Wednesday 22 February 2017

வயது பதினாறு கையிருப்பு ஒரு தாவணி
மனதில் எப்போதும் ஒரு குறுகுறுப்பு
பக்கத்து வீட்டு மாமா ஏண்டி நல்லா
படிக்கறயான்னு முதுகு தடவிக் கேட்கும்போது
உடலில் ஒரு சிலிர்ப்பு-மனதில் ஒரு குறு குறுப்பு
வெகுளிப்பெண்ணாம் நான்
பள்ளிக்கூடம் போகயிலெ பர்வதம்மா மகன்
மருது பார்க்கும் பார்வை திரும்பிப்
பார்க்காமலே தெரியும் எனக்கு
கழுத்துப் பின்புறம் ஏனோ ஒரு சிலிர்ப்பு
மனதிலே ஒரு குறு குறுப்பு
திரும்பிப்பார்க்கச் சொல்லும் மனது
வெகுளியாம் நான்
அக்கா புருஷன் அடிக்கடி வரும்போதெல்லாம்
அதீதப் பாசம் பொழிவார்
மச்சினி உறவுமுறை
கொடுத்த உரிமை
சினிமா கொட்டகையில் நடுவில் அவர்
இரு பக்கமும் நானும் அக்காவும்
அவர் அக்கா பக்கம் சாயும் போது
கண்டும் காணாதது போல் இருந்தாலும்
மனதில் ஒரு குறு குறுப்பு
வெகுளியாம் நான்
சினிமாக் காதலன் சிங்காரமாய் நடிகையுடன்
ஆடும் நடனம், பின் இருக்கையிலிருந்து
ஏதோ ஒரு உரசல்- காலை எடுடா
பல்லை உடைப்பேன் - மனதுக்குள்
சொல்லிக்கொள்வேன் -அத்தான் கோபம்
உலகப் ப்ரசித்தம்- ஆனலும் மனதுக்குள்
ஒரு குறு குறுப்பு -வெகுளியாம் நான்
அக்காவுக்கு சுகப் ப்ரஸவம் !!!!!!!!!
அக்கா குழந்தயை அள்ளி எடுத்துக்
கொஞ்சி தொட்டிலில் விட்டு விட்டு
ஆஸ்பத்திரியை விட்டுவிட்டுக் கிளம்பி
வீடு வந்து சேர்ந்தோம் நானும் அத்தானும்
அத்தான் அயர்வாய் கட்டிலில் கண்ணயர்ந்தார்
நானும் பாய் விரித்து ஒருக்களித்தேன்
யாரோ என்னைப் பார்க்கிறார்கள்
கண் திறக்காமலே திரும்பாமலே தெரியும்
பார்ப்பது யார் என்று - அக்கா வீட்டில்
இல்லாத ஏக்கம் அத்தானும் ஆண்தானே
வெகுளியாம் நான்
அத்தானும் அழகாய்த்தான் இருக்கிறார்..
சாந்தமான அக்காவின் ஆங்காரமான குரல்
வாடீ என் சக்களத்தி
அவளும் பெண் தானே.......................
அக்கா என் தலை முடியைப் பிடித்து சுவரிலே
மோதினாள்.........ஆஆஆ !!!!!!!!
திடுக்கிட்டு கண் விழித்தேன் !!!!!!!!!!!!
அத்தனையும் கனவா- நல்ல வேளை
நான் துரோகி அல்ல....
வெகுளிப் பெண் தான்

Saturday 11 February 2017

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன், சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். ‘‘தேவி, நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா; நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால், சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே…’’ என்று உறுதிபடக் கூறிவிட்டான். ‘‘அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்?’’ என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி.
ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு, ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான்.
வைகைக் கரைக்கு வந்து சேர்ந்தபோது, இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான், சோழன். அப்போது எங்கிருந்தோ திடீரென வந்து நின்ற ஓர் ஓடக்காரன், வைகையைக் கடக்க சோழனுக்கு உதவினான். அதுமட்டுமல்ல, ஆலயம் வரை வழிகாட்டியபடி வந்தான். ஆனால் ஆலயமோ அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. சிவநேசன் பரிதவிப்பதைக் கண்ட ஓடக்காரன் மனமிரங்கி, ‘‘கவலை வேண்டாம். ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கேசப் பெருமானைத் தரிசிக்காமல் ஊர் திரும்ப நேராது’’ என்றான்.
அவ்வாறே திறவுகோலை வாங்கி வந்து, ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான். அர்த்தஜாம வழிபாடு முடிந்து, ஆலய நடை சார்த்தப்பட்டால், அதை இரவில் மீண்டும் திறக்கும் வழக்கமில்லை. அப்படி வழிபடுவதும் தவறு. எல்லாம் தெரிந்திருந்தும் சிவநேசச் சோழன் ஆர்வ மிகுதியால், சொக்கேசனை மகிழ்வுடன் வணங்கினான். ஆலயக் கதவை பழையபடி மூடிச் சாவியை ஒப்படைத்துவிட்டு வந்த ஓடக்காரன், சோழனை வைகையின் மறுகரையில் கொண்டு விட்டான். சோழன் கொடுத்த பொற்காசுகளையும் வாங்க மறுத்துவிட்டான், அந்த அதிசய ஓடக்காரன்.
