி கொடுத்தான்; மதுரை மாநகரத்தையே தீக்கிரையாகக் கொடுத்தான்.
“மெய்யிற் பொடியும், விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்­ரும் – வையக்கோன் கண்டனவே தோற்றான், அக்காரிகைதான் சொற் செவியில் உண்டளவே தோற்றான் உயிர்.”
“இன்ன குற்றத்திற்க இன்ன தண்டனை என்று வரைமுறை உண்டு. பாண்டியன் அநுபவித்த தண்டனையோ மகா கொடியது. இதிலும் பார்க்க வேறு என்ன ஐயா வேண்டும்?” இப்படிக் கோபாவேசமாகச் சொல்லிக் கொண்டே கையை துவாலையில் வேகமாகத் துடைத்து கொண்டார். பிறகு துணியை மேசைமீது விசுக்கென்று வீசிவிட்டு போய்விட்டார்.
எனக்கு நாதாளி முள் குத்தியபோல சுருக்கென்றது. ‘ஏன்டா இப்படிக் கேட்டோம்? சாதுவான இந்த மனுசன் சாரைப் பாம்புபோல என்மேல் žறி விட்டாரே!’ என்று வருத்தப்பட்டேன்.
சண்முகத்துக்கு தெரியாத பூர்வாங்கமே கிடையாது. மனைவியையும், மகளையும் பிரிந்து செல்லப்பா சமறியில் வாழும் காரணத்தை அவர் ஒருநாள் எனக்கு விளக்கினார்.
அப்ப செல்லப்பாவின் மகளுக்கு பதினான்கு வயதிருக்குமாம். ஒரே மகள். சில்லறைக் காசைக் கிலுக்கியதுபோல எப்பவும் சிரித்தபடியே இருப்பாள். இவரை எட்டியெட்டி கொஞ்சுவாள். அவள்மேல் இவரும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒருமுறை கொபம்பிலிருந்து விடுப்பில்போய் இவர் நின்றபோதுதான் அது நடந்தது. அவர்கள் வீட்டு வேலியில் ‘ஓஸோன்’ ஒட்டை போல ஓர் ஒட்டை. அந்தப் பொட்டு வழியாக அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்த இவருடைய மகள் பக்கத்து வீட்டுப் பெடியனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டாள். ஆத்திரத்தில் மதிகெட்டுப்போன செல்லப்பா அவள் கன்னத்தில அஞ்சு விரலும் பதிய அறைந்துவிட்டார். அவள் திடுக்கிட்டுவிட்டாள். பிறந்த நாளிலிலிருந்து அவளை அணைப்பதற்கு மட்டுமே தொட்ட கை அது. அவளால் நம்பவே முடியவில்லை. ‘பட்சமுள்ள அப்பா, பட்சமுள்ள அப்பா’ என்று கிழமை தவறாமல் கடிதம் எழுதியவள் பிறகு எழுதவேயில்லை; கதைக்கவுமில்லை. அவர் கொழும்பில் வீடு பார்த்த பிறகும் வர மறுத்து விட்டாள். தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு ஒரு குழந்தையின் நட்பை விகாரப்படுத்தியதற்காக செல்லப்பா தன்னை பெரிதும் வருத்திக் கொண்டார்.
சிலப்பதிகாரத்தை மட்டுமே நெங்சிலே சுமக்கிறார் என்று நான் நினைத்திருந்த செல்லப்பா இப்படி ஒரு பாரத்தையும் தாங்குகிறார் என்ற விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கன்னத்திலே ஒரு தட்டு தட்டியதற்காக ஐந்து வருடங்களாகியும் அவள் கதைக்கவில்லை. எவ்வளவு பெரிய தண்டனை! அப்போதுதான் இனிமேல் எங்கள் சம்பாஷணைகளில் ‘சிலப்பதிகாரம்’ தவறியும் புகுந்துவிடாமல் பார்க்க வேண்டுமென்று நான் சங்கல்பம் செய்துகொண்டேன்.
யேசு ஆணவர் கடைசி உணவு அருந்தியபின் தன் பிரதம žடரான பீட்டரைப் பார்த்து “என் அன்புக்குரியவனே, இன்றிரவு சேவல் கூவுமுன் நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்” என்று கூறினார். பீட்டர் “அது நடக்காத காரியம்” என்று சங்கல்பம் செய்து கொண்டார். ஆனால் யேசுபிரான் உரைத்த பிரகாரம் பீட்டர் மூன்றுதரம் மறுதலிக்க வேண்டி வந்தது அல்லவா?
அதுமாதிரி இந்த விஷயத்திலும் நான் எடுத்த சங்கல்பம் விரைவிலேயே தவிடு பொடியாகியது. ஆனால் குற்றவாளி நான் அல்ல.
இந்த சொற்ப காலத்தில் கிடைத்த அற்புதமான சிநேகிதத்தை அநியாயமாக இழப்பது எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு கிடைத்த தண்டனை அதீதமானதுதான். ஆனால் நான் செய்த மகாபாபம் என்ன? என்னை அறியாமல் ஒரு மெல்லிய நரம்பை உரசிவிட்டேன் போலத் தோன்றியது. அந்தச் சம்பவத்திற்கு பிறகு செல்லப்பா திண்ணையில் காயப் போட்ட தேங்காய் மூடிபோல எட்டிப் போய்விட்டார். என்னுடன் முகம் கொடுத்து பேசவுமில்லை; பழகவுமில்லை. முன்புபோல் சத்தம்போட்டு எங்களோடு கதைப்பதற்கும், சிரிப்பதற்கும் எதோவொன்று அவரைத்தடுத்து வந்தது.
