Saturday 11 February 2017

பம்பாய்க்கு வடக்கே செல்லவே வாய்க்கவில்லை இன்னும். அப்படி வாய்க்கிற பட்சத்தில், தாஜ்மஹால் என்கிற உலக மஹா அதிசயத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிற எல்லா இந்தியர்களுக்கும் இருக்கிற நியாயமான ஆசையோடு, சிரபுஞ்சிக்குப் போய் உலக மஹா மழையில் நனைந்து விட்டு வரவேண்டும் என்கிற அநியாயமான ஆசைதான் நம்ம மெகா மழைத் திட்டம்.
கூரியர் ஆஃபீஸுக்கு முந்திய சந்திப்பில் காலூன்றி நின்றபோது, பாதையோரமாய் நின்றிருந்த பெண்ணொருத்தி, போக்குவரத்துக் காவலரொருவரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
"சார், ஃபஸ்ட் டைம் இந்த ஏரியாவுக்கு வர்றேன். நுங்கம்பாக்கத்துக்குப் போகணும். எந்த பஸ் போகும்னு தெரியல, பஸ் ஸ்டாப் எங்க இருக்குன்னு தெரியல. மெட்ரோ ரயில் வேலக்யாக எல்லாத்தையும் மாத்தியிருக்காங்கன்னு சொல்றாங்க. மழவேற பெரிசா வரும் போலத் தெரியுது…"
மெட்ரோ ரயில் வேலைக்காக, அண்ணா நகரில் சாலைகளையெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். பஸ் ரூட்கள், பஸ் ஸ்டாப்கள் எல்லாம் தடம் புரண்டு கிடக்கின்றன. தினம் தினம் இந்தப் பாதைகளில் புழங்குகிறவர்களுக்கே குழப்பம். புதிதாய் வருகிறவர்கள் திண்டாடிப் போகிறார்கள்.
அந்தப் பெண் தனியாக இல்லை. இடுப்பில் ஒரு குழந்தை, இடுப்பளவில் ஒரு பிள்ளை. தன்னுடைய புடவைத் தலைப்பை அஜஸ்ட் பண்ணி, ரெண்டு குழந்தைகளையும் மூட முயற்சித்திருந்தாள்.
அடடே, நாம் காரில் வந்திருந்தால் இந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் நுங்கம்பாக்கத்தில் விட்டு விட்டு வருகிற புண்ணிய காரியத்தைப் பண்ணியிருக்கலாமே என்று யோசித்தபோது பச்சை விளக்கு வந்தது.
கூரியரில் வேலை முடிந்துத் திரும்பி வருகிற போது, அந்தப் பெண் இன்னும் அங்கே தான் நின்று கொண்டிருக்கிறாளா அல்லது உதவி கிடைத்துக் கிளம்பி விட்டாளா என்று பார்க்கிற குறுகுறுப்பில், ஒரு சுற்று வட்டம் போட்டு அந்த ஸிக்னலுக்கு வந்து சேர்ந்தால், அங்கே ஓர் அதிர்ச்சி.
அந்தப் பெண்ணும் குழந்தைகளும் காவல் துறைக் காரொன்றில் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தார்கள். நல்லதுக்கா அல்லது விபரீதத்துக்கா என்று தெரியவில்லை. அந்த வாகனத்தை பின் தொடர்ந்து போகவேண்டுமென்று மட்டும் தோன்றியது.
பின் தொடர்ந்தேன்.
ஹாரிங்டன் ரோடு, ஹாடோஸ் ரோடு வழியாய் வள்ளுவர் கோட்டம் சாலையை அடைந்து, ஒரு குறுகலான தெருவுக்குள்ளே திரும்பி நின்றது காவல் வாகனம். தூறல் நின்னு போச்சு. முன் இருக்கையிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர், பின் கதவைத் திறந்து விட, அந்தப் பெண் இறங்குகிற போது, அவளிடமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர், வீட்டுக்குள்ளிருந்து வெளிவந்த பெரியவரிடம் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை ஒப்படைக்குமுன்னால், அதற்கொரு முத்தம் வேறு. அம்மாவை ஒட்டிக் கொண்டு நின்ற அடுத்த குழந்தையைத் தலையை வருடிக் கொடுத்து கன்னத்தில் ஒரு செல்லத் தட்டுதல் வைத்தபின்னால், அவரை நோக்கிக் கை கூப்பியபடியிருந்த அந்தப் பெண்ணிடமும் பெரியவரிடமும் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறிக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.
ஆண்டவனே! இந்த இருபத்தொண்ணாம் நூற்றாண்டில், இந்தியாவில் இப்படியொரு இன்ஸ்பெக்டரா என்று நெகிழ்ந்து போய், மானசீகமாய் நான் அவருக்கொரு சல்யூட் அடித்த போது, காவல் துறையைக் குறித்து முந்திய அத்தியாயங்களில் நான் முன் வைத்த விமர்சனங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாய் டிலிட் செய்து விடலாமா என்றொரு சபலம் தட்டியது.
இந்த இன்ஸ்பெக்டரைப் போல, காவல் துறையினர் எல்லோரும், வேண்டாம் ஒரு கால்வாசிக் காவல் துறையினர் நல்ல மனிதர்களாயிருந்தாலே போதும். இந்தியா எங்கேயோ போய்விடும்.
சாமான்ய மனிதனுக்கும் காவல் துறைக்கும் இடையே இருக்கிற இடைவெளி குறைந்தால் நாடு ஆரோக்யமாயிருக்கும். ஆனால் இந்த இடைவெளி பூர்வீக காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
பாரதியார் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார் பாரதியார்.
சிப்பாயைக் கண்டஞ்சுவார் – ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன் – வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டி லொளிப்பார்.

No comments:

Post a Comment