மறுநாள் ஆலயத்தைத் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய இலச்சினையான மீன முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால், அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை! அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். ‘‘எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம்? இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும்’’ முழங்கி, படைதிரட்ட உத்தரவிட்டான்.
போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன், சோழநாட்டை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்… இரவு ஒரு கனவு. அதில் சோமசுந்தரப் பெருமான் தோன்றினார். ‘‘குலபூஷணா! சோழன் மீதுள்ள சினத்தை விடு, பகையை மற. அவனும் உன்போல் ஒரு சிவபக்தன். அவன் பக்தியை மெச்சி, நான்தான் ஓடக்காரனாகச் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி, முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து, சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி, முத்திரையிட்டபோது, நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா, நீ நினைப்பதுபோல் ‘நந்தி முத்திரை’ பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜதானியின் சிறப்பு அடையாளம்.
இதை ஒரு காரணமாக்கி, நீ சோழன் மீது போர்த்தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல; என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும்!’’ கனவில் வந்து சிவன் பேசப்பேச, மெய் சிலிர்த்து விதிர் விதிர்த்துப்போனார், பாண்டிய வேந்தர். பிறகு போராவது, பூசலாவது! சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி, நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன், பாண்டிய மன்னன் ஆனான். ஆனால், ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை.
இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான். சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன், ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து, ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி, ‘‘பிரபு! பழசையெல்லாம் மறந்துவிடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதால், உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி, உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க்கிடக்கிறாரே; பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள்’’ என்றாள்.
‘‘இல்லை தேவி! தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக்கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்துவிட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். என் தந்தையின் கனவில் தோன்றினார் – அதுவும் சோழனுக்காக வாதிட. எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து, மரணத்தில் தள்ளியது. இவ்வளவு வருந்துகிறேனே, என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன்.’’
இந்த முறையீடு மதுரைச் சொக்கநாதப் பெருமானின் செவிகளில் விழாமலா இருக்கும்?
சோழன் மகளை மணந்து, உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன், மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால், மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம்.
முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசைமொழிகளை அர்ச்சித்துவிட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். ‘‘குலபூஷண பாண்டியனின் புதல்வனே! என் மீது சினம் கொண்டு, பிணங்கிக் கிடக்கும் பிள்ளையே! எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல.
அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து, அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக்கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர்தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி, உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு, விழி, போராடு. என் எதிரியை வெற்றிக் கொள்…’’ சிவபிரான் பேசக்கேட்டு, சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும்வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப்படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டான். சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம்.
வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும், தீப்பந்தங்களும் ஏந்தி நின்று, காத்திருந்து, மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்! மதுரைப்படை ஒரு போர்ப்பயணம் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன். எங்கும், எல்லோரும் கூறியது ஒரே தகவல்: ‘‘ஆஜானுபாகுவான ஒரு மனிதர் பாயும் புரவிமீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி, சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து, ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார்.
அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம்…’’ யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழவேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். ‘யார் அந்த மாய மனிதன்?’ என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம்! ‘‘பிரபோ! தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான்’’ என்றான்.
‘‘யார் நீ? என் ஊழியரில் எவரும் உன்போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்…?’’
‘‘இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும்…’’
புரவி நந்தியாக மாற, பாண்டிய வீரன் சிவனாகிறார்! ‘‘ஆ! ஐயனே! தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்?’’
‘‘பதற்றம் வேண்டாம், பாண்டிய மன்னா! ‘பரிகாரம்’ என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று, பக்தனுக்காக இறைவனும் செய்யலாம்! நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன்; உன் ராஜ இலச்சினைகளை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா, இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா?’’
‘‘சிவ சிவா! என்ன பேச்சு சுவாமி இது… தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள்…’’
‘‘நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து, மன்னித்து ஏற்றுக்கொள்.’’
‘‘அப்படியே ஆகட்டும் ஐயனே! இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா?’’
விண்ணும் மண்ணும் அதிர வாய்விட்டு நகைத்தார் அரன். பிறகு, ‘‘ராஜசேகரா! என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? ‘சிவன் என் கனவில் வரவேண்டும்’ என்றுதானே? வந்து விட்டேன்! சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான்; கனவு ஒரு வாழ்வுதான். கவலையைவிடு கடமையைச் செய்…’’
சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து, பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று, சொக்கேசப்பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவு விருத்தாந்தங்கள், வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.
சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அவரவர் நடத்தை தானே அவரவரின் பண்பு நலனைத் தீர்மானிக்கிறது? அப்படித்தான் பிறந்தான் கௌதமன். மிக நல்ல குலத்தில் தோன்றியவன் தான். ஆனால் நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே மருந்துக்குக் கூட அவனிடம் நல்ல குணம் இருக்கவில்லை.
ஆனால் அவன் காலத்தில் ராஜதர்மன் என்ற பெயரில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு. பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய பறவை அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம். ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள். ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன் என்ற இந்த மூன்று பாத்திரங்களை உள்ளடக்கி, நன்றியுணர்வின் பெருமையையும் விருந்தோம்பலின் மேன்மையையும் விளக்கி மகாபாரதம் ஓர் அழகிய கதையைச் சொல்கிறது: கௌதமன் வடிகட்டின சோம்பேறி. பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான்.
தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர், இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கிக் கரைசேர முடியாமல் ஒருநாள் மூழ்கிவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கௌதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான். உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது. வெளியூரில் இருந்த அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கௌதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. ‘எப்பேர்ப்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்!’ என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார்.
பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கௌதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவுசெய்தான். வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான்.
என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கௌதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கௌதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின.
அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்துசேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிரமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான். சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும் சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது!
பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன், ‘‘யார் நீ?’’ என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ‘‘ஐயா! என் பெயர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம். இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அன்புடன் கேட்டது.
ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கௌதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ‘‘பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கௌதமன். நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது. எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்தைத் தேடித்தான்!’’ என்று பரிதாபமாக பதிலுரைத்தான்.
கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கௌதமனிடம், ‘‘கௌதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை.
உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார்’’ என்றது. கௌதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கௌதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான், கௌதமன். அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. ‘‘இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்!’’ என்று வேண்டிக்கொண்டது. கௌதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கௌதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். தொலைவில் நெருப்பு எரிவதையும் பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. ‘உம்.. வேட்டையாடு. வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ?’ என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீய சக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதைத் தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன. நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். ‘என்ன இது? ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கௌதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கௌதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே?’ என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள்.
தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘எங்கே அந்த கௌதமன்? பிடித்து வாருங்கள் அவனை!’’ என்று கர்ஜித்தான். கௌதமன் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான்.
‘‘இவனை வெட்டி அந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்!’’ என்று உறுமினான் அரக்கன்.
‘‘அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல!’’ என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது.
‘‘இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்!’’ என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். ‘‘விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்!’’ என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது!
விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், ‘‘நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்!’’ என்று பரிவோடு சொன்னார்.
தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, ‘‘தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கௌதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்!’’ என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள்.
மீண்டும் உயிர் பெற்று எழுந்த கௌதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது.
மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.
அவ்வளவாகப் பிரபலமாகாத ஒரு கதை பாகவதத்தில் இருக்கிறது அதுதான் துந்தியின் கதை.....
உலகின் முதல் மனிதன் ஸ்வயம்புவ மனு; அவன் மனைவி சதரூபா.
அவர்களின் முதல் மகன் உத்தனபாதன், இரண்டாவது மகன் ப்ரியவ்ரதன்
உத்தனபாதனுக்கு இரண்டு மகன்கள் – துருவன் (சுநிதியின் மகன்); உத்தமன் (சுருசியின் மகன்).
துருவனின் வம்சத்தில் பின்னர் தோன்றியவன் ப்ரிது. அவன் நல்ல அரசன் தான். ஆனாலும் அவனுடைய ஆட்சியில் பல பகுதிகளில் திடீரென்று உணவுப் பொருட்கள் காணாமல் போய் மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்தனர். ப்ரிது, அதற்கு என்ன செய்வது என்று எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது, ஒரு நாள் அவன் காட்டில் வேட்டையாட சென்றிருந்த பொழுது, மிகவும் பசியுடன் இருந்தான். திடீரென்று, அவன் முன் ஒரு கிழப்பசுத் தோன்றியது. அதை வேட்டையாட அவன் துரத்திச் சென்றான்; அது அவனை அலைக்கழித்து இழுத்துச் சென்றது.
மிகவும் களைத்துப் போன அவன் ஒரு இடத்தில் தன் வில்லைக் கூடத் தூக்க முடியாமல் நிற்க, அந்த பசு ஒரு சிறு பெண்ணாக மாறியது.
உடனே மன்னன் அச்சிறுமியை நோக்கி, “மகளே! நீ யார்” என்று கேட்டான்.
அச்சிறுமி, “நான் ஒரு தேவபசு! கேட்டவர்களுக்கு அனைத்தையும் தரும் காமதேனுவைப் போன்றவள். ஆனால், இப்பொழுது எதுவும் அளிக்க முடியாத நிலையை அடைந்துவிட்டேன். அதனால் என்னை ஆதரிப்பார் யாருமில்லாமல் நான் அநாதை ஆகிவிட்டேன்” என்று கூறினாள்.
மேலும் தொடர்ந்து, “மன்னா! எனக்கு தற்போது உன் மக்களுக்கு உணவு கிடைக்காததன் காரணம் தெரியும். என்னிடம் எல்லா உணவுப் பொருட்களின் விதைகளும் பயிர்களும் இருந்தன.
அவை, மேலேயே இருந்ததால் ‘டுண்டி’ என்ற பெரிய அரக்கி அவற்றைத் தானே உண்டு மக்களுக்குத் தராமல் தின்று விடுகிறாள். அதனால், நான் அவற்றை என் உள்ளுக்குள் யாருக்கும் தெரியாதபடி புதைத்துக் கொண்டு விட்டேன். என்னுள் புதைந்துள்ள அப்பொருட்களை எடுக்க மனிதன் முயற்சி செய்தால் மட்டுமே, அவன் தேவைக்கு ஏற்ப வெளியிடுவேன்” என்று கூறினாள்.
