Saturday, 11 February 2017

"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக
படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும்
என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.
"மெல்லிசை மன்னர்கள்" 
விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான
சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.
படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார்.
அதன்படி, அந்த
நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி
இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம்
தெரிவித்தார்.
வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு
எழுதிக் கொடுத்தார்.
பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும்
விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என
குழம்பினார்கள்.
திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம்
தயங்கிக் கேட்டார்கள்.
கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே "பாடலைப் படித்துக் காட்டுங்கள்" என்றார்.
எம்.எஸ்.வி. உடனே," எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும்
கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும்
கொண்டாடுவோம்" என்று மெட்டில் பாடினார்.
கண்ணதாசன், "இன்னுமா புரியலை, பிறப்பால்
இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக
வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான "ஓம்" என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்.
இப்பொழுது பாருங்கள்" என்று பாடிக் காட்டினார்.
எல்லோரும் கொண்டாடு " ஓம் "
எல்லோரும் கொண்டாடு "ஓம் "
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடு "ஓம் "
வருவதை வரவில் வைப்போ " ஓம் "
செய்வதை செலவில் வைப்போ "ஓம் "
முதலுக்கு அன்னை என்போ " ஓம் "
முடிவுக்கு தந்தை என்போ " ஓம் "
மண்ணிலே விண்ணை கண்டு
இன்பம் காணு " ஓம் "
எடுத்தவன் கொடுக்க வைப் "ஓம் "
கொடுத்தவன் எடுக்க. வைப் " ஓம் "
இன்று போல் என்றும் இங்கே
ஒன்றாய் கூடு " ஓம் "
என்று
முடித்ததுமே, "மெல்லிசை மன்னர்" அவரைக் கட்டிப்பிடித்து "கவிஞரே... இந்த உலகத்தில் உம்மை
ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்" என்று உச்சி முகர்ந்தார்..
கூடவே இயக்குனர்
ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில்
ஆழ்ந்தார்.
அதே போல இந்தப் பாடல் முழுக்க
" ஓம் " என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு
முக்காட வைக்கும்.
அந்தப் பாடல்.
தி கிரேட் கண்ணதாசன்!
பம்பாய்க்கு வடக்கே செல்லவே வாய்க்கவில்லை இன்னும். அப்படி வாய்க்கிற பட்சத்தில், தாஜ்மஹால் என்கிற உலக மஹா அதிசயத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிற எல்லா இந்தியர்களுக்கும் இருக்கிற நியாயமான ஆசையோடு, சிரபுஞ்சிக்குப் போய் உலக மஹா மழையில் நனைந்து விட்டு வரவேண்டும் என்கிற அநியாயமான ஆசைதான் நம்ம மெகா மழைத் திட்டம்.
கூரியர் ஆஃபீஸுக்கு முந்திய சந்திப்பில் காலூன்றி நின்றபோது, பாதையோரமாய் நின்றிருந்த பெண்ணொருத்தி, போக்குவரத்துக் காவலரொருவரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
"சார், ஃபஸ்ட் டைம் இந்த ஏரியாவுக்கு வர்றேன். நுங்கம்பாக்கத்துக்குப் போகணும். எந்த பஸ் போகும்னு தெரியல, பஸ் ஸ்டாப் எங்க இருக்குன்னு தெரியல. மெட்ரோ ரயில் வேலக்யாக எல்லாத்தையும் மாத்தியிருக்காங்கன்னு சொல்றாங்க. மழவேற பெரிசா வரும் போலத் தெரியுது…"
மெட்ரோ ரயில் வேலைக்காக, அண்ணா நகரில் சாலைகளையெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். பஸ் ரூட்கள், பஸ் ஸ்டாப்கள் எல்லாம் தடம் புரண்டு கிடக்கின்றன. தினம் தினம் இந்தப் பாதைகளில் புழங்குகிறவர்களுக்கே குழப்பம். புதிதாய் வருகிறவர்கள் திண்டாடிப் போகிறார்கள்.
