Sunday, 16 September 2018

லவ் ஸ்டோரி

வருடம் 1990. ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. தெய்வ நாயகி மிஸ் எங்க வகுப்பிற்கு வந்ததும் எல்லோரையும் ஒரு முறை பார்த்தார். நீங்க ரெண்டு பேரும் எந்திருங்க, போன வருசம் போலவே நீ கிளாஸ் லீடர், தேவி அஸிஸ்டெண்ட் லீடர் சரியா?
போச்சுடா மனசுக்குள் சொல்லிட்டு சரி மிஸ் என்றேன். வேற வழி!
காரணம் மிஸ் ஸ்கூலுக்கு வரவே மாட்டாங்க பாதி நாள் நாங்களே தான் படிச்சுக்குவோம். இப்போ நாங்க 10 வது வேற, என்ன பண்ண போறாங்களோ தெரில…
கிளாஸ் முடிஞ்சதும் நீ மட்டும் என்ன வந்து பாரு.
சரி மிஸ்.
என்னவா இருக்கும்டி தேவி மெதுவா கேட்டா. தெரிலடி. வகுப்பு முடிந்ததும் போனேன்.
மிஸ்…
ம்…..வா. என் பையன் இப்போ 12 வது போறான் அவன் கூட நான் இருக்கனும். நான் அப்பப்போ வருவேன் நீ தான் கிளாஸ் சத்தம் வராம பாத்துக்கனும். சரியா?
ம்..சரி மிஸ்.
அரசு பெண்கள் பள்ளியில் இவரும், பக்கத்து காம்பவுண்ட்ல ஆண்கள் பள்ளியில் அவர் கணவரும் ஆசிரியர்கள். யாரும் ஒன்றும் பண்ண முடியாது.
எங்க வகுப்பில் நான்கு குரூப்கள். அவங்கள சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.
எங்க குரூப்ல நானு, முத்துலட்சுமி, ரமா, தேவி, ரஷிதாபேகம். அஞ்சு பேரும் ஒண்ணாவே சுத்துவோம். தேவிக்கு சிம்ம குரல் கணீர்னு பாடுவா. எல்லாரும் உக்காந்து மணிக்கணக்குல அவ பாடறத கேப்போம்.
போர் அடிக்குது பாடுடி…
“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே”….
துளி சத்தம் இல்லாம அமைதியா கேப்போம்.
முத்துலட்சுமி மட்டும் கமல் பாட்டுதான் கேப்பா. கமல் பைத்தியம். பானு ரஜினி ரசிகை. முத்துவ வம்பிழுப்பதே பானுக்கு வேலை.
எதாவது கேட்டா கூட கமல் பாட்டு வரிகள்ல இருந்தே தான் பதில் சொல்லுவா. அவ எப்பவும் கிளாஸ்க்கு லேட்தான். 3 கிமீ நடந்து வருவா.
ஏன் லேட் வெளிய நில்லு.
‘பொன் மானே கோபம் ஏனோ?’
பாடாம வெளியவே நில்லு. எப்ப பாரு கமல் பாட்டா பாடிட்டு.
‘காவல் காப்பவன் கைதியா நிற்கிறேன் வா… பொன் மானே…’
சரி உள்ள வந்து தொல.
‘மங்கை உன் மனதினை கவருது, மாறன் கணை வந்து மார்ப்பினில் பாயுது, இதழில் கதை எழுதும் நேரமிது…”
சரி போய் உக்காரு.
ஏ அவ கமல் பொண்டாட்டிடி.. பானு வம்பிழுப்பா.
அவளுக்கு என்னடி நதியா மாதிரி அழகா தானே இருக்கா, நான் மட்டும் பையனா இருந்தா இவள கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன் … தேவி எப்பவும் முத்துக்குதான் சப்போர்ட் பண்ணுவா.
பானுக்கு முத்து மேல லேசா பொறாமை கூட உண்டு.
எப்படியோ படிச்சு ஒரு வழியா 10வது முடிச்சோம். ரிசல்ட் வந்தது. ரமாவும் நானும் மட்டும் 400 மதிப்பெண் மேல. மத்தவங்க பாஸ்.
நான் பாலிடெக்னிக் சேர போறேன்டி. முத்து நீயும் வரியா?
எங்க வீட்ல படிக்க வைக்க மாட்டாங்கடி எனக்கு ஸ்ரீரங்கம் ஸ்கூல் தான் கடைசி வரை.
நீ நல்லா படி.
ம் சரிடி.
அவ இன்ஜினியரம்மாடி… பானு சத்தமா கத்த எல்லாரும் சிரிக்க, பிரிய மனமின்றி பிரிந்தோம்.
———————————————————————–
நானும் புது பிரண்ட்ஸ், புது இடம் பிசியாகிட்டேன். செமஸ்டர் லீவ்ல ஸ்கூல் போய் எல்லார் கூடவும் பேசிட்டு, முத்துவோட கமல் பாட்டு கேட்டுட்டு வருவேன்.
அடுத்த செம் லீவ்ல ஸ்கூல் போக முடியல. அவளுங்களும் 11 வது முடிந்து 12 வது வந்துடாங்க. 6 மாதம் கழித்து ஸ்கூலுக்கு போனேன். முத்து மட்டும் சோகமா இருந்தா.
என்னாச்சுடி?
ஒன்னுமில்ல… சொல்லும் போதே அழுதா.
பானுதான் சொன்னா, தினமும் ஸ்கூல் போகும் போது யாரோ ஒருத்தன் இவள பார்த்து இருக்கான். போன வாரம் ஒரு கர்சீப்ல, ‘காவிரி கரை பெண்ணே’னு ஆரம்பிச்சு லவ் லெட்டர் எழுதி முத்துக்கு கொடுத்துருக்கான். அத அவ சித்தப்பா பாத்துட்டார். கர்சீப்பை தீ வச்சு எரிச்சுட்டார். வீட்ல ஒரே பிரச்னை. அதான் அழறாடி.
இதில் இவ தப்பு ஒன்னும் இல்லயே பின்ன எதுக்கு பிரச்சனை பண்றாங்க – நான் கேட்கவும், முத்து பேச ஆரம்பிச்சா…
அதான் எனக்கும் புரியல. எப்பவும் வீட்ல ஒரே திட்டு. உறவுக்காரப் பையனுக்கே என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா பேசிக்கறாங்க. இனி ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு தோனுது… – சொல்லிட்டு திரும்ப அழுதாள்.
உனக்கு 17 வயசு தானே ஆகுது. அதுக்குள்ள கல்யாணமா, நீ ஒத்துக்காதடி.
என்னை யாரும் மதிக்கறதே இல்லடி அவங்க இஷ்டப்படி கல்யாண ஏற்பாடு நடக்குது. இன்னும் 2 மாசத்துல கல்யாணம்னு சொல்றாங்க.12வது கூட படிக்க மாட்டேன் போல. என் விதி அவ்ளோதான்…
தேம்பி தேம்பி அழுதவளை பரிதாபமா எல்லோரும் பார்த்தோம்.
————————————————————————–
கொஞ்ச நாள் கழித்து பானு தான் சொன்னா, முத்துக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு. யாரையும் கல்யாணத்துக்கு கூப்டலடி. பாவம் எப்படி இருக்கான்னு தெரிலடி.
அவ சொல்லவும்…
யார் யாருக்கு என்ன வேஷமோ னு எங்கயோ பாட்டு சத்தம் கேட்டுச்சு.
தேர்வு, படிப்புன்னு நாள் ஓட ஆரம்பிச்சுது. 12 வது முடிச்சு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் SRC காலேஜ் சேர்ந்தாங்க. நானும் அப்பப்போ போய் எல்லாரையும் பார்த்துட்டு வருவேன். முத்து என்ன ஆனான்னு மட்டும் தெரியவே இல்ல.
நாட்கள் வருடங்களா வேகமாக ஓடிடுச்சு. கல்லூரி முடித்ததும் ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆச்சு. யார் கூடவும் தொடர்பு இல்லாம போச்சு.
குடும்பம், குழந்தைகள் னு தனி உலகத்துல வாழ பழகியாச்சு. அப்பப்ப முத்து நினைவு வரும்.
————————————————————————
20 வருடம் ஓடியாச்சு. ஒரு நாள் போன் வந்தது.
நான் முத்து பேசறேன்டி.ஸ்ரீரங்கம் கோயில் வரீயா உன்ட பேசனும்.
நிஜமா கனவா?
ம்.. வரேன்டி எப்படி என் நம்பர் கிடச்சுது?
எல்லாம் நேர்ல பேசலாம் வா.
ஸ்ரீரங்கம் பெருமாள் ஒய்யாரமா படுத்துகிட்டுகூட்டத்தில் முண்டியடிச்சு வரும் பக்தர்களை பார்த்து அருள்பாலித்து கொண்டிருந்தார்.
முத்துவும் அவள மாதிரியே ஒரு பொண்ணும்…
பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். என்னென்னவோ பேசனும் நினச்சு ஒண்ணும் பேசாம ஒரு பெரிய மௌனம்.
எங்கடி போன? என்ன ஆன? எவ்ளோ நாள் உன்ன பத்தி கவல பட்டோம் தெரியுமா?
ம்… கல்யாணம் முடிந்ததும் அவர் கூட மைசூர் போய்ட்டேன். கூட்டுக் குடும்பம். சமைக்க, மகள கவனிக்க, உறவுகாரங்கட்ட நல்ல பேர் எடுக்க போராடியே என் வாழ்க்கை ஓடிடுச்சுடி.
ம்… மேற்கொண்டு எதுவும் படிக்கலயா?
இல்லடி. இப்பவும் ஆரம்பிச்ச இடத்துலதான் நிக்கறேன். சரி விடு… இவதான் என் ஒரே பொண்ணு.
ஹலோ ஆன்ட்டி நான் சிந்து. அம்மா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க.
அழகாகச் சிரித்தாள்.
ஹாய் சிந்து உன் அம்மா மாதிரியே இருக்கயே. என்ன படிக்கற?
அவ தோள் மேல கை போட்டேன்.
நான் அம்மா மாதிரிதான். ஆனா ரொம்ப போல்ட் ஆன்ட்டி. சிஏ முடிக்கப் போறேன். அடுத்து ஆபிஸ் போடனும்.
படபடன்னு பேசினா.
ஓ… சூப்பர்மா. கலக்கு. அட்வான்ஸ் விஷ்ஷஸ்!
பெருமை பொங்க முத்து பார்த்தாள்…
இவள நல்லா படிக்க வச்சுட்டேன். இவ மனசுக்குப் பிடிச்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டா என் வேல முடிந்ததுடி.
முத்து சொல்ல சொல்ல சிந்து வேற எங்கயோ வேடிக்கை பார்த்தா.
அதான் உன் அம்மா சொல்லிடாளே உன் மனசுக்கு பிடிச்ச பையன் யாராவது இருக்கானா?
இருக்கு, ஆனா இல்ல!
புரியலயே தெளிவா சொல்லும்மா.
ஆன்ட்டி நான் ஒரு பையன லவ் பண்ணே. அவனும் நல்லவன்தான். ஆனா, இங்க நிக்காத, இத பண்ணாத, அங்க போகாதன்னு ஒரே டார்ச்சர். எனக்கான ஸ்பேஸ் கொடுக்காதவன் கூட எப்படி ஆயுசு முழுசும் வாழ முடியும்? அதான் பிரேக்கப் பண்ணிட்டேன் ஆன்ட்டி.
எதுவும் பேசாம முத்துவும் நானும் நின்னோம்.
ஏனோ தெரியல காவிரிகரை பெண்ணேனு எழுதுன கர்சீப்பும், தேம்பி தேம்பி அழுத அந்த 17 வயசு முத்து முகமும் நினைவில் வந்து போனது.

