Saturday 29 October 2016

பாஞ்சாலியின் புலம்பல்
நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள்.
பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே!
நீங்கள் ஏன் என் பக்கம் பேசுவதில்லை?
ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த பல மாமன்னர்களைப் புகழும் நீங்கள், என்னை மட்டும் விலைமகளைப் போல ஏன் பார்க்கிறீர்கள்?
பல்லாயிரக்கான வீரர்களைப் போரில் புறம் கண்டு, அவர்தம் தலைகளை ஒருவன் சீவி எறிந்தால் பாராட்டும் நீங்கள், அதே மாவீரன் காரணமின்றி ஒருவர் தலையைச் சீவினால், அதைக் கொலை என்றுதானே கூறுவீர்கள்! ஆக, அங்கு வெவ்வேறு அளவுகோலைத்தானே எடுக்கிறீர்கள்!
ஆனால், சிலபோது மட்டும் — புலி பசுவைத் தின்னும், ஆனால் பசு ஒருபோது புலியைத் தின்னாது என்னும் இயற்கைச் சுபாவத்தைக் காணாது – புலியா, பசுவா என்று பார்க்காது, ஒரே தராசில் ஏற்றுகிறீர்களே!
பெண்ணடிமை செய்தான் இராமன் என்று அவனைத் தூற்றுகிறீர்களே, “கற்பென்று வைத்தால் அதை ஆணுக்கும் முன்பு வைப்போம்!” என்ற கொள்கையுடன், சீதை ஒருத்தியை மட்டும் மனதில் நினத்து வாழ்ந்தானே — மக்களின் கருத்துக்காக, மன்னனின் முதற்கடமை மக்களுக்கே என்று, தன் மனைவியைத் துறந்து, தன் மகிழ்ச்சியைத் துறந்தானே – அவனது அந்தப் பேராண்மையை ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள்? பிறன் மனைவியை மயக்கி, அவளைத் தன் கணவனிடமிருந்து பிரித்து, அவளுக்காக நாட்டையே துறப்பவன் சிறந்தவன், நாட்டுக்காக, மனைவியைத் துறக்கும் மாவீரன் பெண்ணடிமை செய்பவனா? சொந்த நலனுக்காக நாட்டை விடவேண்டும் என்றால் நாடு நலம் பெறுவது எப்படி?
ஆண் மட்டும்தான் பிடிக்காத பெண்ணை விலக்கி வைக்க வேண்டுமா, பிடிக்காவிட்டால் பெண்ணும் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று பெண்ணுக்குத் திருமண முறிவில் முதலிடம் வைக்க முயலுகிறீர்களே – ஒரு பெண், ஒருவர் பின் ஒருவராக, ஒன்றுக்கு மேற்பட்ட கணவருடன் வாழலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறீர்களே, ஐவரோடு வாழ்ந்தாலும் அவர்களுக்கு மட்டுமே என் மனதில் இடம் கொடுத்திருந்தேனே, யாரையும் தூக்கி எரியவில்லையே, அதை என் போற்ற மாட்டேன் என்கிறீர்கள்?
ஏன் என் விஷயத்தில் மட்டும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அளவுகோலைக்கூடத் தூக்கி எரிந்து விடுகிறீர்கள்?
ஆண் ஆதிக்கத்தையே, அவர்களின் அதிகாரத்தையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே புரட்டிப்போட்ட புதுமைப் பெண்ணாக உங்கள் கண்களுக்கு நான் தெரியாமல் போனது ஏனோ?
மகாபாரதத்தையே மாற்றி எழுதும் முயற்சியில் — என் கணவன் குடாகேசி(அருச்சுனன்)யிடம் நான்கு முறை தோற்று ஓடியவனும், போர்க்களத்தை விட்டுப் பதினான்கு முறை ஓடியவனுமான கர்ணனை உயர்த்தியும், என்னவர் அருச்சுனனைத் தாழ்த்தியும் பேசுகிறீர்களே, பலவாறு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளும் காட்டுகிறீர்களே, இதுதான் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் கோடாமல் இருக்க வேண்டிய சான்றோர்களான உங்களுக்கு அணியா(கலனா)?
எவருக்கும் தன் பக்கத்து வாதத்தை எடுத்துச் சொல்ல அனுமதி உண்டு. என்னைப் பொருத்தமட்டில் என் வாதத்தையே காதுறாமல், நீங்கள் நடுவராகவும், நீதியாளராகவும் ஆகிவிடுவது ஏனோ?
என் தரப்பு வாதத்தைத்தான் கேளுங்களேன்.! என் புலம்பலைச் சற்றுதான் செவிமடுங்களேன்…
…எந்தையும் தாயும் கூடிக் குலவி, மகிழ்ந்து இருந்து பிறந்த பிறப்பல்ல என் பிறப்பு. தான் அவமதித்தனால் தன்னை அவமதித்த துரோணாச்சாரியாரை வஞ்சம் தீர்க்க – தன்னைத் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்த அருச்சுனனுக்கே தன் மகளை மனைவியாக்கி, அவனின் உதவியுடன், தன் மகனால் மரணம் வரவேண்டும் என்று – கடும் தவமிருந்து, எரியும் நெருப்பில் பிறந்த பிறப்பு என் பிறப்பு!
வஞ்சம் தீர்க்கும் வனிதையாகத்தானே இப்பூவுலகுக்கு நான் வரவழைக்கப்பட்டேன்! வளர்க்கப்பட்டேன்! ஆசைக்கொரு பெண் வேண்டும், அவளது அழகைக் கண்டு உள்ளம் பூரிக்கவேண்டும், அவள் பூங்கொடியாக வளர்ந்து பூப்பெய்துவதைக் கொண்டாட வேண்டும், அவளைப் பொன்னாலும், மணியாலும் அலங்கரித்து, மனதுக்கேற்ற மணாளனுக்கு மனமுடிக்கவேண்டும் என்று என்னை என் தாய் ஈன்றெடுக்கவில்லையே! தீக் கடவுளல்லவா பாஞ்சாலப் பேரரசனின் (துருபத மன்னனின்) தவத்தை மெச்சி என்னைப் பரிசாக அளித்தான்! இதில் பாசமேது? அன்பேது? என் தந்தை தன் பழியைத் தீர்க்க தீக் கடவுளிடமிருந்து பெற்ற கருவியல்லவா நான்!