அந்தப் பெண் தனியாக இல்லை. இடுப்பில் ஒரு குழந்தை, இடுப்பளவில் ஒரு பிள்ளை. தன்னுடைய புடவைத் தலைப்பை அஜஸ்ட் பண்ணி, ரெண்டு குழந்தைகளையும் மூட முயற்சித்திருந்தாள்.
அடடே, நாம் காரில் வந்திருந்தால் இந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் நுங்கம்பாக்கத்தில் விட்டு விட்டு வருகிற புண்ணிய காரியத்தைப் பண்ணியிருக்கலாமே என்று யோசித்தபோது பச்சை விளக்கு வந்தது.
கூரியரில் வேலை முடிந்துத் திரும்பி வருகிற போது, அந்தப் பெண் இன்னும் அங்கே தான் நின்று கொண்டிருக்கிறாளா அல்லது உதவி கிடைத்துக் கிளம்பி விட்டாளா என்று பார்க்கிற குறுகுறுப்பில், ஒரு சுற்று வட்டம் போட்டு அந்த ஸிக்னலுக்கு வந்து சேர்ந்தால், அங்கே ஓர் அதிர்ச்சி.
அந்தப் பெண்ணும் குழந்தைகளும் காவல் துறைக் காரொன்றில் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தார்கள். நல்லதுக்கா அல்லது விபரீதத்துக்கா என்று தெரியவில்லை. அந்த வாகனத்தை பின் தொடர்ந்து போகவேண்டுமென்று மட்டும் தோன்றியது.
பின் தொடர்ந்தேன்.
ஹாரிங்டன் ரோடு, ஹாடோஸ் ரோடு வழியாய் வள்ளுவர் கோட்டம் சாலையை அடைந்து, ஒரு குறுகலான தெருவுக்குள்ளே திரும்பி நின்றது காவல் வாகனம். தூறல் நின்னு போச்சு. முன் இருக்கையிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர், பின் கதவைத் திறந்து விட, அந்தப் பெண் இறங்குகிற போது, அவளிடமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர், வீட்டுக்குள்ளிருந்து வெளிவந்த பெரியவரிடம் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை ஒப்படைக்குமுன்னால், அதற்கொரு முத்தம் வேறு. அம்மாவை ஒட்டிக் கொண்டு நின்ற அடுத்த குழந்தையைத் தலையை வருடிக் கொடுத்து கன்னத்தில் ஒரு செல்லத் தட்டுதல் வைத்தபின்னால், அவரை நோக்கிக் கை கூப்பியபடியிருந்த அந்தப் பெண்ணிடமும் பெரியவரிடமும் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறிக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.
ஆண்டவனே! இந்த இருபத்தொண்ணாம் நூற்றாண்டில், இந்தியாவில் இப்படியொரு இன்ஸ்பெக்டரா என்று நெகிழ்ந்து போய், மானசீகமாய் நான் அவருக்கொரு சல்யூட் அடித்த போது, காவல் துறையைக் குறித்து முந்திய அத்தியாயங்களில் நான் முன் வைத்த விமர்சனங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாய் டிலிட் செய்து விடலாமா என்றொரு சபலம் தட்டியது.
இந்த இன்ஸ்பெக்டரைப் போல, காவல் துறையினர் எல்லோரும், வேண்டாம் ஒரு கால்வாசிக் காவல் துறையினர் நல்ல மனிதர்களாயிருந்தாலே போதும். இந்தியா எங்கேயோ போய்விடும்.
சாமான்ய மனிதனுக்கும் காவல் துறைக்கும் இடையே இருக்கிற இடைவெளி குறைந்தால் நாடு ஆரோக்யமாயிருக்கும். ஆனால் இந்த இடைவெளி பூர்வீக காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
பாரதியார் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார் பாரதியார்.
சிப்பாயைக் கண்டஞ்சுவார் – ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன் – வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டி லொளிப்பார்.