சைக்கிள் அங்கிளுக்கு நன்றி !

நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் அத்தனை மனிதர்களையும் கவனிக்கும் சாத்தியக்கூறு இல்லை. இருப்பினும் சிலர் நம்மிடம் தங்கள் இருப்பைப் பதிவு செய்வதுண்டு. சில சமயங்களில் அறிவுக்கு அப்பாற்பட்டு உணர்வு மட்டுமே இதற்குக் காரணியாக அமையலாம். அவ்வாறே குழந்தைப் பருவத்தில் என்னுள் பதிவேறிய, சமூகத்தின் பார்வையில் பெரும்பாலும் தப்பிச் செல்கிற ‘சைக்கிள் அங்கிள்’ஐ வாசகர் முன் நிறுத்த முனைந்தேன்.
என்னுடைய ஏழு வயதில் எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தரப்பட்டது. அன்று முதல் சைக்கிள் அங்கிள் எனக்கு அறிமுகம். சைக்கிளுக்குக் காற்றடைப்பது, பஞ்சர் ஒட்டுவது, ஹேண்டில் சரி செய்வது, சைக்கிளின் உயரம் ஏற்றி இறக்குவது, சைக்கிளுக்கு பெண்டு எடுப்பது என அனைத்திலும் பின்னி ‘பெடல்’ எடுப்பார் என்பதால் எங்கள் பகுதி நண்டு சிண்டுகள் அனைவரும் எல்லவற்றிற்கும் அவரிடம்தான் செல்வோம். கரிய மெலிந்த தேகம், எண்ணெய் இல்லாத தலை, ஓர் அரைக்கை தொள தொள சட்டை (பெரும்பாலும் சாயம் போன சந்தன நிறம்தான்), மடித்துக் கட்டிய சாரம் – இதுதான் சைக்கிள் அங்கிள்.
தினமும் மாலையில் அவரைச் சுற்றி ஒரு சிறுவர் குழாமே கூடி நிற்கும். யாரும் வரிசையில் நின்று காற்றடைத்துக் கொள்ள மாட்டோம். அவரைச் சுற்றி அங்கும் இங்குமாக நிற்பதே வாடிக்கை. அவர் சைக்கிளுக்குப் பஞ்சர் கண்டுபிடித்து ஒட்டும் ‘தொழில்நுட்பத்தை’ ஏதோ சந்திராயனையே சரி செய்வது போல வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த ஞாபகம். சைக்கிள் பழுது சம்பந்தப்பட்ட வேலைகளுக்குப் பட்டப்படிப்பு ஒன்று உண்டு என்று நான் உறுதியாக நம்பியிருந்த காலம் அது. அதுவும் அவர் சைக்கிள் பழுது பார்ப்பது பற்றி பெரியவர்களிடம் பேசும்போது பயன்படுத்தும் சில ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைகளைக் கேட்டு, “இவரு கண்டிப்பா பெரிய படிப்பு படிச்சிருப்பாரு” என நினைத்தேன். இப்போது இரண்டு உண்மைகள் விளங்குகின்றன. ஒன்று, அவர் பெரிய படிப்பு படிக்கவில்லை என்பது. மற்றொன்று, பெரியவர்கள் அனைவரும் சைக்கிள் பற்றிய எல்லா நுணுக்கங்களும் தெரிந்தது போலவும், சைக்கிள் அங்கிளுக்குத் தெரிகிறதா எனப் பரிசோதிப்பது போலவும் காட்டிய தொனி, முகபாவம் அத்தனையும் பொய் என்பது. என்னப்பா இப்பிடி பண்ணியிருக்கீங்களேப்பா? “அத்தனையும் நடிப்பா?” ( இதை மட்டும் ‘புதிய பறவை’ சிவாஜி போல வாசிக்கவும் )
காலை 7 மணிக்குக் கடைக்கு (ஓலைக்கொட்டகை) வருவார். ஒவ்வொரு நாளும் எப்படியும் மூன்று அல்லது நான்கு சைக்கிள்களாவது பழுது பார்க்கவும் பஞ்சர் ஒட்டவும் நிற்கும். அந்த வேலையைப் பார்த்துக் கொண்டே நடுநடுவே வருபவர்களுக்குக் காற்றடைத்துத் தருவார். அவ்வப்போது ஆட்கள் கடையில் இல்லாத நேரம், சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து, அவரது குச்சிக் கால்களை ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டு, இரண்டு கைகளையும் மடக்கித் தலையின் பின் வைத்துப் படு ஸ்டைலாக பீடி குடிப்பார். மதியம் ஒரு குட்டித் தூக்கம். மாலை சிறுவர் சிறுமியருடன் பொழுது போய்விடும். சிறுவர்கள் முன் கண்டிப்பாகப் புகைக்க மாட்டார். இப்படியே ஒவ்வொரு நாளும் கழியும் என நினைக்கிறேன். வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நேரங்களில் நான் கண்ட காட்சிகளைக் கொண்டு அவரது கால அட்டவணையை இவ்வாறு ஊகிக்கிறேன். அப்போதெல்லாம் பெரும்பாலும் சைக்கிள்தான் என்பதால் சைக்கிள்கள் பஞ்சராகிக் கொண்டே இருக்கும்; காற்று இறங்கிக் கொண்டே இருக்கும்; அவருக்கும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.
சில சிறுவர்கள் தங்களுக்கு ட்யூசனுக்கு நேரமாகிவிட்டதால் தங்கள் சைக்கிளுக்கு முதலில் காற்றடைத்துத் தரும்படி நச்சரித்துக் கொண்டிருப்பார்கள். “இந்தா வந்துட்டேன் தம்பீ” என வேக வேகமாக அவர்களைக் கவனிப்பார். அவர் கோபப்பட்டு ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். சிறுவர்கள் நாங்கள் அவருடைய கனிவான வாடிக்கையாளர் சேவைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு நடுத்தர வயது மனிதர் வந்து சைக்கிள் அங்கிளை கால் மணி நேரமாக நச்சரித்து விட்டு பின் திட்ட ஆரம்பித்தார் – “என்னய்யா……எவ்வளவு நேரம் நிக்கிறது? காத்து அடைக்கிறியா? இல்லையா?”. சைக்கிள் அங்கிள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பின்னர், “ஆளு வளந்த அளவு அறிவு வளரலயே? சின்னப் புள்ளேங்க எவ்வளவு நேரம் நிக்கிதுங்க……..இருட்டப் போவுது. எப்படி இருட்டுக்குள்ள வீட்டுக்குப் போகும்? கொஞ்ச நேரம் நிக்கிறதுனா நில்லும். இல்லேனா போ….” என்றார். அவர் அதற்கு முன்னும் பின்னும் யாரையும் கடிந்து பேசி நான் கண்டதேயில்லை.
நான் என் தாத்தவுடன் தான் எங்கும் செல்வேன். ஒரு நாள் நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு தாத்தா, “இந்த சைக்கிளையும் கொஞ்சம் பாருப்பா” என்று சொல்ல நானோ, “சும்மா இருங்க தாத்தா…..மெதுவாவே போலாம்” என்று கூறியதன் பின்னணி அந்தக் கற்றடைக்கும் ‘விஞ்ஞானத்தை’ உற்று நோக்கும் ஆவல்தான் என்று நிச்சயமாகத் தாத்தாவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது இதை வாசிக்கும்போது தாத்தா பொக்கை வாயோடு (பல் செட் வைத்தால் வலிக்கிறதாம்!) சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
இன்னொரு நாள் காற்றடைக்கும் போது அவரது கைகளைக் கவனித்தேன். கை முழுக்கக் கரி……. ‘உள்ளங்கை நிறமே இவருக்குக் கருப்புதானோ?’ என எண்ணும் வகையில் இருந்தது. வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் தாத்தாவிடம், “தாத்தா! அந்த அங்கிள் கை முழுக்கக் கரியா இருக்கு. எப்படி அவ்வளவு அழுக்கோட சாப்பிடுவார்? கை கழுவ சோப்பு வச்சிருப்பாருல்ல?” எனக் கேட்டவுடன், எங்கே ‘இல்லை’, ‘தெரியாது’ என்று பதில் சொன்னால் வாங்கிக் கொடுக்கச் சொல்லிவிடுவேனோ என்று பயந்து, “ஹூம்….பாத்தியா….அவர் கையில மட்டும் இல்ல…..ஒங்கையிலயும் கண்ணுக்குத் தெரியாத கிருமி நெறைய இருக்கும். அதான் கைய நல்லா சோப்பு போட்டு கழுவணும்ங்கிறது” என்று எக்குத்தப்பாக பொதுவாக ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து வைத்தார்கள் தாத்தா. மீண்டும் கேள்வி கேட்கும் ஆர்வம் போய் நான் அப்படியே விட்டிருக்கக்கூடும்.
பதினெட்டு வருடங்கள் கழித்து அவரைப் பார்க்கிறேன். முன் அவர் கடை இருந்த இடத்தின் எதிரில் இப்போது அதே சைக்கிள் கடையை போட்டிருக்கிறார். கடை…..முன்பு ஓலைக்கொட்டகை, இப்போது மரத்தடி. அவருக்கு முடி மட்டும் கொஞ்சம் நரைத்திருக்கிறது. மற்றபடி அப்படியே இருக்கிறார். இப்போது மற்ற இரு சக்கர வாகனங்கள் பெருகி விட்டதால் அவரது கடையில் பழுது பார்க்க ஒரு சைக்கிள் நின்றாலே பெரிய விஷயம். வீட்டு வேலை பார்க்கும் பெண்களும் மிகச் சில ஆண்களுமே இப்போது அவரது வயிறு காயாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். உலகமயமாக்கலுக்கு பொருளாதார ரீதியில் பலியானவர்களில் இவரும் ஒருவர் போலும். இன்று, எங்கு எதற்காக ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் நிறைந்த இந்த உலகின் முட்டாள்தனமான தேவையில்லாத வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் ஒரு பாவப்பட்ட ஜீவன்.
இப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது மனதினுள் ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுறுசுறுப்புடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்ட அந்த முகம் காணாமல் போயிற்று. அல்லது எனக்கு அப்படித் தோன்றுகிறது. அவர் இந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது, “இப்படிக் கொஞ்ச நாள் சைக்கிள் பழுது பார்த்து, காசு சேர்த்து ஒரு சின்ன பெட்டிக் கடையாவது வைக்கணும். அப்புறம் அப்படியே முன்னேறணும்” என்று அந்த வயதிற்கே உரிய துடிப்புடனும் நியாயமான பல வண்ணக் கனவுகளுடனும் இருந்திருப்பார் தானே? இப்படிக் கடைசி வரை சைக்கிள் பழுது பார்த்து ரப்பர் டயர்களுடனும் செயின்களுடனுமே வாழ்வு நடக்கும் என்று கற்பனை கூட செய்திருக்க மாட்டார் தானே?
இதுதான் நிதர்சனமா? வாழ்க்கை என்பது இதுதானா? எனப் பல கேள்விகளையும் ஒருவித ஏமாற்றம் கலந்த பயத்தையும் தருகிறார் அந்த சைக்கிள் அங்கிள். ஒருவேளை, அவரும் அவரது மனைவியும் குழந்தைகளும் இந்த வாழ்க்கைத் தரத்திலேயே மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்களாக இருக்கும். அவர் எப்போதும் போல் அவருண்டு அவர் வேலையுண்டு என்று அவ்வப்போது பீடி குடித்துக் கொண்டு ‘நிறைவான வாழ்க்கை இதுவே’ என்று கவலையில்லாமல் நிம்மதியாக இருக்கக்கூடும். அவரது கனவுகள் எனது கற்பனையாக மட்டுமே இருக்கலாம்.
அந்த அங்கிள், இந்த உலகுக்கு……இல்லை ! இல்லை !….எனக்கு ஏதோ சொல்ல வருகிறார் என்றே தோன்றுகிறது. நான் தத்துவார்த்த ரீதியாக ஏதோ சொல்ல முற்பட்டுப் பிதற்றுகிறேன் என்று தோன்றுகிறதா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஏதோ தோன்றியது…..கிறுக்கித் தள்ளிவிட்டேன். அம்புட்டுதேன். என்னை முதன்முதலில் தமிழில் கிறுக்கத் தூண்டிய, தைரியம் தந்த, என்னைப் பெரும்பாலும் மறந்திருக்கும் சைக்கிள் அங்கிளுக்கு நன்றி !