உடனே மன்னன் டுண்டி-யை அழிப்பது எப்படி என்று வினவினான்.
அதற்குப் பசு, “அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது. அதைக் கொல்ல முதலில் அதை வெளிக் கொண்டு வர வேண்டும். அதற்கு, என்னைத் தோண்டி என் உள்ளில் இருக்கும் உணவை அனைவருக்கும் அளி!
‘டுண்டி’ என்றால் மகிழ்ச்சியொலி; மக்களின் மகிழ்ச்சி சத்தத்தில் தான் அந்த அரக்கியும் அழிவாள். அதனால் தான் அவள் பெயர் ‘டுண்டி’ ” என்று கூறியது.
அனைத்தையும் கேட்ட மன்னன், “மகளே, உன்னை ஆதரிப்பார் யாருமில்லை என்ற கவலை வேண்டாம். இனி நீ என் மகள்” என்று அச்சிறுமியை ஆரத் தழுவினான். உடனே அப்பெண்ணின் உடல் பச்சை நிறமாக மாற அவள் அங்கிருந்து மாயமாக மறைந்தாள்.

மன்னனுக்கு வந்தது பூமித் தாய் என்று புரிந்தது. பூமியில் இதுவரைத் தானாகத் தோன்றி வரும் உணவுப் பொருட்கள் இனிமேல் கிடைக்க வேண்டுமென்றால் பூமியைச் சீர் செய்து அதைச் சமன் படுத்தி விதையிட்டு பயிர் செய்ய வேண்டுமென்று புரிந்து கொண்டான். அவ்வாறேச் செய்து பூமியில் முதல் முதலாகப் பயிர்த் தொழிலைத் துவங்கி வைத்தான். ஆம்! பூமியின் முதல் விவசாயி ‘ப்ரிது’. பூமித் தாயும் அன்று முதல் ‘ப்ரித்வி’ (ப்ரிது-வின் மகள்) என்று அழைக்கப்பட்டாள்.
பயிரை அறுவடைச் செய்து அன்றிரவு அதில் உணவுப் பொருட்களை தன் மக்களுடன் பகிர்ந்து கொண்டான். அனைவரும், அக்கால வழக்கப்படி பொது இடத்தில் நடுவில் எரியூட்டிப் பாடி மகிழ, டுண்டி என்ற அந்த பட்டினி அரக்கி அழிந்து போனாள். அதுவே ஹோலியன்று முதல் நாள் நடக்கும் விழா என்ற தொன்மமும் உண்டு.
ப்ரிதுவின் கதை என்பது மனிதன் வேட்டுவத் தொழிலிலிருந்து உழவுத் தொழிலுக்கு மாறியதைக் குறிக்கும் கதையாகக் கொள்ளப் படுகிறது.
"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக
படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும்
என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.
"மெல்லிசை மன்னர்கள்" 
விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான
சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.
படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார்.
அதன்படி, அந்த
நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி
இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம்
தெரிவித்தார்.
வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு
எழுதிக் கொடுத்தார்.
பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும்
விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என
குழம்பினார்கள்.
திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம்
தயங்கிக் கேட்டார்கள்.
கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே "பாடலைப் படித்துக் காட்டுங்கள்" என்றார்.
எம்.எஸ்.வி. உடனே," எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும்
கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும்
கொண்டாடுவோம்" என்று மெட்டில் பாடினார்.
கண்ணதாசன், "இன்னுமா புரியலை, பிறப்பால்
இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக
வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான "ஓம்" என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்.
இப்பொழுது பாருங்கள்" என்று பாடிக் காட்டினார்.
எல்லோரும் கொண்டாடு " ஓம் "
எல்லோரும் கொண்டாடு "ஓம் "
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடு "ஓம் "
வருவதை வரவில் வைப்போ " ஓம் "
செய்வதை செலவில் வைப்போ "ஓம் "
முதலுக்கு அன்னை என்போ " ஓம் "
முடிவுக்கு தந்தை என்போ " ஓம் "
மண்ணிலே விண்ணை கண்டு
இன்பம் காணு " ஓம் "
எடுத்தவன் கொடுக்க வைப் "ஓம் "
கொடுத்தவன் எடுக்க. வைப் " ஓம் "
இன்று போல் என்றும் இங்கே
ஒன்றாய் கூடு " ஓம் "
என்று
முடித்ததுமே, "மெல்லிசை மன்னர்" அவரைக் கட்டிப்பிடித்து "கவிஞரே... இந்த உலகத்தில் உம்மை
ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்" என்று உச்சி முகர்ந்தார்..
கூடவே இயக்குனர்
ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில்
ஆழ்ந்தார்.
அதே போல இந்தப் பாடல் முழுக்க
" ஓம் " என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு
முக்காட வைக்கும்.
அந்தப் பாடல்.
தி கிரேட் கண்ணதாசன்!
பம்பாய்க்கு வடக்கே செல்லவே வாய்க்கவில்லை இன்னும். அப்படி வாய்க்கிற பட்சத்தில், தாஜ்மஹால் என்கிற உலக மஹா அதிசயத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிற எல்லா இந்தியர்களுக்கும் இருக்கிற நியாயமான ஆசையோடு, சிரபுஞ்சிக்குப் போய் உலக மஹா மழையில் நனைந்து விட்டு வரவேண்டும் என்கிற அநியாயமான ஆசைதான் நம்ம மெகா மழைத் திட்டம்.
