Monday 20 January 2020

‘‘நான் சொல்வதைக் கேள்’’

பாபாவின் பாதங்களில் உங்கள் அகங்காரத்தை சமர்ப்பித்தால் தவிர, ஒரு வேலையிலே நீங்கள் வெற்றி பெற முடியாது. அகங்காரத்தை ஒழிப்பவர்களுக்கு வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது.
- பாபா மொழி
காசிராம் ஒருநாள் ரொம்ப சந்தோஷத்துடன் மசூதிக்கு வந்தான். கையில் ஒரு மூட்டை இருந்தது.
‘‘காசிராம்...’’
‘‘என்ன பாபா?’’
‘‘ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாய் போலத் தோணுகிறது. என்ன விஷயம்? துணி வியாபாரத்தில் நிறைய லாபமோ?’’
‘‘இல்லை!’’
‘‘பின்..?’’
‘‘நீங்களே கண்டுபிடியுங்கள்...’’
பாபா மூட்டை மேல் பார்வையைச் செலுத்தினார். ஒரு நிமிடம் கழித்து, ‘‘எனக்கு ஏதோ கொண்டு வந்திருப்பதாகத் தோணுகிறது’’ என்றார்.
‘‘ஆமாம்...’’
‘‘காட்டு பார்க்கலாம்!’’
‘‘இல்லை. உங்களுக்கு உலகில் நடப்பது எல்லாம் தெரியும். எனவே, இந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்...’’
‘‘மகல்சாபதி, இந்தக் காசி பெரிய துணி வியாபாரி, தேர்ந்த தையல்காரனும் கூட! அவன் என் நிறத்தை மாற்றப் போகிறான். என்னைப் பச்சை நிறத்துக்கு மாற்ற வந்திருக்கிறான். சரிதானே?’’ - பாபா புன்னகை பூத்த முகத்துடன் கேட்டார்.
காசிராம் ஆச்சரியத்தில் திகைத்துவிட்டான். ‘‘பாபா, நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. நான் உங்களுக்காக துணிமணிகள் கொண்டு வந்திருக்கிறேன். இந்தாருங்கள்...’’
மூட்டையை அவிழ்த்து, பச்சை நிறத்தில் கஃபினி மற்றும் தொப்பியை எடுத்துக் கொடுத்தான்.
எல்லோரும் அதைக் கண்டு அதிசயித்தார்கள்.
‘‘காசி... எனக்கு எதற்கப்பா பச்சை நிறம்? நான் பக்கீர் - பிச்சைக்காரன். எனக்கு எந்தக் குடும்பமும் இல்லை, பாரமும் இல்லை. எனக்கு இந்தக் கிழிசலே போதும். வெள்ளை சுத்தமானது. நிறத்தின் மேல் எனக்கு மோகம் கிடையாது...’’
‘‘அதெல்லாம் முடியாது. நான் உங்களுக்காக இந்த கஃபினியைத் தைத்தேன். நல்ல துணி. உங்களுடைய சிவந்த மேனிக்குப் பச்சை நிறம் பொருத்தமாக இருக்கும், நன்றாக எடுத்துக் காட்டும். வேண்டாம் என்று சொல்லாதீர்கள். எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்!’’
‘‘சரிப்பா... நான் ஜென்மம் எடுத்ததே உங்களுடைய பிடிவாதத்தை நிறைவேற்றத்தான். நாளைக்குத் தொழுகை இருக்கிறது, அப்பொழுது அணிகிறேன்!’’
‘‘இப்பொழுதுதான் மனசுக்கு சமாதானமாயிற்று’’ - காசிராமிடம் திருப்தி.
மறுநாள் பாபா சந்தோஷமாக கஃபினியும் குல்லாவும் அணிந்துகொண்டார். அவருடைய சிவந்த மேனிக்கு உண்மையில் பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருந்தது. சொல்லப்போனால், ஊர் திருஷ்டியே விழும் போல இருந்தது.
எல்லோரும் பெருமிதமாக பாபாவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பாய்ஜாபாய் அவருக்கு உணவு கொண்டு வந்தாள். பாபா புத்தாடைகளை அணிந்து காட்சி தந்ததைப் பார்த்து, ‘‘என்னப்பா... என்ன இது புது வேஷம்?’’ என்று கேட்டாள்.