“அருச்சுனனே உன் மணாளன் ஆவான், அவனுக்காவே பிறந்தவள் நீ!” என்று சொல்லிச் சொல்லி வளர்த்து விட்டு, சிவனாரின் வில்லெடுத்து, நாண்பூட்டி, கீழே இருக்கும் நீரில் தெரியும் எதிரொளியில், மேலே சுழலும் ஒரு மீன் பொறியின் (மச்ச யந்திரம்) கண்ணில் அம்பெய்ய வேண்டும், அதில் வெல்பவருக்கே என் மகளைக் கொடுப்பேன் என்று அறிவித்தாரே என் தந்தை, அது எனக்கு அவர் நல்கிய பெண்ணுரிமையா? இதில் தன்வரிப்பு (சுயம்வரம்) என்ற தம்பட்டம் வேறு!
என்னடா இது, ஒருவனைச் சொல்லி இவள் மனதில் காதலை வளர்த்து விட்டோமே, இப்பொழுது கதையை மாற்றுகிறோமே என்று என்று நினைத்தாரா என் தந்தை? இல்லையே!
“அருச்சுனனைத் தவிர, வேறு யாராலும் மீன் பொறியை அடிக்க இயலாது. எனவே, நீ கவலை கொள்ளவேண்டாம், என் கண்ணே!” என்று என்னிடம் பகர்ந்தார். அந்தப் பாவி கர்ணன் அங்கு வருவான், தன் நண்பனுக்காக என்னை வெல்ல முயல்வான் என்று யார் எதிர்பார்த்தார்கள்?
“தேரோட்டியின் மகனான உன்னை நான் மணக்க மாட்டேன்! நீ இந்தப் போட்டியில் கலந்து கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று என் உரிமையைத்தானே நான் நிலைநாட்ட முயன்றேன்! வேறெப்படி நான் அவனைத் தடுக்க இயலும்? இதைக் காட்டி நான் சாதி வெறிபிடித்தவள் என்று என்னைத் தூற்றுகிறீர்களே, ஏன் நான் என் பெண்ணுரிமையை நிலைநாட்டிக் கொள்கிறேன் என்று யாரும் எண்ணிப்பார்க்க மறுக்கிறீர்கள்?
கடைசியில் நான் மணக்க விரும்பிய அருச்சுனனே, அந்தணன் ஒருவன் வேடத்தில் வந்து என்னை வெற்றி கொண்டான். வெள்ளாடை உடுத்தி இருந்த நானும் அவன் கழுத்தில் மாலையிட்டேன். அதை எதிர்த்த அத்தனை மன்னர்களையும் – துரியன் (துர்யோதனன்), கர்ணன் உள்பட அத்தனை மன்னர்களையும் – அந்தண வேடதாரிகளான அருச்சுனனும், பீமனும் புறங்கண்டனர்.
“அந்தணா! உன் வீரத்திற்கு நான் தலை சாய்க்கிறேன்!” என்று கர்ணன் – கவச-குண்டலங்களை இன்னும் இழக்காத அக் கர்ணன் – அருச்சுனனை வணங்கி நீங்கினான். இத்தனை மாமன்னர்களை மண்ணில் வீழ்த்திய மாவீரன் அந்தணனாய் இருந்தால் என்ன, குறையில்லை என்று மனமகிழ்ச்சியுடன்தான் அவனைப் பின்தொடர்ந்தேன்.
அவன், “அன்னையே, பிச்சை பெற்று வந்திருக்கிறோம்!” என்று பூடகமாகப் பேசியது என் தலையெழுத்தையே மாற்றிப் போட்டது.
“பகிர்த்து கொள்ளுங்கள், பாலகர்களே!” என்று, என்னைப் பார்க்காமலையே பதிலளித்தாள் என் மாமியார் குந்தி – பாரை வென்ற பாண்டுவின் பெண்ணரசி.
பகீரென்றது என் நெஞ்சம். ஒரு உறையில் ஐந்து வாள்களா, இது என்ன நீதி என்று துடித்தேன். தவறை உணர்ந்த தாயும், அறநெறியின் மறுவடிவமான மூத்தவன் யுதிட்டிரனின் கருத்தைக் கேட்டாள்.
தாயின் வாக்கைப் பொய் ஆக்குவதா என்று தவித்த இருதலைக் கொள்ளி எறும்பான அவர், “தவறாகப் பேசிய சொற்கள்தானே! அருச்சுனனே வென்றான், இக்கன்னியை! அவனே மணக்கட்டும்!” என்றார்
அதைக்கேட்ட நான் கொண்ட என் மன நிம்மதி, மறுகணமே கலைந்தது.
“தாய் சொல்லைத் தட்டலாமா? பாவம் வந்து சேராதா?”. என்று அண்ணனின் மனத்தைக் குழப்பி, அவர் சம்மதத்தையும் பெற்றான் அருச்சுனன். பாவம் வந்து சேர்த்தாலும் சேரட்டும், நெறிமுறைகளை மீறவேண்டாம் என்று இயம்பிய தருமரும் தலை அசைக்க நேர்ந்தது.
தாயா, தாரமா என்னும் கேள்விக்கு அக்காலத்தில் தாய் சொல்லைத் தட்டாதேஎன்னும் பதில்தான் தலை சிறந்ததாக இருந்தது.!
துடித்தேன் நான்! அதைக்கேட்ட என் தந்தையும் துடித்தார்.
“வேதங்களும், மரபுகளும் ஆதரிக்காத ஒன்றைச் செய்து நரகப் படுகுழியில் நான் விழமாட்டேன். பாண்டவர்களே! உங்களில் யார் ஒருவர் வேண்டுமானும் என் மகளை மணந்து கொள்ளுங்கள்! ஒருவனுக்கு ஐந்து கன்னிகள் மணவாழ்க்கைப் படலாம். ஆயினும், ஒரு கன்னியை ஐவர் மணப்பதா?” என்று பொங்கி எழுந்து, “கன்னியின் அண்ணனும், கன்னியின் மாமியும் இதை முடிவு செய்யட்டும்!” என்று தனது பொறுப்பிலிருந்து நழுவினார்.
அப்பொழுதும் என் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை.
அப்பொழுது அங்கு வந்து சேர்ந்த வியாச மாமுனிவரிடம் — வேதங்களைத் தொகுத்து இவ்வுலகுக்கு வழங்கிய அந்த உத்தமரிடம் – அந்தணருக்கும், மீனவப் பெண்ணுக்கும் பிறந்த பேரறிவாளரிடம் – பாண்டுவின் தந்தையிடம் – அருச்சுனனின் பாட்டனிடம் — இந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டான் என் அண்ணன்.
“மாமுனிவரே! நீங்களே சொல்லுங்கள்! அண்ணனின் மனைவி அன்னையாவாள்! தம்பியின் மனைவி தனது மகளுக்கு இணையாவாள். அப்படியிருக்க, அண்ணன் தம்பிகளான ஐவருக்கு ஒரு கன்னியைப் பகிர்வது பாவம் ஆகாதா? நெறிமுறைகளுக்கு உகந்ததா? வேதங்களைத் தொகுத்தவரே! நீரே இதற்கு விடை அறிவீர்!” என்று அவரிடம் அறிவுரை வேண்டினான்.
முக்காலமும் உணர்ந்த அம்முனிவர் முன்னர் நடந்தவற்றை மொழிந்தார்.