வேடன் ஒருவன் குரா மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்தான். வெகு நேரமாகியும் வேட்டைக்கு ஒரு விலங்கும் காணாமல் தவித்தபோது அந்தப் பக்கம் ஒரு வேங்கைப்புலி வந்தது. அதை வேட்டையாட முயன்றால், அது இலேசில் அவன் கையில் கிட்டவில்லை. இங்கும் அங்குமாக ஓடிப் போக்குக் காட்டியது. அவனும் அதைப் பிடித்தே தீருவது என்று துரத்தினான். ஆனால், அது ஒரு குரா மரத்தின் பின் ஒளிந்து கொண்டது. அவன் அருகில் வந்து பார்த்தவுடன் அது மறைந்து போயிற்று. வேடன் பிரமித்துப்போய் நிற்க, அந்த இடத்தில் ஒரே விபூதி வாசனை வீச ஆரம்பித்தது. ஒரு மயிலும் பறந்து வந்து அமர்ந்து கொண்டது.
"ஆஹா! நான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேன்! இந்த இடத்தில் என் தெய்வமான முருகன் அல்லவா இருக்கிறான்" என்று மன மகிழ்ந்து போனான் வேடன். பின்னர், அவனது முயற்சியால் அங்கு முருகன் சிலை ரூபத்தில் வந்து அமர்ந்தார். அது மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோயிலாக மாறியது. அதுதான் திருச்சியிலிருந்து மதுரை போகும் வழியில் வரும் ‘விராலி மலை முருகன் கோயில்’!
இங்கு இருக்கும் முருகன் பெரிய மயிலில் அமர்ந்தபடி ஆறுமுகங்களுடன் மயில்வாகனராக அருள் புரிகிறார். சுமார் 2000 வருடங்கள் ஆன மிகப் பழமையான கோயில். இங்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அழகான மயில்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. சுமார் 2000 மயில்கள் இங்கு இருக்கலாம் என்று மக்கள் சொல்லுகின்றனர்.
ஒரு சமயம் ஸ்ரீ அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனைக் கண்டு களித்துப் பல பாடல்கள் பாடினார். பின், அவர் வயலூர் வந்தார். அப்போது முருகன் அவர் முன் தோன்றி, "அருணகிரிநாதா! என்னைப் பார்க்க விராலி மலைக்கு வா" என்று திருவாய்மலர்ந்து மறைந்தார். அருணகிரிநாதருக்கு விராலிமலைக்குச் செல்லச் சரியான வழி தெரியவில்லை. சுற்றிச் சுற்றி வந்து, இடம் தெரியாமல் களைத்துப் போனார். அப்போது முருகன் தன் பக்தனின் தவிப்பைப் பொறுக்க முடியாமல் ஒரு வேடன் போல் வந்து விராலி மலையை அடையாளம் காட்டினாராம். அவர் அங்கு வந்தவுடன் அவருக்கு அஷ்டமாசித்திகளையும் கற்றுக் கொடுத்தாராம்.
விராலி மலை முருகனை எல்லோரும் உடல் நோய் தீர முக்கியமாக வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்காக அப்படி வேண்டிக் கொள்ளும்போது குழந்தையின் ஆயுள் விருத்திக்காக முருகனுக்கே அந்தக் குழந்தையைத் தத்துக் கொடுக்கும் பழக்கமும் இருக்கிறது. அதே போல், முருகன் திருமுன் குழந்தையின் தாய்மாமன் தவிட்டைக் கொடுத்துக் குழந்தையைப் பெறுவதும் நடக்குமாம். புதிதாக வீடு வாங்கவோ, மனை வாங்கவோ முனைபவர்களும் இந்த விராலி மலை முருகனை வணங்கி வேண்டிக் கொள்கின்றனர்.
