Sunday 2 August 2020

நண்டின் கால்தடம்

கடலோரத்தில் நண்டு நடந்துகொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது.
நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒருநாள் ஒரு நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது.
வளைக்குள் இருந்து ஓரக்கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது.
அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு.
தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:-
"முன்பே காப்பான் அன்பே நட்பு"

உணவுப் பாண்டம்

வீட்டிலும் ஹோட்டல்களிலும் பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டாலும் கோவில்களில் மட்டும் இலையில் சாப்பாடு தரும் மரபு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நாகரிகம் மிகவும் ஆக்கிரமிக்காத சிறுநகரப் பகுதிகளிலும் கிராமங்களிலும் இன்றும் இலையில் சாப்பிடும் மரபைக் காணலாம். இலையென்றால் வாழை இலை மட்டுமில்லை. நீண்ட நாள் தேவைகளுக்காக வாழை இலைகளை வெயிலில் காயவைத்து எடுத்து பதப்படுத்தி வைத்துக்கொள்வது. அல்லது மந்தாரை இலை போன்றவற்றை பதப்படுத்தி ஈர்குச்சி கொண்டு தைத்து தட்டு போல உருவாக்கி சேமித்து வைப்பது என ப்ளாஸ்டிக்கும் எவர்சில்வரும் உருவாக்கப்படாத காலகட்டத்தில் இந்த இலைகளில் தான் நம்முடைய் தாத்தா பாட்டிகள் சாப்பிட்டு வந்தார்கள்.

இதனை ஊர் பக்கம் ’தையல் இலை’ என்பார்கள்.சுடச்சுட சமைக்கப்பட்டிருக்கும் சாப்பட்டை அம்மா இந்த இலைகளில் பரிமார அதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களே நினைத்தாலும் தரமுடியாது.

காலப்போக்கில் ஆரோக்கியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவர்களும் அவசர மற்றும் அவசியத் தேவைகளுக்காக ப்ளாஸ்டிக் பக்கம் சாய்ந்துவிட, சருகு இலைகளில் சாப்பிடும் மரபு சருகு போலவே மக்கிவிட்டது.

வாசம்

இயற்கை மணம் குறித்து ஒரு தகவல் ஒரு வலைத்தளத்தில் படித்தேன்.
பதிவர் அவருக்கு பிடித்த இயற்கை மணங்கள் பற்றி வெகு அருமையாக சில கருத்துக்களை பரிமாறி அதை படிக்கையிலேயே மிக மகிழ்ச்சி ....
அப்படியே எனக்கு பிடித்த மணங்கள் என்னென்ன என்று மனசிலேயே அலச ஆரம்பித்தேன் .

அம்மாவின் உடம்பு உடை வாசம் பட்டியலில் மேல் வரிசையில் .
அடுத்து மழலை / குழந்தைகள் . அந்த பிஞ்சுகளின் கதம்ப பலவேறு வகை வாசனைகள் பட்டியல் இடுவது மகா சிரமம் . வெகு நீளம் . எனக்கு ஒண்ணேகால் வயதில் பேத்தி ஒரு வயது ஆகப்போகும் பேரன் உண்டுங்க ....இருவருமே மகள்கள் வழி .
மழை பெய்து அதுவும் கோடையில் எழும்பும் மண் வாசனை .
நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வித உடல் வாசனை .இது நாம் பயன்படுத்தும் சோப் , பவுடர் , தலைக்கு பூசும் எண்ணெய் , வாசனை திரவியங்கள் , உண்ணும் உணவு வகைகள் சார்ந்தவை .....
அதுபோலவே பிறர் உடம்பின் மணம்....பெண்கள் என்றால் அவர்கள் சூடும் பூக்கள் ....
காடு கழனி வயல் நீர்நிலைகள் இவைகளில் உண்டாகும் ஈடு இணையில்லா சுகந்தங்கள் .....
உணவுப்பண்டங்கள் அவை காய்கனி மாமிசம் எதுவாக இருந்தாலும் ....
குறிப்பாக பழங்கள் மா பலா போன்றவைகளின் வாசனை ....அம்மம்மா......
பனங்கிழங்கு, பதநீர் , பனையோலை .....
வறுத்த கொள்ளு , புளியங்கொட்டை மணம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ....
மண் பாண்டங்கள் சுட்டு அவை வேகும் மணம் வெகு அருமையாக இருக்கும் .....