“இக்கன்னி பாஞ்சாலி, முன்பிறப்பில் கணவனை வேண்டி, இறைவன் சிவபெருமான் நோக்கித் தவமியற்றினாள். ஐந்து குணங்கள் நிரம்பிய ஒரு கணவன் வேண்டும் என்று இறைஞ்சாமல், அறநெறி அறிந்த கணவன் வேண்டும், காற்றைப் போலப் வலிமை மிக்க கணவன் வேண்டும், இந்திரனைப் போன்று வீரமிக்க கணவன் வேண்டும், அழகுமிக்க கணவன் வேண்டும், சாத்திரம் பயின்ற கணவன் வேண்டும் என்று தனித் தனியாக வேண்டினாள்.
draupadi-with-pandavas“வேண்டுவோருக்கு விரும்புவதை வரமாக அளிக்கும் முக்கண்ணனும், ‘பெண்ணே, நீ வேண்டியபடி ஐந்து கணவர்களை அளித்தேன்!’ என்று அருளினான்.
“இறைவா! இது என்ன சோதனை? நான் ஒரு கணவனை வேண்டினால், ஐந்து கொழுநன்களை அளிக்கிறீர்களே! இவ்வுலகு என்னைக் கற்பிழந்த காரிகை என்று தூற்றாதா?’ என்று கதறி அழுதாள்.
“இறைவனும், ‘பெண்ணே! உன்னுள் ஐந்து பூதங்களையும் அடக்கி ஆளும் தெய்வப் பெண்கள் உட்புகுந்து ஒன்றாகச் சங்கமிப்பர்! உனது பிறப்பும் பூவுலக மாதர் மூலம் நிகழாது, நெருப்பின் மூலமாகவே நிகழும். ஐந்து தேவர்களின் அம்சமான மனிதர்களை நீ மணப்பாய்! பொன்னையே பரிசுத்தமாக்கும் தீயில் நீ பிறப்பதனால், மாசற்றவளாக விளங்குவாய்! உலகப் பெண்களுக்கு விதிக்கப்படும் நியதி உன்னைக் கட்டுப் படுத்தாது!’ என்று வரமளித்து அருளினான்.
“எனவே, அனைத்துக்கும் விதிவிலக்கு இருப்பதுபோல, இதுவும் ஒரு விதி விலக்கேயாகும்! வருந்தற்க! நியதிக்கு அப்பாற்பட்ட இத் திருமணம் நடக்கட்டும். ஒருவரின் மனைவியாக அவள் விளங்கும்போது, உலக நெறிகளை மற்றவர் பின்பற்றவேண்டும். ஒருவரை நீங்கி மற்றவரிடம் அவள் புகும்போது மீண்டும் கன்னித் தன்மையை அடைவாள்!” என்று அறிவுரை நல்கினார்.
இறைவனே விதித்தபடி நடக்கட்டும் என்றுதான் விட்டுவிட்டேன். ஐவருக்கும் மனைவியானேன். ஆனால் நான் செய்தது புதுமை அல்ல. எனக்குமுன் இப்படி பல கணவன் மணம் நடந்திருக்கிறது என்றும் உரைக்கப்பட்டது. இறைவனே வேதங்களைப் படைக்கிறான் என்று அனைத்து சமயங்களும் பகருகின்றன. வேதமுதல்வனே விதித்தது எப்படி முறை அற்றது ஆகும்?
இது மட்டும்தானா நான் அனுபவித்த இக்கட்டான நிலை? எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத இழிவல்லவா எனக்கு வந்து சேர்ந்தது!
வஞ்சக சகுனியிடம் – சூதாட்டத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் – செல்வம், வேலையாட்கள், அரசு, உடன்பிறப்புகள் மட்டுமன்றித் தன்னையும் இழந்த என் முதற்கணவர் யுதிட்டிரர், என்னையும் பணயம் வைத்து இழந்தார் – தன்னை இழந்தபின்னர் தாரத்தை பணயம் வைக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை அந்த நீதிமான் அறியாது போனது ஏனோ?
இப்படிப்பட்ட ஒரு நிகழ்சிக்குத்தானே காத்திருந்தான் துரியன்!
“எமக்கு அடிமையான பாஞ்சாலியை இங்கு வரும்படி ஆணையிட்டதாகச் சொல்லி, இங்கு வரச்சொல்லு!” என்று தனது தேரோட்டியை அனுப்பினான் அந்தச் சண்டாளன்.
மாதவிடாய்க் காலம் ஆனதால், ஒற்றை ஆடை உடுத்தி, நெகிழ்வான நிலையில் இருக்கிறாள் பாஞ்சாலி. இந்நிலையில் இருக்கும் அவளை பலர் வீற்றிருக்கும் இக்கொலு மனடபத்திற்குக் கொணர்வது முறையில்லை!” என்று என்னவர் எடுத்துச் சொன்னதும் எக்காளமிட்ட அவன் செவிகளில் ஏறவில்லை.
எனக்குச் சேதி வந்ததும், “குரு வம்சத்து அரசியை ஆணையிடத் துரியனுக்கு உரிமை இல்லை!” என்று மறுமொழி அனுப்பினேன்.
“உன்னைப் பணயம் வைத்துத் தோற்றுவிட்டார் உன் கணவர். எனவே, உன்மீது உரிமை எனக்கு இருக்கிறது!” என்று சொல்லி அனுப்பினான்.
“தான் தோற்றபிறகு, என்னைப் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை!” என்ட்று மறுத்தேன் நான்.
“இப்படிச் சொன்னால் அவள் வரமாட்டாள். அவளைப் பற்றி இழுத்து வா!” என்று தம்பி துச்சாதனனை அனுப்பினான் துரியன்.
அவன் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற என் நீண்ட கருநீலக் கூந்தலைப் பற்றி, என்னைத் தரையில் புரட்டி இழுத்துக்கொண்டல்லவா வந்தான் அந்தப் பாவி துச்சாதனன். அவனது தீச்செயலை யார் கண்டித்தார்கள்? இந்த முறையற்ற செயலைக் கண்டித்து எழுத ஒருவர் கூடவா இல்லது போய்விட்டார்கள், இந்தப் புண்ணிய பூமியில்?!
“மாதவிடாய் காலத்தில் இருக்கும் என்னை இந்த குரு வீரர்கள் முன்னிலையில் இழுத்து வருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே! சீ… உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா? உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா? அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் ஆசான்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!! “[1] என்று அழுதேன், அரற்றினேன்.