‘‘தாயே! இது காசிராம் எனக்காகத் தைத்துக் கொடுத்தது. எனக்கு நன்றாக இருக்கிறதா? இல்லை, கழற்றி விடட்டுமா?’’ - ஒரு குழந்தையைப் போல பாபா கேட்டார்.
‘‘வேண்டாம்! வேண்டாம்! நீ சாதாரணமாகவே சிவப்பு. உனக்கு இந்தப் பச்சை நிறம் ரொம்பப் பொருத்தம். பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறாய், என் மகனே’’ - பாய்ஜாபாய் வாய் நிறையப் பாராட்டினாள்.
இதைக் கேட்டு பாபாவின் முகத்தில் வெட்க ரேகைகள் படர்ந்தன. அவரது சிவந்த முகம் இன்னும் சிவப்பில் குளித்தது. ஒரு கணம் யோகித்தனம் மறைந்து, அவருக்குள் இருந்த குழந்தைத்தனம் வெளிப்பட்டது.
பாய்ஜாபாய் நெருங்கி வந்து, பாபாவுக்கு திருஷ்டி கழித்தாள். அன்று நாள் முழுக்க பாராட்டுவதிலேயே கழிந்தது.
ஆனால் மறுநாளிலிருந்து பாபா பழைய உடையே அணியத் தொடங்கினார்.
ஷீரடியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருக்கும் முக்கியமான சந்திப்புகளிலும் கடைத் தெருவிலும் ஆங்காங்கே துணிக்கடை போட்டு உட்காருவான் காசிராம். நாள் முழுக்க வியாபாரம் செய்துவிட்டு, பணத்துடன் ஷீரடிக்குத் திரும்பி விடுவான். அவன் பாபாவின் தீவிர பக்தன் ஆனான். எனவே, பாபாவின் ஹூக்காவிற்காகப் புகையிலையும், நாள் முழுக்க துனி எரிய கட்டைகளும் கொண்டுவருவான்.
அவன் வியாபாரம் செய்தாலும் லட்சியம் எல்லாம் பாபாவுக்கு சேவை செய்வதில் இருந்தது. பாபாவின் மீது அளவற்ற நாட்டம், பக்தி எல்லாம். ஒரு சமயம் அவன் பையிலிருந்து புகையிலையை எடுக்கும்போது ஒரு சிறு மூட்டை வெளியில் விழுந்தது.
‘‘காசி!’’
‘‘என்ன பாபா?’’
‘‘என்ன இருக்கிறது அந்தச் சின்ன மூட்டையில்? திற பார்க்கலாம்...’’
காசிராம் திறந்தான். அதில் சர்க்கரை இருந்தது.
‘‘சர்க்கரை தின்றுகொண்டே பஜாருக்குப் போகிறாயா? நன்றாக இருக்கு உன் வியாபாரம்’’ - பாபா புன்முறுவலுடன் சொன்னார்.
எல்லோரும் இதைக் கேட்டுச் சிரித்தார்கள்.
‘‘அப்படியில்லை பாபா. முன்னொரு சமயம் ஜானகிதாஸ் சர்க்கரை விரதம் அனுஷ்டிக்கும்படி எனக்குச் சொன்னார்...’’
‘‘அதென்ன தித்திப்பான
விரதம்?’’
‘‘எறும்புகளுக்குச் சாப்பிட சர்க்கரை போட்டுக் கொண்டே வா என்று அவர் எனக்கு உபதேசித்தார். அதன்படி, நான் இந்தச் சிறு பையில் சர்க்கரை வைத்துக்கொண்டு, எறும்புகள் எங்கே கண்ணில் பட்டாலும், அங்கங்கே அவற்றுக்கு உணவாகப் போடுகிறேன்.’’
‘‘ரொம்ப சந்தோஷம். நல்ல விரதம்தான். ஆனால், மோகம் பிடித்து இந்தச் சர்க்கரை பின்னால் நீ போகாதே. முடிந்தால் இதை விடத் தயாராகு. இல்லாவிட்டால், இனிப்பான சர்க்கரை, கசப்பான அனுபவத்தைக் கொடுக்க நேரிடலாம்’’ - பாபா எதிர்காலத்தை நினைத்துக் கூறினார்.