என்னுடைய பயணச்žட்டு வந்துவிட்டது, இன்னும் சில நாட்களே இருந்தன. ஒரு மத்தியான வேளை நாங்கள் மூவரும் மேசையில் வந்து அமர்ந்தோம். மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு சிறு தூக்கம் போட போய்விட்டார்கள். நாங்கள் சாப்பிட்டு முடியுந்தறுவாயில் சமையல்காரன் தயிர் கொண்டுவந்து வைத்தான். தயிர் இல்லாவிட்டால் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது. எல்லோருக்கும் அது தெரிந்த விஷயம். செல்லப்பா ஒரு சிறங்கை தயிர் அள்ளி சாப்பிட்டுவிட்டு ‘ஆஹ்’ என்றார்.
வழக்கமாக சட்டியில்தான் தயிர் வரும். ஆனால் அன்று சூப்பர்மார்க்கெட்டில் வாங்கிய பிளாஸ்டிக் பெட்டியில் வந்திருந்தது. “என்ன இண்டைக்கு இப்பிடி தயிர்?” என்றேன். அதற்கு வேலைக்காரன் “இல்லை ஐயா, இது ரண்டுரூவாதான் கூட. பிளாஸ்டிக் பெட்டி பார்க்க வடிவாயிருக்கு; இப்ப எல்லாரும் இதுதான் வாங்கினம்” என்றான்.
நான் அன்று தயிரைத் தொடவில்லை. பிளாஸ்டிக் பெட்டிகளில் வரும் உணவை நான் தொடுவதில்லை என்ற விஷயம் சண்முகத்துக்கு தெரியாது. அவருக்கு மனசு வருத்தமாகிவிட்டது. “என்ன தம்பி, இதில ஏதாவது கெடுதலா?” என்றார்.
“இல்லை, முன்னேற வேண்டிய நாங்கள் இப்படி பின்னாலே போய்க் கொண்டிருக்கிறோமே! சட்டியில வாற தயிர் என்ன வடிவு? எவ்வளவு ருசி? இப்ப என்ன அவசரத்துக்கு பிளாஸ்டிக்குக்கு மாற வேண்டும்? சட்டியென்றால் தயிரிலே மிதக்கும் உபரித்தண்ணியை அது உறிஞ்சுவிடும். அதைச் செய்யும் ஏழைக் குயவனுக்கு வேலை கிடைக்கிறது. அதே சட்டியை திருப்பித் திருப்பி பாவிக்கலாம்; உடைந்து போனால் மண்ணுடன் சேர்ந்துபோகும்; சுற்றுச் சூழலுக்கு ஒருவித கெடுதலும் இல்லை.
“ஆனால், பிளாஸ்டிக் என்று வரும்போது விலை கூடுகிறது. பாவித்து விட்டு எறிந்து விடுகிறோம்; திருப்பி பாவிக்க முடியாது. இதனால் எவ்வளவு கெடுதல் தெரியுமா? இந்த பிளாஸ்டிக் சாகாவரம் பெற்றது. நூறு வருடங்கள் வரை உயிர் வாழும். இதை அழிப்பது மகா கஷ்டம் மண்ணோடு முற்றும் கலக்க நானூறு வருடங்கள் வரை பிடிக்குமாம். இதை எரித்தால் வரும் நச்சுப் புகை காற்றுமண்டலத்தில் சேர்ந்து நாசம் விளைவிக்கும். எங்களுக்கு ஏனப்பா இந்த அவசரம்?”
“பிளாஸ்டிக்கில் இவ்வளவு கெடுதலா? எனக்கு தெரியவே இல்லை, தம்பி?” என்றார் சண்முகம்.
ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை
பஞ்சபூதங்களில் ஒன்று நான். நீர் என்பது எனது பெயர். மற்ற கணங்களாகிய ஆகாயம், பூமி, காற்று, நெருப்பு ஆகியவற்றை இணைக்கும் இணைப்பும் நான்தான். அவற்றின் செல்லப்பிள்ளையும் நானே.
ஆகாயம் என்னை மேகமாக்கி தாலாட்டும். மேகமாகிய என்னை காற்று அகிலமெங்கும் அழைத்துச் செல்லும். மழையாக நான் பொழியும் போது, பூமி என்னை ஏற்று மனிதகுலத்தை உயிர்ப்பிக்கும். ஆறாக, குளமாக, கிணறாக மகிழ்வுடன் என்னை சீராட்டும். நெருப்பின் கோபக்கனலை, எனது அணைப்பால் அதனைத் தணிப்பேன்.
நதியாக நான் பெருகி ஓடிய இடங்களில் எல்லாம் நாகரீகங்கள் தோன்றின. மாபெரும் எனது கரைகளில்தான் முனிவர்கள் அமர்ந்து வேதங்களை ஓதினார்கள். மக்கள் என்னை கங்கை, யமுனை என்றும், காவேரி என்றும் பாராட்டி, சீராட்டினார்கள்.
ஆடிமாதம் நான் பெருக்கெடுத்து கரை கடந்த வெள்ளமாக ஓடும் போது சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் என்னில் அமிழ்ந்தும், குதித்தும், நீந்தியும் விளையாடினார்கள். அதெல்லாம் பழங்கதையாகிவிட்டன இப்போது.
கற்புடைப் பெண்டிர் பெய் என்றால், மழை பெய்யும் என்றார் வள்ளுவர். மாதம் மும்மாரி பொழிகிறதா என அரசன் கேட்டால், ஆம் அரசே நாட்டில் நீதியும், நேர்மையும் உள்ளவரை மாதம் மும்மாரி பொழியும் என்பாராம் அமைச்சர்.
இன்று ஏன் மாதம் மும்மாரி பெய்யவில்லை? கற்புடைப் பெண்டிர் இல்லையா? அல்லது நீதியும் நேர்மையும் செத்துவிட்டனவா? இல்லை, இல்லை, இல்லவேயில்லை.
கடலிலிருந்து மேகமாக நான் எழும்பி வரும்போது என்னை வரவேற்று, அணைத்து, மழையாக பொழிவிக்க மரங்கள் இல்லை.
பெருகிவரும் தங்கள் தேவையை நிறைவு செய்ய மக்கள் காடுகளை அழித்து கட்டிடங்களாக்கியதால்தான், இன்னு மாதம் முன்மாரி பெய்யவில்லை. காகிதம் செய்ய காடுகளை அழித்ததால் தான் இன்று மாதம் மும்மாரி பெய்யவில்லை.