அந்த அத்தினாபுரத்து அரசவையில் யாரும் என் பக்கம் பேசவில்லையே, வாய் மூடி அமைதிதானே காத்தார்கள்!
“ஓ, துரோணரும், பீஷ்மரும், விதுரரும், இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியை இழந்துவிட்டனரே. அல்லது, குரு வம்சத்தவர்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாக பார்க்கின்றனர்?”[2] என்று கதறினேனே, யாராவது எனக்காகத் தமது சுண்டுவிரலைக்கூட அசைத்தார்களா?
“நீங்கள் தோற்றபின் என்னை வைத்துச் சூதாட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடிமைக்கு மனைவி, மக்கள் என்ற உறவேது?” என்று இடித்துரைத்தும், இடித்த புளியாகத்தானே சமைத்திருந்தார் தருமபுத்திரர்! கடைசிவரை ஒரு சொல் கூட அவர் வாயிலிருந்து உதிரவில்லையே![3]
நீங்களும் அந்த அவையினரைப்போலத்தானே அமைதி காக்கிறீர்கள்! கேட்டால், நான் துரியன் தடுக்கி விழுந்ததைப் பார்த்துச் சிரித்தேன், கர்ணனை அவையோர் முன்னர் அவமானப் படுத்தினேன் என்று எனக்கு எதிராகவே வழக்காடுகிறீர்கள்!
தடுக்கி விழுந்தால் தாயும் நகைப்பல் என்ற பழ்மொழிப்படித்தானே நான் நண்டந்து கொண்டேன்!
என்னைத் “தாசியே!” என்று ஏசினானே துச்சாதனன், அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து, சத்தமாகச் சிரித்தானே, அவனைக் கடிந்து நீங்கள் ஏன் ஒரு சொல்கூட சொல்லத் தயங்குகிறீர்கள்?
ஒரு பெண்ணை எப்படியெல்லாம் அவமானப் படுத்த முடியுமோ, அப்படி அவமானப் படுத்துவதுதான், நான் என் தன்னுரிமையை நிலைநாட்டிக் கொண்டதற்கும், தடுக்கி விழுந்தவனைக் கண்டு சிரித்ததற்கும் கொடுக்கப்படும் தண்டனையா? இதை எப்படி உங்களால், பெண்மையைப் போற்றிப் பேசும் உங்களால் நியாயப்படுத்த முடிகிறது?
அச்சபையில் எனக்குப் பரிந்து பேசிய இருவர்கள் என் கணவர்களில் ஒருவரான பீமனும், துரியனின் இளையோனான. சத்திரிய மனைவி அல்லது வேறோருத்திக்கும், திருதராட்டிரனுக்கும் பிறந்த விகர்ணனும்தானே!
“சகாதேவா, நன்நெறியற்ற இச் செயலைச் செய்த அண்ணனின் கரத்தை எரிக்கிறேன்!” என்றல்லவா பீமன் பொங்கி எழுந்தார்! உங்களால் போற்றப்படும் மகாகவி பாரதியும், என் பீமனின் சொற்களைக் கவிதை மழையாய்ப் பாஞ்சாலி சபதத்தில் பொழிந்ததும் தாங்கள் அறிந்ததுதானே!
‘சூதர் மனைகளிலே — அண்ண!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே — அங்கோர்
தொண்டச்சி போவதில்லை. 69
‘ஏது கருதிவைத்தாய்? — அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை — அன்பே
வாய்ந்த வடிவழகை. 70
‘அவன் சுடர்மகளை, — அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; — அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய். 72
‘துருபதன் மகளைத் — திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, —
இருபகடை யென்றாய், — ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்! 76
‘இதுபொறுப்ப தில்லை, — தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் — அண்ணன்
கையை எரித்திடுவோம்.’ 77
அதுமட்டுமா? துரியனின் இளையோன் விகர்ணன்தான் எப்படி எனக்காக வாதாடினான்!
“மன்னர்களே, பாஞ்சாலி கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். நாம் நீதியைப் பகராமல் இருப்போமானால், நாம் நரகத்திற்கே செல்வோம்.. பிதாமகரான பீஷ்மரும், தந்தையும், அரசருமான திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்றும் சொல்லாமல் இருப்பது எவ்வாறு?
“எங்களுக்கெல்லாம் குருவான, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான துரோணரும்,கிருபரும் ஏன் இங்கு பதிலளிக்கவில்லை? இந்தப் பந்தயத்தில் விருப்பம் கொண்ட சகுனியே, யுதிட்டிரனைத் தன் மனைவி பாஞ்சாலியைப் பந்தயமாக வைக்கத் தூண்டினான். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பாஞ்சாலி வெல்லப்படவில்லை என்று துணிகிறேன்.”[4] என்று எடுத்துரைத்தானே விகர்ணன்!
அப்படி விகர்ணன் எடுத்துச் சொல்லியும் – தன்னை இழந்தபின், என்னை வைத்துச் சூதாடும் உரிமையை என்னவர் யுதிட்டிரர் இழந்துவிட்டார் என்று நன்னெறியை எடுத்துச் சொல்லிய போதும் — உங்களால் அறநெறித் தேவனின் மறு அவதாரம் எனப் புகழப்படும் கர்ணன் என்ன சொன்னான் என்பது, பெருந்தகையாளர்களான நீங்கள் அறியாததா!
“பாஞ்சாலி ஒற்றையாடையுடன் இங்கு கொண்டு வரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையாக நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் மறுமொழியைக் கேள், விகர்ணா! ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே விண்ணவர்கள் வழங்கி இருக்கின்றனர் இருந்தபோதிலும், ,இந்தப் பாஞ்சாலி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், ், இவள் கற்பற்ற பெண் என்பது உறுதி. ஆகையால், இவளை இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ அல்லது அவளது ஆடைகளைக் களைவதோ வியப்படைய வேண்டிய செயல் அல்ல.“ என்றல்லவா இழிந்துரைத்தான்! அவன் கூறிய சொற்களைக்கொண்டு என் கற்பறத்தைக் கூறுபோட முயல்வோர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