கூரியர் ஆஃபீஸுக்கு முந்திய சந்திப்பில் காலூன்றி நின்றபோது, பாதையோரமாய் நின்றிருந்த பெண்ணொருத்தி, போக்குவரத்துக் காவலரொருவரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
"சார், ஃபஸ்ட் டைம் இந்த ஏரியாவுக்கு வர்றேன். நுங்கம்பாக்கத்துக்குப் போகணும். எந்த பஸ் போகும்னு தெரியல, பஸ் ஸ்டாப் எங்க இருக்குன்னு தெரியல. மெட்ரோ ரயில் வேலக்யாக எல்லாத்தையும் மாத்தியிருக்காங்கன்னு சொல்றாங்க. மழவேற பெரிசா வரும் போலத் தெரியுது…"
மெட்ரோ ரயில் வேலைக்காக, அண்ணா நகரில் சாலைகளையெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். பஸ் ரூட்கள், பஸ் ஸ்டாப்கள் எல்லாம் தடம் புரண்டு கிடக்கின்றன. தினம் தினம் இந்தப் பாதைகளில் புழங்குகிறவர்களுக்கே குழப்பம். புதிதாய் வருகிறவர்கள் திண்டாடிப் போகிறார்கள்.
அந்தப் பெண் தனியாக இல்லை. இடுப்பில் ஒரு குழந்தை, இடுப்பளவில் ஒரு பிள்ளை. தன்னுடைய புடவைத் தலைப்பை அஜஸ்ட் பண்ணி, ரெண்டு குழந்தைகளையும் மூட முயற்சித்திருந்தாள்.
அடடே, நாம் காரில் வந்திருந்தால் இந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் நுங்கம்பாக்கத்தில் விட்டு விட்டு வருகிற புண்ணிய காரியத்தைப் பண்ணியிருக்கலாமே என்று யோசித்தபோது பச்சை விளக்கு வந்தது.
கூரியரில் வேலை முடிந்துத் திரும்பி வருகிற போது, அந்தப் பெண் இன்னும் அங்கே தான் நின்று கொண்டிருக்கிறாளா அல்லது உதவி கிடைத்துக் கிளம்பி விட்டாளா என்று பார்க்கிற குறுகுறுப்பில், ஒரு சுற்று வட்டம் போட்டு அந்த ஸிக்னலுக்கு வந்து சேர்ந்தால், அங்கே ஓர் அதிர்ச்சி.
அந்தப் பெண்ணும் குழந்தைகளும் காவல் துறைக் காரொன்றில் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தார்கள். நல்லதுக்கா அல்லது விபரீதத்துக்கா என்று தெரியவில்லை. அந்த வாகனத்தை பின் தொடர்ந்து போகவேண்டுமென்று மட்டும் தோன்றியது.
பின் தொடர்ந்தேன்.
ஹாரிங்டன் ரோடு, ஹாடோஸ் ரோடு வழியாய் வள்ளுவர் கோட்டம் சாலையை அடைந்து, ஒரு குறுகலான தெருவுக்குள்ளே திரும்பி நின்றது காவல் வாகனம். தூறல் நின்னு போச்சு. முன் இருக்கையிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர், பின் கதவைத் திறந்து விட, அந்தப் பெண் இறங்குகிற போது, அவளிடமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர், வீட்டுக்குள்ளிருந்து வெளிவந்த பெரியவரிடம் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை ஒப்படைக்குமுன்னால், அதற்கொரு முத்தம் வேறு. அம்மாவை ஒட்டிக் கொண்டு நின்ற அடுத்த குழந்தையைத் தலையை வருடிக் கொடுத்து கன்னத்தில் ஒரு செல்லத் தட்டுதல் வைத்தபின்னால், அவரை நோக்கிக் கை கூப்பியபடியிருந்த அந்தப் பெண்ணிடமும் பெரியவரிடமும் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறிக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.
ஆண்டவனே! இந்த இருபத்தொண்ணாம் நூற்றாண்டில், இந்தியாவில் இப்படியொரு இன்ஸ்பெக்டரா என்று நெகிழ்ந்து போய், மானசீகமாய் நான் அவருக்கொரு சல்யூட் அடித்த போது, காவல் துறையைக் குறித்து முந்திய அத்தியாயங்களில் நான் முன் வைத்த விமர்சனங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாய் டிலிட் செய்து விடலாமா என்றொரு சபலம் தட்டியது.
இந்த இன்ஸ்பெக்டரைப் போல, காவல் துறையினர் எல்லோரும், வேண்டாம் ஒரு கால்வாசிக் காவல் துறையினர் நல்ல மனிதர்களாயிருந்தாலே போதும். இந்தியா எங்கேயோ போய்விடும்.
சாமான்ய மனிதனுக்கும் காவல் துறைக்கும் இடையே இருக்கிற இடைவெளி குறைந்தால் நாடு ஆரோக்யமாயிருக்கும். ஆனால் இந்த இடைவெளி பூர்வீக காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
பாரதியார் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார் பாரதியார்.