ஆறாக, நதியாக சீறிப் பாய்ந்து வந்த நான் இன்று சிற்றோடையாக, சிறு கால்வாயாக சிறுமைப்பட்டு செல்கிறேன். தேங்கிய நீர் என்றும், கலங்கிய குட்டை என்றும் என்னை அவமதிக்கிறார்கள்.
கிணற்றில், கையால் நீர் இறைத்த காலம் போய் முழம் முழமாய் கயிறிருந்தாலும் கிணற்றில் நீரில்லை என்ற நிலமை வந்தது எதனால்? மக்களின் கவனக் குறைவால்தான்.
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழி வழக்கில் இருக்கும் இந்நாட்டு மக்கள் அளக்காமலேயே ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்தியதால் தான்.
தென்னை இளநீர் போல என்றும், பனை நுங்கு போல என்றும் அன்று பாராட்டப்பட்ட நான் இன்று பச்சைப் பசேல் என்றும், கண்ணங்கரேல் எனவும் பல நிறங்களில் மக்கள் கையால் தொடவே அஞ்சும் தொழு நோயாளியாகிப் போனது எதனால்? மக்கள் கண்மூடித்தனமாக என்னை மாசுபடுத்தியதால்தான். இது தான் நீரின் கண்ணீர்க் கதை
இந்நிலை மாறி பழையபடி நான் சீரும், சிறப்பும் பெற்று விளங்குவது எப்படி? மக்களாகிய நீங்கள் முயற்சி செய்தால் இது முடியும்.
‘விழிமின், எழுமின்’ என விவேகானந்தர் கூறியது போல, விழித்தெழுங்கள்,
விழிப்புணர்வோடு இப்போதாவது செயல்பட ஆரம்பியுங்கள்.
‘மரம் வளருங்கள், மழையை வரவழையுங்கள்’
மழை நீரை அறுவடை செய்யுங்கள்.
‘நோயற்ற வாழ்வு வாழ, மாசற்ற நீர் தேவை’ என்பதனை மனதில்
கொண்டு நீரை மாசுபடுத்துவதை நிறுத்துங்கள்.
‘நீர் மேலாண்மையை கற்றுக் கொள்ளுங்கள். ‘நீர் மறைய
நீர் கட்டினால், நிறைய வரும் நெற்கட்டு’. என்பதை கற்றுணருங்கள்
இரண்டு குழந்தைகளுக்கிடையே மட்டும் இடைவெளி விட்டால் போதாது
இரண்டு கிணறுகளுக்கிடையேயும் இடைவெளி விடுங்கள்.
நிலத்தடி நீர் அளவோடு தேவைக்கு ஏற்ப பயன்படுத்துங்கள்.
நீரைச் சேமியுங்கள் ‘இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு’ என்பது
நீங்கள் ஈட்டும் பொருளுக்கு மட்டுமல்ல, ஈட்டாமலேயே கிடைக்கும் நீருக்கும் தான்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதனை நினைவில் கொள்ளுங்கள். நீரைச் சேமியுங்கள். நீரின் மாசற்ற தன்மையை காப்பாற்றுங்கள். உங்களுக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததியினருக்காகவும்.
அது ஒரு பிரபலமான ஆசிரமம். அதன் மடாதிபதி அதை நல்ல முறையில் நிர்வகித்து வந்தார். தினமும் உபன்யாசம், தியானம், பூஜை என்று ஏகப்பட்ட பக்தர்கள் குவிந்து வந்தனர்.
ஆனால் அந்த மடாதிபதியின் மகனோ ஒரு தறுதலை. பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வந்தான். ஒருநாள் மடாதிபதி மகனை அழைத்து "இனிமேல் நீ இங்கிருக்க வேண்டாம். உன் பங்கை எடுத்துக்கொண்டு ஓடிவிடு." என்று ஒரு கழுதையையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து விரட்டிவிட்டார்.
மகனும் ஊர் ஊராகச் சுற்றி பணத்தையெல்லாம் காலி செய்துவிட்டான். கழுதையும் நோய் வாய்ப்பட்டு ஒருநாள் இறந்து விட்டது. இவன் கழுதையை ஒரு இடத்தில் புதைத்துவிட்டு அதன்மேல் மண் மேடாக்கிவிட்டு பக்கத்தில் அமர்ந்து கண்களை மூடி இனிமேல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
ஊர் மக்கள் இதைப் பார்த்துவிட்டு யாரோ ஒரு மகானின் சமாதியருகில் ஒரு சாமியார் தவம் செய்துக் கொண்டிருக்கிறார் என்று ஊர் முழுக்க செய்தியை பரப்பிவிட்டனர். கூட்டம் கூடிவிட்டது. மக்கள் காசு போட ஆரம்பித்து விட்டனர்.
இவனும் சமாதியின் மேல் பீடம் கட்டி சுற்றிலும் சுவர் எழுப்பி கோவிலாக்கிவிட்டான். வாய்க்கு வந்ததை எல்லாம் அருள்வாக்கு என்று கூறினான். அவனுடைய தந்தையின் ஆசிரமத்தை விட இவனது ஆசிரமம் பிரபலமாகி விட்டது.
இந்த ஆசிரமத்தை பற்றி கேள்விப்பட்ட அவனது தந்தை இவனைக் காண வந்தார். வந்து பார்த்தால் தன மகன்.
"மகனே எப்படி இவ்வளவு வளர்ந்தாய்?" என்று கேட்டார். மகன் நடந்ததைச் சொன்னான். "இந்த சமாதியில் இருப்பது நீங்கள் கொடுத்த கழுதைதான்." என்றான்.
தந்தை சொன்னார் "மகனே நம் ஆசிரமத்தில் இருக்கும் சமாதியில் இருப்பது இதனுடைய தாய்தான்." என்றார்.