பொன்னைப் புடம் போட்டுப் புனிதமாக்குவது நெருப்பில்தான்! தன் கற்பை இவ்வுலகுக்கு நிரூபிக்க, கற்புக்கரசியாம் சீதை புகுந்து மீண்டதும் நெருப்பிலிருந்துதான்!
அந்த நெருப்பில் பிறந்தவள் நான்! நான் நெருப்பானவள்! என்னிடம் மாசு இருந்தால் நான் நெருப்பிலிருந்து தோன்றி இருக்க முடியுமா? எந்த மாசையும் எரிப்பது தீ! அத்தீயின் வடிவானவள் நான்! என்னிடம் மாசு இருக்கமுடியுமா? கர்ணனின் கூற்றை — கதிரவனின் மைந்தனின் கூற்று என்று நீங்கள் மதிக்கும்போது, கதிரவனே ஒரு பகுதியான அந்த அக்கினிப் பிழம்பிலிருந்து தோன்றிய என் கூற்றை ஏற்க மறுப்பதும் ஏனோ?
அந்த வஞ்சகக் கர்ணன் என்னைப் பழி தீர்க்க அவ்வாறு கூறாதிருந்தால், என் துகில் அவையோர் முன் உறியப் பட்டிருக்காது, நான் சூளுரைத்திருக்க மாட்டேன். துரியனின் தொடை பிளக்கப்பட்டு, அவன் மரித்திருக்க மாட்டான். கர்ணன் அருச்சுனால் கொல்லப்பட்டிருக்க மாட்டான்.
பாரதப் போரே நிகழ்ந்திருக்காது!
ஒரு பெண்ணின் — மாதவிடாய்க்காலத்தில் குருதி ஒழுகும் நிலையில் உள்ள ஒரு பெண்ணின் — ஆடையைக் களைந்து, அவளது அவலநிலையை மாபெரும் சபையினர் கண்டு எள்ளாட வேண்டும் என்று கொக்கரித்த கர்ணனை — தாயென நினைக்கவேண்டிய பெண்ணினத்தையே இழிவுக்கு உள்ளாகச் செய்த அந்தப் பண்பற்றவனை –- பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்கள் பெருமை பேசுவது எங்ஙனம்?
என்மீது நீங்கள் மதிப்பு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். ஒரு பெண்ணை, அவள் எப்படிப்பட்டவளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் – அவளைப் பலவந்தப்படுத்தி, அவள் துகிலை உரைக்கச் சொன்னாலும், அப்படி உரிந்தாலும் — உங்கள் காலத்தில் அப்படி யார் செய்தாலும், செய்யத் தூண்டினாலும், அவர்களுக்குக் கொடிய தண்டனை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கொடி பிடிப்பீர்களா, அல்லது அந்தக் கயவர்களுக்கு நீங்கள் ஆலவட்டம் தூக்குவீர்களா — சொல்லுங்கள்!
தீநெறியின் முன்பு செய்வதறியாது திகைத்து அனைவரும் நின்றபோது, என் துகிலை தீயவன் துச்சாதனன் உறிய முற்பட்டபோது, என் மானத்தைக் காத்து அருளிய கண்ணன் போன்று உங்களில் ஒருவராவது இருக்கத்தானே செய்வீர்கள்!
தனது இழிசெயல் நிறைவேறாது நின்றபோது, துச்சாதனன் களைத்து வீழ்ந்தபோது பேச்சற்று நின்டற அவையோரைப் பார்த்து விதுரன் சொன்னதையே நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
“அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒரு சபையில் கலந்து கொண்டு, ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பது என்பது பாதி பொய்க்கு சமமாகும். மறுபுறம் அறநெறிகளின் விதிகளை அறிந்த ஒருவர் ஒன்றுகூடி, பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாக பொய் சொன்ன பாவம் அவரைச் சாரும்.”
எக்காலத்திற்கும் ஒரே நெறி, ஒரே நியாயம், ஒரே அளவுகோல் என்று சொல்லும் நீதிமான்களே, சொல்லுங்கள்! இக்கால நெறிமுறையைக் கொண்டு என்னை நீங்கள் போற்றவேண்டாம், குறைந்த பட்சம், என்னைக் கொடுமைப் படுத்திய – பெண்ணடிமை செய்த பேடிகளுக்கு — உங்கள் காலப்படி என்ன தண்டனை வழங்குவீர்களோ, எப்படி ஈனர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவீர்களோ, அப்படி நடத்தாவிட்டாலும் போகிறது…
…இதுவரை பொறுமையாக என் புலம்பலைக் கேட்டதற்கு நன்றி!
பாஞ்சாலி ஒரு பாவப்பட்டவள் என்று எனக்காக ஒரு துளி கண்ணீர் கூட சிந்தமாட்டீர்களா?
மூதாட்டியின் வீட்டில் மூன்று கத்திகள்
*********************************************************
அர்ச்சுனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது.
“இதோ, இப்போதுகூட தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னைவிடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யாராக இருக்கமுடியும்?”
“அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?'' என்று கண்ணன் கேட்டான்.
“என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்துவிடுகிறானே கண்ணன்!” அர்ச்சுனன் திடுக்கிட்டான்.
“நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் சிந்தனைகளைக் கண்டுகொள்வது சிரமமா?'' என்று கண்ணன் நகைத்தான்.
அர்ச்சுனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கண்ணன் முடிவு செய்தான்.