நீண்ட கதை

சென்னையில் அந்தக்காலம் :-
****************************************
வீரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற 'செமன்ட்' கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்.
திருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, 'ஜங்க்ஷன்' என்ற கௌரவம் இல்லாமல், வெறும் இடைகழி ஸ்டேஷனாக இருந்தபோது திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' மாலை நாலு அல்லது ஐந்து மணிக்குத் தஞ்சாவூர் மார்க்கமாகச் செய்த நீண்ட பிரயாணத்தின் சின்னங்களுடன் சோர்வு தட்டியது போல வந்து நிற்கும். அந்தக் காலத்தில் வீரபாண்டியன் பட்டணத்துக்குப் போகவேண்டும் என்றால், தபால் வண்டியானால் மலிவு; பிரம்மாண்டமான லக்ஷ்மி விலாஸ், கண்பதி விலாஸ் சாரபங்க் ஏறினால் சீக்கிரம் செல்லலாம். அப்பொழுதெல்லாம் திருநெல்வேலி மைனர்கள் ஸ்ரீவைகுண்டம் வைப்பாட்டிமார் வீடுகளுக்கு ஜட்கா வண்டியில் போய்விட்டு இரவு பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் ஜட்கா என்றால் அவ்வளவு 'மௌஸ்'.
அந்தக் காலத்திலெல்லாம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஒரு வாலிபன். ஊரையே வளைத்துக் கோட்டை கட்டி விடும்படிப் பணம் சேர்த்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டவர் இன்னும் ஒரு முறைகூட - அதாவது தம் கல்யாணம், தம்முடைய தகப்பனார் மரணம் இவைகளுக்காக ஐந்தாறு நாட்கள் ரஜா எடுத்துக்கொண்டு அந்தப் பிரதேசத்திற்கு மின்வெட்டு யாத்திரை செய்தது தவிர - மற்றபடி ஒரு முறைகூடச் சென்றதே இல்லை.
'தனலட்சுமி பிரொவிஷன் ஸ்டோ ர்ஸ்' பூர்வத்தில் பேட்டைப் பிள்ளை ஒருவரால் பவழக்காரத் தெருவில், அப்பகுதியில் வசிக்கும் திருநெல்வேலை வாசிகளின் சுயஜாதி அபிமானத்தை உபயோகித்துச் சிலகாலம் பலசரக்கு வியாபாரம் நடத்தியது. அந்த வியாபாரத்தில் ஸ்ரீ சுப்பையா பிள்ளையும் பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நானாவித இலாகாக்களையும் நிர்வகித்தார், அதாவது 'மான்ட் போர்ட்' சீர்திருத்தக் காலத்து மாகாண மந்திரிகள் மாதிரி. பிறகு 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக் கடையாக மாறி, திருநெல்வேலி மேலரத வீதி ஜவுளி வர்த்தகர்களில் சில்லறைப் பேர்வழிகளுக்கு மொத்தச் சரக்குப் பிடித்துக்கொடுக்கும் இணைப்புச் சங்கிலியாகி, பெரிய வர்த்தகம் நடத்துவதற்குக் காரணம் கம்பெனிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவினால் ஏற்பட்ட லாபம் என்பதுடன், எதிரில் திறக்கப்பட்ட 'மீனாட்சி பிரொவிஷன் அன்ட் பயர்வுட் ஸ்டோ ர்ஸ்' என்பதை மறந்துவிடலாகாது. இது தஞ்சாவூர் ஐயர் ஆரம்பித்த கடை. சர்க்கரையாகப் பேசுவார்; பற்று வரவும் சௌகரியத்திற்கு ஏற்றபடி இருந்தது. அவர் கடையில் கணக்கு வைத்ததால், குடும்பத் தலைவர்கள் வீட்டுத் தேவைகளுக்கு என்று தனி சிரமம் எடுத்துக் கொண்டு வெளியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லாது போயிற்று. மேலும் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' முதலாளி, தமக்கு அந்தப் பகுதி 'திருநெல்வேலிச் சைவர்களுடன்' ஏற்பட்ட நெருங்கிய தொடர்பால் கடையில் நேரடியாக வந்து வாங்குகிறவர்களுக்கு ஒரு மாதிரி, வீட்டில் இருந்துகொண்டு கணக்குச் சிட்டையை அனுப்பி மாசாமாசம் பாக்கி வைப்பவர்களுக்கு ஒரு மாதிரி என்று நடக்க ஆரம்பித்ததும் இதற்கு ஒரு துணைக் காரணம். விசேஷமாக மண்பானைச் சமையல் என்ற விளம்பரங்களுடன் சைவச் சாப்பாட்டு ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டது. அதாவது 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸி'ல் மொத்த வியாபாரம் நடத்திய ஹோட்டல் பிள்ளை, ஊரோடு போய்ச் சௌகரியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 'ரிட்டயராகி' விட்டார்; சாத்தூர் 'டிவிஷ'னில் அவருடைய மகன் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' உத்தியோகம் பார்த்ததால் அவருக்கு ஹோட்டல் நடத்துவது அகௌரவமாக இருந்தது. நிலபுலன்களைப் பார்க்கப் போவதாகச் சென்னைக்குச் செலவு பெற்றுக்கொண்டார். இப்படியாகத் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக்கடையாக மாறியது.
இந்த மாறுதலால் ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அந்தஸ்தும் உயர்ந்தது; சம்பளமும் உயர்ந்தது. திருநெல்வேலிக் கடைப்பிள்ளைகள் வரும்போதும் போகும்போதும் காட்டும் சிரத்தையால் உபவருமானமும் ஏற்பட்டது. உடை, நாட்டு வேஷ்டியிலிருந்து மல்வேஷ்டியாயிற்று. பாங்கியில் பணமும் கொஞ்சம் சேர்ந்தது. அதனுடன் அவருடைய குடும்பமும் பெருகியது. குடும்ப 'பட்ஜட்'டில் வீட்டு வாடகை இனம் பெரும் பளுவாக இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதி அளிப்பதாக இல்லை.
தேச விழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கம், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரகம் - இவருடைய வாழ்விலோ, மனப்போக்கிலோ மாறுதல் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன்பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் - எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. காலணாப் பத்திரிகைகள் காங்கிரஸின் சக்தியை அவரிடம் கொண்டுவந்து காட்டவில்லை என்றால், பவழக்காரத் தெரு, திருநெல்வேலி மேற்கு ரதவீதி, அப்புறம் நினைவிலிருக்கும் வீரபாண்டியன்பட்டணம் என்ற மூன்று சட்டங்களுக்குள்ளாகவே அவருடைய மனப் பிரதிமை அடங்கிக் கிடந்தது என்று வற்புறுத்துவது அவசியமில்லை.
மின்சார ரெயில் வண்டி அவருடைய வாழ்வில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அவர் வேலை பார்த்த கடையின் பூர்வாசிரமத்தில், அவர் பற்று வரவு நடத்திய பெங்களூர் நாயுடு, ஒரு முழு வாழ்விலும் சம்பாதித்த ஏமாற்றத்தின் சின்னங்களுடன் பழையபடி சொந்த ஊருக்குப் போய்விட விரும்பினார். அவருக்குத் தாம்பரத்தில் ஒரு சின்ன வீடு இருந்தது. ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அவருடைய வார்த்தைகள் மீது நம்பிக்கை இருந்தது. அதன் விளைவாகப் பிள்ளையவர்களுக்குத் தாம்பரம் - பீச் யாத்திரை பிரதி தினமும் லபித்தது. ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்தாலும் அவருக்கு அந்தப் பழைய மண்ணெண்ணை (கிரோசின்) விளக்குத்தான்; குழாய் வந்தும் அவருக்குத் தாம்புக் கயிறும் தவலையுந்தாம்.