இந்தக் கோயிலில் நடக்கும் ஒரு புதுமையான வழக்கத்தை என் நண்பர் சொன்னார். இந்தத் தலத்தில் முருகனுக்குச் சுருட்டை நைவேத்தியமாக வைக்கிறார்களாம். இதன் காரணம்?… கேட்காமல் இருப்பேனா? கேட்டேன்.
ஒரு முறை, இந்தக் கோயிலில் ஒரு பக்தர் தன்னையும் மறந்து கோயில் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவர் கோயிலுக்குப் போக நாள்தோறும் ஆற்றைக் கடக்க வேண்டும். ஒரு நாள், திடீரென்று புயல் வீசும் அறிகுறி தென்பட்டது. மழை வேகமாகப் பொழிந்து எங்கும் வெள்ளக்காடானது. இதனால் அவருக்கு ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. ஓர் ஓரமாக நின்றபடி, "கந்தா! உன்னைப் பார்க்க வர முடியவில்லையே! என்ன செய்வேன்?" என்று மனம் கலங்கியபடி நின்றார். குளிரோ தாங்க முடியவில்லை. ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வயதானவர் வந்தார்.
"என்ன, மனம் கலங்கி நிற்கிறாயா? எனக்கு ஒரு சுருட்டு கொடு! உன்னை நான் ஆற்றைக் கடக்க வைத்து அழைத்துச் செல்கிறேன்" என்றார். பக்தரும் அவரிடம் சுருட்டைக் கொடுத்தார். முதியவரும் அந்த பக்தர் ஆற்றைக் கடக்க உதவி செய்தார். கோயில் வந்தாயிற்று. பக்தர் உள்ளே செல்ல, ஓர் அதிசயம் காத்திருந்தது! முருகன் அருகில் பாதி சுருட்டு ஒன்று கிடந்தது.
மிகவும் ஆனந்தமடைந்த பக்தர் இந்த நிகழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு இந்தக் கோயிலில் முருகப்பெருமானுக்குச் சுருட்டு நைவேத்தியம் ஆரம்பமானது.
ஆனால், இது சரியல்ல என்று புதுக்கோட்டை மஹாராஜா இதற்குத் தடை விதித்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் வந்து, "இதற்குத் தடை விதிக்காதே! இது தொடர்ந்து நடக்கட்டும்! பிறருக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும்! நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்கும் நல்ல எண்ணம் வர வேண்டும்! இதை விளக்கவே அந்த நிகழ்ச்சி நடந்தது" என்றார். ஆகையால், இன்றும் இந்தச் சுருட்டு நைவேத்தியம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
தில்லியில் கால பைரவர் கோயிலில் விஸ்கியைப் பிரசாதமாக வைத்துப் பார்த்திருக்கிறேன். அது போல் இதுவும் ஒரு நைவேத்தியம்தான்!
விராலி மலை முருகனுக்கு அரஹரோஹரா!
ஒரு கிராமம். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. இன்று நிலைமை மாறிப்போய் கிடக்கிறது. பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது.
அந்தக் கிராமத்தின் கோடியில் ஒரு கந்தல் குடிசை. அந்தக் குடிசை, இருவர் அடைக்கலமாகி வசித்து வந்தனர். அதில், ஒருவர் பார்வையற்றவர். மற்றவர் கால்கள் அற்றவர். அவர்களுக்கென்று பிழைப்பு வழி எதுவுமில்லை. மாலையில் கடைத்தெரு மூடப்படும்போது அவர்கள் போவார்கள். பழையது, மிஞ்சிய காய் கனி தானியங்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதை உணவாக்கி அவர்கள் உண்டு வாழ்ந்தனர்.
ஆனால் பஞ்சம் வந்த பிறகு, இருவருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இருவரும் பெரும்பாலும் பட்டினி கிடந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்த போது, 'திருடி சாப்பிட்டாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்வது' என்ற முடிவுக்கு வந்தனர். போகிற வழியில் வயல்கள் எல்லாம் கருகிக் கிடந்தன.