“அர்ச்சுனா! நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!'' என்று கண்ணன் அழைத்தான்.
“இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு!” என்றான்.
சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கண்ணனும் அர்ச்சுனனும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டுச் சென்றனர்.
பிங்கலையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள்.
“தாயே! நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா?'' என்று கேட்டான் கண்ணன்.
“உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம்!'' என்றாள் பிங்கலை .
பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும், சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும், பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. “தாயே! கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே? கத்திகள் யாருடையவை?'' என்று கண்ணன் கேட்டான்.
“என்னுடையவைதான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகளான மூவரைக் கொல்ல வேண்டும். அதன் பொருட்டுத்தான் இந்தப் பூஜை!''
“யார் அந்த விரோதிகள் தாயே?''
“குசேலன், பாஞ்சாலி, அர்ச்சுனன் மூவரும்தான். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. பாஞ்சாலிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ச்சுனனைக் கொல்லத்தான் இந்தப் பெரிய கத்தி!''. அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“அப்படி இந்த மூவரும் கண்ணனுக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே?''
“குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கண்ணனுக்குக் கொடுக்கலாமா? என் கண்ணன் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கண்ணனின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா? இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுப்பதாவது?''
“பாஞ்சாலி பாவம் பெண். அவள் எப்படி உங்கள் விரோதியானாள்?''
“கிருஷ்ணனிடம் புடவைகளைப் பெற்றாளே? துவாரகையில் இருக்கும் கண்ணன் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அவளுக்கு வாரி வாரிப் புடவைகளை அருளினானே? புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான் இல்லையா? புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால், புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கண்ணனுக்கு கை எவ்வளவு வலித்திருக்கும்? கண்ணனின் கைகளை வலிக்கச் செய்த பாஞ்சாலியைச் சும்மா விடுவேனா நான்?''
“அர்ச்சுனன் கண்ணனின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே? அவன் மேல் ஏன் விரோதம்?''
“அர்ச்சுனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா? குதிரைகளின் லகானை இழுத்து இழுத்துக் கண்ணன் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும்? தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாமான்யமா? ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம்? என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ச்சுனன். அன்று பார்த்துக் கொள்கிறேன் அவனை!''
அர்ச்சுனன் முந்தானையால் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தான் கண்ணன்.
“தாயே! குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கண்ணனாகத்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன்''
பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள்.
அடுத்து கண்ணன் தொடர்ந்தான்.
பாஞ்சாலியை மன்னித்த பாட்டி
“பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்ததில் கண்ணன் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா? அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றனவே? எனவே சுயநலமேயானாலும், மானம் காக்க வேண்டியதால் பாஞ்சாலியையும் மன்னித்து விடுங்களேன்!'' என்றார்.
பிங்கலை இரண்டாவது கத்தியையும் கீழே வீசிவிட்டாள்.
“போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கண்ணனைத் தேரோட்டச் செய்த அர்ச்சுனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும்!'' என்றாள்.
“சுயநலம் பிடித்த அர்ச்சுனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்,'' என்றான் கண்ணன். அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னான், “அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா?”
“நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ, மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கண்ணன், உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால், அதுபோதும் எனக்கு. கண்ணனுக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன்.” என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள்.
பெண் வேடத்திலிருந்த அர்ச்சுனன், மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.
ஸ்வாமி நைவேத்யம் எதற்கு ………… !!
இவ்வளோ நாளா பூஜ செய்யறியே, ஒரு நாளாவது ஒரு பருக்கையாவது உங்க சாமி சாப்பிட்டாரா என்று கிண்டல் செய்பவர்களே …..
நைவேத்யம் என்பது கடவுளிடம் அறிவிப்பது … / காட்டுவது.
தேவதைகளுக்கு நம் போல் உண்ணத் தேவையில்லை.
பார்த்த மாத்திரத்திலேயே திருப்தி அடைகிறார்கள்.
மேலும் அந்த உணவில் இருக்கக்கூடிய தோஷங்களை அகற்றுகிறார்கள்.
இதற்காகவே ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது.
தோஷங்கள் நீக்கப்பட்ட உணவே ஆரோக்யமான உணவு !!
இன்னும் விரிவாக காண்போம்……..
குருகுல வாசத்தில் குருவிடம் ‘ நாம் நிவேதிக்கும் பதார்த்தங்கள் ….
பகவான் ஏற்றுக் கொள்கிறானா..?
ஏற்றுக் கொண்டிருந்தால் அளவு சிறிதும் குறையாது அப்படியே இருக்கிறதே.?
இது எப்படி என கேட்கிறான்..? சீடன்
குரு சிறிது புன்னகைத்து விட்டு மெளனமாகிறார்…
சீடனுக்கு குருவையே மடக்கி விட்டோமென சந்தோஷம்…..!
மாலை வகுப்பு தொடங்குகிறது.
எல்லோரும் சந்தையாய் ஒலிக்கிறார்கள்.
குரு சந்தேகம் கேட்ட சீடனை தனியே சொல்ல சொல்கிறார்.
அவனும் தெளிவாய் சொல்கிறான். மீண்டும், மீண்டும் அவனை சொல்ல சொல்ல அவனும் தவறின்றி தெளிவாய் கூறுகிறான்.
இது எதிலிருந்த பாடம் என்கிறார் குரு…
இந்த சுவடியிலிருந்து இந்த பாடம் என கூறுகிறான்…
நீ இத்தனை முறை தெளிவாய் இதிலிருந்ததை எடுத்து ஒப்பு வித்திருக்கிறாய் ஆனால் அதிலுள்ள எழுத்துக்கள் அப்படியே தானே இருக்கிறது என்றார்….
சீடன் வெட்கி தலை குனிந்து குருவின் பாதம் பணிகிறான்…
இதிலுள்ள எழுத்தின் ஸ்வரத்தை நாம் எடுத்து கொள்வதை போல்,பகவானுக்கு ஸமர்பிக்கும் பதார்தத்தில் ஆவியை அவன் புசித்து அமுதத்தை அப்படியே நமக்கு திருப்பி தருகிறார் என விளக்கினார் குரு….
ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.
அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான்.
அப்பொழுது கோமாதா சொன்னது. நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது.
எந்த தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.
பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன்.
ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள்.
அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள்.
அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள்.
ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது.
அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான்.
என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய்.
உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன்.
ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.
எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்?
உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.
தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர்.
இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலப் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு,தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார்.
இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு.
1.வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப் பட்டது.
2.சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப் பட்டது.
3.நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
4.குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.
5.ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடுக்கும் பட்சத்தில் அந்த்க் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
6.ஒருவன் மிகப் பெரிய அவமானத்தை பெற்றபின் அதற்க்கு மேல் வாழ விரும்பாமல் சாக விரும்புகிறான். ஆனால் கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச் சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
இப்பொழுது முக்கியமானவர்களுக்கு பூனைப்படை பாதுகாப்பு மாதிரி முன்பு சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" மற்றும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற இருவிதமான படைகள் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.