பிள்ளையவர்கள் இத்தனை காலம் வீட்டு வாடகைக்குச் செலவு செய்தது, இப்பொழுது தனக்கும் தன் மூத்த பையனுக்கும் - அவன் படிக்கிறான் - ரெயில் பாஸுக்குச் செலவாயிற்று. விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம். பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை - இந்தச் சம்பிரமங்களுடன் பவழக்காரத் தெருவை நோக்கிப் புறப்படுவார். இரவு கடைசி வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை, பசி, கவலை - இவற்றுடன் தாம்பரத்திற்குத் திரும்புவார். 'பெண்ணுக்குக் கல்யாணம் காலாகாலத்தில் செய்யவேணும். மூத்தவனுக்குப் பரீக்ஷைக்குப் பணம் கட்ட வேணும். தோற்றுப் போய் வீட்டோ டு இருக்கும் சின்னவனை ஏதாவது ஒரு தொழிலில் இழுத்துவிட வேணும். நாளைக்குப் பால்காரனுக்குத் தவணை சொல்லாமல் பணம் ஏதோ கொஞ்சம், கூடக் குறையவாவது கொடுக்க வேணும்...'
பிள்ளையவர்கள் அநுட்டானாதிகள் முடித்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்து 'முருகா' என்று கொட்டாவி விட்டபடி திண்ணையில் சரிவதற்குமுன் மணி பன்னிரண்டாகிவிடும். இப்படியே தினந்தோறும்...
2
காலை ஏழு மணி சுமாருக்குத் திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' விசில் சப்தம், 'அவுட்டர் சிக்னல்' அருகில் கேட்கும்பொழுது ஸ்ரீ சுப்பையா பிள்ளை தாம்பரம் ஸ்டேஷன் மாடிப் படிகளில் கால் வைப்பார். எதிரில் நிற்கும் டிக்கெட் பரிசோதகன் புது ஆசாமியாக இருந்தால் பாஸை எடுத்துக் காண்பித்துவிட்டு மேலேறுவார். இல்லாவிட்டால், சிந்தனைகளுடன், படிகளில் கால் உயர்ந்தேறிச் செல்லும்; கண்கள் தெற்கு நோக்கி ரெயில் வண்டி வரும் திசையைத் துழாவும்; திருநெல்வேலையிலிருந்து தமக்குத் தெரிந்த யாரும் வந்தால் பார்க்கலாமே என்ற ஆசைதான். 'எக்ஸ்பிரஸ்' புறப்பட்ட பிறகுதான் மின்சார ரெயிலும் புறப்படும். ஆகையால் அந்த நேரத்தில், 'எக்ஸ்பிரஸ் பிளாட்பார'த்திற்குச் சென்று இரவு முழுவதும் கொசுக்களுடன் மல்லாடிய சிரமத்தைச் செங்கற்பட்டு அவசரக் காப்பியில் தீர்த்துக் கொண்ட பாவனையில் ஜன்னல் வழியாகத் தலை நீட்டுபவர்களைப் பார்ப்பதில் ஒரு நாட்டம் பிள்ளையவர்களுக்கு எப்பொழுதும் உண்டு.
இடுப்பில் நாலு முழம் மல், தோளில் ஒரு துவர்த்து, மடியில் சம்புடம் வகையறா, கையில் போசன பாத்திரம் - இந்தச் சம்பிரமங்களுடன் பிள்ளையவர்களை எப்பொழுதும் - மழையானாலும் வெயிலானாலும் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு வாரமாக க்ஷவரம் செய்யாத முகம், நெற்றியில் பளிச்சென்ற விபூதி, நனைந்துலரும் தலை மயிரைச் சிக்கெடுக்கும் வலக்கை - இவைகளை நினைத்துக் கொண்டால் சுப்பையா பிள்ளையின் உருவம் வந்து நின்றுவிடும். மழைக் காலமானால் கையில் குடை ஒன்று எப்பொழுதும் விரித்துப் பிடித்தபடி போசன பாத்திரத்துடன் அதிகமாகக் காணப்படும்.
தெற்கு ரதவீதி ஜவுளி வியாபாரிகள் இவரிடம் தப்பித்துக் கொண்டு நேரடியான வியாபாரம் நடத்திவிடுவது துர்லபம்; அப்படி எப்பொழுதாவது நடத்த முயன்றிருந்தால் பிள்ளையவர்களுக்குத் தேக அசௌக்கியம், ரெயிலுக்கு வரத் தாமதமாயிற்று என்பதுதான் கணக்கு. இதனால் பிள்ளையிடம் கடை முதலாளிக்கு வெளிக் காட்டிக் கொள்ளப்படாத தனி வாஞ்சை - 'சுப்பையா இல்லாட்ட நம்ம கையொடிஞ்ச மாருதி' என்பார் முதலாளிப் பிள்ளை. இவ்வளவிருந்தும் பண விஷயத்தில் என்னவோ அவர் வெகு கறார்ப் பேர்வழி.
பிள்ளையவர்கள் ரெயிலில் ஏறுவதே ஒரு தினுசு. நடுமைய வண்டியில், வாசலுக்கு அருகில் உள்ள வலது பக்கத்து 'ஸீட்டில்', எஞ்சினுக்கு எதிர்ப்புறமாகத்தான் உட்காருவார். அது அவருடைய 'ஸீட்'. புறப்படுகிற இடத்தில் ஏறிக் கடைசியாக நிற்கிற இடத்தில் வந்து இறங்குகிறதால் இந்த இடத்துக்கு அவரிடம் யாரும் போட்டிக்கு வந்ததே இல்லை. வந்திருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். தாம்பரத்திலிருந்து 'பீச்' வரையில் உள்ள பாக்கங்களிலும், பேட்டைகளிலும் இரண்டிரண்டு நிமிஷம் வண்டி நிற்கும்பொழுதுதான் அவருடைய நிஷ்டை கலையும். வண்டி 'பீச்' ஸ்டேஷனில் வந்து நின்றுவிட்டது என்றவுடனேயே இறங்குவதில்லை. வெளியில் இறங்கியதும் வேஷ்டியை உதறிக் கட்டிக் கொண்டபின் துவர்த்து முண்டை உதறி மேலே போட்டுவிட்டு பிறகு ஜன்னல் வழியாக வண்டிக்குள் தலையையும் கையையும் விட்டு கையில் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காலெட்டி வைப்பார் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. ஆர அமர மெதுவாக, சாவகாசமாக இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே போகும் கடைசிப் பிரயாணி சுப்பையா பிள்ளை. தாம்பரத்திலும் பீச்சிலும் வண்டியில் ஏறும் முதல் பிரயாணியும் அவர்தாம். அவரிடம் சொந்தமாகக் கடிகாரம் ஏதும் இல்லை. அவரே ஒரு கடிகாரம்.
பிள்ளையவர்கள் வண்டியில் ஏறி உட்கார்ந்தாரானால் தலையை வெளி நீட்டாமல் ஜன்னல் பக்கமாகத் திரும்பிவிடுவார். 'பீச் ஸ்டேஷன்' கோட்டைச் சுவர்களில் கண்பார்வை மோதிக்கொள்ளும் வரையில் அந்தப் பாவனையில் கழுத்தே இறுகிவிட்ட மாதிரி உட்கார்ந்திருப்பார். பார்வையில் ஒரு குறிப்பு இருக்காது; அத்திசையில் இருக்கும் பொருள்கள், ஜீவன்கள் அவர் பார்வையில் விழும் என்பதில்லை; விழுவதில்லை என்று சொல்ல வேண்டும்.
ஆனால் இவைகளுக்கெல்லாம் விதிக்கு விலக்கு இந்த மீனம்பாக்கம் ஸ்டேஷன். இதை வண்டி நெருங்கும்பொழுது அவர் கண்கள் உயிர் பெறும். மிரண்டு சோலையுடன் கூடிய கப்பிக்கல் ரஸ்தாவையும் தாண்டி, தூரத்தில் தெரியும் விமான நிலயத்தில் தங்கும்.
'எப்பவாவது ஒரு தரத்துக்கு அஞ்சு ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஆகாசக் கப்பலில் ஏறிப் பார்த்துவிட வேணும்' என்பது அவரது தினசரி உத்தேசம் - பிரார்த்தனை. எப்பவாவது... மீனம்பாக்கத்தில் சிவில் விமான ஏற்பாடு அமைக்கப்பட்டதிலிருந்து நாளது தேதி வரை, அந்த 'எப்பவாவது' என்ற எல்லைக்கு முடிவுகாணவில்லை. வண்டி இரண்டு நிமிஷம் நின்று சென்னையை நோக்கிப் புறப்படும் வரையில் தில்லை நோக்கிய நந்தன் தான். வண்டி, 'ஸ்டேஷன் பிளாட்பார'த்தை விட்டு நகர்ந்து வேகமெடுக்குமுன், இவரையும் வண்டியையும் வழியனுப்பிப் பின் தங்கி, மறுபடியும் தென்படும் விமான நிலயக் கட்டிடங்கள் பிள்ளையவர்களின் இரத்தவோட்டத்தைச் சிறிது துரிதப்படுத்துவதுதான் மிச்சம். அடுத்த ஸ்டேஷன் வருவதற்குமுன் அவருடைய மனம் ஜப்பான் சீட்டிகளிலும் புடைவைகளிலும் முழுகி மறைந்துவிடும். முக்குளித்து வெளிவரும்போதெல்லாம், மனமானது பெண்ணுக்கு வரன் தேடுவது, மேயன்னா விலாசத்துப் பாக்கிக்காக இன்னொரு தடவை கடுதாசி போடுவது, இந்த வருசமாவது வைகாசிக்குக் காவடி எடுத்துவிட வேணும் என்று நிச்சயிப்பது - இவ்விதமாக 'பீச் ஸ்டேஷனை' நெருங்கிக் கொண்டிருக்கும். ஒரு முறை திருநெல்வேலிப் பக்கமாகப் போனால் பெண்ணுக்கு வரன் நிச்சயிப்பதுடன் காவடியையும் எடுத்துவிட்டு, சின்னப் பயலுக்கு ஏதாவது ஒரு வழி செய்துவிட்டு வரலாம். ராதாபுரத்துப் பிள்ளை கொளும்புக்குப் போகையில் தாக்கல் எளுதுவதாகச் சொன்னார்கள். வந்து ஆறு மாசம் ஆச்சே, போனதும் எதுக்கும் ஒரு கடுதாசி போட்டுவிட்டு மறு வேலை பார்க்கணும். இந்தச் சேட்டுப் பயலைப் பார்த்துக்கிட்டு நேரா கடைக்குப் போயிட்டா அப்புறம் வெளியிலே போக வேண்டியிருக்காது; முதலாளியையும் பாத்துப் பேச அப்பந்தான் சௌகரியம்... அவுஹ என்னமோ ஊருக்கு ஒரு மாசம் போயிட்டு வரணுமாமே - விதிதான்... எப்படியும் கேட்டுப் பாக்கது...'