எந்தெந்த ஆசிரமத்தில் எந்தெந்த கழுதைகள் புதைக்கப் பட்டுள்ளதோ...
இந்தியாவில் குருமார்களுக்கு பஞ்சமேயில்லை. போலி வேஷதாரிகளை குருவாக கொள்வர் சீரழிவர். இறைவனிடம் பக்தி செய்து நல்ல குருவை காட்ட வேண்டுவோம்.
பூலாங்குளம் என்ற ஊரில் எழிலரசன் என்ற குட்டி எலி ஒன்று இருந்தது. அது அரண்மனையில் சந்தோசமாக வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளியே வரும்போது அதனை பூனை ஒன்று துரத்தியது. பூனை துரத்தியவுடன் குட்டி எலி மறைவிடம் தேடி ஓடி ஒளிந்து கொண்டது.
“எலியை விட பூனைதான் உலகில் பலசாலி. எனவே நாம் பூனையாக மாறினால் உலகின் பலசாலியாக இருக்கலாம்” என்று எண்ணியது.
கடவுளிடம் தன்னைப் பூனையாக மாற்றும்படி வேண்டிக் கொண்டது.
குட்டி எலியின் வேண்டுதலை கேட்டு இறைவன் எலியை பூனையாக மாற்றினார். பூனையாக மாறியவுடன் ‘நான் உலகின் பலசாலி’ என்று கூறி எலி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
சில நாட்கள் கழித்து பூனை நாய் ஒன்றினைக் கண்டது. நாயைப் பார்த்தவுடன் பூனைக்கு பயம் ஏற்பட்டது.
‘பூனையை விட நாயே பலசாலி’ என்று நினைத்து கடவுளிடம் “என்னை நாயாக மாற்றுங்கள் இறைவா” என்று வேண்டியது.
இறைவனும் பூனையை நாயாக மாற்றினார். மிக்க மகிழ்ச்சியுடன் நாய் இங்கும் அங்கும் ஓடியது.
ஒரு நாள் கடைத் தெருவில் சென்ற நாயினை மனிதன் ஒருவன் அடித்து விட்டான். அதனைக் கண்ட நாய் “மனிதனே பலசாலி” என்று நினைத்தது.
கடவுளிடம் “என்னை மனிதனாக மாற்றுங்கள் இறைவா” என்று வேண்டியது. கடவுளும் நாயினை மனிதனாக மாற்றி விட்டார்.
சந்தோசமாக இருந்த மனிதன் ஒரு நாள் காட்டு வழியே பயணம் செய்தான். அப்போது சிங்கம் ஒன்று எதிரே வந்தது. சிங்கத்தைக் கண்ட மனிதன் பயந்து புதரில் மறைந்து கொண்டான்.
சிங்கமே உலகின் பலசாலி என்று எண்ணி மனிதன் கடவுளிடம் “கருணைமிக்க இறைவா, என்னை சிங்கமாக மாற்றுங்கள்” என்று வேண்டினான்.
மனிதனின் வேண்டுகோளை ஏற்று கடவுளும் மனிதனை சிங்கமாக மாற்றினார். சிங்கமாக மாறியவுடன் “உலகில் நானே பலசாலி” என்று கூறி கர்ஜித்தது.
மகிழ்ச்சியாக காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சிங்கம் ஒரு நாள் வலையில் அகப்பட்டுக் கொண்டது. அப்போது அவ்வழியே வந்த எலி ஒன்று வலையைக் கடித்து சிங்கத்தைக் காப்பாற்றியது.
சிங்கம் “எலியே உலகின் பலசாலி” என்று எண்ணி கடவுளிடம் “என்னை மீண்டும் எலியாக மாற்றுங்கள் இறைவா” என்று வேண்டியது.
கடவுளும் சிங்கத்தை மீண்டும் எலியாக மாற்றிவிட்டார்.
குழந்தைகளே!, எலி பிறரைப் பார்த்து ஏக்கப்பட்டு அவரைப் போல மாறியது. அப்படி பல முறை மாறிய போதும் அதற்கு மகிழ்ச்சி இல்லை.
நாமும் பிறரைப் போல் மாற வேண்டும் என்று
எண்ணாமல், நமது பலம் பலவீனங்களை அறிந்து சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் என்பதை மேலே உள்ள கதையின் மூலம் அறிந்து கொண்டீர்கள் தானே.
ஒளரங்கசீப் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்
வரலாற்றில் இடம் பெற்ற புகழ்பெற்ற கடிதங்களில் ஒளரங்கசீப் தன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் மிக முதன்மையானது. ஆசிரியர்கள் இன்றியமையாது படிக்க வேண்டியது; கல்வியியல் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டியது.
1658இல் ஒளரங்கசீப் ஹிந்துஸ்தானத்தில் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார். அவருடைய இளம் வயது ஆசிரியர் முல்லாசாஹப் தனக்கு அரசசபையில் பதவியும், பரிசும் தர வேண்டும் என்று கோரியிருந்தார். அதற்கு ஒளரங்கசீப் எழுதிய பதில் கடிதம் தான் இது.
அன்று ஒளரங்கசீப் கற்ற கல்வியைப் பற்றியும், ஆசிரியர் தனக்கு வாழ்வியலைக் கற்பிக்க வில்லையே! என்ற ஆதங்கத்தையும் அக்கடிதம் உணர்த்துகிறது. 350 ஆண்டிற்கு முன்னே கல்வி எப்படி இருந்திருக்க வேண்டும்? என்று விவாதிப்பது இன்றும் பொருத்தமுடையதாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில் கடிதத்தைப் படியுங்கள்; பயனள்ள செய்திகளை (வாழ்வியல்) இளமைப் பருவத்திலேயே கற்றுக் கொடுக்காமல் போய் விட்டார்களே என்று வயிறெரிந்து எழுதுகிறார், ஒளரங்கசீப்.
கற்றவரே!
நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முதன்மைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா?
ஒன்று சொல்கிறேன் – நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்து இருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்று நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.