கொஞ்சம் தூரத்தில் ஊர்த்தலைவரின் தோட்டம். அவருக்கென்று தண்ணீர் வசதிகள். தோட்டம் இன்றைக்கும் செழித்துக் கிடந்தது.
அங்கே போவதென்று முடிவு செய்தார்கள்.
முடவரைக் குருடர் சுமந்து கொண்டார். முடவர் வழிகாட்ட, குருடர் நடந்தார். ஒருவழியாய் ஊர்த்தலைவர் தோட்டத்துக்கு வந்துவிட்டார்கள். ஊருக்குள் யாரும் நெருங்க பயப்படும் தோட்டம். பிடிபட்டால், கட்டி வைத்துத் தோலை உறித்து விடுவார்கள். தோட்டத்தில் தானியங்களும், காய் கனிகளும் குவிந்து கிடந்தன. முடவரை வரப்பிலேயே இறக்கிவிட்டு குருடர் தட்டுத் தடுமாறி உள்ளே போய் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டார். யாருக்கும் தெரியாமல் குடிசைக்கும் திரும்பி விட்டனர்.
அவர்கள் கொண்டு வந்தது இரண்டு நாட்களுக்கு போதுமாயிருந்தது. நெடுநாளைக்குப் பிறகு இருவரும் வயிறார உண்டு உறங்கினார்கள். காலையில் எழும்போதே பெருங்கூச்சல் கேட்டது. ஊர் முச்சந்தியில் நின்று தலைவர், “எவண்டா, எந்தோட்டத்தில் எறங்கித் திருடினவன்?” என கத்திக் கொண்டிருந்தார். யாரும் திருட்டை ஒப்புக் கொள்ள முன்வராததால், ஊர்த் தலைவர். ‘நீதி தேவதை’யின் கோயிலுக்குப் போய் மண்டியிட்டு வேண்டி நீதி தேவதையை ஊருக்குள் அழைத்து வந்தார்.
நீதி தேவதையின் முன் ஒவ்வொருவரும் ஆஜராகி உண்மையைச் சொல்ல வேண்டும். திருடியவரைத் தேவதை கண்டு பிடித்துவிடும். ஊர்மக்கள் ஒவ்வொருவராக ஆஜராகி திருடவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தனர். யாரையும் நியாய தேவதை கொல்லவில்லை.
இனி மிச்சம் குருடரும், முடவரும் மட்டுமே. யாருக்கும் அவர்கள் ஞாபகம் வரவில்லை. திடீரென ஊர்த்தலைவர், “அந்தக் குருடனையும், நொண்டியையும் இழுத்துட்டு வாங்கடா” என கத்தினார். இருவரும் சிரமத்தோடு தடுமாறி வந்தார்கள். ஊர் மக்களுக்கு கண்கலங்கியது.
நியாய தேவதை முன் முதலில் குருடர் ஆஜரானார். “தேவதையே! நான் பிறவிக்குருடன். எதையும் கண்கொண்டு பார்க்க முடியாதவன். தலைவர் தோட்டத்தையும் நான் பார்த்ததில்லை” என்றார். குருடரைத் தேவதை ஒன்றும் செய்யவில்லை.
அடுத்து முடவர் ஆஜரானார். “அம்மா! நான் பிறவியிலேயே முடவன். நடக்க மாட்டாதவன். தலைவர் தோட்டத்தில் என் கால் படவேயில்லை” என்றார். முடவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை. இனி யாரும் மிச்சமில்லை. ஊர் மக்களுக்கு திகைப்பு.
அப்போது யாரும் எதிர்பாராமல் அந்தச் சம்பவம் நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர்த்தலைவரின் கழுத்தை நெறித்தன. ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார். ‘ஊர்த்தலைவரா... திருடர்!’ என்று எல்லோருக்கும் ஆச்சரியம்! ஊர்மக்கள் நீதி தேவதையிடம் விளக்கம் கேட்டனர். தேவதை மக்களிடம், "குருடரும், முடவரும் திருடியது உண்மைகளென்றால், ஊர்த்தலைவர் ஊரையேக் கொள்ளையடித்து அவர் மட்டும் வசதியாக இருப்பது பெரிய உண்மையாகும். எனவே இந்த ஊரிலே மிகப் பெரிய திருடன் தலைவன் தான்" என்றது.
நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும். சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் அவன் கடவுளிடமிருந்து விலகியே இருக்கிறான் - சுவாமி விவேகானந்தர்.
எப்போதும் உடன்
ஏந்தித்திரியும்
கனத்த மௌனம்
உன்னுடையது!
ஓயாது ஒலியெழுப்பும்
மேயும் பசுவின்
கழுத்து மணியின் பேச்சு
என்னுடையது!
எங்கேனும் இறக்கி
வைத்திட விரும்பா
சுமை என்றென்றும்
உன்னுடையது!
காற்றில் கனமற்றுத்
திரியும் வண்ணத்துப்பூச்சியின்
பட்டுறெக்கையிரண்டு
என்னுடையது!
ஞாபகங்களைத்...
தவிர்க்க விரும்பும்
தருணம் ...
உன்னுடையது!
நீங்கவியலா
நினைவுக்குவியலின்
சொர்க்க தேசம்
என்னுடையது!
அவ்வளவு முரண்களின்
மத்தியிலும் என்றென்றும்
முறியாப் பெருங்காதல்
நமக்கானது!
மழைவரக்கூடும் என்று
கொடியில் காயும்
ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தேன்
வறட்சி மெழுகிய என்முகத்தை
மடங்கிய துணியின் நூல்களில்
பட்டுத் தொட்டது ஈரம் வழியும் காற்று
பாகற்கொடியின் இலைகளின் மேல்
படர்ந்திருக்கும் தூசிகளை
இறுதியாகப் பார்த்துவிட்டுத் திரும்புகையில்
உடைந்துவிட்டது துண்டு மேகம்
மெல்லிய குளிர்காற்று
உடல்முழுவதும் வலம்வந்து
கண்களின் வழியே ஒழுகிக் கொண்டிருக்க
வேலி முள்ளில் சிக்கிக் கொண்டது
முதல் மழைத் துளி
தம்பியின் விறகுக் குடைக்குள்
தஞ்சம் அடைவதற்குள்
அவிழ்க்கப்பட்டதால் முதுகுப்புறத்தில்
அருவி வடிந்த சாயலோடு
வீட்டிற்குள் நுழைந்தேன்
கவிதை ஒன்றைக் கிறுக்கி
விடுவதென்ற ஏற்பாட்டில்
எழுதுகோலை எடுத்த திசையில்
மழையின் அழைப்பு
கைபேசியின் தொடுதிரையில்
வெள்ளை நட்சத்திரங்களாக
நுரைத்துக்கொண்டிருந்தது
தூவிய மழைச் சாரலின் மிச்சம் .....
இன்று சித்ரவதை
நாளை அழகு
சிற்பியிடம் மாட்டிய கல்
______________________
கோபுரக் கலசத்தை
அசைத்துப் பார்க்கிறது
குளத்தில் விழுந்த கல்!
______________________
வறுமைக் கோடு
தெளிவாய் தெரிகிறது
விலாவில்!
______________________
சவக் கிடங்கில்
சிரிப்பு எதற்கு?
மின் விளக்கு!
______________________
சூடு ஏற்றுகிறார்கள்
நிச்சயம் அடி உண்டு
பறைக்கு!
______________________
பட்ட மரம்
பூத்திருக்கிறது
காளான்!
______________________
அடி வாங்கியபின்
அணைந்துகொள்கிறது
நெஞ்சோடு பறை!
______________________
அக்கரைக்குச் செல்ல
இலவச படகு
எறும்புக்கு சருகு!
______________________
காயப்படுத்தி
நினைவூட்டியது அம்மாவை
சுவையான தூதுவளை!
______________________
பழங்கால மரம்
நரைத்துவிட்டதோ
உச்சியில் கொக்குகள்!