வண்டி மாம்பலம் வந்து நின்றது. 'பிளாட்பார'த்தில் ஜனக்கூட்டம்; ஏக இரைச்சல். கூடைக்காரிகளும் ஆபீஸ் குமாஸ்தாக்களும் அபேதமாக இடித்து நெருக்கிக் கொண்டு ஏறினார்கள். இந்த நெருக்கடியில், இவர் பார்வையில் விழும் வாசலில் பெரிய சாக்கு மூட்டையும் தடியுமாக ஏறிய கிழவனாருக்குப் பின் பதினாறு வயசுப் பெண் ஒருத்தி 'விசுக்' என்று ஏறிக் கிழவனாருக்கு முன்னாக வந்து காலியாகக் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். 'பொம்பிளையா மாதிரியாக் காங்கலியே; நெருக்கித் தள்ளிக்கொண்டு மின்னாலே ஓடியாந்து உட்கார்ந்து கொண்டாளே; பொம்பிளை வண்டியில்லே' என்று ஆச்சரியப்பட்டார் பிள்ளை.
வந்து உட்கார்ந்தவள் ஒரு மாணவி. வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் 'லாங் செயி'னுடன் ஒரு 'ஸ்டெதாஸ்கோப்'பும் அலங்காரத்துக்காக (?) தொங்கிக் கொண்டிருந்தது. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடைவை. அதற்கு அமைவான 'ஜாக்கெட்'. செயற்கைச் சுருளுடன் கூடிய தலை மயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள். காதிலிருந்து ஒரு வெள்ளிச் சுருள் தொங்கட்டம். கையில் புஸ்தகமோ, நோட்டோ அவர் நன்றாகக் கவனிக்கவில்லை. நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துத் தினவு தீர்த்துக் கொண்டார். கண்களைக் கசக்கிக் கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையை தடவிக் கொடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார். பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது.
சாக்கு மூட்டையுடன் திண்டாடிய கிழவனார் அதைத் தனது முழங்காலருகில் சரிய விட்டுவிட்டு இரண்டு கைகளாலும் தடியைப் பிடித்துக் கொண்டு கொட்டாவி விட்டு அசை போட்டபடி பெஞ்சின் மூலையில் ஒண்டி உட்கார்ந்திருந்தார். பெண்ணோ சாவகாசமாகச் சாய்ந்து வண்டியில் நிற்கும் மற்றவர்கள் மீது ஒரு தடவை பார்வையைச் சுழற்றி விட்டு, தனது கைப்பையைத் திறந்து அதற்குள் எதையோ அக்கறையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். வண்டி புறப்பட்டது...
கோடம்பாக்கத்தின் 'செமன்ட்' சதுரக் கட்டிடங்களில் அவர் கண் விழுந்தது. 'பெத்துப் போட்டா போதுமா...' என்று அந்த நேரத்தில் வீட்டுக் கிணற்றடியில் தண்ணீர் சுமக்கும், வரன் நிச்சயிக்க வேண்டிய தமது மகளைப் பற்றி நினைத்தார். அவளைப் போல இவளையும் பெண் என்ற ரகத்தில் சேர்த்துக் கொள்ள அவர் மனம் மறுத்தது.
'ஷாக்' அடித்ததுபோல் பிள்ளையவர்கள் கால்களைப் பின்னுக்கிழுத்தார். கூட்டத்தின் நெருக்கத்தால் அவளது செருப்புக் காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது. பரக்க விழித்த பார்வையுடன் பிள்ளையவர்கள் கால் உடல் சகலத்தையும் ஒடுக்கிச் சுருக்கி 'ஸீட்டு'க்குள் இழுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலிருந்த புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். சிந்தனை அதில் விழவில்லை. அந்தப் பார்வை பிள்ளையவர்கள் மனசுக்குள் எதையோ தூண்டில் போட்டு இழுத்தது. நெற்றியில் வியர்வை அரும்ப ஜன்னல் வழியாக வலப்புறத்து வயல் - கட்டிடக் குவியல்களைப் பார்த்தார்.
மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது. வீரபாண்டியன்பட்டணத்துக் கருக்கு மாப்பிள்ளை - மேளதாளக் குறவைகளுடன் வீட்டில் குடிபுகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக் கோணிய உருவம், பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையையும் தூக்கிச் சென்ற நாள், சங்கிலிகள், குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம்...
சடபட என்ற பேரிரைச்சலுடன் எதிர் லயனில் ஒரு மின்சார ரெயில் விரைந்து நெருங்கியது. வண்டிகள் ஒன்றையொன்று தாண்டிச் செல்லும் சில விநாடிகளில் காதையும் மனதையும் குழப்பும் கிடுகிடாய்த்த சப்தம்; எதிரே ஓடிமறையும் ஜன்னல்களில் தோன்றி மறையும் தலைகள் - அப்பாடா! வண்டி சென்றுவிட்டது. சப்தமும் தூரத்தில் ஒடுங்குகிறது.
பிள்ளையவர்களின் மனம் ஓசையின் பின்பலத்தால் வேறு ஒரு திசையில் சஞ்சரிக்கிறது. 'பிராட்வே' முனையில் டிராமும் மோட்டாரும் மோதிக்கொள்ள நெருங்கிவிட்டது. இடையில் அந்தப் பெண். பிள்ளையவர்கள் அவளை எட்டி இழுத்து மீட்கிறார். 'தனியாக வந்தால் இப்படித்தான்' என்கிறார். மீண்டும் ஓரிடத்தில் ஒரு ரிக்ஷாவில் அதே பெண்; சக்கரத்தின் கடையாணி கழன்று விழுகிறது. ஓடிப்போய் வண்டியைச் சரிந்துவிடாமல் தாங்கிக் கொள்கிறார். கூட்டம் கூடிவிடுகிறது. கூட்டத்திலே போராடி மல்யுத்தம் செய்து அவளை மீட்டுக்கொண்டு வருகிறார்... பிள்ளையவர்களின் மனசு சென்று சென்று அவள் உருவத்தில் விழுகிறது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்புகிறார். 'எழும்பூர் தாண்டிவிட்டதா' என்று ஆச்சரியப்படுகிறார்.
பார்க் ஸ்டேஷன்!
கூட்டம் ஏகமாக இறங்குகிறது. பிள்ளையவர்கள் பார்த்தபொழுது எதிர் 'ஸீட்' காலியாக இருந்தது. கிழவனும் மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கிவிட்டான். அந்தப் பெண் எப்போது இறங்கினாள்? வந்த அவசரம் மாதிரிதான் போன அவசரமும்... வண்டியில் பெரும்பான்மையான கூட்டமும் இறங்கிவிட்டது. இவர் பெட்டியில் எல்லா இடங்களும் காலி.
மின்சார விசில்...
வண்டி புறப்பட்டுவிட்டது. தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அப்பாடா! ஒருத்தருமில்லை. காலை எதிர்ப் பெஞ்சில் நீட்டிக் கொண்டு பிடரியில் இரு கைகளையும் கோர்த்து அண்டை கொடுத்துக் கொண்டு கண்களை அரைவாட்டமாகச் சொருகி யோசனையில் ஆழ்ந்தார். மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவம் மனசில் வந்து கூத்தாட ஆரம்பித்தது. விரல்களை வாயருகில் சொடக்கிவிட்டு 'சிவா' என்றபடி கொட்டாவி விட்டார்.
கோட்டை தாண்டி ரெயில் 'தகதக'வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. 'வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும்... அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுப்படியாகிவிடும்...திருச்செந்தூரிலே ஒரு கட்டளை ஏற்படுத்திவிட்டால், முருகன் திருநீறாவது மாசா மாசம் கிடைக்கும்...'
வண்டி ஊதியது...
'அந்தச் சின்னப் பையனுக்கு வேட்டி எடுக்கவா? போன மாசந்தானே ஒரு சோடி வாங்கினேன்... பயலெக் கண்டிக்கணும்.'
வண்டி வந்து நின்றது.
கீழே இறங்கி வேட்டியை உதறிக் கட்டினார். மேல்துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கால் எட்டி வைத்தார்.
டிக்கட் இன்ஸ்பெக்டர் சரிபார்த்த கடைசிப் பிரயாணி ஸ்ரீ சுப்பையா பிள்ளை.