ஏனென்றால், நான் ஒரு செய்தியை உறுதியாக ஒப்புக் கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியருக்கும் கடமைப்பட்டிருக்கிறது.
ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது? ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள். போர்ச்சுக்கீசிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எனக்கு ஒரு விபரமும் கூறவில்லை. பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்கள் எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள்.
ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே, உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டுமே என்பதற்காக உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கினவையே என்று கூறினீர்கள். ஆழமான வியந்து பாராட்ட வேண்டிய சரித்திர அறிவு!
எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக் கோட்பாடுகள் என்ன? ராஜ தந்திரங்கள் என்ன? இவற்றையெல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா?
உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும் அவர்களது எழுச்சியையும், வீழ்ச்சியையும் நான் உணரும்படிச் செய்திருக்க வேண்டாமா?
எந்த விதமான தவறுகள் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின. எந்தச் சாம்ராஜ்யங்கள் அழிந்தன என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?
உங்களிடம் இருந்து என்னுடைய முப்பாட்டனார்கள் பெயர்களைக் கூட நான் அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது?
எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்க முனைந்தீர்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக விழுந்து விழுந்து படித்தாலும், முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்ததன் விளைவாக எனது வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீணடித்ததற்காக உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து, இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஓர் அரசனுக்குப் பெருமையா? ராஜ பரிபாலனம் செய்வதற்கான அவசியமான முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான், அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்.
ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனை செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்.
சட்டம் – மத வழிபாட்டு முறைகள் – விஞ்ஞானம் – அவற்றையெல்லாம் எனது தாய்மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள்?
என் தந்தை ஷாஜஹானிடம் எனக்கு மதத் தத்துவங்களைப் போதிக்கப் போவதாக நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அர்த்தமே இல்லாத – இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத – புரிந்து கொண்டாலும் மனத் திருப்தி அளிக்காத – மனத் திருப்தி அளித்தாலும் கூட, இன்றைய சமுதாயத்தில் எந்தவிதப் பயனுமே இல்லாத புதிர்களையெல்லாம் என்னிடம் போட்டுக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் கற்றுக் கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். அவையெல்லாம் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை; மறப்பதற்கு மிக எளியவை.
நீங்கள் போதித்த மதத் தத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டு மிராண்டித்தனமான இருள் அடைந்த மிகப் பெரிய வார்த்தைகள்தாம்; மேதாவிகளைக் கூடக் குழப்பக் கூடிய பயங்கரமான வார்த்தைகள். உங்களைப் போன்றவர்களின் அறியாமையையும், இறுமாப்பையும் மறைக்க உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள்.
உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்.
உங்களைப் போன்ற மேதாவிகளுக்குத்தான் இந்தப் பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கக் கூடிய அரிய தத்துவ ரகசியங்கள் புரியும் என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.
காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப் பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய மதத் தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால், மனத்தை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால்,
அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி, துரதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டுத் தோல்வியைத் தழுவினாலும் சரி, இரண்டுக்குமே மயங்காத மனோ தைரியத்தை அளிக்கக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால்,
நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்தப் பூமி இயங்குகிறது? என்பதையெல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால்,
இப்போதும் சொல்கிறேன்; இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன்.
அலெக்ஸாண்டர் அவனுடைய குரு அரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர் அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன்; நன்றி காட்டியிருப்பேன்.
சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜ பரிபாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா?
குடிமக்களுக்கு அரசன் செய்ய வேண்டிய கடமை என்ன? அரசனுக்கு குடிமக்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?
எனது வாழ்க்கைப் பாதையில் ஒரு கால கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னுடைய உடன்பிறந்த சகோதரர்களுடனேயே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவிற்கு நீங்கள் போதித்த கல்வி அமைந்திருக்க வேண்டாமா?
ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப்படையை எப்படி நடத்திச் செல்வது? என்பதையெல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா?
பயனள்ள விஷயங்களை ஏதாவது நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா? பயனள்ள விஷயங்களை எதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; நிச்சயமாக உமக்கல்ல.
“போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய்ச் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதையெல்லாம் எவருமே தெரிந்து கொள்ள வேண்டாம்.”
-ஒளரங்கசீப்
பின்குறிப்பு:
இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தில் அவர்களின் ஆசிரியர்களுக்கு இது போன்ற கடிதம் எழுதாமல் இருக்கட்டும். ஆசிரியர்கள் ஒளரங்கசீப்பின் கடிதத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொள்ளட்டும்.
கண்ணகியும் கைகேயியும்
========================
“பெண்பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
புகார் காரிகையாள் 
கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.
“வில்முதுகு கூனி இவளை
வில்லென வளைக்க
தசரதனை வரங்களுக்காக
'வில்'லின் நாண் என இழுத்தாள்.
அந்தோ !!!
தனது மங்கல நாணையே
இழந்தாள்”
மாற்றம் | லஞ்சம் தவிர் |
ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சுத்தப்படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது.
அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து, `ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ` என்றார்.
வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள். அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம். ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம். அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே?
இனி இந்த கதையில் நீதியை மட்டும் பார்ப்போம். நம் நாட்டில் மக்கள் லஞ்சம் கொடுக்கக் கூடாது, அவர்கள் தரமானவர்களாக இருந்தால்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் தரமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவும் உண்மை. எனவே மக்களிடமும் தரம் வேண்டும்தான். ஆனால் அதைவிட வேகமான மாற்றத்தை தலைவர்கள்தான் தரமுடியும்.
எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதேபோல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால் அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு குப்பனோ, ராமனோ சிகெரெட் பிடிப்பதை, அல்லது அவர்கள் தரும காரியங்கள் செய்வதை பார்த்து மற்றவர்கள் பின் தொடரும் வாய்ப்பு குறைவு. ஆனால் அதே செயலை ஒரு தலைவரோ அல்லது நடிகரோ செய்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே மாற்றம் இருபக்கமும் வேண்டும். அது மேலே இருந்து ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
லிப்ட் (Lift) அழகு தமிழில் மின்தூக்கி .... கதை-2:-
*****************************************************************
1982 -ல் பம்பாய் ''பெடார் ரோடு''.... ''கெம்ப்ஸ் கார்னர்'' சந்திப்பின் அருகில் ஒரு உயரமான கட்டிடம் .அப்போதே 45 மாடிகள் .