சிப்பாயைக் கண்டஞ்சுவார் – ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன் – வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டி லொளிப்பார்.
வேடன் ஒருவன் குரா மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்தான். வெகு நேரமாகியும் வேட்டைக்கு ஒரு விலங்கும் காணாமல் தவித்தபோது அந்தப் பக்கம் ஒரு வேங்கைப்புலி வந்தது. அதை வேட்டையாட முயன்றால், அது இலேசில் அவன் கையில் கிட்டவில்லை. இங்கும் அங்குமாக ஓடிப் போக்குக் காட்டியது. அவனும் அதைப் பிடித்தே தீருவது என்று துரத்தினான். ஆனால், அது ஒரு குரா மரத்தின் பின் ஒளிந்து கொண்டது. அவன் அருகில் வந்து பார்த்தவுடன் அது மறைந்து போயிற்று. வேடன் பிரமித்துப்போய் நிற்க, அந்த இடத்தில் ஒரே விபூதி வாசனை வீச ஆரம்பித்தது. ஒரு மயிலும் பறந்து வந்து அமர்ந்து கொண்டது.
"ஆஹா! நான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேன்! இந்த இடத்தில் என் தெய்வமான முருகன் அல்லவா இருக்கிறான்" என்று மன மகிழ்ந்து போனான் வேடன். பின்னர், அவனது முயற்சியால் அங்கு முருகன் சிலை ரூபத்தில் வந்து அமர்ந்தார். அது மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோயிலாக மாறியது. அதுதான் திருச்சியிலிருந்து மதுரை போகும் வழியில் வரும் ‘விராலி மலை முருகன் கோயில்’!
இங்கு இருக்கும் முருகன் பெரிய மயிலில் அமர்ந்தபடி ஆறுமுகங்களுடன் மயில்வாகனராக அருள் புரிகிறார். சுமார் 2000 வருடங்கள் ஆன மிகப் பழமையான கோயில். இங்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அழகான மயில்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. சுமார் 2000 மயில்கள் இங்கு இருக்கலாம் என்று மக்கள் சொல்லுகின்றனர்.
ஒரு சமயம் ஸ்ரீ அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனைக் கண்டு களித்துப் பல பாடல்கள் பாடினார். பின், அவர் வயலூர் வந்தார். அப்போது முருகன் அவர் முன் தோன்றி, "அருணகிரிநாதா! என்னைப் பார்க்க விராலி மலைக்கு வா" என்று திருவாய்மலர்ந்து மறைந்தார். அருணகிரிநாதருக்கு விராலிமலைக்குச் செல்லச் சரியான வழி தெரியவில்லை. சுற்றிச் சுற்றி வந்து, இடம் தெரியாமல் களைத்துப் போனார். அப்போது முருகன் தன் பக்தனின் தவிப்பைப் பொறுக்க முடியாமல் ஒரு வேடன் போல் வந்து விராலி மலையை அடையாளம் காட்டினாராம். அவர் அங்கு வந்தவுடன் அவருக்கு அஷ்டமாசித்திகளையும் கற்றுக் கொடுத்தாராம்.
விராலி மலை முருகனை எல்லோரும் உடல் நோய் தீர முக்கியமாக வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்காக அப்படி வேண்டிக் கொள்ளும்போது குழந்தையின் ஆயுள் விருத்திக்காக முருகனுக்கே அந்தக் குழந்தையைத் தத்துக் கொடுக்கும் பழக்கமும் இருக்கிறது. அதே போல், முருகன் திருமுன் குழந்தையின் தாய்மாமன் தவிட்டைக் கொடுத்துக் குழந்தையைப் பெறுவதும் நடக்குமாம். புதிதாக வீடு வாங்கவோ, மனை வாங்கவோ முனைபவர்களும் இந்த விராலி மலை முருகனை வணங்கி வேண்டிக் கொள்கின்றனர்.
இந்தக் கோயிலில் நடக்கும் ஒரு புதுமையான வழக்கத்தை என் நண்பர் சொன்னார். இந்தத் தலத்தில் முருகனுக்குச் சுருட்டை நைவேத்தியமாக வைக்கிறார்களாம். இதன் காரணம்?… கேட்காமல் இருப்பேனா? கேட்டேன்.
ஒரு முறை, இந்தக் கோயிலில் ஒரு பக்தர் தன்னையும் மறந்து கோயில் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவர் கோயிலுக்குப் போக நாள்தோறும் ஆற்றைக் கடக்க வேண்டும். ஒரு நாள், திடீரென்று புயல் வீசும் அறிகுறி தென்பட்டது. மழை வேகமாகப் பொழிந்து எங்கும் வெள்ளக்காடானது. இதனால் அவருக்கு ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. ஓர் ஓரமாக நின்றபடி, "கந்தா! உன்னைப் பார்க்க வர முடியவில்லையே! என்ன செய்வேன்?" என்று மனம் கலங்கியபடி நின்றார். குளிரோ தாங்க முடியவில்லை. ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வயதானவர் வந்தார்.