சட்டை உரிக்கும் பாம்பு

சட்டை உரிக்கும் பாம்பு - என் அனுபவம்
********************************
(பயந்தவர்களுக்கு அல்ல )
========================
பாம்பு தனது முகத்தை பாறை மீது சரசரவென உரசியதும், ஆம்லெட் போடுவதற்கு மெதுவாக முட்டை ஓட்டை தட்டினால் மெலிதாக விரிசல் வருமே... அப்படி ஒரு விரிசல் உதடு பகுதியில் தோன்றும். அந்த விரிசலை சீரற்ற கருங்கல் அல்லது பாறையில் வாகாய் கோர்த்துக் கொள்ளும்.
கட்டிடத்தில் கயிறு போட்டு ஏறுவது போல இதுவும் முன்னேறிச் செல்ல போடப்படும் ஏற்பாடு.
உதட்டு வெடிப்பை பாறை இடுக்கில் நன்கு தோதாக மாட்டியதும் மெதுவாக வேலையை ஆரம்பிக்கும்.
வளைந்து நெளிந்து செல்வதுதான் இயல்பான குணம் என்றாலும் அந்த சமயத்தில் மட்டும் மூங்கில் கம்பு போல விறைப்பாக நீண்டு கிடக்கும். நீண்ட போராட்டத்துக்கு பிறகு பஞ்சு நுரை போல தலைப் பக்கத்தில் இருந்து வெளிவரத் தொடங்கும். அப்படியே தலையை நகல் எடுத்தது போல மற்றொரு தலை வெளியேறும்.
எலியையோ முட்டைகளையோ ஜீரணிக்க முடியாமல் துப்புவதை கேள்விப்பட்டு இருப்போம். இது தன்னையே துப்புவதை போன்றது. கிட்டத்தட்ட இரை எடுத்துக்கொண்டு நகர முடியாமல் கிடப்பது போலவே இப்போதும் கிடக்கும். தலை வந்த சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல முழு உடலும் வெளிவரத் தொடங்கும்.
இது குகைப் பாதையை கடந்து வெளி வரும் ரயில் போலவே இருக்கும். தலையை வெளியேற்றும்போது இருந்த சிரமம் இப்போது இருக்காது என்பதால் உடல் பகுதி சற்று வேகமாகவே வெளியேறிவிடும்.
வெளிர் மஞ்சள் நிறத்தில் தங்கத்தை உருக்கியது போல தக தகவென மின்னும் அந்த உயிர், உயிரற்று கிடக்கும் தனது கூட்டை இப்போது பார்க்கும்.
அதற்கு இது ஒரு புதுப்பிறவி. உடலை முழுமையாக வெளியேற்ற வசதியாக தோலில் சுரந்த பிசுபிசுப்பும் கலந்து ஒருவித மதமதப்புடன் மயங்கி கிடக்கும். நீண்ட நேரம் உடலை விரைப்பாக வைத்திருந்த களைப்போ என்னவோ அப்படியே சுருண்டு ஓய்வெடுக்கத் தொடங்கும்.
பாம்பு சட்டை உரிப்பதைத்தான் சொல்கிறேன்....
---------------------------------------------------------------------------
பள்ளியில் படித்த காலத்தில் பார்த்த உண்மையான நிகழ்வு ...
நல்ல பாம்பு, சாரை தொடங்கி தண்ணீர் பாம்பு பச்சை பாம்பு வரை பொது விதி இதுதான் போலும்.
பள்ளி வயதில்எங்கள் ஊருக்கு தெற்கே இருக்கும் பரம்பு காட்டில் உள்ள கிணற்றில் இறங்கி குளிக்கும்போது சுவரில் (கல் பாறை) இதுபோன்ற பாம்பு சட்டைகள் தொங்குவதை வைத்து அதன் நடமாட்டத்தை அனுமானிப்போம். ஒரு கிணற்றில் ஏராளம் தவளைகள் உண்டெனில் ஓகே ...ஒன்றுமே இல்லையெனில் அங்கு மிக நிச்சயமாய் ஏதோ தவளைகளை தின்று கொழுத்த பாம்பு இருக்கும்.இது என்னோட அனுபவம் ...
தண்ணீர் பாம்பு , பச்சை பாம்பு போன்றவை மனித பயமின்றி திடீரென நீரில் கிளம்பி வருவதுண்டு.
பாட்டி ஒருத்தர் ஊரில் அவர்கள் வீட்டு வாசல் படி வரையில் குளத்து நீர் தேங்கி அலையடித்துக் கிடக்கும் ...நீர்ப்பாம்புகள் சின்னவை தான் ..திடீரென கிளம்பி வீட்டு வாயிற்படியில் கிடக்கும் ...அந்த ஊர்ப் பையன்கள் ஏதோ கயிறு போல கையில் தூக்கி வித்தைகாட்டி ...எனக்கோ நெஞ்சு எகிறும் ....பயத்தில் படபடக்கும் ...இப்போது அவை ஊர்ந்து நகர்ந்து போவதை ரசிக்கும் நிதானமுண்டு ...அவற்றை அடித்துக்கொல்லவும் விருப்பம் கிடையாது ...
தொலைக்காட்சியில் பாம்புக்கு பல் விளக்கி விடும் பலே ஆசாமிகளைப் பார்த்து ஆஹா ன்னு பிரமிப்பும் உண்டு...உங்களுக்கும் தானே மத்யமரே !!!
பிற வகை பெரிய இனப் பாம்புகள் எல்லாம் ஆள் அரவமற்ற தருணங்களில் தான் அவற்றின் வேலைகளை செய்யும். மனிதர்களின் இருப்பு உணர்ந்து சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ளும் ....
அவை நம்மை கொஞ்சமும் கவனிக்காத அசந்த தருணங்களில் மூச்சை பிடித்துக் கொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை பீதியில் உறைந்தபடி இது போன்ற அரிய நிகழ்வுகளை பார்க்கும் அபூர்வ வாய்ப்புக்கள் ....எனக்கு வாய்த்தது...
ஆனாலும் .....
அம்மாடி ...பயங்கரம் !!!!!தானே ....