அந்த கட்டிடம் பின்னர் அபாயம் கருதி சில மாடிகள் இடிக்கப்பட்டு உயரம் குறைக்கப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் படித்தேன்.
எனது உறவினர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர் .லியோன் பெனடிக்ட் அங்கு மின் அமைப்புக்கள் பணியில் இருந்தார்.
ஒருநாள் என்னை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றார். 1983 ஜனவரி மாதம் பொங்கல் நேரம் என்பது நன்றாய் நினைவில் உள்ளது. ஏனென்றால் காலை வீட்டில் பொங்கல் கரும்பு பாயசம் சாப்பிட்டு விட்டே புறப்பட்டோம் ....
சயான் பேருந்து நிலையம் சென்று (தடம் எண் 82 என நினைவு) பேருந்தில் சென்றோம்.பெடார் ரோட்டில் கெம்ப்ஸ் கார்னர் நிறுத்தத்தில் இறங்கி சாலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே போய் கட்டிடத்தை அடைந்தோம்.
அத்தனை உயரம் முதன் முறையாகப் பார்த்து 'ஆ' வென வாயைப் பிளந்து அதிசயமாய்ப் பார்த்தேன் ...ஓரளவு பணிகள் மட்டும் மீதம் இருந்த காரணத்தால் அதிகம் பணியாட்களும் கிடையாது. சுமார் பத்து பேர்கள் போல இருந்தார்கள். அண்ணன் என்னை அறிமுகம் செய்து பின்னர் உடன் அழைத்துப்போனார்.
மின் தூக்கியில் மேல் தளம் வரை சென்று கீழே பார்த்தால் ...
அம்மம்மா..... மனிதர்கள் எறும்பு சைசில் வாகனங்கள் கொஞ்சம் பெரிதாக தெரிந்தார்கள். எனக்கு ரொம்ப ரசிக்கவில்லை. கொஞ்சம் பயமும் இருந்தது.
தொலை நோக்கி (Binoculars) இருந்தால் ரசிக்கும். ரசிக்கலாம். வெறும் கண்களால் ரொம்ப தெளிவாக பார்க்க முடியாமல் ....சுற்றுப்புறக் காட்சிகளை ரொம்ப ரசிக்க முடியவில்லை.ஆனாலும் ஒரு குழந்தைத்தனமான ஆர்வம் / பெருமை இருந்தது மெய்.
மின் தூக்கியில் 'சர் சர்' ரென்று எவ்விதமான தொல்லையின்றி மேலும் கீழும் சென்று அனுபவித்து கொள்ளையாய் மகிழ்ந்தேன். அது அன்றைய தின சூப்பர் கொண்டாட்டமாய் இருந்தது.
வொர்லியில் சத்தியம் ,சச்சினம்,சுந்தரம் தியேட்டர் காம்ப்ளெக்ஸ். (சென்னையில் சத்தியம், சாந்தம், சுபம் உண்டல்லவா ?) ......அப்போது ''ஜராசி ஜிந்தகி ''....அதாங்க .. ''வறுமையின் நிறம் சிவப்பு '' ஹிந்தி ஆக்கம் ....கமல்ஹாசன் & அனிதா ராஜ் நடித்தது படம் பார்த்தோம். 'ஸ்ரீதேவி' இடத்தில் 'மூதேவி' நடித்த படம் ரசிக்கவில்லை ....இயக்குனர் KB மீது கடுப்பு வந்ததும் உண்மை ...
அங்கிருந்து நடந்தே சிவாஜி பார்க் போய் மாலைப்பொழுதை கழித்து பின்னர் தாதர் வந்து பஸ் பிடித்து தாராவி VOC குடிசைப்பகுதியில் எனது ஞானம்மா (காட் மதர்) வீடு போனேன் ....
லிப்ட் (Lift) அழகு தமிழில் மின்தூக்கி .... கதை-1:-
*****************************************************************
முதன் முதலில் ''சுய மெய்''..(Original physical ) அனுபவத்தில் ''லிப்ட்'' பார்த்தது பம்பாயில் ''ப்ரீச் கேண்டி'' (Bombay-Breach Candy)...மருத்துவமனையில்.
1982 டிசம்பரில் குவைத்திலிருந்து ''விசா'' அனுப்பினார் அன்புள்ள அப்பா.
அவர் குவைத்தில் டிபென்ஸ் மினிஸ்ட்ரி டைரக்டர் ஒருவரின் ''வீட்டில்'' டிரைவர் பணி. குவைத்தியார் குடும்பம் செல்வாக்கானது ...
ஒருவர் கல்வி அமைச்சகத்தில் அண்டர் செக்ரட்டரி , ஒருவர் கல்லூரி முதல்வர், வீட்டில் மூத்த உறுப்பினர் பெண்மணி தங்க , வைர , நறுமணப் பொருட்கள் விற்கும் வணிகர் ...
இது அன்றைய குவைத்தில் ...''பொன் கொழிக்கும்'' வணிகம் என்பது வெள்ளிடை மலை உண்மை ....
எனது நான்காண்டுகள் கல்லூரி படிப்பிற்கு P.U.C + B-Com புரவலர் இப்பெண்மணியே.
.
நான் சென்னை லயோலாவில் பி.காம் முடித்து மேற்கொண்டு எம்.காம் சீட்டிற்கு தாமதமாய் விண்ணப்பித்து (காரணம் கொழுப்பு ...நாம படித்த காலேஜில்...பிளா...பிளா ..பிளா ...) அதற்குள் இடங்கள் முடிந்து (அப்போதெல்லாம் 20 சீட்டுக்கள் x 2 செக்ஷன் மட்டுமே )...வேலைக்கு போக தீர்மானித்து ....