அவர் சொன்னதன் உள்ளர்த்தம் காசிராமுக்குப் புரியவில்லை.
‘‘அப்படியானால் என்ன பாபா?’’
‘‘போகப் போகத் தெரியும். புகையிலையை ஹூக்காவில் அடை. அல்லா மாலிக்!’’ என்றார் பாபா.
காசிராமின் பக்தி நாளுக்கு நாள் வளர்ந்தது. அவனுக்கு எப்பொழுதும் சாயியின் காலடியிலேயே இருக்க விருப்பம். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. அதற்கு வழி என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான். கடைசியில் ஒரு விபரீத வழி அவனுக்குப் புலப்பட்டது.
வியாபாரத்தில் வரும் பணத்தையெல்லாம் அவருக்கே அர்ப்பணித்துவிட்டால்?
‘‘பாபா, நான் உங்களுக்கு என்ன கொடுக்கட்டும்?’’
‘‘ஒன்றும் வேண்டாம். எனக்கு ஒரு குறையும் இல்லை. தேவையும் இல்லை. உன்னுடைய அன்பினாலும், பக்தியினாலும் நான் சந்தோஷ திருப்தியுடன் இருக்கிறேன்!’’
‘‘பாபா!’’
‘‘சொல்!’’
‘‘என்னிடமிருந்து ஏதாவது தட்சணையாக வாங்கிக் கொள்ளுங்கள்!’’
‘‘காசி... எனக்கு எதற்கப்பா தட்சணை?’’
‘‘இல்லை பாபா... கொடுக்காமல் எனக்கு சமாதானமாகாது. என்னிடம் எதெல்லாம் இருக்கிறதோ, அதெல்லாம் உங்களுடையதுதான்!’’
‘‘அப்படியா? சரி, உன்னிடமே வைத்துக் கொள். அவை எல்லாம் என்னுடையதுதானே? உன்னிடம் இருந்தால்தான் என்ன? பிரச்னை தீர்ந்ததா!’’
ஆனால் காசிராம் மனம் இதற்கு ஒப்பவில்லை; தத்தளித்தான். பாபா அவனைக் கூர்ந்து பார்த்தார். அவனுடைய மன ஓட்டத்தை அறிந்தார். சாந்தமாகி, பிறகு சொன்னார்...
‘‘காசி!’’
‘‘ம்...’’
‘‘சரிப்பா... ஒரு பைசா தட்சணையாய்க் கொடு!’’
‘‘கேவலம் ஒரு பைசாதானா?’’
‘‘அடேய், எனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதானே கேட்பேன். புரிந்ததா? ஒரு பைசா கொடு...’’
காசிராம் சந்தோஷத்துடன் ஒரு பைசாவை எடுத்து, அவர் காலடியில் வைத்து வணங்கினான்.
மனத்திருப்தியுடன் வீட்டிற்குச் சென்றான். பிறகு, இந்தப் பழக்கம் தொடர்ந்தது.
‘‘பாபா, என்னிடமிருந்து தட்சணை வாங்கிக் கொள்ளுங்கள்!’’
‘‘வேண்டாம்பா...’’
‘‘இல்லை, வாங்கிக்கணும்!’’
‘‘சரி, இரண்டு பைசா கொடு...’’
இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. நாள் ஆக ஆக வியாபாரத்தில் சம்பாதித்தது எல்லாவற்றையும் ஒரு மூட்டை கட்டி அதை பாபாவின் காலடியில் வைத்து வணங்கினான்.
‘‘காசி, என்னப்பா இது?’’
‘‘இது எல்லாம் நான் சம்பாதித்த பணம். உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். மீதியை எனக்குக் கொடுத்தால் போதும்...’’
‘‘இப்படி பைத்தியம் போல செய்யாதே!’’
‘‘இல்லை. என்னிடமிருந்து நீங்கள் ஏதாவது வாங்கித்தான் ஆகணும்...’’
பாபா யோசித்தார்.
‘என் பை... என் பணம்... நான் சம்பாதித்தது... நான் கொடுப்பதை வாங்கி... நான்... நான்... இந்த எண்ணம் எங்கிருந்து வந்தது காசிக்கு?’ - பாபா ஆழ்ந்து யோசனை செய்தார்.