அருளிச்செயல்களில் அணைகட்டுதல்


தந்தை தயரதன் உரைத்தார் என்று சிற்றன்னையான கைகேயி சொல்ல, “மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ” என நவின்ற இராமபிரான் சீதாபிராட்டியும் தம்பி இலக்குவனும் உடன் வர கானகம் புகுந்தார். அங்கே தண்டகாரணியத்தில் இருக்கும்போது சூர்ப்பனகை சூழ்ச்சியால் இலங்கை அரக்கன் இராவணன் சீதாபிராட்டியாரைச் சிறை எடுத்து இலங்கையில் அசோகவனத்தில் வைத்தான்.
ஜடாயு மூலம் செய்தி அறிந்து சுக்ரீவன் நட்பைப் பெற்ற இராமபிரான் பிராட்டியைத் தேட வானரர்களை அனுப்பினார். இலங்கை சென்று பிராட்டியைக் கண்ட அனுமன் திரும்பி வந்து, “கண்டேன் கற்பினுக்கணியை” என உரைக்க இராமபிரான் கடலைக் கடக்க அணை ஒன்றை வானரர்களைக் கொண்டு கட்ட முடிவு செய்தார். அவ்விதம் அவர் அணைகட்டிய அற்புதச் செயலை ஆழ்வார் பெருமக்கள் தம் பாசுரங்களில் அருளிச்செய்துள்ளார்கள்.
யசோதை கண்ணன் என்னும் குழந்தையிடம் சப்பாணி கொட்டி அருள வேண்டும் என விண்ணப்பிக்கிறார். குழந்தையானது தன் ஒருகையோடு மறுகையைச் சேர்த்துக் கொட்டுவதே சப்பாணி என்னும் விளையாட்டாகும்.
”கண்ணனே! எம்பிரானே! அழகிய கையிலே சக்கரத்தைக் கொண்டவனே! எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலை இரண்டு பக்கங்களிலும் தேங்கும்படிச் செய்து, குரங்குக் கூட்டங்களைக் கொண்டு அணையைக் கட்டினாய். அதன் மூலம் இலங்கையை அடைந்து அங்குள்ள அரக்கர் எல்லாம் அழியும்படி அம்புகளைக் கொண்டு போர் செய்த கைகளைக் கொண்டு சப்பாணி கொட்டி அருள்வாயாக” என்று யசோதை வேண்டுவதாகப் பெரியாழ்வார் அருளிச் செய்கிறார்.
”குரக்கினத் தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணைகட்டி நீள் நீரிலங்கை
அரக்கர் அவிய அடுகணை யாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே! சப்பாணி”  [1-7-8]
என்பது அவர்தம் அருளிச் செயலாகும்.
பெரியாழ்வார் கிருஷ்ணனையும், இராமனையும் ஒருங்கே அனுபவிக்க அந்த அவதாரங்களை எடுத்த பரம்பொருளைத் தேடித் திரிகின்றவரைப் பார்த்து அருளுதுவதாக சில பாசுரங்கள் பாடி உள்ளார். அவற்றில் ஒன்றில் ஸ்ரீராமபிரான் அணை கட்டியதைப் பற்றிப் பாடி உள்ளார். அப்பாசுரம் இது.
”கொலையானைக் கொம்புபறித்துக் கூடலர்சேனை பொருதழிய
சிலையால் மராமரம் எய்ததேவனைச் சிக்கெனென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்    [4-1-3]
ஸ்ரீராமனைத் தேடுகிறவர்களிடம் உரைப்பதுபோல் பெரியாழ்வார் அருளிச் செய்கிறார்
“குவலாயாபீடம் என்னும் யானையின் தந்தங்களை ஒடித்துப் பகைவர்கள் படையை அழித்து ஏழு மராமரங்களைத் துளைத்த கடவுளாகிய இராமபிரானைத் தேடுவீர்களானால் குரங்குக் கூட்டம் பெரிய மலைகளைச் சுமந்து கொண்டு போய்க் கடலில் அணைகட்ட அக்கடற்கரையிலே தமது பெருமை தோன்ற எழுந்தருளி இருந்தவனை அந்த இடத்திலே கண்டார் உளர்’ என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
ஆயர் சிறுமிகள் மணலில் சிறு வீடு கட்டி விளையாடுகிறர்கள். அப்பொழுது கண்ணன் ஓடி வந்து அவர்களின் சிற்றில்களைச் சிதைக்கிறான். ”கண்ணா! எம் சிற்றில்களைச் சிதைக்க வேண்டாம்” என அவர்கள் வேண்டும்போது அச்சிறுமிகள் சேது பந்தனம் என்னும் அணைகட்டியதைக் குறிப்பிடுவதாக நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் அருளிச் செய்கிறார்.
“ஓதமா  கடல்வண்ணா! உன் மணவாட்டி மாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய்! எம் சிற்றில் சிதையேலே”              [2-7]
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழியில் இராமபிரானுக்குத் தாலாட்டுப் படுகிறார். திருக்கண்ணபுரம் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் இது. இதில் ”மலைகளைக் கொண்டு சேது அணையைக் கட்டி அரண் உடைய இலங்கையை அழித்தவனே!” என்ன்னும் பொருளில்,
”மலையதனால் அணைகட்டி மதிலிலங்கை அழித்தவனே”        [8-8]
என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்.
திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தத்தில் 39-ஆம் பாசுரம் மிகுந்த நயம் வாய்ந்தது. அப்பாசுரத்தின் நான்கு அடிகளும் ‘வெற்பு’ என்னும் ஒரே எதுகை பெற்று வரும். வெற்பு என்பது மலையைக் குறிக்கும். இப்பாசுரத்தில் மந்தர மலையை எடுத்துக் கடலைக் கலக்கியதும், வானரர்களைக் கொண்டு மலைகளை எடுத்து தெற்குக் கடலிலே அணைகட்டியதும், மலையாலே சூழப்பட்ட இலங்கையின் அரணை அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததுமான  எம்பெருமானின் செயல்கள்  அருளப்படுகின்றன.
”வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய், அதன்றியும்
வெற்பெடுத்து வேலைநீர் வரம்புகட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சிசூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரிகாத்த மேகவண்ணன் அல்லையே!”
திருமங்கை ஆழ்வார் தம் பெரிய திருமொழியில்  கிருஷ்ண அவதாரத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு அருளிச் செய்கிறார். கிருஷ்ணலீலையைச் சொல்லும்போது எம்பெருமான் இராமனாக அவதரித்துக் கடலிலே அணைகட்டிய விருதாந்தத்தையும் அருளிச் செய்கிறார்.
”படைத்திட்டது இவ்வையம் உய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்டு அவரைத் தனக்காக்க வென்னத்
தெளியா அரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டெழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே”          [10-6-7]
”முன்னொரு காலத்தில் இவ்வுலகங்களைப் படைத்து, அவ்வுலகம் பிழைப்பதற்கு உறுப்பாக திருவடிகளிலே பணிந்து துதிக்க வல்லவர்களுடைய துன்பங்களைப் போக்கி அப்படிப்பட்டவர்களை எல்லாம் தனக்கே உரியவாராக்கிக்கொள்ள  நினைத்த அளவிலே அத்திருவுள்ளத்தைப் பொறுக்க மாட்டாமல் கலங்கித் தீங்கிழைத்த அரக்கர்களுடைய வலிமை பாழ்படும்படியாக நெருக்கித் தள்ளி எழுந்த வானர வீர்ர்களைச் சேனையாகக் கொண்டு கடல் நிரம்பும்படி மலைகளைப் பரப்பிக் கடலைத் தூர்த்தவனான பெருமானன்றொ இன்று தயிர், வெண்ணெய் திருடி உண்டு ஆய்ச்சியரிடம் கட்டுண்டு கிடக்கிறான் என்பது பாசுரத்தின் பொருளாகும்.
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதியில் இராமபிரான் அணை கட்டிய விருத்தாந்தத்தை அருளிச் செய்கிறார்.
”இது—இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது—விலங்கு வாலியை வீழ்த்தது—இது– இலங்கை
தானெடுக்க வில்நுடங்கத் தண்தார் இராவணனை
ஊனொடுங்க எய்தான் உசுப்பு”                         [26]
இராமபிரானின் லீலைகளைச் சொல்லும் பாசுரம் இதுவாகும். ஒவ்வொன்றாக ஆழ்வார் சொல்லிக்கொண்டே வருகிறார். முதலில் ”இலங்கையானது சீர்குலைந்து போகும்படியாக வானர சேனையைக் கொண்டு கட்டிய திருஅணை இது காண்மின்” என்கிறார். அடுத்து, ”விலங்காகப் பிறந்த வாலியை முடித்த செயல் காண்மின்” என்கிறார். அடுத்து, ”இலங்கை அழியும்படியாக கோதண்டம் என்னும் வில் வளைத்து மாலை அணிந்து கொண்டிருந்த இராவணனின் உடம்பு ஒழியும் படியாக அம்புகளைச் செலுத்திய செயலைக் காட்டுகிறார்.
இதேபோன்று திருமால் கடலில் அணை கட்டித் தூர்த்ததை இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார் அருளிச் செய்கிறார்.
”கடல்போன்ற வண்னம் கொண்ட திருமாலே! அன்றொரு நாள் நீ உலகை அளந்து கொண்டாய். மற்றொரு காலத்தில் வராகமாகி பூமிப்பிராட்டியை நிலத்தைக் கிடந்து விடுவித்துக் கொண்டாய். நீயே அன்று கரிய கடலை முன்னே கடைந்தாய்; பிறகு நீயே அந்தக் கடலில் அணைகட்டி அதைத் தூர்த்தாய்” என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
”நீயன் றுலகளந்தாய்; நீண்ட திருமாலே
நீயன் றுலகிடந்தா யென்பரால்—நீயன்று
காரோத முன்கடைந்து பின்னடந்தாய் மாகடலை
பேரோத மேனிப் பிரான்”                                       [30]
தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில் 27-ஆம் பாசுரத்தில் தாம் திருவரங்கப் பெருமானுக்கு நெஞ்சார அடிமை செய்யாமல் போனேனே என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார். அப்போது அவர் ஓர் அணிலைப் பற்றிப் பேசுகிறார். அந்த அணிலானது இராமபிரான் அணைகட்டும்போது அவருக்குத் துணை செய்ததாம். அந்த அணிலானது முதலில் தண்ணீரிலே முழுகியதாம். பிறகு கரையிலே உள்ள மணலிலே சென்று புரண்டதாம். அதன் பிறகு அப்படியே அலைகள் வீசும்படியான கடலிற்குச் சென்று தண்ணீரில் மூழ்கி அம்மணலால் கடலைத் தூர்க்க முயற்சி செய்ததாம்.   அப்படிப்பட்ட கபடமற்ற அணிலைப் போல நான் உனக்கு அடிமைச்செயல் செய்ய வில்லையே என ஆழ்வார் அருளிச் செய்கிறார்.
இவ்வாறு ஆழ்வார் பெருமக்கள் இராமபிரான் வானர சேனையின்  துணைகொண்டு சேதுபந்தனம் அமைத்ததை அருளிச் செய்துள்ளார்கள்.