1982 டிசம்பரில் ''ப்ரீச் கேண்டி '' மருத்துவமனையில் பணி புரிந்த தாத்தா (அம்மா வழி உறவு ) ஒருவரிடம் ''விசா ஸ்டாம்பிங்'' செய்வது தொடர்பாய் போன வேளை..
அப்போதெல்லாம் எங்கள் ஊரார் யார் என்றாலும் அவர் தான் கதி ....
என்னோட அம்மம்மா உடன் பிறந்த தம்பியே எங்கள் பகுதியில் 1955-ல் குவைத் போன முதல் நபர் ...1983-ல் எங்க குடும்பத்தார் சுமார் 50-க்கும் மேல் குவைத்தில் ...பெரும்பாலும் வீட்டு / கம்பெனி டிரைவர் பணி , ஹௌஸ் பாய் , சமையல் ,தோட்டக்காரர்கள் ...
1952-ல் கத்தார் போன உறவினர் ''அருளப்பர்'' என்பவர் ஆறே மாதத்தில் மனம் வெறுத்து திரும்பி விட்டாராம். அவர் இந்தியன் ரயில்வேயில் எஞ்சின் டிரைவர் பணியில் இருந்து விடுப்பு எடுத்து சென்றதும் காரணம் .
நல்ல மத்திய அரசுப் பணி / ஊதியம் ..கத்தாரிலோ ?...கிடைத்தது யாருக்குத் தெரியும் ?
தாத்தா வாங்கிய ஊதியமோ இந்திய ரூபா அணா பைசாவில் நூறுக்கும் கீழேயே தான் .1962-ல் தான் குவைத் தீனார் புழக்கத்தில் வந்தது . அதுவரையில் இந்திய ரூபா அணா பைசா...தான் புழக்கத்தில் இருந்தது என்பது வரலாற்று உண்மை .
எங்கள் தாத்தா 28 ஆண்டுகள் குவைத்தில் இருந்தார் .1975 வரை நோ ஏர் கண்டிஷன், சீலிங் ஃபேன்...தடித்த கோரைப்பாய் ...அதில் வாளித் தண்ணீரை தெளித்து படுப்பார்களாம். மண் சுவர் வீடுகள் .வெயில் தாங்கும். உணவு மிக மோசம். தாத்தா சமையல் பணி .....எனவே நோ ப்ராப்ளம் ...
தண்ணீரும் மரப் பீப்பாயில் கழுதைகள் சுமந்து வருமாம். ஈராக்கில் இருந்து தண்ணீர் சப்ளை.
இன்று என் பெரியப்பா மகன் 40+ ஆண்டுகள் ...இன்றும் அங்கேயே இருக்கிறார் ...பெயர் ஜேசுதாசன் ...ரெகார்ட் ஹோல்டர் ...
குடும்பத்தில் குவைத் போன ''''''முதல் இளங்கலை பட்டதாரி''''' அடியேன் மட்டுமே ...
தாத்தா ''ப்ரீச் கேண்டி'' கட்ட அடிக்கல் நாட்டிய நாள் 1950-ல் தொடங்கி அங்கு பணி என்பதால் பெரிய செல்வாக்கு உண்டு . 1982-ல் சுமார் முப்பதாண்டு பிளஸ் ... சர்வீஸ் ....எங்கள் ஊர்க்காரர்கள் பலருக்கும் வேலை வாங்கித் தந்து தனி ராஜ்யமே அங்கு நடத்தினார் ....
இந்தியாவின் பல மாநில (கேரளா , கர்நாடகா, ஒரிஸ்ஸா , பீஹார் , உ.பி, ராஜஸ்தான் .....) அனைத்து ஊழியர்களும்...''அண்ணாஜி'' என மதிக்கும் ஒரே நபர்.
மிகுந்த செல்வாக்கு ...நல்ல உயரம் & கட்டுமஸ்து தோற்றம் ...ஆனால் அவர் ஒரு பலாப்பழம் ...கரடு முரடு தோற்றம் ...பிள்ளை மனம் ...அன்பு ...இரவில் / டூட்டி இல்லாத வேளைகளில் நன்றாய்க் குடிப்பார். மதுக்கடை பக்கத்து தெரு சந்தில் ...நடை தூரத்தில் ...சற்று அப்பால் ''காட்பரீஸ் '' சாக்லேட் கம்பெனி ....
சரளமாய் இந்தி ,மராட்டி ,குஜராத்தி பொழிவார் ...
அப்போது 1982 டிசம்பரில் ''ப்ரீச் கேண்டி'' -ல் ...அமிதாப்பச்சன் வயிறு கிழிந்து அட்மிட் ஆகி இருந்தார்.
கமல்ஹாசன் குதம் கிழிந்து மூல நோய் அறுவை சிகிச்சை நோயாளியாக படுத்திருந்தார் ...
ஹேமமாலினி முதல் பெண் குழந்தை ஈன்று இருந்தார் . பரிசோதனை செய்ய அடிக்கடி வருவார்.
மூவரையும் பார்க்க தாத்தாவுடன் சென்ற பெருமை மிகு நிகழ்வு அங்கு ...
அப்போது தான் முதல் லிப்ட் அனுபவம் ...நிகழ்ந்தது ...
ஆனால் அது வெறும் மூன்று மாடிகள் . அடுத்து ஏர் இந்தியா மெய்ன் கட்டிடம் நரிமன் பாயிண்ட் அலுவலகம் போனோம். ஏதோ மெடிக்கல் சர்டிபிகேட் அங்கு கட்டாயம் வாங்குவது வழமை . ஒரு மஞ்சள் புத்தகம் ...அதில் ''Full Dose'' சீல் அடித்து தருவார்கள். குவைத் போகும் நபர்களுக்கு மிகக் கட்டாயம் தேவையாம்.