"என்ன, மனம் கலங்கி நிற்கிறாயா? எனக்கு ஒரு சுருட்டு கொடு! உன்னை நான் ஆற்றைக் கடக்க வைத்து அழைத்துச் செல்கிறேன்" என்றார். பக்தரும் அவரிடம் சுருட்டைக் கொடுத்தார். முதியவரும் அந்த பக்தர் ஆற்றைக் கடக்க உதவி செய்தார். கோயில் வந்தாயிற்று. பக்தர் உள்ளே செல்ல, ஓர் அதிசயம் காத்திருந்தது! முருகன் அருகில் பாதி சுருட்டு ஒன்று கிடந்தது.
மிகவும் ஆனந்தமடைந்த பக்தர் இந்த நிகழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு இந்தக் கோயிலில் முருகப்பெருமானுக்குச் சுருட்டு நைவேத்தியம் ஆரம்பமானது.
ஆனால், இது சரியல்ல என்று புதுக்கோட்டை மஹாராஜா இதற்குத் தடை விதித்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் வந்து, "இதற்குத் தடை விதிக்காதே! இது தொடர்ந்து நடக்கட்டும்! பிறருக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும்! நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்கும் நல்ல எண்ணம் வர வேண்டும்! இதை விளக்கவே அந்த நிகழ்ச்சி நடந்தது" என்றார். ஆகையால், இன்றும் இந்தச் சுருட்டு நைவேத்தியம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
தில்லியில் கால பைரவர் கோயிலில் விஸ்கியைப் பிரசாதமாக வைத்துப் பார்த்திருக்கிறேன். அது போல் இதுவும் ஒரு நைவேத்தியம்தான்!
விராலி மலை முருகனுக்கு அரஹரோஹரா!
ஒரு கிராமம். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. இன்று நிலைமை மாறிப்போய் கிடக்கிறது. பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது.
அந்தக் கிராமத்தின் கோடியில் ஒரு கந்தல் குடிசை. அந்தக் குடிசை, இருவர் அடைக்கலமாகி வசித்து வந்தனர். அதில், ஒருவர் பார்வையற்றவர். மற்றவர் கால்கள் அற்றவர். அவர்களுக்கென்று பிழைப்பு வழி எதுவுமில்லை. மாலையில் கடைத்தெரு மூடப்படும்போது அவர்கள் போவார்கள். பழையது, மிஞ்சிய காய் கனி தானியங்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதை உணவாக்கி அவர்கள் உண்டு வாழ்ந்தனர்.
ஆனால் பஞ்சம் வந்த பிறகு, இருவருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இருவரும் பெரும்பாலும் பட்டினி கிடந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்த போது, 'திருடி சாப்பிட்டாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்வது' என்ற முடிவுக்கு வந்தனர். போகிற வழியில் வயல்கள் எல்லாம் கருகிக் கிடந்தன.
கொஞ்சம் தூரத்தில் ஊர்த்தலைவரின் தோட்டம். அவருக்கென்று தண்ணீர் வசதிகள். தோட்டம் இன்றைக்கும் செழித்துக் கிடந்தது.
அங்கே போவதென்று முடிவு செய்தார்கள்.
முடவரைக் குருடர் சுமந்து கொண்டார். முடவர் வழிகாட்ட, குருடர் நடந்தார். ஒருவழியாய் ஊர்த்தலைவர் தோட்டத்துக்கு வந்துவிட்டார்கள். ஊருக்குள் யாரும் நெருங்க பயப்படும் தோட்டம். பிடிபட்டால், கட்டி வைத்துத் தோலை உறித்து விடுவார்கள். தோட்டத்தில் தானியங்களும், காய் கனிகளும் குவிந்து கிடந்தன. முடவரை வரப்பிலேயே இறக்கிவிட்டு குருடர் தட்டுத் தடுமாறி உள்ளே போய் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டார். யாருக்கும் தெரியாமல் குடிசைக்கும் திரும்பி விட்டனர்.
அவர்கள் கொண்டு வந்தது இரண்டு நாட்களுக்கு போதுமாயிருந்தது. நெடுநாளைக்குப் பிறகு இருவரும் வயிறார உண்டு உறங்கினார்கள். காலையில் எழும்போதே பெருங்கூச்சல் கேட்டது. ஊர் முச்சந்தியில் நின்று தலைவர், “எவண்டா, எந்தோட்டத்தில் எறங்கித் திருடினவன்?” என கத்திக் கொண்டிருந்தார். யாரும் திருட்டை ஒப்புக் கொள்ள முன்வராததால், ஊர்த் தலைவர். ‘நீதி தேவதை’யின் கோயிலுக்குப் போய் மண்டியிட்டு வேண்டி நீதி தேவதையை ஊருக்குள் அழைத்து வந்தார்.
நீதி தேவதையின் முன் ஒவ்வொருவரும் ஆஜராகி உண்மையைச் சொல்ல வேண்டும். திருடியவரைத் தேவதை கண்டு பிடித்துவிடும். ஊர்மக்கள் ஒவ்வொருவராக ஆஜராகி திருடவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தனர். யாரையும் நியாய தேவதை கொல்லவில்லை.
இனி மிச்சம் குருடரும், முடவரும் மட்டுமே. யாருக்கும் அவர்கள் ஞாபகம் வரவில்லை. திடீரென ஊர்த்தலைவர், “அந்தக் குருடனையும், நொண்டியையும் இழுத்துட்டு வாங்கடா” என கத்தினார். இருவரும் சிரமத்தோடு தடுமாறி வந்தார்கள். ஊர் மக்களுக்கு கண்கலங்கியது.