இவன் என்னுடைய பரம பக்தன். நல்லவன்... கர்வம் இல்லாதவன். ஆனால், இந்த ‘நான்... நான்’ என்பது எங்கிருந்து வந்தது? ‘நான்’ என்கிற மமதையை விட்டொழிக்க உபாயம் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் என்னால் அவனுக்கு என்ன பயன்?
‘‘சரிப்பா காசி... நான் இதிலிருந்து சிறிதளவு பணத்தை எடுத்துக்கொள்கிறேன், கவலைப்
படாதே!’’ என்றார் பாபா.
பையிலிருந்து பாதிப் பணத்தை எடுத்துக் கொண்டு, மீதிப் பணம் இருந்த பையை அவனிடம் கொடுத்தார். அவனுக்குப் பரம சந்தோஷம்.
‘‘ரொம்ப நன்றி பாபா. என்னிடமிருந்து நீங்கள் பணம் வாங்கியதில் மகிழ்ச்சி. என் மனம் சமாதானமாயிற்று...’’
‘‘எனக்கும் கூட...’’ - பாபா குறும்புடன் சிரித்தார். காசிராம் திருப்தியோடு போனான். ஆனாலும் இது வளர்ந்துகொண்டே போயிற்று.
தாத்யா கோதே பாடீல் ஒரு முறை அவசரமாக கோபர்காவ் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு முன், பாபாவிடம் உத்தரவு வாங்கிச் செல்லத் தயக்கம். அவசரமாகப் போயாக வேண்டும். ஒருவேளை பாபா ‘போக வேண்டாம்’ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று யோசனை. இருந்தாலும் ஒரு யுக்தி செய்தான்.
பஜாருக்குப் போவதற்காகக் குதிரை வண்டியில் மசூதி எதிரில் வந்து நின்றான். உள்ளே வந்து பாபாவை வணங்கி, ‘‘கோபர்காவிற்குப் போய் வருகிறேன்’’ என்றான். அவன் நாடகமாடுகிறான் என்று பாபாவிற்குத் தெரிந்தது.
‘‘தாத்யா, ஏன் இவ்வளவு அவசரம்?’’
‘‘என்ன பாபா... கோபர்காவிற்கு பஜார் வேலையாகப் போகிறேன். வெளியில் டாங்கா நிற்க வைத்திருக்கிறேன்!’’
‘‘இதோ பார், பஜார் இருக்கட்டும்... பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஊரைவிட்டு வெளியே போக வேண்டாம்!’’
‘‘ஆனால், பாபா...’’
‘‘நான் சொல்வதைக் கேள்.’’
‘‘கேட்பேன்... ஆனால் வெளியில் டாங்கா நிற்கிறதே. சீக்கிரம் போனால், சீக்கிரம் திரும்பலாம்... எனக்குப் போக அனுமதி கொடுங்கள்... மிக அவசரம்!’’
‘‘சரி, ஆனால் தனியாகப் போகாதே... ஷாமாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு போ!’’
ஒன்றும் சொல்லாமல் தலையை ஆட்டிவிட்டு தாத்யா வெளியில் வந்தான். டாங்காவில் ஏறினான். குதிரை பறந்தது.
‘ஷாமாவிற்கு அங்கு என்ன வேலை?’ - தனக்குத் தானே வினவிக்கொண்டான். ‘பாபா சும்மாவாவது ஏதேனும் சொல்லுவார். இப்படிப் போய், காற்றாட்டம் உடனே திரும்பிவிடப் போகிறேன்!’
குதிரையைத் தட்டி விட்டான். டாங்கா பறந்தது. அவன் மகிழ்ச்சியில் மிதந்தான். பாபாவின் ஆக்ஞையை தான் நிறைவேற்றவில்லை என்பது அவன் சிந்தனையில் வரவேயில்லை.
இங்கே பாபா படபடத்தார். ‘‘நான் இவனுக்காக இவ்வளவு கவலைப்படுகிறேன். அதன் மகத்துவம் எங்கே தெரியப் போகிறது? சூட்சுமமாகத் தெரியப்படுத்துவது என் வேலை. அதை அனுசரிப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இல்லாவிடில், அதன் விளைவுகளை அனுபவியுங்கள்... அல்லா மாலிக்!’’

No comments:

Post a Comment