அங்கு பல மாடிகள் . சரியாக நினைவில்லை .ஆனால் எப்படியும் 20-க்கும் மேல் இருந்தது. இங்கு வேடிக்கையாய் அனுபவிக்க வேண்டுமென்றே மேலும் கீழும் சிலமுறை சென்று மஜாவை அனுபவித்தேன் . ஆனந்தம் ...ஏறக்குறைய சொர்க்கம் ....
ஆனால் அதைவிட இனிய அனுபவம் 40 மாடிகள் போன இனிய அதிர்ச்சி அனுபவம் ஜனவரி 1983...''பொங்கல்'' வேளை கிடைத்தது ....அடுத்த பதிவில் ....
அருகிலிருப்பவரையே மறைக்கும் புகை
ஆபத்தைக் கொடுக்கும் வகை
இடுகாட்டில் எரிக்கும் வரை 
ஈகை காட்டும் இருட்டறை 
உறவுகள் இன்பத்தை அழிக்கும்
ஊரும் உன்னைப் பழிக்கும்
எங்கும் குடிக்கும் பழக்கம்
ஏனையவரையும் துணைக்கு அழைக்கும்
ஐயமில்லாமல் நிறுத்தணும் புகையை
ஒரு நிலைப்படுத்தணும் மனதை
ஓயாது  வெறுக்கணும் புகைப்பிடியை !!!
 முழக்கங்கள்:-
புகையில் இருக்கும் நஞ்சு
கண்டு நீ அஞ்சு
புகையாய் இழுக்கும் நச்சு
அதனால் இழப்பது உயிர் மூச்சு
புகை பரவி கெடுக்கும் பொன் உலகை
மெல்ல எடுக்கும் மக்கள் இன்னுயிரை
புகைக்க புகைக்க இன்பம்
முடிவில் அளவில்லா துன்பம்
புகைத்தார் வையகம் மேல்
புதைந்தார் பூமிக்கு கீழ்
புத்துணர்வு தந்த புகைப்பழக்கம்
சத்துயிர் மாய்த்து சாய்க்கும்
புகை அது ஒரு மயக்கம்
அதை விட ஏன் தயக்கம்
புகைக்க புகைக்க புகை நிறையும்
பையில் உள்ள பணம் கரையும்
அன்று சுருள் சுருளாய் புகைத்தவர்
இன்று சுருங்கிய புகைப்படமாய் சுவரில்
புண்ணான மனத்தை புகை விட்டு ஆற்றும்
பண்பு கெட்ட வழக்கத்தை இன்றே நீ மாற்று
“தம்” அடித்தால் தம்பிடிக்கும் பயன் இல்லை
மே31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாகும்.
அதனை முன்னிட்டு புகைத்தல் பற்றிய பார்வையை இங்கு விளக்குவோம்.
இன்று கெட்ட பழக்கமாக இருக்கும் சிகரெட், சுருட்டு, பீடி போன்றவை ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்கும் பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றி அன்று அறியப்படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல் பற்றி தெளிவான கருத்துக்கள் வழங்கவில்லை. 
அண்மைக் காலம் வரை புகையிலையின் தன்மை, புகைத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்படாததனால் புகைபிடித்தல் பற்றிய தீர்ப்பிலும் கருத்து வேறுபாடுகள் நிலவி இருக்கின்றன. சிலர் புகைத்தல் தவறு என்றார்கள். வேறு சிலர் பிழையானதல்ல என்றார்கள். ஏன் தவறு எனக்காண்போம்.
1.போதையை எற்படுத்துதல்:
புகைத்தல் போதையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக ஆரம்பபழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதை பொருட்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். 'குறைந்தளவு போதையை ஏற்படுத்தக் கூடியதும் தவறே.
2.சோர்வை ஏற்படுத்தல்:
புகைப்பதனால் போதை ஏற்படுவது இல்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதில்லை. உடல் உறுப்புக்களில் சோர்வை ஏற்படுத்தக் கூடியவற்றையும் தடுத்து விலக்குவதே நன்று.புகைப்பதனால் மூன்று வகையான தீமைகள் விளைகின்றன.
(i) உடல் நலனுக்கு ஏற்படும் கேடு:
புகைப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புக்களை பற்றியும் சுகாதாரக் கேடுகளைப் பற்றியும் நவீன மருத்துவம் மிக விரிவாகப் பேசுகிறது. ஒரு காலத்தில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான, அறிவியல் ரீதியான ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் இது பற்றிய நிலைப்பாடுகளும் வேறுபட்டன. ஆனால் இன்று இதன் கேடுகள் குறித்து எத்தகைய சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது பற்றிய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
தொண்டை அல்லது வாய்ப் புற்றுநோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது. மேலும் புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பை புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. புகைப்பிடிக்காதவர்களைவிட புகை பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பிடித்தல் இருதய நோய்;களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்றபடுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது. சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசயானப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.
புற்றுநோய், இருதய நோய்கள் மட்டுமன்றி புகைப்பிடிப்பதால் அபாயகரமான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மார்புச் சளி, ஆஸ்துமா, எம்பிஸிமா(Emphysema) உட்பட மற்றும் பல சுவாசக் கோளாறு நோய்களை புகைத்தல் தீவிரப்படுத்துகிறது என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
(ii) பொருள் நஷ்டம்:
இரண்டாம் வகைக் கேடு பொருள் நஷ்டமாகும்.
புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் விரயமாக்கப்படுகிறது. வீண்விரயம் செய்வதை யாரேனும் விரும்புவரோ?.
(iii) ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு
புகைத்தலுக்கு பழக்கப்பட்டவர்கள் தமது மனோவலிமையை இழந்து இத்தீய பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர்.ஏதோ காரணத்தால் புகைபிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் இத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன என்பதை அன்றாட வாழ்க்கையில் நம்மால் காண முடியும்.
எனவே, சுகாதார கண்ணோட்டத்தில் நோக்கினாலும், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தாலும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் அணுகினாலும் புகைபிடித்தல் தவறு என்ற கருத்தே மிகைத்து, பலமானதாக விளங்குகிறது.