நியாய தேவதை முன் முதலில் குருடர் ஆஜரானார். “தேவதையே! நான் பிறவிக்குருடன். எதையும் கண்கொண்டு பார்க்க முடியாதவன். தலைவர் தோட்டத்தையும் நான் பார்த்ததில்லை” என்றார். குருடரைத் தேவதை ஒன்றும் செய்யவில்லை.
அடுத்து முடவர் ஆஜரானார். “அம்மா! நான் பிறவியிலேயே முடவன். நடக்க மாட்டாதவன். தலைவர் தோட்டத்தில் என் கால் படவேயில்லை” என்றார். முடவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை. இனி யாரும் மிச்சமில்லை. ஊர் மக்களுக்கு திகைப்பு.
அப்போது யாரும் எதிர்பாராமல் அந்தச் சம்பவம் நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர்த்தலைவரின் கழுத்தை நெறித்தன. ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார். ‘ஊர்த்தலைவரா... திருடர்!’ என்று எல்லோருக்கும் ஆச்சரியம்! ஊர்மக்கள் நீதி தேவதையிடம் விளக்கம் கேட்டனர். தேவதை மக்களிடம், "குருடரும், முடவரும் திருடியது உண்மைகளென்றால், ஊர்த்தலைவர் ஊரையேக் கொள்ளையடித்து அவர் மட்டும் வசதியாக இருப்பது பெரிய உண்மையாகும். எனவே இந்த ஊரிலே மிகப் பெரிய திருடன் தலைவன் தான்" என்றது.
நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும். சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் அவன் கடவுளிடமிருந்து விலகியே இருக்கிறான் - சுவாமி விவேகானந்தர்.
எப்போதும் உடன்
ஏந்தித்திரியும்
கனத்த மௌனம்
உன்னுடையது!
ஓயாது ஒலியெழுப்பும்
மேயும் பசுவின்
கழுத்து மணியின் பேச்சு
என்னுடையது!
எங்கேனும் இறக்கி
வைத்திட விரும்பா
சுமை என்றென்றும்
உன்னுடையது!
காற்றில் கனமற்றுத்
திரியும் வண்ணத்துப்பூச்சியின்
பட்டுறெக்கையிரண்டு
என்னுடையது!
ஞாபகங்களைத்...
தவிர்க்க விரும்பும்
தருணம் ...
உன்னுடையது!
நீங்கவியலா
நினைவுக்குவியலின்
சொர்க்க தேசம்
என்னுடையது!
அவ்வளவு முரண்களின்
மத்தியிலும் என்றென்றும்
முறியாப் பெருங்காதல்
நமக்கானது!
மழைவரக்கூடும் என்று
கொடியில் காயும்
ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தேன்
வறட்சி மெழுகிய என்முகத்தை
மடங்கிய துணியின் நூல்களில்
பட்டுத் தொட்டது ஈரம் வழியும் காற்று
பாகற்கொடியின் இலைகளின் மேல்
படர்ந்திருக்கும் தூசிகளை
இறுதியாகப் பார்த்துவிட்டுத் திரும்புகையில்
உடைந்துவிட்டது துண்டு மேகம்
மெல்லிய குளிர்காற்று
உடல்முழுவதும் வலம்வந்து
கண்களின் வழியே ஒழுகிக் கொண்டிருக்க
வேலி முள்ளில் சிக்கிக் கொண்டது
முதல் மழைத் துளி
தம்பியின் விறகுக் குடைக்குள்
தஞ்சம் அடைவதற்குள்
அவிழ்க்கப்பட்டதால் முதுகுப்புறத்தில்
அருவி வடிந்த சாயலோடு
வீட்டிற்குள் நுழைந்தேன்
கவிதை ஒன்றைக் கிறுக்கி
விடுவதென்ற ஏற்பாட்டில்
எழுதுகோலை எடுத்த திசையில்
மழையின் அழைப்பு
கைபேசியின் தொடுதிரையில்
வெள்ளை நட்சத்திரங்களாக
நுரைத்துக்கொண்டிருந்தது
தூவிய மழைச் சாரலின் மிச்சம் .....
இன்று சித்ரவதை
நாளை அழகு
சிற்பியிடம் மாட்டிய கல்
______________________
கோபுரக் கலசத்தை
அசைத்துப் பார்க்கிறது
குளத்தில் விழுந்த கல்!
______________________
வறுமைக் கோடு
தெளிவாய் தெரிகிறது
விலாவில்!
______________________
சவக் கிடங்கில்
சிரிப்பு எதற்கு?
மின் விளக்கு!
______________________
சூடு ஏற்றுகிறார்கள்
நிச்சயம் அடி உண்டு
பறைக்கு!
______________________
பட்ட மரம்
பூத்திருக்கிறது
காளான்!
______________________
அடி வாங்கியபின்
அணைந்துகொள்கிறது
நெஞ்சோடு பறை!
______________________
அக்கரைக்குச் செல்ல
இலவச படகு
எறும்புக்கு சருகு!
______________________
காயப்படுத்தி
நினைவூட்டியது அம்மாவை
சுவையான தூதுவளை!
______________________
பழங்கால மரம்
நரைத்துவிட்டதோ
உச்சியில் கொக்குகள்!