Saturday 22 October 2016

தமிழ் எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு, எனும் பன்னிரு பகுதிகளையும் விளக்கிக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்.

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
உயிரெழுத்துகள் 12 அவை:

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ


உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.


குறில்
குறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ

நெடில்
நெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
மெய்யெழுத்துகள் 18 அவை:

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்


மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:

வல்லினம் : க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
  1. எழுத்து இலக்கணம்
    1. முதலெழுத்துகள்
      1. உயிரெழுத்துகள்
      2. மெய்யெழுத்துகள்
    2. சார்பெழுத்துகள்
      1. உயிர்மெய் எழுத்து
      2. ஆய்த எழுத்து
      3. உயிரளபெடை
      4. ஒற்றளபெடை
      5. குற்றியலுகரம்
        1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
        2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
        3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
        4. வன் தொடர்க் குற்றியலுகரம்
        5. மென் தொடர்க் குற்றியலுகரம்
        6. இடைத் தொடர்க் குற்றியலுகரம்
      6. குற்றியலிகரம்
      7. ஐகாரக் குறுக்கம்
      8. ஔகாரக் குறுக்கம்
      9. மகரக்குறுக்கம்
      10. ஆய்தக்குறுக்கம்

மாலை மாற்றுச் சொல், மாலை மாற்றுச் செய்யுள்

Palindrome என்றால் முன்னாலிருந்து பின்னுக்கும் பின்னாலிருந்து
முன்னுக்குமாக வாசித்தாலும் ஒரே மாதிரியான எழுத்துக்கள் - அதாவது ஒரே சொல்- பிறழாமல் வரும் அமைப்பு.இதனை தமிழில் " மாலை மாற்று" என்று
குறிப்பிடுவர்.சித்திரக்கவி வகையில் மாலை மாற்று எனப்படும் பாலிண்ட்ரோம் (Palindrome) அடங்கும்.

இதன் இலக்கணம் –
“ஒரு செய்யுள் முதல்,
ஈறு உரைக்கினும்,
அஃதாய் வருவதை
மாலை மாற்றென மொழி”
பொருள் –
ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்குவர வேண்டும்.
நமது தமிழ் மொழியில் உள்ள சில மாலை மாற்று செய்யுள்கள்.

நாள்உ லைகொதி அசீரண உலாதுதி
நீள்க தைசரி கவருது - வாழ்வா
துருவ கரிசதைகள் நீதி துலா உ
ணரசீ அதிகொலைஉள் நா.  

"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"

"நேணவராவிழ யாசைழியே, வேகதளோயா ளாயுழிகா
காழியுளாயா ளோதகவே, யேழிசையாழவி ராவணனே!"
முதல் "ந"கரம் கடைசியில் "ன"கரமாகியிருக்கிறதே அன்றி மற்றபடிக்கு சரியான பாடல் தான்.

திருஞான சம்மந்தரின் மாலை மாற்று திருப்பதிகம் 
பாடல்கள் மற்றும் அதன் பொருள் 

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாம் = சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவனுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை(அனங்கனாக) செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே!
மா = கரிய(கொடிய)
மாயா = மாயையினின்றும்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!
வாசிப்பு:
எல்லோரும்  வாசிக்கிறோம்.நோக்கங்கள் பல ஆக  இருக்கும்.

  • குழந்தைகள் மொழியை  கற்றுக்கொள்ள
  • மாணவர்கள் மொழியில் தேர்ச்சி  பெற 
  • பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சிக்காக அல்லது மேற் தகுதிகள் வேண்டி 
  • ஆசிரியர்கள்  அறிவை  பெருக்கிக்  கொண்டு  கற்பித்தல்  பணியில்  சிறக்க மற்றும் விடைத்தாள்கள்  திருத்த பொழுது போக்க ...மற்றும் பல காரணங்கள் 
  • பொதுவில்  தினசரி , பல்வேறு பத்திரிகைகள் ,புதினங்கள், பலவகை புத்தககங்கள் / நூல்கள் வாசித்து  அறிவுத்தேடல் / பொழுதுபோக்கு தேவைக்காக 
சிறந்த வாசிப்பு என்பது நம்மை ஈர்ப்பது மற்றும் நம்முடன்  உறவாடுவது நம் வாழ்வின் நிகழ்வினை  நினைவில்  தோற்றுவித்து  தொடர்பு கொள்ளச் செய்து  அகம் மகிழச் செய்வது.
நமக்கு தெரியாத நாம்  முன்னர்  அறியாத  தகவல்கள் தரும்  வாசிப்பு தேடல் தாகம்  கொண்டோருக்கு இது  ஒரு வரம் 
மன அமைதிக்கு  மத நூல்கள் , மந்திரங்கள் , செபங்கள் வாசிப்பது 
சோர்வுற்ற  மனதிற்கு கிளர்ச்சி உண்டாக்கும்  நூல்கள் - காதலும் காமமும் கருப்பொருளாக  கொண்ட  வாசிப்பு இவ்வைகையே 

இவ்வலைத்தளம் மேற்கூறிய  யாவும் தரும்  அட்சய பாத்திரம் 
அமுது விஷம்  அனைத்தும்  கண்டு தேர்ந்து தேவையானதை  வாசியுங்கள்.
வைரம் வைரத்தை அறுக்கும் விஷமே  விஷத்திற்கு முறிவும் மருந்தும். இந்த  தெளிவோடு இவ்வலைத்தளம்  வருக ...!!!!


Friday 21 October 2016

தமிழ் இலக்கியம் 

அருமை  வாசகர்களுக்கு  வணக்கம் வாழ்த்துக்கள் வரவேற்பு 

கண்ணுக்கும்  கருத்துக்கும்  நல்  விருந்தோம்ப விழையும் மனம் கொண்டு இனிதே ஆரம்பம்  தமிழ் இலக்கியம் எனும் இவ்வலைத்தளம்