மது ...கேடுகள்

மது உடலுக்குக் கேடு !
இது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனெறால் மது நமது ஈரலில் தான் சமிபாடு அடைகிறது.
நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.இது பற்றி இந்த இடுகையிலே முன்பு பதிவிட்டிருந்தேன்.
இந்த இடுகையிலே சற்று விரிவாக மதுவினால் ஈரல் பாதிக்கப் படும் போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்.
முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த ஈரல் பாதிப்பு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே ஏற்படலாம். சில பேரில் ஈரல் முற்று முழுதாக செயல் இழக்கும் வரை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தெரியாமலேயே ஏற்படலாம்.இதனால் தொடர்ச்சியாக அதிகமாக மது அருந்துபவர்களில் சடுதியாக மரணங்கள்
ஏற்படலாம்.
நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்…
வயிற்று வலி
உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
அதிகமான தாகம்
தொடர்ச்சியான காய்ச்சல்
உடல் பலவீனம்
வயிற்று வீக்கம்
கண் மஞ்சள் நிறமடைதல்
பசி குறைதல்
வாந்தி வருகின்ற உணர்வு
உடல் நிறை திடீரென அதிகரித்தல்
கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
ரத்த வாந்தி எடுத்தல்
ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல்
மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.
உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது. ]
உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.
மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.
சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.
நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.

Wednesday, 12 September 2018

மாங்கல்ய பலம்

மாங்கல்ய பாக்கியத்திற்கு நெல்லி இலை அர்ச்சனை

download
மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டி சில மகரிஷிகள் திண்டுக்கல் சீனிவாசப் பெருமாள் கோயிலின் மலையடி வாரத்தில் யாகம் நடத்தினர். அசுரன் ஒருவன் யாகம் நடக்க விடாமல் தொந்திரவு செய்தான். யாகம் தடையின்றி நடக்க அருளும்படி ரிஷிகள் திருமாலை வேண்டினர். மகாவிஷ்ணுவும் அசுரனை அழித்தார். அந்த கோபத்துடன் சுவாமி உக்கிரமாக இருக்கவே ரிஷிகள் மகாலட்சுமியை வேண்டினர். அவள் தன் கணவரை சாந்தப்படுத்தினாள்.  அதே இடத்தில் தாயார்களுடன் சுவாமி கல்யாண கோலத்தில் எழுந்தருளினார். அவருக்கு சீனிவாசர் என திரு நாமம் சூட்டப்பட்டது.Srinivasa Perumal
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்த கோயில் இது. பத்ம விமானத்தின் கீழ் அருளும் சுவாமி வலது கையால் ஆகாயத்தையும் இடது கையால் பூமியையும் காட்டியபடி சர்வலோகமும் தனக்கே சொந்தம் என்று உணர்த்துகிறார்.
download (1)நெல்லி மரம் இத்தலத்தின் விருட்சம். மாங்கல்யம் மற்றும் பிதுர்தோஷ நிவர்த்திக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்கின்றனர். நெல்லி மரம் மஹாலட்சுமியின் அம்சம் என்பதால் பெருமாளிடம் லட்சுமி சிபாரிசு செய்து  நமது குறைகளை தீர்த்து வைப்பாள் என்பது நம்பிக்கை. திருமணத்தடை நீங்க கல்யாண சீனிவாசருக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர்.download (2)
இங்கு ஆடிப்பூர நாயகி ஆண்டாளுக்கும் தாயார் அலமேலு மங்கைக்கும் சன்னதிகள் உள்ளன. வெள்ளிக்கிழமை மாலையில் தாயார் சன்னதியில் கோமாதா பூஜையுடன் திருமஞ்சனம் நடக்கும். அப்போது பாலும் மஞ்சளும் பிரசாதமாகத் தருவர். இந்த பூஜையில் பங்கேற்கும் கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான் என்பது நம்பிக்கை.Garuda
சுவாமியின் எதிரே 32 அடி உயர விஸ்வரூப கருடாழ்வார் சிலை உள்ளது. இவருக்கு பக்தர்கள் மோட்சதீபம் ஏற்றி வழிபடுவர் இதனால் பிதுர்தோஷம் நீங்கும்T_500_1011
பிரகாரத்திலுள்ள சக்கரத்தாழ்வாரை சுற்றிலும் பெருமாளின் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவருக்கு பின்புறமுள்ள நரசிம்மர் நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார். சுற்றிலும் அஷ்டலட்சுமிகள் உள்ளனர். சித்திரை நட்சத்திர நாட்களில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் அபய ஆஞ்சனேயர் தாமோதர வினாயகர்  நவனீத கிருஷ்ணர் நவக்கிர சன்னதிகள் உள்ளன. இக்கோயில் அருகில் அபிராவி பர்வதீஸ்வரர் கோயில் கோட்டை மாரியம்மன் கோயில்கள் உள்ளன.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கிமீ தூரத்திலுள்ள யானைத் தொப்பம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ளது இக்கோயில்